என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.
    • கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    வேதாரண்யம்:

    "டிட்வா" புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அவர்கள் 60 வகையான பாதுகாப்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து தரைக்காற்று வீசியது. அதைத்தொடர்ந்து வேதாரண்யம், தலைஞாயிறு, செம்போடை, ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

    மேலும் இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் உடனடியாக அவர்களை அழைத்து வந்து நிவாரண முகங்களில் தங்க வைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. தொடர்ந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. இப்பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் 6-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த 24 மணிநேரத்தில் நாகை மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு(சென்டிமீட்டரில்):-

    நாகப்பட்டினம்-6.12, திருப்பூண்டி-9.24 , வேளாங்கண்ணி-9.54 , திருக்குவளை-4.61, தலைஞாயிறு-8.76, வேதாரண்யம்-14.56, கோடியக்கரை-20.36.

     

    வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்து வைத்துள்ள காட்சி.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பல்லவராயன் கட்டளை, புழுதிக்குடி, விக்கிரபாண்டியம், கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 1,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு ரூ.8,000 வரை செலவு செய்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் வடியாமல் உள்ளது. எனவே கிளை வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, பூம்புகார், பழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் கடுமையான கடல் சீற்றம் உள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குருங்குளம், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டின், மதுக்கூர், பேராவூரணி என மாவட்டத்தின அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் விடிய விடிய மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்சம்பா,தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அதிராம்பட்டினம் கடற்கரையில் புயலால் பலத்த காற்று வீசியப்படி கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழைக்கு 1 வீடு இடிந்துள்ளது. 3 கால்நடைகள் இறந்துள்ளன.

    • மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது.

    அதன்படி இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு ஆகிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 6 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் "சாகர் கவாச்" என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    நாகை:

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார். 

    • மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
    • கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    சீர்காழி:

    தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.

    கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அன்று இரவில் ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்த மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

    இதில், ராஜாராமன் செல்லூரில் போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.

    கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்.

    • ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன.
    • சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடும் குளிரை போக்க 294-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கோடியக்கரை பகுதிகளில் மழை பெய்து மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து கூனி அரிச்சான் உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.

    குறிப்பாக ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து சுமார் 10,000 மைல்கள் கடந்து கூனிஅரிச்சான் பறவைகள் தற்போது இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வந்து உள்ளன. மேலும் கோடியக்கரையில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்புஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் பறவைகளை கண்டுகளிக்கலாம்.

    மேலும் கொசு உள்ளான், பட்டாணி உப்புக்கொத்தி, மூக்கு உள்ளான், சீட்டி உள்ளான், குறு மூக்கு உள்ளான், பெரிய அரிவாள் மூக்கு உள்ளான், மஞ்சள் கால் சட்டித்தலை உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், பட்டைவால் மூக்கன், பச்சைக்கால் உள்ளான், பச்சைக்கால் உருண்டை உள்ளான், கருப்புக்கால் உருண்டை உள்ளான், பூநாரை, செங்கால் நாரை, கரண்டி மூக்கன், வெண்கொக்கு, நீர் காகம், மீசை ஆலா, பருத்த அலகு ஆலா, ஊசிவால் வாத்து, தட்டை அலகு வாத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பறவைகள் கோடியக்கரைக்கு வந்துள்ளன.

    இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என மும்பை பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    • நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 18-ந் தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம், விழுந்தமாவடி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள், 3,000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று மோந்தா புயல் கரையை கடந்ததை அடுத்து நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.

    இதனால் கடல் சீற்றம் குறைந்தது. எனவே கடந்த 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.

    இதையடுத்து மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    • கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள வெள்ளப் பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் கடந்த 18-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். நாளை (சனிக்கிழமை) புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இதனால் நாகை மீனவர்கள் இன்று 7-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும், விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை கரையோர பகுதிகளில் மீனவர்கள் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் 7 நாட்களாக கடலுக்கு செல்லாததால் சுமார் ரூ.50 லட்சம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • திருப்பூண்டி அருகே வேதாரண்யம் வடிகால் ஆற்றில் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது.
    • அறுவடை செய்த நெல்மணிகள் தொடர் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.

    நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, திட்டச்சேரி, திருமருகல், திருப்புகலூர், தேவங்குடி, கட்டுமாவடி, திருச்செங்காட்டங்குடி, சியாத்தமங்கை, வாஞ்சூர், கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவர்கள் ஆங்காங்கே குடைப்பிடித்தபடி நடந்து சென்றததை பார்க்க முடிந்தது.

    திருப்பூண்டி அருகே வேதாரண்யம் வடிகால் ஆற்றில் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது. இதையடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் குறுவை அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அறுவடை செய்த நெல்மணிகள் தொடர் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்யவும், ஈரப்பத அளவை 25 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகை கலெக்டர் அலுவலகம் அருகே பழைய நாகூர் சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள நாகை மீனவர்கள் 21-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மேலும் கரையில் உள்ள மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். போதுமான மீன்வரத்து இல்லாத காரணத்தால் நாகை துறைமுகத்தில் மீன்களின் விலையும் உயர்ந்தது.

    நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்):-

    நாகப்பட்டினம்-82.02, திருப்பூண்டி-84, வேளாங்கண்ணி-47.06, திருக்குவளை-63.08, தலைஞாயிறு-45.20, வேதாரண்யம்-42.02, கோடியக்கரை-40.08. அதன்படி மொத்த மழை அளவு-394.06 மி.மீட்டர், சராசரி மழை அளவு-56.37 மி.மீட்டராகவும் பதிவாகி உள்ளது.

     

    கோட்டூர் அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    இதேபோல் தொடர் மழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், மணவாளம்பேட்டை, அதம்பாவூர், அச்சுதமங்கலம், சரபோஜி ராஜபுரம், மருவத்தூர், மன்னார்குடி, பரசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,000 ஏக்கர் இளம் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வேளாண்துறை, வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    இந்த நிலையில் கனமழை காரணமாக கோட்டூர் அருகே புழுதிகொடி பகுதியில் விவசாய கூலித்தொழிலாளி குமார் என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வேதாரண்யத்தில் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது.
    • மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இந்த ஆண்டு 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரம் வருமாறு:-

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய இடங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் உணவுக்கு தேவையான உப்பும், 6 ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பும் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறுகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திற்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி பணிகள் ஜனவரியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் அடிக்கடி பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது. மேலும், வழக்கம்போல் ஜனவரி மாதம் தொடங்கிய உற்பத்தி பணிகள் அக்டோபர் முதல் வாரத்திலேயே நிறுத்தப்பட்டது.

    கடந்த 8 மாதங்களில் உணவு தேவைக்கான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 4 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராத விதமாக அடிக்கடி பெய்த மழையால் உணவு தேவைக்கான உப்பு 50 ஆயிரம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

     

    அகஸ்தியன்பள்ளியில் இருப்பு உள்ள உப்பு பனை மட்டை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது. குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை சேமித்து, உப்பு மழையில் கரைந்து விடாமல் இருக்க பனைமட்டை மற்றும் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் தான் உப்பு எடுக்க இயலும். இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறைவு பெற்றது. குறைந்த அளவே உணவுக்கு தேவையான உப்பு இருப்பு இருந்தாலும் தற்போது ஒரு டன் உப்பு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனையாகிறது. உப்பு உற்பத்தியும் குறைந்து, உப்புக்கான விலையும் அதிகரிக்காதது மிகவும் கவலை அளிக்கிறது என்றனர்.

    ×