என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan navy"

    • ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
    • வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் இடைவெளியில் 18-ந்தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இன்று ஒரு நாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் களை கட்டும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக இன்று ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தங்கச்சி மடம் வலசை பஸ் நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடலுக்கு சென்று வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் உடல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நிலையை கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.

    • ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
    • மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

    எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

    இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மீன்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.
    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    தமிழக-புதுச்சேரி மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் 2 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • கைது செய்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் காரணமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜோசப் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதிலிருந்த மூன்று மீனவர்களையும் கைது செய்தனர்.

    இதையடுத்து கைது செய்த தங்கச்சிமடம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அருளானந்தன் மகன் ஆமோஸ்டின் (24), அந்தோணியார்புரத்தை சேர்ந்த சத்யம் மகன் ஜோன்தாஸ் (37), மண்டபம் தோப்புகாடு அன்ரோஸ் மகன் பரலோக ஜெபஸ்டின் அன்ரோஸ் (25) ஆகியோரை இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

    அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மீனவர்கள் மூன்று பேரையும், படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் ஜோதிபாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை இவர்கள் தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். எல்லை தாண்டிய குற்றத்திற்காக வருகிற 5-ந்தேதிவரை 12 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் ராமசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மீனவர்களை விடுவிக்கக்கோரி நேற்று தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 100-க் கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    இதில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை வலியுறுத்தும் வகையில் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடிஇறங்கு தளத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை, டிட்வா புயல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த மாதம் முழுவதும் கடலுக்கு செல்ல முடியவில்லை. 25 நாட்களுக்கு மேலாக தடை இருந்ததால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தற்போது கடல் இயல்பு நிலைக்கு மாறி உள்ளதால் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு சென்று வருகிறோம். கடந்த ஒரு மாதமாக இலங்கை கடற்படையினரின் தொந்தரவு இல்லாத நிலையில் தற்போது மீண்டும் சிறைபிடிப்பது நடந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. நேற்று கைதான 12 மீனவர்களுடன் ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள மற்ற மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
    • கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    சீர்காழி:

    தமிழகம், பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடிதொழில் உள்ளது. இந்த தொழிலில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை சூழல்களால் அடிக்கடி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி தொழில் நுட்பபொருட்கள், மீன்கள், வலைகள், செல்போன்கள் ஆகியவற்றையும் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளிடம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடிக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    இதனால் வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், அடுத்தகட்ட சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
    • ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. ஆந்திராவில் கரையை கடந்த மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று வந்தது. அதிலிருந்த வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இது எங்கள் நாட்டு எல்லை, இங்கு மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறியதுடன், அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அத்துடன் தொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் நீண்ட தூரம் வரை ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும் துரத்தியடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் இலங்கை கடற்படைக்கு அஞ்சி ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பி உள்ளனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது, விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

    இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ராமேசுவரம் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பிரச்சனையின்றி மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
    • ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன், வலை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.

    ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 45 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பனில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அனைத்து படகுகளும் சென்றுவிட்டபோதும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    அந்த படகில் தாவிக்குதித்த வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன் (39), மோபின் (24), சைமன் (55), சேகர் (55) ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் நாளுக்கு நாள் நசிந்துவரும் நிலையில் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் வேறு தொழிலுக்கு செல்ல எண்ணுவதாகவும் தெரிவித்தனர்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசைப்படகுகளை குறிவைத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்ய தொடங்கியுள்ளனர்.

    எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
    • கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை 5 மீனவர்களை கைது செய்தது. மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
    • நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது.

    புதுடெல்லி:

    அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டையொட்டி பா.ஜ.க. பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    அந்தவகையில் கட்சியின் இளைஞரணி சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் தமிழக மீனவர் பிரச்சனைக்கு, அவசர காலத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளே காரணம் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.

    அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.

    அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.

    உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் போலீசார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.

    அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.

    நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருககிறது.

    எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள்.

    இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

    • 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
    • இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?

    சென்னை:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.

    அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.

    இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.

    இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

    தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.

    இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
    • சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி பகுதியை நோக்கி வந்து மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்த இந்த சம்பவம் குறித்து இன்று காலை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையாக தெரியவரும். மேலும் இது தொடர்பாக கியூபிரிவு மற்றும் கடலோர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×