என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN fishermen"

    • மீனவர்களுக்கு பயிற்சி அளித்து ரூ.52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
    • 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம்:-

    * இந்திய பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வழி செய்யும் பொருட்டு தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

    * மீனவர்களுக்கு மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டம்.

    * மீனவர்களுக்கு பயிற்சி அளித்து ரூ.52.33 கோடி செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

    * 15,300 மீனவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்க ரூ.20.57 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * வலை பின்னுதல், படகு பழுது பார்த்தல், வண்ணமீன் தொட்டி தயாரிப்பு போன்ற பயிற்சிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும்.

    * 7,000 பேருக்கு கடல் பாசி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்.

    * காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதலுக்காக 14,000 பயனாளிகளுக்கு ரூ. 53 கோடியில் பயிற்சி வழங்கப்படும்.

    * இந்த திட்டங்களை கண்காணிக்க ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார். 

    • 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
    • இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது?

    சென்னை:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பிறகுதான், தமிழக மீனவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் சென்று மீனவர்கள் கரை திரும்பும் சூழல் உள்ளது.

    அந்தவகையில் தற்போது கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் சமீபத்தில் சூடுபிடித்தது. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களும் காத்திருக்கிறார்கள்.

    இந்த சூழலில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி வரையிலான நிலவரப்படி, எவ்வளவு மீனவர்கள் பிடிபட்டார்கள்? அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் விவரங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டு உள்ளது.

    அதன்படி, 2015-ம் ஆண்டில் இருந்து கடந்த மார்ச் 22-ந்தேதி வரையில் கடந்த 11 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் கடந்த ஆண்டில் (2024) மட்டும் 526 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.

    இதுதவிர, இலங்கை கடல் பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் 104 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 ஆண்டுகளில் 454 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.

    தமிழகம் மட்டுமல்லாது, பிற பகுதிகளில் இருந்து அதாவது, இந்திய மீனவர்களாக எல்லை தாண்டி கடந்த 11 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களில், 2 ஆயிரத்து 919 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதே ஆண்டுகளில் 346 மீன்பிடி படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன.

    இதுபோக, 22.3.2025 வரையிலான நிலவரப்படி, 86 இந்திய மீனவர்கள் (தமிழக மீனவர்கள் உள்பட) இலங்கை சிறையில் இருக்கின்றனர். அதேபோல், 225 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு பல 100 கோடி டாலர்கள் மதிப்பிலான கடனை சீனா வழங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இலங்கைக்கு இன்று முதல் 3 நாட்கள் செல்லும் அரசு முறைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மோடி பிரதமரான பிறகு 2019-இல் இலங்கைக்கு சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் 2-வது பயணம் இது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரு தரப்பும் புவிசார் அரசியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பல மாற்றங்களைச் சந்தித்துள்ளன.

    இந்தியாவும் இலங்கையும் நீண்ட பொருளாதார வரலாற்றைக் கொண்ட நாடுகள். இந்தியாவின் முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இலங்கையுடன் 1998-ல் கையொப்பமாகி 2000-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் வர்த்தக புள்ளி விவரங்களின்படி 2018-ல் 4.67 பில்லியன் டாலராக இருந்த இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2023-ல் 3.62 பில்லியன் டாலராக சரிந்தது.

    இதே காலகட்டத்தில் இலங்கையின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 2018-ல் 1.32 பில்லியன் டாலரிலிருந்து 2023-ல் 991 மில்லியன் டாலராக குறைந்தது.

    இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் அனுர குமார திசாநாயக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் ஒப்பந்தங்கள் கையொப்பம், முக்கியத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடக்கின்றன.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அனுராத புறத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு புனித ஸ்ரீ மகா போதியில் வழிபடுகிறார்.

    கொழும்பில் இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, காணொலி வாயிலாக திருகோணமலையின் சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    வடகிழக்கு நகரமான திருகோண மலையில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதனால் இந்த இடத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்தை இந்தியா கேந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது.

    இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு கடற்படையால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனையின் தீவிரம் குறித்தும் பிரதமர் மோடி இலங்கை அதிபர் மற்றும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்த விஷயத்தில் ஏற்கெனவே தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. பிரதமரின் இலங்கைப் பயணத்துக்குப் பிறகு மீனவர் பிரச்சனை தொடர்பான தீர்வை எட்டுவதற்கான இரு நாட்டு கூட்டுக்குழு கூட்டத்தை அடுத்த சில வாரங்களில் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன.

    இலங்கை அதிபராக அனுரகுமார திசாநாயக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் டிசம்பரில் அவர் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவைத் தேர்வு செய்தார். ஆனால், இந்தியாவைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் சீனாவுக்கு அவர் சென்றதை இந்தியா விரும்பவில்லை.

    கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு பல 100 கோடி டாலர்கள் மதிப்பிலான கடனை சீனா வழங்கியுள்ளது. முன்னதாக, 2017-ம் ஆண்டில் சீனாவிடம் வாங்கிய கடனை, திருப்பிச் செலுத்த முடியாததால், இலங்கை அதன் தெற்கு துறைமுகமான அம்பாந்தோட்டையை பெய்ஜிங்கை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு 1.12 பில்லியன் டாலருக்கு ஒப்படைத்தது.

    அந்த துறைமுகத்தை மையமாக வைத்து இலங்கை செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல்கள், ராணுவ கப்பல்கள் நாள்கணக்கில் முகாமிட்ட செயல்பாடு, தங்களை வேவு பார்க்கும் சீனாவின் முயற்சி என இந்தியா சந்தேகம் எழுப்பியது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் சந்திப்பின்போது பரஸ்பர உறவைப் பேண இரு தலைவர்களும் உறுதியளித்துக் கொண்டதை முன்னெடுக்கும் விதமாக இலங்கைப் பயணத்தை பிரதமர் மோடி பயன்படுத்திக் கொள்வார் என்கின்றனர் வெளியுறவு ஆய்வாளர்கள்.

    அதிலும் புவிசார் அரசியல் ரீதியாக அதிபர் திசாநாயக சீனாவுக்கு சென்று திரும்பிய 3 மாதங்களுக்குப் பிந்தைய பிரதமர் மோடியின் கொழும்பு பயணம். நட்புறவுக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க இலங்கைக்கு வழங்கப்படும் வாய்ப்பு என நிபுணர்கள் கருதுகின்றனர்.

    உள் கட்டமைப்பில் சீன முதலீடுகள் இலங்கைக்கு முக்கியமாக இருந்தாலும், உள்ளூர் தேவைகளுடன் ஒத்துப்போகும் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவுடனான தனது கூட்டாண்மையை பன்முகப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.

    பிராந்திய பாதுகாப்பு கண்ணோட்டத்தில், இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் காலநிலை மாற்ற தாக்கம் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதால், பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் கடலோர கண்காணிப்பு, பேரிடர் தயார்நிலை மற்றும் பரஸ்பர நீலப் பொருளாதார முயற்சிகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல சாத்தியமாக்கலாம்.

    பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக இந்தியா இலங்கைக்குத் தேவை என்பது தொடர்ந்து உணர்த்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் சீனாவை ஒதுக்கிவிட்டு. இந்தியாவைத் தனது உண்மையான கூட்டாளியாக இலங்கை ஏற்பது இயலாது என்றாலும், முன்னுரிமையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்துவதாக பிரதமர் மோடியின் இலங்கை பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது.
    • 10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.

    கட்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன், படகுகளையம் பறிமுதல் செய்கிறது. படகுகளை திரும்ப பெற அதிக அளவிலான அபராதம் விதிக்கிறது.

    தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் தமிழக திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்கு மத்திய வெளியுறவுத்துறை சார்பில் அளித்த பதில் பின்வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. 454 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 104 மீனவரகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

    10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.

    இவ்வாறு வெளியுறவுத்துறை பதில் அளித்துள்ளது.

    • தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
    • மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

    அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

    நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

    • மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
    • அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

    இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
    • பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனை அளிக்கிறது.

    பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.

    சென்னை:

    மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது. பாக். ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

    தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை கேட்டுக் கொண்டுள்ளார்.

    • இந்த ஆண்டில் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது

    சென்னை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், 16-11-2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உள்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது என்றும், இந்திய தரப்பில் இருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டபின்னரும் 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

    தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
    • சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி பகுதியை நோக்கி வந்து மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்த இந்த சம்பவம் குறித்து இன்று காலை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையாக தெரியவரும். மேலும் இது தொடர்பாக கியூபிரிவு மற்றும் கடலோர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.
    • இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மண்டபம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    அந்த படகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்தோணி அடிமை, லிவிங்ஸ்டன், திருமன், சபரி உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே இந்திய கடல் பகுதியில் நாட்டுப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து படகு மூலம் நாட்டுப்படகு மீது மோதி உள்ளனர். இதில் நாட்டுபடகின் முன்பகுதி இரண்டாகப் பிளந்தது.

    இதனையடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் இனி இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என தெரிவித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர்.

    இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய மீனவர்கள் தாங்கள் அணிந்திருந்த கைலிகள், சட்டை, பனியன் உள்ளிட்ட வகைகளை வைத்து படகின் உடைந்த பகுதியை அடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்து உயிருக்கு போராடி வந்த நிலையில், இதுபற்றி அறிந்த சக மீனவர்கள் ஒரு விசைப்படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த 4 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

    இலங்கை கடற்படை மோதியதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான நாட்டு படகு மற்றும் மீன் பிடி சாதனங்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டதாகவும், இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    • இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • மீனவ சமுதாய மக்களுக்கு தமிழக பாஜக என்றும் அரணாக இருக்கும்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப் பட்டினத்தில் இருந்து கடந்த 28ந் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும், 5 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து இலங்கை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    உடனடியாக இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய இணை மந்திரி முருகனிடமும் தெரிவிக்கப்பட்டது. நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்க தமிழக பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், 5 படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முருகனுக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக பாஜக மீனவ சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    ×