என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermens Arrest"

    • கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
    • ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும்.

    சென்னை:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.

    கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.



    • கைதான மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.
    • இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை

    தலைமன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

    கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துதுள்ளனர்.

    • இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருவது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. கடந்த மாதம் 29-ந்தேதி 8 மீனவர்களையும், கடந்த 1-ந் தேதி 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்தனர்.

    அதேபோல் அவ்வப்போது மீனவர்கள் மீது கற்களை வீசியும், தாக்குதல் நடத்தியும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்துகொண்டு விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து நேற்று காலை 456 விசைப்படகுகள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றன.

    அதில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையில் அமைந்துள்ள நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தன. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சற்று தூரத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தன. இதனால் பதட்டம் அடைந்த மீனவர்கள் உடனடியாக வலைகளை படகுக்குள் இழுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆனாலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஈசக்பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகில் தாவிக்குதித்தனர். பின்னர் நீங்கள் மீன்பிடிப்பது எங்கள் நாட்டின் எல்லை, இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று திட்டினர்.

    பின்னர் அந்த படகில் இருந்த சண்முகம் (வயது 50), டுதர் (40), எடிசன் (51), சக்திவேல் (47), ஜெகதீஷ் (48), டல்வின்ராஜ் (46), அன்பழகன் ஆகிய 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு கொண்டு சென்றனர்.

    அங்கு முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 7 பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மீனவர்கள் கைதான தகவலை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இலங்கை அரசால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
    • மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

    அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

    நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

    • மீனவர்கள் கைது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி வருகிறார்.
    • தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தனர்.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

    மீனவர்கள் கைதாகும் சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை டெல்லியில் நேரில் சந்தித்தனர்.

    இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன், ஜேசுராஜ், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் , மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுடன் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தோம்.

    தூதுக் குழுவினரின் குறைகளைக் கேட்டறிந்த மத்திய மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், பிரதிநிதிகள் குழு எழுப்பிய கவலைகளுக்கு நிரந்தர தீர்வை அளிப்பதாக உறுதி அளித்தோம் என பதிவிட்டுள்ளார்.

    • தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தினமும் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த படகிலிருந்த 5 மீனவர்களும், ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நடுக்கடலில் நின்ற அந்த படகை இலங்கை கடற்படையினர் பார்த்தனர்.

    அவர்கள் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர். பின்பு சந்தேகப்படகு என்று கருதிய இலங்கை கடற்படையினர், அதனை பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று 558 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 9 பேர் சென்றார்கள்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, அவர்களுடைய படகு பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் படகுடன் நடுக்கடலில் இருந்துள்ளனர். பழுதான அவர்களது படகு காற்று காரணமாக நெடுந்தீவு பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகை பார்த்தனர். இதையடுத்து படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். படகு பழுதானதால் அங்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இருந்த போதிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்பது தெரியவரும். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

    • நேற்று முன்தினம் 9 மீனவர்களை கைது செய்தது
    • இன்று 3 படகுகளில் சென்றவர்களை கைது செய்துள்ளது

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

    நேற்று முன்தினம் 9 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 21 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.

    • தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென்று கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (திங்கட்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதோடு அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

    இதை தாங்கள் (மத்திய மந்திரி ஜெய்சங்கர்) நன்கு அறிவீர்கள். மீனவர்கள் தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும்.

    எனவே இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.
    • இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துரமலிங்கதேவரின் நினைவிடத்தில் அவரது குருபூஜையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தார். அப்போது தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைத்து கொடுத்ததும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடத்தை புதுப்பித்து கொடுத்ததும், ரூ.9 லட்சத்தில் நூற்றாண்டு விழா வளைவு, ரூ.9 லட்சம் செலவில் அரசு சார்பில் புகைப்பட கண்காட்சி அமைத்து கொடுத்ததும், ரூ.4 லட்சம் செலவில் நூலகம், ரூ.5 லட்சத்தில் முடியிறக்கும் மண்டபம், ரூ.5 லட்சத்தில் பால்வள மண்டபம், ரூ.5 லட்சத்தில் முளைப்பாரி மண்டபம் இப்படி அனைத்தையும் அமைத்து கொடுத்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர்தான்.

    தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    அதுமட்டுமல்லாமல் மதுரையில் கம்பீரமாக தேவர் சிலை அமைந்துள்ளது என்றால் பி.கே.மூக்கையா தேவர் முயற்சியால் அமைக்கப்பட்டு அந்த சிலை திறப்பு விழாவுக்கு அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரியை அழைத்து வந்து கலைஞர் தலைமையில் அரசு விழாவாக நடத்தியவர் தலைவர் கலைஞர்.

    மேலும் மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு முத்துராமலிங்கதேவர் பாலம் என பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர்தான். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பில் அறக்கட்டளையை உருவாக்கியவர் கலைஞர். மேலும் கழக ஆட்சி முதன் முதலாக உருவானதும் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் சமூக மக்களின் வசதிக்காக கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டனர்.

    அதனை உருவாக்க அனுமதி அளித்ததும் நமது கழக அரசுதான். அதன்படி கமுதி, உசிலம்பட்டி, மேல நீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் தலைவர் கலைஞர். இதில் மேலநீலிதநல்லூரில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த கல்லூரியை 2021-ம் ஆண்டு கழக அரசு அமைந்ததும் அதனை கைப்பற்றி மீட்டு கொடுத்துள்ளோம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ரூ.1.5 கோடியில் 2 நிரந்தர மண்டபங்கள் அமைக்கப்படும் என நான் வெளியிட்டு இருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    1989-ம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று புது இடஒதுக்கீடு கொள்கையை உருவாக்கி கல்வி, வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தவர் தலைவர் கலைஞர்.

    ஆகவே முத்துராமலிங்கத் தேவர் வீரராகவே பிறந்தார். வீரராகவே வாழ்ந்தார். வீரராகவே மறைந்தார். அவர் மறைவுக்கு பிறகும் வீரராகவே போற்றப்படுகிறார். இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கூறியுள்ளார். எனவே அவரது சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தேவருக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறோம். மேலும் வெளியுறவுதுறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் பேசி அவ்வப்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ராமநாதபுரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மேலும் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவை இது தொடர்பாக பேச டெல்லிக்கு அனுப்பி உள்ளேன். இதுகுறித்து அவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவார். மேலும் ராமநாதபுரம் மீனவர் சங்க பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து சென்று இப்பிரச்சனை தொடர்பாக பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இன்னாருக்கு இது தான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எதுவும் உண்டு என்பது தான் திராவிடம். இந்த வித்தியாசத்தை உணர்ந்து ஆளுநர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வெளியே தெருவில் தான் வீசப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் காண்பித்து உண்மையை வெட்டவெளிச்சமாக்கி உள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார் என்பதை தவிர வேறொன்றும் இல்லை. ஆளுநர் இன்றைக்கு பி.ஜே.பி. கட்சியாக மாறியிருக்கிறார். ஆளுநர் மாளிகை பாரதிய கட்சி அலுவலகமாக மாறி உள்ளது. இது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.
    • ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.


    இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    எனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது மற்றும் 3 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
    • கைதிகளை முன் கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகை விடுவிக்கவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

    சென்னை:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எழுதி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது மற்றும் 3 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கைதிகளை முன் கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகை விடுவிக்கவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    • ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    நாகை:

    நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    முன்னதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை நேற்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×