என் மலர்
நீங்கள் தேடியது "Fishermen Arrested"
- மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
- ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
ராமேசுவரம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன், வலை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 45 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பனில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அனைத்து படகுகளும் சென்றுவிட்டபோதும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
அந்த படகில் தாவிக்குதித்த வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன் (39), மோபின் (24), சைமன் (55), சேகர் (55) ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் நாளுக்கு நாள் நசிந்துவரும் நிலையில் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் வேறு தொழிலுக்கு செல்ல எண்ணுவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசைப்படகுகளை குறிவைத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்ய தொடங்கியுள்ளனர்.
எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
- கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை 5 மீனவர்களை கைது செய்தது. மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கைதான மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.
- இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை
தலைமன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துதுள்ளனர்.
- இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருவது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. கடந்த மாதம் 29-ந்தேதி 8 மீனவர்களையும், கடந்த 1-ந் தேதி 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்தனர்.
அதேபோல் அவ்வப்போது மீனவர்கள் மீது கற்களை வீசியும், தாக்குதல் நடத்தியும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்துகொண்டு விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து நேற்று காலை 456 விசைப்படகுகள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றன.
அதில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையில் அமைந்துள்ள நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தன. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சற்று தூரத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தன. இதனால் பதட்டம் அடைந்த மீனவர்கள் உடனடியாக வலைகளை படகுக்குள் இழுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆனாலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஈசக்பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகில் தாவிக்குதித்தனர். பின்னர் நீங்கள் மீன்பிடிப்பது எங்கள் நாட்டின் எல்லை, இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று திட்டினர்.
பின்னர் அந்த படகில் இருந்த சண்முகம் (வயது 50), டுதர் (40), எடிசன் (51), சக்திவேல் (47), ஜெகதீஷ் (48), டல்வின்ராஜ் (46), அன்பழகன் ஆகிய 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு கொண்டு சென்றனர்.
அங்கு முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 7 பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைதான தகவலை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இலங்கை அரசால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
- இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அஐமச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், இன்று மீனவ கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன், IND-TN-10 MM 773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப்படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.
வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதனம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மீன்பிடி தொடர்பான பிரச்சனைகளையும் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பரம் புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது.
- தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த 2 மாதத் தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 16-ந் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்திருப்பார்கள் எனும் நிலையில், இருமுறை அவர்கள் மீது இலங்கை அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இப்போது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது.
தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலமும், அவர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளையடிப்பதன் மூலமும் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பது தான் சிங்கள் அரசின் நோக்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த சில நாள்களில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலும், இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையும் பா.ம.க.வின் நீண்ட நாள் குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது. இது தொடரக்கூடாது.
தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைந்து மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் இரு தரப்பு மீனவர்களும் பயனடையும் வகையில் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான திட்டத்தை வகுப்பது தான் சரியானதாக இருக்கும். இதை மத்திய அரசு தான் செய்ய முடியும் எனும் நிலையில், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு தான் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். மீனவர்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது, சிறையில் அடைப்பது, தண்டம் விதிப்பது போன்ற அத்துமீறல்கள் நடப்பாண்டிலும் தொடரக் கூடாது. அதற்காக தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான அழுத்தத்தை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேர் கைது.
- மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
இதனை கண்டித்து கடந்த மாதம் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவோடு ஏந்தியும், கஞ்சி காய்ச்சியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது ராமேசுவரம் வந்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, போராட்டத் தில் ஈடுபட்ட மீனவர்களை நேரடியாக சந்தித்து பேசினார்.
மேலும் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்து சென்றார்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்ற முதல் நாளிலேயே 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை மேலும் 11 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதிச்சீட்டு பெற்று 400 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலையில் அவர்கள் வடக்கு கடல் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர்.
இருந்தபோதிலும் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெர்சிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த பாம்பனை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 38), சவேரியார் அடிமை (35), முத்துகளஞ்சியம் (27), எபிரோன் (35), ரஞ்சித் (33), இன்னாசி (25), கிறிஸ்து (45), ஆர்னாட் ரிச்சே (36), ராமே சுவரத்தை சேர்ந்த பாலா (38), தங்கச்சிமடத்தை சேர்ந்த யோவான்ஸ் நானன் (36), அந்தோணி சிசோரியன் (43) ஆகிய 11 பேரையும் சிறைபிடித்தனர்.
மேலும் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்துகொண்ட இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 11 பேரிடம் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை மீன்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 11 பேரும் ஒரு விசைப்படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
பின்னர் ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என என இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சனை தொடர்பாகவும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்திக்கவும் இரு நாட்டு நல்லெண்ண அடிப்படையில் ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் 5 பேர் இலங்கை சென்றுள்ளனர்.
நேற்று யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து பேசிய நிலையில் இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
- மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
- அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
- தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கச்சத்தீவையொட்டிய இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 15 மீனவர்களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும் என்று இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்துவரும் தொடர் அச்சுறுத்தலால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இனிமேலும் தாமதிக்காமல் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வுகாண வேண்டும். தற்பொழுது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்புடன், அச்சமில்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்ள, அமைதியான சூழ்நிலை நிலவ, உரிய முயற்சியை மேற்கொள்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அளிப்பதாக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (07.08.2023) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07.08.2023) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், IND-TN-06- MM-948 பதிவு எண் கொண்ட படகில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இந்த ஆண்டு மட்டும் இதுவரை 93 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 14 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 30 நாட்களில் மட்டும், 3 வெவ்வேறு சம்பவங்களில், 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள், பல தலைமுறையாக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவ மக்களுக்கு பெரும் துன்பத்தையும், துயரத்தையும் அளிப்பதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களை தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை காண வேண்டுமென்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சரின் தலையீடும், ஆதரவும், இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்த்து, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியைத் தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- 32 மீனவர்களை கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- மீனவர்கள் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
கடந்த 15-ந்தேதி தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து சின்னத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த சைமன் பாஸ்டினுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையை சேர்ந்த 28 மீனவர்களும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவர்களும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என 32 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 27-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லைதாண்டியதாக கூறி பிரிட்டிஷ் கடற்படையினர் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 32 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் இந்திய பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான டீகோ கார்சியா தீவு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு 32 மீனவர்களை கைது செய்து மீன்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்ட னர். பின்னர் கைது செய்யப்பட்டு 32 மீனவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர். டீகோ கார்சியா தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சொந்த நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீனவர்கள் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமிநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ந்தேதி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்காலை சேர்ந்த முருகானந்தம், இரும்பன், பாபு, பரசுராமன், முருகன், சுந்தரவேல், வடிவேல் உள்ளிட்ட 15 பேர் விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று யாழ்பாணம் அருகே மயிலட்டி என்ற பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்தாக கூறி மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் அவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






