என் மலர்
ராமநாதபுரம்
- ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ராமேசுவரம்:
வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் விரைவு ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
- டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.
வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.
ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
- விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை 3 மணிமுதல் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள், அன்றாட பணிகளுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம் நகரம், பட்டிணம் காத்தான், பேராவூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், கீழக்கரை மேம்பால பகுதி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது.
இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே விட்டுவிட்டு லேசான முதல் கனமழை பெய்து வருகிறது.
ராமேசுவரத்தில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். பஸ் நிலையம், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
மாவட்டத்தின் அதிகபட்ச மழையாக தங்கச்சிமடத்தில் 33 மி.மீ மழையும், பாம்பனில் 29 மில்லி மீட்டரும், ராமேசுவரத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் 22 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளது.
விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தடி குடைகளை பிடித்தபடி சென்றனர். இன்று காலை முதல் பெய்யும் சாரல் மழையால் நகரில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவி உள்ளது.
அருப்புக்கோட்டை, சிவகாசி, பாலையம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நாட்டுப்புற மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:
வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது. மணிக்கு சுமார் 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை கடல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதே போல், ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களிலிருந்து நாட்டுப்புற மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
இதே போல், பாம்பன் பகுதியிலும் பலத்த கடல் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் வந்த காரும், கீழக்கரையில் இருந்து ஏர்வாடி நோக்கி வந்த காரும் கீழக்கரை காவல் நிலையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
- கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை சூறாவளி காற்றால் பொதுமக்கள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டிருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, சாயல்குடி, மண்டபம், தங்கச்சிமடம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ராமேசுவரத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. 10 மணி வரை நீடித்த மழையால் முக்கிய சாலைகள், அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் தேங்கியது. பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.
மேலும் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக சூறாவளி காற்று வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.
இதன் காரணமாக 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த ஒரு வார புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.5 கோடி கணக்கில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
- பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.
- இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
டிட்வா புயல் நெருங்கி வருவதால், பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதனால், 23 ரெயில்களில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சேது விரைவு ரெயில் நாளை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்- திருவனந்தபுரம் விரைவு ரெயில் நாளை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.
ராமேஸ்வரம்- திருச்சி விரைவு ரெயில் நாளை மானாமதுரையில் இருந்து இயக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஒகா செல்லும் விரைவு ரெயில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
- பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் நோக்கி வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சென்னை, மதுரையில் இருந்து வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.
பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் சேதம் அடைவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு கனவுகளுடன் காலை பள்ளிக்குச் சென்ற மாணவி கொலையுண்ட சம்பவம் ராமேஸ்வரத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
- ராமேஸ்வரம் கோர்ட்டில் இரவில் நீதிபதி முன்பு முனிராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்-கவிதா தம்பதியின் மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரம் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் என்பவர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஷாலினியை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
மாணவி கொலையை கண்டித்தும், கொலையாளி முனியராஜை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கைதான கொலையாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இரவு வரை மருத்துவமனைக்குள் முற்றுகையில் ஈடுபட்டனர். போலீசார் பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை ஒப்படைக்க உறவினர்களிடம் கேட்ட பொழுது வாங்க மறுத்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிவகாமி நகர் நவீன தகன மேடையில் வைத்து சடங்குகள் செய்து தகனம் செய்தனர். பல்வேறு கனவுகளுடன் காலை பள்ளிக்குச் சென்ற மாணவி கொலையுண்ட சம்பவம் ராமேஸ்வரத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட முனியராஜிடம் ராமேஸ்வரம் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து கொலையாளி முனியராஜூக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ராமேஸ்வரம் கோர்ட்டில் இரவில் நீதிபதி முன்பு முனிராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான முனியராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்ற போலீசார் ராமநாதபுரம் சிறையில் நள்ளிரவில் அடைத்தனர். முன்னதாக நேற்று கொலை நடந்தது முதல் இரவு வரை கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவியின் உறவினர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.
இதனால் இரவில் முனியராஜை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போதிலும், நள்ளிரவில் சிறையில் அடைக்க அழைத்து சென்ற போதிலும் திடீரென்று வழி மறித்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவியதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவரும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.
- வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தங்கச்சிமடம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மணிக்கு 45 முதல் 65 கி.மீட்டர் வரை கடல் காற்று வீசக்கூடும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று தடை விதிக்கப்படுகிறது. மேலும் வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தங்கு தளத்தில் உள்ள விசைப்படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
அதன்படி ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட் விசைப்படகுகள், நாட்டு படகுகள், துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. மீன்பிடி தடையால் 15 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
- தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடியோவில், மாணவரை கீழே தள்ளி அடித்ததோடு சித்ரவதை செய்தது வெளியாகி இருந்தது.
- விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கிய நேரத்தில் அரசு சமூக நல விடுதி காப்பாளர், சமையலர் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா பூங்கா பகுதியில் உள்ள அரசு சமூக நல விடுதியில் 8-ம் வகுப்பு மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளனர். வீடியோவில், மாணவரை கீழே தள்ளி அடித்ததோடு சித்ரவதை செய்தது வெளியாகி இருந்தது.
இந்நிலையில் விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைத்த ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சக மாணவர்களை விடுதியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
விடுதியில் மாணவரை சக மாணவர்கள் தாக்கிய நேரத்தில் அரசு சமூக நல விடுதி காப்பாளர், சமையலர் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.






