என் மலர்
ராமநாதபுரம்
- சந்தேகத்திற்கிடமாக ஒரு படகில் 2 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அண்டை நாடான இலங்கைக்கு மஞ்சள், தங்கம், பீடி இலைகள், மருந்துகள் உள்ளிட்டவை அடிக்கடி சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படை போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரம் அருகே உள்ள அரியமான் கடற்கரை பகுதியில் இந்திய கடலோர படையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகில் 2 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
உடனே கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது 2 பேரும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமல் ராஜ், ராஜ்குமார் எனவும், இவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதித்தனர்.
- சிலுவை பாதை நிகழ்ச்சியில் இரு நாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர்.
ராமேசுவரம்:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதன்படி, இந்தாண்டு விழா நேற்று தொடங்கியது.
இதற்காக ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகள் மற்றும் 26 நாட்டுப்படகுகளில் மொத்தம் 3500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி சங்கர நாராயணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீரா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதித்தனர். அவர்கள் நேற்று மதியம் கச்சத்தீவை சென்றடைந்தனர். இலங்கை சார்பில் இந்த விழாவிற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு அந்தோணியார் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றினார். தொடர்ந்து ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் தலைமையில் முதல் நாள் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியில் இரு நாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர். சிறப்பு ஆராதனைக்கு பிறகு கிறிஸ்தவ பக்தர்களுக்கு நன்மை வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரத்னம் உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை சிறப்பு திருப்பலி, கூட்டு பிராத்தனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் தலைமையில் நடந்தது. முதலில் தமிழிலும், பின்னர் சிங்களத்திலும் திருப்பலி நடைபெற்றது.
இதில் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். கூட்டுத்திருப்பலியைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வந்த பக்தர்கள் இலங்கை கடற்படையின் சோதனைக்கு பிறகு விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் தமிழக பக்தர்கள் தாயகம் திரும்பினர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற தமிழக பக்தர்களை நடுக்கடலில், இந்திய கடலோர காவல் படையினர் சோதனை நடத்தினர்.
ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழா என்பதால் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும், இரவு நேரங்களில் இரு நாட்டு பக்தர்களும் தங்களது மகிழ்ச்சி மற்றும் சோகத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இதனால் அங்கு ஒருவித நெகிழ்ச்சியான சூழல் நிலவியது.
- கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.
- கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் அமைந்து உள்ளது கச்சத்தீவு. இருநாடுகளின் கடல் பரப்பில் நடுவே அமைந்துள்ள இத்தீவு சுமார் 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது இந்த தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக மீனவர்களை அனுமதிப்பது, மீன்பிடிப்பின்போது தமிழக மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் இத்தீவை பயன்படுத்திக் கொள்வது என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டது.
ஆனால் இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ள இலங்கை அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா இன்று (27-ந் தேதி) மாலை தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் கடந்த ஒரு மாதம் முன்பே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தனர். அதனை அதிகாரிகள் பரிசீலனை செய்து கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்று மாலை விழா தொடங்குவதை முன்னிட்டு கச்சத்தீவு செல்ல ராமேசுவரம் துறைமுகத்துக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வருகை தந்தனர். காலை 6 மணியளவில் மாவட்ட அதிகாரிகள் பக்தர்களின் ஆவணங்களை சரிபார்த்து படகுகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கச்சத்தீவுக்கு 118 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் 3 ஆயிரத்து 31 ஆண்கள், 780 பெண்கள், 185 சிறுவர்-சிறுமிகள் என 4 ஆயிரம் புறப்பட்டு சென்றனர். கச்சத்தீவு பக்தர்களின் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், ராமேசுவரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டனர். படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு சென்றடையும். கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதே போல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அதேபோல் கச்சத்தீவு கடற்கரையில் இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரின் சோதனைக்கு பின்னர் இருநாட்டு பக்தர்களும் திருவிழா நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு பக்தர்கள் அமருவதற்கும், ஓய்வெடுக்கவும் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை பத்திநாதன், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் ஏற்றி வைக்கிறார்கள். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் சொரூபத்துடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேர்ப வனி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) சிறப்பு திருப்பலி நடக்கிறது.
அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி, உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
- ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தான் முதலமைச்சர் ஆக முன்வந்தது குறித்து சசிகலா பேசினார்.
சசிகலா பேசியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டம்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். அவர் மீது குறைகூற ஒன்றும் இல்லை. அவர் ஒழுங்காகத்தான் செயல்பட்டார். சில நாட்களில் ஒரு கும்பல் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து என்னிடம், அவர் சரியில்லை என்றார்கள். அதற்கு நான். நன்றாகதானே செயல்படுகிறார் என்று கூறினேன்.
நீங்கள் இப்போதே பொதுச்செயலாளராக வேண்டும் எனவும். முதலமைச்சர் ஆக வேண்டும் எனவும் என்னிடம் கூறினார்கள். காலையிலும், மாலையிலும் நடந்தார்கள். பொதுக்குழுவை கூட்டி, என்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்து, அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.
ஒரு நாள் ஓ.பன்னீர்செல்வத்தையும், அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அனைவரிடமும் கேட்டேன். ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என அமைச்சர் சொல்லி இருந்தார்.
அவர் நல்ல அதிகாரி இல்லை என்றும், ஜெயலலிதா இருக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டவர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
உடனே நான், ஜெயலலிதா சரியில்லை என ஒதுக்கியவரை எப்படி நியமிக்க முடியும்? இது எல்லாம் முதலமைச்சர் மீது ஒரு குறையா? என்று சொன்னேன். இதை இப்படியேவிட்டால் பிரச்சனை பெரிதாக ஆகும் என எண்ணி நான் முதலமைச்சர் ஆக முடிவுக்கு வந்தேன். அதற்குள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. திடீரென ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் என அமர்ந்துவிட்டார். அதை யாரோ சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
- நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
- நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை.
ஜெயலலிதா மரணத்தின்போது நடந்தது என்ன? என்பது பற்றி சசிகலா நேற்று பரபரப்பாக பேசினார். கமுதி பொதுக்கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:-
1987-ல் எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஜெயலலிதாவுக்கு அனுமதி இல்லை. ராணுவ வாகனத்தில் எம்.ஜி.ஆர். உடல் வந்த பிறகு மலர் வளையம் வையுங்கள் எனக்கூறினர். அதன்படிதான் ஜெயலலிதா மலர் வளையம் வைத்தார்.
அப்போது ஆர்.எம்.வீரப்பனுக்கு துணையாக இருந்த சிலர் ஜெயலலிதாவை கீழே தள்ளினர். அப்போது நான் தான், ஜெயலலிதாவை தாங்கி பிடித்தேன்.
அப்போதுதான், நீங்கள் தள்ளி விட்ட ஜெயலலிதாவை அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என சபதம் எடுத்தேன்.
'அரசியல் எனக்கு வேண்டாம். அனைவரும் என்னை கேவலப்படுத்துகின்றனர்' என்று ஜெயலலிதாகூறினார்.
உடனே, "உங்களை சீண்டியவர்களை சும்மா விடக்கூடாது. ஒரு முறையாவது ஜெயிக்க வேண்டும்" எனக்கூறி அரசியலில் தொடர வைத்தேன். அவரும் தேர்தல்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் பணியாற்றினார்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறி வந்தது. வீட்டிற்கு அழைத்து வர நல்ல நாள் பார்த்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மறைவு குறித்து பலரும் பலவிதமாக பேசினார்கள்.
'நான் தான் கொன்றேன்' என பலரும் கூறினர். ஜெயலலிதா மறைந்த பிறகு அன்றைய தினம் இரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் என்னிடம் வந்து, நீங்கள்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறினர். இந்த நிகழ்வு அனைத்தும் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் வைத்துதான் நடந்தது.
அப்போது, நான் அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. சகோதரியாகத்தான் பழகினேன். எனக்கு அந்த பதவி தேவையில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக இருக்கட்டும் என கூறினேன்.
மற்ற அமைச்சர்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும் என்றேன். இடையில் அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையனை நீக்கியிருந்தார்கள். அவரை மட்டும் சேர்க்க வேண்டும் என சொன்னேன். அதன்படி இரவோடு இரவாக அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள் என்றார்.
- இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
- படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது.
இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல 75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.
இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது படகின் உறுதித்தன்மை, என்ஜின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 1-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
- இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி டேவிட் என்பவரின் படகில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21-ந் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பனில் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாம்பன் துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் 100-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பாம்பனில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனால் எங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தை உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
- ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
- வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் இடைவெளியில் 18-ந்தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இன்று ஒரு நாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் களை கட்டும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக இன்று ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தங்கச்சி மடம் வலசை பஸ் நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடலுக்கு சென்று வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் உடல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நிலையை கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
- இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கிறது.
- படகில் செல்ல ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ராமேசுவரம்:
இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டது.
இந்த தீவில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்காக ராமேசுவரத்திலிருந்து 85 விசைப்படகுகள் மற்றும் 24 நாட்டுப்படகுகளில் 4 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். படகில் செல்ல ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் 25 வரை வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டது.
கச்சத்தீவில் வருகிற 27-ந் தேதி மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் அந்தோணியார் தேவாலய திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து திருஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.
மறுநாள் (பிப்.28-ந் தேதி) காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப்பிரார்த்தனையும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தலா 4 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கச்சத்தீவில் நடைபெற்று வருகின்றன. தேவாலயத்தை சுத்தம் செய்தல், சாலை அமைத்தல், தற்காலிக கப்பல் இறங்குதளம், முள் செடிகளை அகற்றி பாதை அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகைளை ஏற்படுத்துதல், மின்சார வசதி உள்ளிட்ட பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
- மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 22 பேரை 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மீன்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
- ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
- மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பலத்த சூறாவளி காற்று காரணமாக பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் பகுதியில் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.
இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்க மறுத்து விட்டனர். மேலும், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடைவிதித்தனர்.
இதன் காரணமாக, ராமேசுவரம் பகுதியிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதே போல் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- மீனவர்களின் ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






