என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேசுவரம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது
- சந்தேகத்திற்கிடமாக ஒரு படகில் 2 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக அண்டை நாடான இலங்கைக்கு மஞ்சள், தங்கம், பீடி இலைகள், மருந்துகள் உள்ளிட்டவை அடிக்கடி சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படை போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரம் அருகே உள்ள அரியமான் கடற்கரை பகுதியில் இந்திய கடலோர படையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகில் 2 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
உடனே கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது 2 பேரும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமல் ராஜ், ராஜ்குமார் எனவும், இவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






