என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் விரட்டியடிப்பு"

    • 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    • மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.
    • ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. ஆந்திராவில் கரையை கடந்த மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 10 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று வந்தது. அதிலிருந்த வீரர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இது எங்கள் நாட்டு எல்லை, இங்கு மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறியதுடன், அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அத்துடன் தொடர்ந்து அந்த பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் நீண்ட தூரம் வரை ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசியும், வலைகளை அறுத்து கடலில் வீசியும் துரத்தியடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் இலங்கை கடற்படைக்கு அஞ்சி ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை நஷ்டத்துடன் இன்று காலை கரை திரும்பி உள்ளனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது, சிறை பிடிப்பது, விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

    இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழில் நலிவடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே ராமேசுவரம் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் பிரச்சனையின்றி மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர்.
    • காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த சந்திரபாபு (வயது 60) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன்(38), அருண் (27) ஆகிய 6 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் இரவு 8 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து வெள்ளி செயின், மோட்டார் என்ஜின், செல்போன், ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.

    இதையடுத்து காயமடைந்த 6 மீனவர்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் காயமடைந்த மீனவர்கள் 6 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் நம்பியார்நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சசிக்குமார், உதயசங்கர் (28), சிவசங்கர் (25), கிருபா (29), கமலேஷ்(19) ஆகிய 5 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து மோட்டார் என்ஜின், ஜி.பி.எஸ் கருவி, இகோ சவுண்டர், 5 செல்போன்கள், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர்.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பின்னர் காயமடைந்த மீனவர்கள் 5 பேரும் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
    • அபராதம் கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த 6-ந் தேதியன்று விசைப்படகு ஒன்றில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

    இந்த 14 பேரும் நேற்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 14 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.4½ லட்சம் (இந்திய மதிப்பு ரூ.1.30 லட்சம்) அபராதம் விதித்தும் அதை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பறிமுதல் செய்த விசைப்படகை இலங்கை அரசுடைமை ஆக்கியும் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து 14 மீனவர்களும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ.2½ லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இலங்கை பணம் ரூ.2 லட்சம் என ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர்.
    • மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 820 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை அத்துமீறி வந்ததாக கைது செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் சென்ற விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து வருவதால் அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள 29 விசைப்படகுகள் மீட்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ராமேசுவரம் மீனவர் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், நாளை (8-ந் தேதி) தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன விசைப்படகுகள் மட்டும் அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்று வருகின்றன.

    ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர். மேலும் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வேலை நிறுத்தம் காரணமாக ரூ.6 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டம் தொடர்பாக பெரிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை ஏற்படுத்தும் தடை காரணமாக ஆண்டுக்கு 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பெற்றுத்தரவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர்.
    • மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.

    ராமேஸ்வரம்:

    இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது, விரட்டியடிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்தபடியே இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று சுமார் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் படகில் ரோந்து வந்துள்ளனர். 10 படகுகளில் வந்த அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்திருப்பதாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அவர்கள் சரமாரி தாக்கி உள்ளனர்.

    மேலும் அவர்களது படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரும் கடலில் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.

    அவர்கள் இன்று அதிகாலை ராமேஸ்வரம் துறைமுகத்துக்கு வந்தனர். இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கி, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்தது குறித்து சக மீனவர்களிடம் கூறினர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். மேலும் நாங்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். இதனால் எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் நாங்கள் மீன்பிடிக்க வழியின்றி தவிக்கிறோம். எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.
    • ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்தபோது மீனவர்கள் பயந்த நிலையில் அங்கிருந்த தப்பித்தனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும், அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர்.

    மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது.
    • இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    சிங்கள கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது. மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா.

    மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
    • சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி பகுதியை நோக்கி வந்து மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்த இந்த சம்பவம் குறித்து இன்று காலை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையாக தெரியவரும். மேலும் இது தொடர்பாக கியூபிரிவு மற்றும் கடலோர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்கள் வாரத்தில் 3 நாட்கள் சுழற்சி முறையில் ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு பாக்‌ஜலசந்தி கடலோரப் பகுதியில் மீன்பிடித்து வருவார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உபகரணங்களை சேகரித்துக் கொண்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    இவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை பார்த்ததும், ''இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது'' மீறி வந்து மீன்பிடித்தால் உங்களை கைது செய்வோம் என்று எச்சரித்து மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டி விட்டனர்.

    இதனால் உயிருக்கு பயந்தாக மீனவர்கள் நேற்று நள்ளிரவே ராமேசுவரம் பகுதிக்கு படகை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். இதனால் தலா ஒரு படகுக்கு ரூ.50 ஆயிரம் முதல் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்று கூறினர்.

    • மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.
    • இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மண்டபம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    அந்த படகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்தோணி அடிமை, லிவிங்ஸ்டன், திருமன், சபரி உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே இந்திய கடல் பகுதியில் நாட்டுப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து படகு மூலம் நாட்டுப்படகு மீது மோதி உள்ளனர். இதில் நாட்டுபடகின் முன்பகுதி இரண்டாகப் பிளந்தது.

    இதனையடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் இனி இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என தெரிவித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர்.

    இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய மீனவர்கள் தாங்கள் அணிந்திருந்த கைலிகள், சட்டை, பனியன் உள்ளிட்ட வகைகளை வைத்து படகின் உடைந்த பகுதியை அடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்து உயிருக்கு போராடி வந்த நிலையில், இதுபற்றி அறிந்த சக மீனவர்கள் ஒரு விசைப்படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த 4 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

    இலங்கை கடற்படை மோதியதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான நாட்டு படகு மற்றும் மீன் பிடி சாதனங்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டதாகவும், இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    ×