search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்த போராட்டம்- ரூ.6 கோடி வர்த்தகம் பாதிப்பு
    X

    ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்த போராட்டம்- ரூ.6 கோடி வர்த்தகம் பாதிப்பு

    • ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர்.
    • மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 820 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை அத்துமீறி வந்ததாக கைது செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி 2 படகுகளில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் சென்ற விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து வருவதால் அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள 29 விசைப்படகுகள் மீட்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ராமேசுவரம் மீனவர் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும், நாளை (8-ந் தேதி) தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன விசைப்படகுகள் மட்டும் அனுமதி பெற்று மீன்பிடிக்க சென்று வருகின்றன.

    ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 5 ஆயிரம் மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் வருமானத்தை இழந்துள்ளனர். மேலும் மீன்பிடி சார்ந்த தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வேலை நிறுத்தம் காரணமாக ரூ.6 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டம் தொடர்பாக பெரிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கூறும்போது, இலங்கை கடற்படை ஏற்படுத்தும் தடை காரணமாக ஆண்டுக்கு 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் தான் மீன்பிடிக்க செல்கின்றோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பெற்றுத்தரவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×