என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெயலலிதா"
- என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதில் மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும் வல்லவர்.
- நான் அரசியல் பேசவில்லை. யதார்த்தத்தை பேசுகிறேன்.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அதன் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இசைக்கும் என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதில் மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும் வல்லவர்.
அதே போல்தான் தலைவர் கலைஞரும், கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்கள் கூட எழுதி இருக்கிறார். அவர் பாட்டு பாடியது இல்லையே தவிர, எல்லா இசை நுணுக்கங்களும் அவருக்கு நல்லா தெரியும்.
இசையை கேட்ட உடனேயே அதில் சரி எது? தவறு எது? என்று சொல்லி விடுவார். அந்த அளவுக்கு வல்லமை பெற்றவர் அவர்.
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா தமிழ் இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன்.
அந்த வகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக் கழகத்துக்குதான் உண்டு.
முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியில் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக்கழகம் உள்ளது. அதை விட சிறப்பு என்ன என்றால், இந்த பல்கலைக்கழகத்துக்குதான் மாநிலத்தை ஆளுகிற முதலமைச்சரே வேந்தராக இருக்கிற உரிமை இருக்கிறது.
நான் அரசியல் பேசவில்லை. யதார்த்தத்தை பேசுகிறேன். இப்படி முதலமைச்சர்களே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும். வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதோட நோக்கமே சிதைந்து போய் விடும் என்று நினைத்துதான் 2013-ம் ஆண்டே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர்தான் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க. தலைவர் வாய் கூசாமல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார்.
- தி.மு.க.வினருக்கு தமிழக மக்களின் நலனைப் பற்றிய எந்தவித கவலையும் இல்லை.
சென்னை:
சென்னை வேளச்சேரியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டு பேசினார்.
தமிழக மக்களை காப்பாற்ற எம்.ஜி.ஆர். 51 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா உருவம் பதித்த கொடியை தாங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.
எம்.ஜி.ஆர். திரைப்படத்துறையில் இருந்து வந்ததால் மட்டுமே தலைவரானார் என்று நினைப்பது தவறு. அதே போன்று ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து வந்தவர் என்றாலும், பல காலம் கட்சிப் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடி, அவர்களுக்கு உறுதுணையாக நின்றதால் புரட்சித் தலைவி ஆனார். மேலும், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமுதாயத்தில் பல்வேறு சோதனைகளை சந்தித்து அதில் வெற்றியும் கண்டு தமிழக முதல்வராக அரியணையில் அமர்ந்தார்.
தமிழக மக்களின் பேராதரவோடு ஆறுமுறை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா எண்ணிலடங்கா மக்கள்நலத் திட்டங்களை கொடுத்து தமிழக மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தார். தனது இறுதி மூச்சு உள்ளவரை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தமிழக மக்களின் நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
இதுபோன்று எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடும் நிலையில் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
கடவுள் மீதும், உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து வைத்தால் எதிரிகளின் வெற்றியை அடையமுடியும்.
தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களுக்கு என்றைக்கும் அழிவே கிடையாது.
தி.மு.க. தலைவர் வாய் கூசாமல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யை சொல்லி மக்களின் காதில் பூ சுத்தப் பார்க்கிறார்.
தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க. தலைமையிலான அரசைக் கண்டித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாள்தோறும் போராட வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
தி.மு.க.வினருக்கு தமிழக மக்களின் நலனைப் பற்றிய எந்தவித கவலையும் இல்லை. மாறாக தி.மு.க.வினருக்கு இப்போது இருக்கும் ஒரே கவலை வரும் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, எதிர்கட்சியினர் யாரும் ஒன்றிணைந்து விடக்கூடாது. அதை எந்தெந்த வழிகளில் தடுக்கலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பதாகத்தான் தெரிய வருகிறது.
ஆனால் ஒன்றை மட்டும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும். அதற்காக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறேன்.
ஜெயலலிதா சூளுரைத்தது போல் இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டுகளை கடந்தும் தமிழக மக்களுக்காகவே இயங்கும் என்பதை இந்நன்னாளில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் பயணித்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றுங்கள்.
தமிழக மக்களின் வாழ்வு மலர, நம் இருபெரும் தலைவர்கள் காட்டிய அதே வழியில் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை அமைத்து காட்டுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
- முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நியமனம் செய்தார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சி 11-ம் வார்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் வடசேரியில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கிருஷ்ன தாஸ், பகுதி கழக செய லாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வ ரன், கவுன்சிலர்கள் அக்யா கண்ணன், கோபாலசுப்பிர மணியன், அணி செயலாளர் சுகுமாரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் பேசியதாவது:-
நாகர்கோவில் மாநகரத் தில் நான்கு பகுதி செய லாளர் உள்ளனர். வடக்கு பகுதி செயலாளராக தமிழகத்திலேயே ஒரு பெண், அதாவது நாகர்கோவில் வடக்கு பகுதி செயலாளராக மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா நியமனம் செய்யப் பட்டுள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத் தில் தான் முதல் முறையாக ஒரு பெண் பேரூர் செயலாளராக மறைந்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா நியமனம் செய்தார்.
அவர் சிறப்பாக செயல்பட்டு மேல் பதவியை அடைந்துள்ளார். மதுரையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னையில் ஸ்ரீலிஜா எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது ஸ்ரீலிஜாவுக்கு நாகர்கோவில் சட்டமன்ற வேட்பாளராக நிற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தில் 70 பூத்கள் உள்ளது. அந்த 70 பூத்களிலும் பூத் கமிட்டி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதியில் உள்ள ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதி என நாகர்கோவில் தொகுதியில் மொத்தம் 275 பூத்கள் உள்ளது.
ஒவ்வொரு பூத்-க்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்து கட்சியை பலப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல், மணல் கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியுள்ளது. தமிழகத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சி மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. பலமாக உள்ளது. தற்பொழுது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. வேட்பாளர் களம் இறங்கினால் அவருடன் நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஒற்றுமையாக பணியாற்றினால் தான் நாம் வெற்றி பெற முடியும். எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை. அதனால் தான் அவர் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. நாகர்கோ வில் மாநகராட்சியில் பல பிரச்சினைகள் உள்ளது. சாலைகள் மிகவும் மோசம டைந்தது. பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முடிய வில்லை. கட்சியில் உழைக் கின்றவர்களுக்கு பதவி தேடி வரும். உழைப்பின் மூலம் உயர்ந்தவர்கள் அ.தி.மு.க. வில் அதிகமானோர் உள்ள னர். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் மேயர், எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினராகலாம். எனவே கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- ஜாமீனில் உள்ள தனபால், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
ஜாமீனில் உள்ள தனபால், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். தனது தம்பி உயிரிழக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவங்கள் கொடநாடு வழக்கில் திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.
இதனிடையே கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில், ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருக்கும் மனு செப்டம்பர் 19-ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
- தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்து உள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து தனபாலுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கில் ஆனந்த் கூறுகையில் கனராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இதற்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. சம்மன் அளித்து விசாரித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.
- சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடக்கோரி மனு
- முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக லஞ்சத்துறை அதிகாரிகள் சார்பில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.
மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை.
- கடந்த சில நாட்களாக ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
- தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதா 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சென்னை மெட்ரோ ரெயில் லிட்.,-கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார். அதன்படி, மெட்ரோ ரெயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், வட சென்னை மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருவொற்றியூர், விம்கோ நகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்திற்கு ஜெயலலிதா 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டினார்.
* 21.9.2016 அன்று சென்னை விமான நிலையம்- லிட்டில் மவுண்ட் வரையான முதல் மெட்ரோ போக்குவரத்தினை, மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
* 14.5.2017 அன்று திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை எனது முன்னிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
* 25.5.2018 அன்று நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வரையும், மற்றும் சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ். வரையான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன்.
* 10.2.2019 அன்று ஏஜி-டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன். இத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் கட்டம் 1-ன், ரூ.18,380 கோடி மதிப்பீட்டில் 45.1 கி.மீ. நீளத்திலான பணிகள் முடிவடைந்தன.
* திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் கட்டம்-1-ன் நீட்டிப்பு வழித் தடத்தினை 14.2.2021 அன்று எனது முன்னிலையில் பிரதமர் தொடங்கி வைத்தார். இதன்படி, 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9.051 கிலோ மீட்டர் நீட்டிப்பு பணிகள் முழுமையடைந்து மெட்ரோ ரெயில் கட்டம்-1 மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வந்தது.
* 21.11.2020 அன்று மத்திய உள்துறை மந்திரி எனது முன்னிலையில், சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் கட்டம்-2 திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இவ்வாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனப்பணிகள், அ.தி.மு.க.வின் அம்மா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் விரைவுபடுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்றால் அது மிகையல்ல.
ஆனால், இந்நிறுவனம் கடந்த சில நாட்களாக ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம். சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும் போது தமிழக அரசு சூட்டிய "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ ரெயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல்,
"புறநகர் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. தமிழக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ ரெயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை. ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, உடனடியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி "புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தையும், தி.மு.க. அரசையும் வலியுறுத்துகிறேன். அவ்வாறு செய்யாமல், தொடர்ந்து ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அ.தி.மு.க.வின் சார்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தீய நோக்கத்தோடும் திட்டமிட்டு சிலவற்றை மறைப்பதற்காகவும் செய்யப்பட்ட இடைச்செருகல் வேலை.
- ஒருவேளை உண்மையை 'நாடகம்' என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்!
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கனிமொழி எம்.பி. மகாபாரதத்தில் திரவுபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி, பெண்கள் எங்கு இழிவுபடுத்தப்பட்டாலும் அதனை கடுமையாக ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கனிமொழி எம்.பி.க்கும், பாராளுமன்றத்திற்கும் 25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடந்த ஒரே ஒரு நிகழ்வை நினைவுபடுத்துவதாகத் தெரிவித்து, அந்த புனிதமான சபையில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா தி.மு.க.வினரால் அவமானப்படுத்தப்பட்டதையும், அவருடைய புடவை இழுக்கப்பட்டதையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் திரும்ப வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்ததையும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டார். இது உண்மையிலே நடைபெற்ற சம்பவம்.
ஆனால், இந்தச் சம்பவம் நாடகம் என்று தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கூறினர். இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிகழவில்லை என்றும், அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு நாடகம் என்பது தெரியும் என்றும் பேட்டியளித்து இருக்கிறார். நடந்த சம்பவத்தை, நடந்த உண்மையை திரித்துப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
இது குறித்து 25-3-1992 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய ஜெயலலிதா, "இது கருப்பு தினம் மட்டுமல்ல, வன்முறையால் அரசியலில் எதையும் சாதித்து விட முடியும் என்று தப்புக் கணக்கு போடுகிறவர்களுக்கு பாடமாக அமையும் தினம்" என்றும் குறிப்பிட்டார்.
தி.மு.க.வின் இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களையெல்லாம் மனதில் வைத்து தான் 1991-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் 'சாட்டை அடி', 'சம்மட்டி அடி' கொடுத்தார்கள் என்பதை தி.மு.க. தலைவருக்கு நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இது மட்டுமல்லாமல், 25-3-1989-ம் நாளைய நடவடிக்கைக் குறிப்புகளில் உள்ள செய்திகள் குறித்து 26-3-1992 அன்று அப்போதைய பேரவைத் தலைவர் தீர்ப்பு வழங்கியிருப்பதையும், அவை நடவடிக்கைக் குறிப்புகள் என அன்றைய தினம் 25-03-1989 அன்று நடந்ததாக வெளியிடப்பட்டுள்ள இக்குறிப்புகள் அனைத்தும் மன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானவை.
தீய நோக்கத்தோடும் திட்டமிட்டு சிலவற்றை மறைப்பதற்காகவும் செய்யப்பட்ட இடைச்செருகல் வேலை. மோசடி என்று தீர்ப்பளித்திருப்பதையும் தி.மு.க. தலைவருக்கு கூறுகிறேன்.
25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளை நன்கு கண்ணுற்றும் அதனை 'நாட கம்' என்று சொல்வதுதான் 'நாடகம்'. 25-03-1989 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை 'நாடகம்' என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். அன்று நடந்தது உண்மை என்பதை மக்கள் அடுத்து வந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் உணர்த்திவிட்டார்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒருவேளை உண்மையை 'நாடகம்' என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
- மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளாரே இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- 2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பா.ஜ.க. அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது.
பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து 'எதிர்க்கட்சித் தலைவர்' மோடி பேசுவதைப் போல இருக்கும்.
பா.ஜ.க. ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அ.தி.மு.க. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009, 2014 பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார் மோடி. இப்போது அ.தி.மு.க.வை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?
கேள்வி:-மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். உங்களது பதில் என்ன?
பதில்:- நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள்.
இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ்கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது.
கேள்வி:-தமிழ்நாடு கவர்னருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிக் கடிதம் எழுதியதில் தீவிரமடைந்தது. அவரைத் திரும்பப் பெற வைக்க நீங்கள் ஜனாதிபதிக்கே கடிதம் எழுதினீர்கள். தமிழ்நாடு அரசாங்கத்தில் அவர் எத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்?
பதில்:- மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த போது, 'குஜராத் கவர்னர் மாளிகை என்பது காங்கிரஸ் கட்சி அலுவலகம்' என்று குற்றம் சாட்டினார். இன்றைய கவர்னர் மாளிகைகள், பா.ஜ.க. அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன.
'எனக்கு அதிகாரம் இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். 'எனக்கு வேலையே இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் கவர்னர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
கேள்வி:- செந்தில் பாலாஜியை கைது செய்ததிலும், அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்?
பதில்:- பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது. இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல. இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களைச் சொல்ல முடியும்.
பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும். அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன.
எனவேதான் இவர்களது கைதுகளைக் 'குற்ற விசாரணைகள்' என நாங்கள் பார்க்கவில்லை. 'அரசியல் விசாரணைகள்' ஆகத் தான் பார்க்கிறேன். அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில் பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது.
கேள்வி:- கூட்டாட்சி வடிவத்தையும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலையும் மத்திய அரசு சிதைக்கிறது என சி.பி.ஐ., அமலாக்கத்துறை நடவடிக்கைகளை வைத்து நீங்கள் கூறுவது ஏன்?
பதில்:- பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அனைவரும் பிரிந்து நின்றால்தான் பா.ஜ.க.வுக்கு லாபம். எனவேதான் அனைவரையும் ஒன்று சேர்க்காமல் இருக்கவே இது போன்ற (சி.பி.ஐ, ஈ.டி) ரெய்டுகள் செய்யப்படுகின்றன. அச்சுறுத்துவது, பயமுறுத்துவதுதான் இந்த ரெய்டுகளின் நோக்கமாகும்.
கேள்வி:- இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை உள்ள சூழலில், தமிழ்நாட்டில் முதலீட்டுச் சூழல் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
பதில்:- தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி எந்த மந்தநிலையும் இல்லை என்றே சொல்வேன். அப்படி நினைத்திருந்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் சென்னையில் வரும் ஜனவரி மாதம் கூட்டி இருக்க மாட்டோமே. இதற்கு அழைப்பு விடுக்க ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நான் சென்றிருந்தேன். அங்கு நான் சந்தித்துப் பேசிய முதலீட்டாளர்கள் பலரும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார்கள். அமைதியான மாநிலம், சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் எனத் தமிழ்நாட்டை நினைக்கிறார்கள்.
எனவே நீங்கள் சொல்லும் மந்த நிலைமை நம் மாநிலத் துக்கு இல்லை.
கேள்வி:- மணிப்பூரில் தொடரும் வன்முறைக்குத் தீர்வுகாண நீங்கள் சொல்லும் வழி என்ன?
பதில்:- பா.ஜ.க.வின் பிளவுவாத வெறுப்பரசியல் தான் மணிப்பூர் பற்றி எரிவதற்குக் காரணம். இரண்டு பிரிவினருக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது பா.ஜ.க.வின் மதவாத அரசியல் ஆகும். இன்று அவர்கள் அடக்க முடியாத அளவுக்கு கைமீறிப் போய்விட்டது.
மணிப்பூரில் இப்படி நடக்கும் என்பது அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் தெரியும். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் தெரியும். ஆனால் இவ்வளவு பெரிதாக நடக்கும் என்று அவர்கள் கணிக்கவில்லை. வன்முறை இருபக்கமும் கூர்மையான ஆயுதம். 'பூதத்தை உருவாக்கினால், அந்த பூதம் உருவாக்கியவனேயே தாக்கும்' என்பார்கள். அதுதான் மணிப்பூரில் நடக்கிறது.
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானவர்கள் தான் நாங்கள் என்பதை ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களைப் போய் பிரதமர் பார்க்க வேண்டும். அங்கே ஊர் ஊராக மக்களைச் சந்திக்க வேண்டும்.
சாதாரணமாக அங்கு அமைதி திரும்பி விடாது. இத்தனை நாட்களாக எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல்களைச் செய்துவிட்டு, அவ்வளவு சீக்கிரம் அதனை அணைத்து விட முடியாது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.