என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார் - பிரதமர் மோடி புகழாரம்
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய மக்கள் பணி என்றும் என் மனதில் நிற்கும்.
- தமிழக மக்கள் ஜெயலலிதா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறியதாவது:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மன் கி பாத் உரையில் ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களின் நலனுக்காக அவர் பாடுபட்டார் என்று புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:-
பெண்கள் சக்தியின் ஒரு வெளிப்பாடாகவே ஜெயலலிதா இருந்தார். அவரின் தேசப்பக்தி மிகப்பெரியது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட தமிழகத்துக்கு செல்லும்போது மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.






