என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    • சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.
    • கூட்டணி உறுதியானதும் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    ஆளுங்கட்சியான தி.மு.க. வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் கள ஆய்வு சென்று புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். மேலும் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

    அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே வரும் தேர்தலையொட்டி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசால் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து பேசி வருகிறார்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்துவதுடன், வலுவாக காலூன்றும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறு சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.

    அதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமை, மத்திய மந்திரி பியூஸ் கோயலை களம் இறக்கி உள்ளது. தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் கடந்த வாரம் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்து நிர்வாகிகளை முதல்கட்டமாக சந்தித்து பேசினார். அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யையும் சந்தித்து தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பியூஸ்கோயல் ஈடுபட்டு உள்ளார். இந்த கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பதற்கான பணிகளும் திரைமறைவில் நடைபெற்று வருகிறது.

    அதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய த.வெ.க., தே.மு.தி.க. கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதேபோல் அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்கழகம் மற்றும் பா.ம.க.வையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த பரபரப்பான சூழலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4-ந்தேதி தமிழகம் வருகிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் 12-ந்தேதி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

    இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 4-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் இங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்காக நத்தம்பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் பகுதியில் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    நயினார் நாகேந்திரனின் பிரசார பயண நிறைவு விழாவுடன், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாகவும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

    புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வரும் அமித்ஷா இரவு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் மாரியாட் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் மறுநாள் (5-ந்தேதி) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் திருச்சியில் நடை பெறும் 'நம்ம ஊரு மோடி ஜி' பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். 1000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் இந்த நிகழ்ச்சி மன்னார் புரம் நான்கு ரோட்டில் அமைந்து உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார்.

    அமித்ஷா பங்கேற்கும் இந்த பொங்கல் விழாவில் ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தரும் அமித்ஷா, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளை தொடங்குவார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகாததால் அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானதும் அவர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அமித்ஷா வருகை தமிழக பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா.
    • மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார்.

    மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக-வின் மூத்த அமைச்சருமான அமித் ஷா மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ளார்.

    மேற்கு வங்கம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா "நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு புதிய பாஜக அரசு பெங்காலில் அமையும். மக்கள் இதை முடிவு செய்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில கல்வித்துறை அமைச்சருமான பிரத்யா பாசு கூறுகையில் "மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார். இதுபோன்ற பயணம் எந்த பயனும் தராது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக-வால் 50 இடங்களை கூட தாண்ட முடியாது, மோசமான தோல்வியை சந்திக்க இருக்கிறது" என்றார்.

    • அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
    • சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 100 இடங்களை கோரிய ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 90 இடங்களை ஒதுக்கியுள்ளது பாஜக.

    மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகிறது. இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

    அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்கீழ் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், பாஜக தலைவர் அமித் சதம் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    முன்னதாக சிவசேனா 100 இடங்கள் கோரியநிலையில், பாஜக 75 இடங்களை மட்டுமே வழங்க முன்வந்தது. இதற்கு சிவசேனா உடன்படாத நிலையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தற்போது எண்ணிக்கை நிறுவப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜ.க தற்போது 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.


    • திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள்.
    • கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, 

    பெண்களுக்கான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் மாநாடுதான் இந்த மாநாடு. நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை காக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாட்டை அல்ல நாட்டை காக்கக்கூடிய பொறுப்பு முதலமைச்சர் கையில் உள்ளது.

    திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள். இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கான காரணம் நமக்கான கல்வி இங்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கி உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 56% பெண்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 48%. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இது அதிகம். 

    ஆனால் எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத மாநிலம் தமிழ்நாடு என கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாட்சி கொடூரம் நம் அனைவருக்கும் தெரியும். அந்த பெண்களுக்கு நீதி கிடைத்தது நம் ஆட்சியில்.  உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் ஜாமினை எதிர்த்து போராடும் பெண் நடுத்தெருவிற்கு இழுத்து வரப்படுகிறார். இதுதான் பாஜக பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பு. ஆனால் கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் திமுகவிற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.

    நாம் உண்மையில் பெண்களின் எதிர்காலம், பாதுகாப்பு குறித்து கவலைப்படக் கூடியவர்கள். நூறுநாள் வேலைத் திட்டத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக மட்டும்தான். இது தமிழ்நாட்டை மட்டுமல்ல, நாடு முழுவதையும் பாதிக்கக்கூடியது. நாட்டில் மதக்கலவரத்தை, வெறுப்பை, காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி அரசியல் செய்துவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவிற்கு சம்மட்டி அடியாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணி திரள்வோம், அணி திரள்வோம், அணி திரள்வோம்'" எனப் பேசினார்.

    • நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர்.
    • அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வின் அமைப்பு வலிமையை திக் விஜய் சிங் பாராட்டியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர் எம்.பி., பாஜக வெறுப்பால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அது வெறுப்பை பரப்புகிறது எனக் கூறியதுடன் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாக ஷேசாத் பூனாவாலா, மாணிக்கம் தாகூர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஷேசாத் பூனாவாலா கூறியிருப்பதாவது:-

    அவர்கள் தேசியவாதிகளில் பயங்கரவாதிகளையும், அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர். காங்கிரஸ் தேசியவாதிகளை இழிவுப்படுத்துகிறது. நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர். அவர்கள் இதை மட்டுமே செய்கின்றனர்.

    ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக நாட்டை கட்டமைப்பதற்கான தனிநபர் குணநலன்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் அவதூறு மற்றும் மறைமுக குற்றச்சாட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு என்பதால், நேரு மற்றும் அவரது அரசு ஆர்எஸ்எஸ்-ஐ குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததா? என்பதை மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டும்.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றது ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்திற்கு சென்றதா என்பதையும் காங்கிரஸ் கூற வேண்டும். மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.-ஐ புகழ்ந்தபோது ஒரு பயங்கரவாத அமைப்பைப் பாராட்டினார்களா என்பது கூற வேண்டும்.

    இவ்வாறு ஷேசாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

    • நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது.
    • தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம்.

    தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. முதலமைச்சரில் இருந்து, தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களும், தொடர்ந்து கூட்டங்களை நடத்திக் கொண்டு வரும் இயக்கம் தான் தி.மு.க.

    தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம். ஆனால் இதற்கு முன்னதாகவே, மகளிர்களை, இளைஞர்களை சந்திக்கும் கூட்டங்களை, தி.மு.க. தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

    இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது. அவர் இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் கனவு காண்பது தப்பு அல்ல. அவர் கனவு கண்டு கொண்டே இருக்கட்டும்.

    ஆனால் நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

    • ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது.
    • டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

    சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், உன்னாவ் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது.
    • சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளது.

    தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெண்கள், அரசியல், சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் . ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம்.

    தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடக்கிறது. சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளது. ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவை பரிமாற அனுமதிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    ரெயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை முதன்மையாக கவனிக்க வேண்டும்.

    தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. தமிழை கொண்டாடுவது பா.ஜ.க ஆனால் தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு .

    ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் தி.மு.க. சாதனைகள் குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இது ளிப்படையான பாரபட்சம் . இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே "சங்கி" என்று சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கி என அழைப்பது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 34 சட்டமன்ற தொகுதிகளில் தங்களின் பலத்தை காட்டியதாக பாஜக மதிப்பிட்டுள்ளது.
    • பாஜக, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.

    பாஜக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கேரளாவிலும் தனது கட்சியை கால் பதிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டது.

    அதன் பலனாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கேரள மாநிலத்தில் பாஜக கால் பதித்தது. திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி கவுரவப்படுத்தியது.

    இந்தநிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. அங்குள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளில் பா.ஐ.க. வெற்றிபெற்றது.

    இதனால் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலிலும் அவர்களே வெற்றி பெற்றனர். அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தில் உள்ள 34 சட்டமன்ற தொகுதிகளில் தங்களின் பலத்தை காட்டியதாக பாஜக மதிப்பிட்டுள்ளது.

    நேமம், கட்டகடா, கஜகூட்டம், செங்கனூர், மலப்புழா, எலத்தூர், காசர்கோடு, மஞ்சேஸ்வரம், அரூர் ஆகிய 9 தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பா.ஜ.க. பெற்றுள்ளது. அவற்றில் 5 தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 45 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

    கோவளம், வட்டியூர்காவு, பாறசாலை, சிராயின்கீழ், கொட்டாரக்கரா, புதுக்காடு, இரிஞ்சாலக்குடா, கொடுங் கல்லூர், நாட்டிகை, ஒட்டப்பாலம், பாலக்காடு, மாவேலிக்கரை ஆகிய 12 தொகுதிகளில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றிருக்கிறது.

    திருவனந்தபுரம், அட்டிங்கல், குன்னத்தூர், ஆரன்முளா, கருநாகப் பள்ளி, குந்தாரா, சேலக்கரா, வடக்கஞ்சேரி, மணலூர், சொரனூர், குனனமங்கலம், கோழிக்கோடு வடக்கு, நென்மாரா ஆகிய 13 தொகுதிகளில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வாக்குகளை பெற்றுள்ளது. வட்டியூர்காவு, நெமோத் ஆகிய தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    சட்டமற்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் நோக்கில் உள்ளாட்சி தேர்தல் பணி கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம் என்று பாஜக முடிவு செய்துள்ளது. ஆகவே சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளாட்சி தேர்தலில் நியமிக்கப்பட்ட தலைவர்களை பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் கேரளாவுக்கு வருகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநக ராட்சியை கைப்பற்றினால் 45 நாட்களுக்குள் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை அறிவிக்க கேரள மாநிலத்துக்கு பிரதமர் வருவார் என்று பா.ஜ.க. அறிவித்திருந்தது.

    அதன்படி பிரதமர் கேரளாவுக்கு ஜனவரி மாதம் 24-ந்தேதிக்கு முன்னதாக வரும் வகையில் திட்டம் வகுப்பப்பட்டு வருகிறது. அப்போது பா.ஜ.க.வின் "மிஷன்-2026" திட்டத்தை பிரதமர் அறிவிப்பார் என தெரிகிறது. அப்போதே பாஜக, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக கேரள வந்திருந்த உள்துறை மந்திய மந்திரி அமித்ஷா, திருவனந்தபுரத்தில் "மிஷன் 2025" என்று பெயரிடப்பட்ட வளர்ந்த கேரளா திட்டத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன.
    • குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட எத்தனை சீட்டுகள் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது, சாதி-மத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம்.

    ம.தி.மு.க. எத்தனை சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைக்கான சீட்டு எங்களுக்கு தி.மு.க. வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    ம.தி.மு.க. எப்போதும் தி.மு.க. கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வேறு எந்த கூட்டணியில் இருந்தும் அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக உள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை வளர விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விடக்கூடாது. மதவாத சக்திக்கு எதிரான தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்.

    த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்திக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார்.

    எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இடங்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் குறைவு. அதில் உள்ள குறைபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

    இப்படி குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தகுதியான வாக்காளர்களை நீக்கி விடக்கூடாது என்பது தான் எங்களது அச்சம். ஏனெனில் இத்தகைய தவறுகள் ஒருசில மாநிலங்களில் நடந்துள்ளது. அது தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றார்.

    இறுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்விக்கு, "எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். அதுகுறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட்டணி தலைமையிடம் எங்கள் கட்சி தலைமை பேசும்.

    தொகுதி எண்ணிக்கை குறைந்தால் யாருக்கும் சந்தோஷமாக இருக்காது. எண்ணிக்கை கூடினால் சந்தோஷப்படுவோம். தொகுதி எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக தி.மு.க. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.

    • அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
    • பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில், 'போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அவையனைத்திற்கும் பின்னணியில் போதையின் கரங்கள் தான் ஓங்கியிருக்கின்றன. ஆனால், "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என வீர வசனம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரமோ இத்துப்போய்விட்டது. எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்.

    மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த அக்கொடும்குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் தி.மு.க.-உம் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்! என்று கூறியுள்ளார். 



    • செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
    • இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிட்டுள்ளது.

    இந்நிலையில், சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கள் கிழமை) விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×