என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanimozhi"

    • “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
    • காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது.

    தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?" என்று கேட்டபோது, "கவர்னர் வேலை பார்ப்பது" என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர்.
    • அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும்.

    தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர்.

    ஆனால், கோவிட் பெருந்தொற்றின்போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.

    தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    • வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
    • சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது.

    குன்னூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்றும், நாளையும் அவர் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

    குன்னூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் என எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசு, ஏழை, எளிய மக்களை பற்றியோ, விலைவாசி உயர்வை பற்றியோ கவலைப்படவில்லை. ஏழை மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நிர்வாக திறமையற்ற முதலமைச்சராக இருக்கிறார்.

    வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தை நாடி, வியாபாரிகளின் நிலைமையை எடுத்து சொல்லி, வாகன நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுப்போம்.

    சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது. ஆனால் தி.மு.க அதை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. 2026-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் தமிழகம் போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.

    நகராட்சி பகுதிகளில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. கொள்ளையடிக்கும அரசாக இந்த தி.மு.க அரசு உள்ளது. தி.மு.க ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஆனால் செலவுகள் அதிகரித்து விட்டது.

    தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளிலும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 1½ கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூல் செய்கின்றனர்.

    அப்படி கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி டாஸ்மாக் கடை மூலமாக வருமானம் வருகிறது. ஒரு மாதத்துக்கு 450 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடந்துள்ளது.

    10 ரூபாய் வாங்குவது உண்மை தான் என அந்த துறையின் அமைச்சரே சொல்லிவிட்டார். இந்த பணம் எங்கு போகிறது. எந்த கணக்கில் இருக்கிறது. எத்தனை பாட்டில் திரும்ப பெற்றீர்கள். எவ்வளவு வசூல் வந்தது. இது எதற்கும் அவர்களிடம் கணக்கு இல்லை.

    அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை பெற்று தருவோம். அ.தி.மு.க அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் தி.மு.க நிறுத்தி விட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

    அ.தி.மு.க அலுவலகம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் வீட்டில் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறுகிறார். அவர் கனவு கண்டாரோ என்னவோ தெரியவில்லை. அ.தி.மு.க அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. வேண்டும் என்றால் வந்து பார்த்து கொள்ளுங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்து பார்த்தீர்கள். ஆள் வைத்து அ.தி.மு.க கட்டிடத்தை நொறுக்கி பார்த்தீர்கள். ஆனால் நொறுக்க முடியவில்லை. அ.தி.மு.க. அலுவலகத்தை உடைக்க தி.மு.க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.

    நீங்கள் அ.தி.மு.க.வை உடைக்க, அ.தி.மு.க.வை பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தீர்கள். எத்தனையோ பேரை கொம்பு சீவி பார்த்தீர்கள். ஆனால் அது அத்தனையையும் எங்களது தொண்டர்கள் முறியடித்தனர்.

    அ.தி.மு.க உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்களால் உருவான கட்சி. முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதி.மு.கவை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. அத்தனை தொண்டர்களும் அ.தி.மு.கவை தாங்கி பிடித்து கொண்டுள்ளனர்.

    அ.தி.மு.கவுக்கு எவ்வளவோ சோதனையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அவை அத்தனையும் தொண்டர்களால் தூள்தூளாக்கப்படும்.

    இதே நேரத்தில் தி.மு.க.வுக்கு சோதனை வந்தபோது, தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்கள் கட்சி அலுவலகத்தை கைப்பற்ற நினைத்த போது அதனை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா. தி.மு.க 2 ஆக போனது. கருணாநிதி தடுமாறி கொண்டிருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் தி.மு.க அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். அதனை காப்பாற்றி கொடுத்தது அ.தி.மு.க தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அ.தி.மு.கவுக்கு எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்து தான் பழக்கம். தி.மு.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் மக்களுக்கு உதவி செய்த வரலாறு எப்போதும் கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர்.
    • தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டு அறிவித்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்!

    நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர். மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்! என்று கூறியுள்ளார். 



    • பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை.
    • வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் ஐ.டி. பாலிசியை கொண்டு வந்தார்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளோம். அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை காப்பவராக குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.

    மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது. அது பிரதமருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.

    வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார்.
    • மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

    அவரது பதிவில், "இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருந்த போதிலும், இந்தியப் பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் என்பதை நான் கவனிக்கிறேன். இரக்கம் வெளிப்படையாகத் தோல்வியடைந்துள்ளது, ஆனால் 2027 தேர்தல் ஏற்பாடுகள் அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

    • எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் அனுராக் தாகூர் கூறினார்.
    • நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் மாணவர்களிடம், விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்? என கேள்வி எழுப்பினார்.

    மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என பதிலளித்தனர்.

    அதற்கு அனுராக் தாக்கூர் "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளிவீரர் அனுமன் தான் என்றார். மேலும் அவர் பேசியதாவது:

    நாம் இன்றும் நம்மை தற்போதைய நிலையில் பார்க்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான நம் பாரம்பரியம், அறிவு, கலாசாரம் பற்றி நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியவாறே நாம் இருக்கிறோம்.

    எனவே, பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சிந்தித்து, நமது தேசத்தையும், மரபுகளையும், அறிவையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்தத் திசையில் பார்த்தால் நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என தெரிவித்தார்.

    நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என்று பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.

    அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில்மாணவர்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.

    இந்தியாவின் எதிர்காலம், உண்மையை கட்டுக்கதையுடன் குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரூரில் செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதில்,

    முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது - கழக துணைப் பொதுச்செயலாளரும் -கழக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு வழங்கப்படும்.

    அண்ணா விருது - தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு வழங்கப்படும்.

    கலைஞர் விருது - நூற்றாண்டு கண்டவரும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் -அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா.இராமச்சந்திரனுக்கு வழங்கப்படும்.

    பாவேந்தர் விருது - கழக மூத்த முன்னோடியும் - தலைமைச் செயற்குழு உறுப்பினரும் - குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு வழங்கப்படும்.

    பேராசிரியர் விருது - கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் - காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் - சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கத்துக்கு வழங்கப்படும்.

    மு.க.ஸ்டாலின் விருது - ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு
    • சுதர்சன் ரெட்டி நீதிபதியாக இருந்தபோது மக்களுக்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

    ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் முடிவில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டது குறித்து திமுக எம்.பி. கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சுதர்சன் ரெட்டி நீதிபதியாக இருந்தபோது மக்களுக்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பாஜகவின் இந்துத்துவ அரைசியலை எதிர்த்து பேசக்கூடியவர். அதனால் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளோம்.

    இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல்; அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள ஒரு வேட்பாளரை (சி.பி.ராதாகிருஷ்ணன்) எதிர்க்கும் வகையில், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து எங்கள் வேட்பாளரை (சுதர்சன் ரெட்டி) முன்மொழிந்திருக்கிறோம். நாங்கள் தேர்வு செய்துள்ள வேட்பாளர், அரசமைப்புச் சட்டத்தை மதிப்பவர். அவர்கள் (பாஜக) தேர்வு செய்த வேட்பாளர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதென அர்த்தமாகிவிடாது" என்று தெரிவித்தார்.

    • தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
    • மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை தாக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு விழாவில் பங்கேற்ற பின்பு தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. அரசு ஒரு புறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அவர்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சோதனை. தி.மு.க. இதை எதிர்கொள்ளும். நமது அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து தி.மு.க.வுடன் உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலாலும் தி.மு.க. தலைவர்களை அச்சுறுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.
    • அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    அதில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.

    இந்நிலையில் இதற்கு திமுக எம்.பி. கனிமொழி இன்று பதிலளித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

    இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

    • தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    • பிரதமர் மோடியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    அண்மையில் ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, தூத்துக்குடியில் உள்ள VOC துறைமுகத்தில் உள்ள போக்குவரத்து மையம் உட்பட எனது தொகுதி மற்றும் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினேன். தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அளித்த ஆதரவிற்கும் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    ×