என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பூர் ரெயில் நிலையம்"

    • எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

    * எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.

    இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    • 1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன.
    • தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 1 வது பிளாட்பாரத்தில் இருந்து 11-வது பிளாட்பாரம் வரை பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளது. எழும்பூர் பாரம்பரிய ரெயில் நிலைய கட்டிடத்தை தவிர மற்ற இடங்கள் சீரமைக்கப்படுகிறது.

    விமான நிலையத்தை போல ரெயில் நிலையம் புதிதாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

    1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் செய்வதற்காக அங்கிருந்து புறப்படக்கூடிய ரெயில்களை மாற்றுவதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    ரெயில்வே துறையின் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்த மூன்று பிளாட்பாரங்களில் சீரமைப்பு பணிகளை தொடங்க இருப்பதால் தாம்பரத்தில் இருந்து ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து இயக்கவும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

    வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை இரண்டு மாதங்கள் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து 5 முக்கிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

    எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 2 மாதம் அங்கிருந்து இயக்கப்படும்.

    எழும்பூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் ரெயில் எண் 22675 எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந்தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

    எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

    இதே போல எழும்பூரில் இருந்து மும்பைக்கு செல்லக்கூடிய எண் 22158 எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

    ஏற்கனவே கொல்லம் எக்ஸ்பிரஸ், குருவாயூர், மன்னார்குடி எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மேலும் 6 ரெயில்கள் எழும்பூரில் இருந்து தாம்பரம் மற்றும் கடற்கரை நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரெயில் இயக்க மாற்றத்தை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது.
    • மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.

    சென்னை:

    சென்னையின் பாரம்பரிய கட்டிடத்தின் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது. அதன் எழில்மிகு தோற்றம் மாறாமல் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    எழும்பூர் ரெயில் நிலையத்துடன் மெட்ரோ ரெயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகர பஸ் வசதி, கார், ஆட்டோ போன்றவை எளிதாக பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க ஓட்டல்கள், ஷாப்பிங் செய்ய வணிகப் பகுதி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பல அடுக்கு பார்க்கிங் வசதி தயாராகிறது.

    ரெயில்கள் வருகை மற்றும் புறப்பாடுக்கான கட்டிடம், தரை தளம் மற்றும் 3 அடுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. ரெயில்கள் வருகை மற்றும்புறப்பாடுக்கு தனித்தனி பிரத்யேக பகுதிகள் ஒதுக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு பயணிகளுக்காக சிறப்பு வழியும் அமைக்கப்படுகிறது.

    ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது. காந்தி இர்வின் சாலையிலும் பூந்தமல்லி சாலையிலும் 5 அடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.

    பயணிகள் நடந்து செல்வதற்கு உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது. பிளாட்பாரங்களை கடக்கவும், சாலைக்கு செல்ல நடை மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. இது தவிர பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் எளிதாக செல்ல எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் புதிதாக நிறுவப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து எளிதாக வெளியேறி பஸ், ஆட்டோ, கார்களில் செல்லவும் அதே போல ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பயணிகளை இறக்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    இது தவிர புதிதாக பார்சல் அலுவலகம், ரெயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம் பூந்தமல்லி சாலை பகுதியில் கட்டப்படுகிறது. துணை மின்நிலையம், புதிய ரெயில்வே குடியிருப்புகளின் தரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக லிப்ட் வசதி, எஸ்கலேட்டர், குளர்ச்சியான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவை கட்டப்படுகிறது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க வடக்கு பகுதியில் பிரமாண்ட குடிநீர் தொட்டி "சம்ப்" தரைக்கு அடியில் கட்டப்படுகிறது. இங்கிருந்து ரெயில்களுக்கு குடிநீர் நிரப்பும் வசதியும் அளிக்கப்படுகிறது.

    • பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
    • பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.

    சென்னை:

    காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் ரெயில் நிலையத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

    மேலும் போலீஸ் மோப்ப நாய் மூலம் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்திற்கு வருகின்ற அனைத்து பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    இதே போல சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய நுழைவு வாசல்களில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.

    • ரெயில் நிலைய அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

    அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட தகவல் வெளியானது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேப்பேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

    பின்னர், தண்ணீரை பீய்த்து அடித்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த பணிகள் அனைத்தும் உலகத்தரத்தில் இருக்கும்.

    சென்னை :

    இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்கு நாள்தோறும் 120 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 442 புறநகர் ரெயில்கள் என 562 ரெயில்கள் கையாளப்படுகின்றன. முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் சராசரியாக 26 ஆயிரத்து 400 பயணிகள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

    தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில்நிலையங்களில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

    அதன்படி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இந்த பணிகளை மேற்கொள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது.

    பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

    தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன.

    விமான நிலையத்தில் இருப்பது போன்று பயணிகள் வருகை, புறப்பாடு பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நடைமேடை, காத்திருப்பு அரங்கு, வெளிப்புறப்பகுதி ஆகியவற்றிற்கு எளிதாக செல்லும் வகையில் பிரத்யேக பாதை அமைக்கப்பட இருக்கிறது.

    பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்கு தடையின்றி ரெயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளிவளாகப் பகுதி பிரமாண்டமாக அமைய இருக்கிறது. பெருகிவரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுமானம் அமையும். இந்த பணிகள் அனைத்தும் உலகத்தரத்தில் இருக்கும்.

    மறு சீரமைப்பு பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. மரங்கள் மற்றும் பயன்பாட்டு பகுதி, கட்டுமானத்துக்கான நிலப்பரப்பு கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

    புதிய கட்டிடம், பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், காத்திருப்பு அரங்கு, அடுக்குமாடி வாகன காப்பகம் அமைய உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    11 இடங்களில் ஆழ்துளை கருவிகள் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மறு சீரமைப்பு பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
    • மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

    சென்னை:

    எழும்பூர், சென்ட்ரல், ரெயில் நிலையங்களில் நிழல் கூரை இல்லாததால் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் பழமை வாய்ந்த எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள ரெயில் நிலைய வளாகத்தில் கட்டண வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகின்றன.

    இங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகிறார்கள். ஆனால் வாகனங்களுக்கு நிழற்கூரை, எந்தவித பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லை. இதனால வெயில், மழையால் வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் வாகன பார்க்கிங் பகுதியில் வெயில், மழையால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிழற்கூரை மற்றும் பந்தல் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் விரைவு ரெயில், மின்சார ரெயிலில் பயணம் செய்ய மோட்டார் சைக்கிள் மற்றும் கார், வாகனங்களில் வருகின்றனர். எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து தினமும் 3 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த 2 பெரிய ரெயில் நிலையங்களில் உள்ள வாகன பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் செய்து கொள்ள எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். வெளியூர்களுக்கு செல்பவர்களின் இருசக்கர வாகனங்கள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் உடனடியாக கூரைகள் அமைத்து வெயில், மழையால் பாதிக்கப்படும் வாகனங்களை பாதுகாக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது பெரிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது.
    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் 115 ஆண்டுகள் பழமையான கடிகாரம் இயங்கி வந்தது.

    சென்னை :

    சென்னையில் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது. தெற்கு ரெயில்வேயில் 2-வது பெரிய ரெயில் நிலையமாக எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளது. 144 ஆண்டுகள் கடந்தும் இந்த தொண்மையான கட்டிடம் எழில்மிகு வகையில் காட்சி அளிக்கிறது. நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கி வருகின்றது.

    ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் ரூ.734 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் எழும்பூர் ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த எழும்பூர் ரெயில் நிலையத்தில் 115 ஆண்டுகள் பழமையான கடிகாரம் இயங்கி வந்தது. இங்கிலாந்தில் உள்ள டெர்பி என்ற ஊரில் செயல்பட்டு வந்த 'ஜெ ஸ்மித் அண்டு சன்ஸ்' என்ற நிறுவனம் இந்த கடிகாரத்தை தயாரித்து கொடுத்தது. முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட கடிகாரமாக இது உள்ளது. டிஜிட்டல் கடிகாரம் வருவதற்கு முன்பாக எழும்பூர் ரெயில் நிலையம் வரும் பயணிகளுக்கு இந்த கடிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் போது 4-வது நடைமேடைக்கு அருகிலேயே இந்த கடிகாரம் அமைந்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கடிகாரம் திடீரென செயல்படாமல் நின்று போனது. இதையடுத்து இந்த கடிகாரம் கருப்பு துணி கொண்டு மூடப்பட்டது. எழும்பூர் ரெயில் நிலையம் பராமரிப்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த தொன்மையாக கடிகாரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகளும், பழங்கால பொருட்கள் சேகரிப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "2020-ம் ஆண்டு முதலே இந்த கடிகாரம் செயல்படாமல் போய்விட்டது. இது 1900-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் தயாரிக்கப்பட்ட கடிகாரம். இதில் பழுது ஏற்பட்ட உடன் இதை சரி செய்ய முயற்சி செய்யப்பட்டது. ஆனால், கடிகாரத்தின் உள்ளே பழுது ஏற்பட்ட பொருள் சந்தையில் கிடைக்கவில்லை. பழுதான பொருளை மாற்ற பல மாதங்களாக சந்தை சந்தையாக அலைந்து பார்த்தோம். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. அதனாலேயே துணி கொண்டு மூடப்பட்டுவிட்டது. இந்த கடிகாரத்தை அகற்றவும் முடியாது" என்றார்.

    • அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
    • இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

    சென்னை:

    மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கும் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பயணிகள் அடையும் சிரமத்தை நேற்றைய தினம் சமூகவலைதளங்களில் பயணி ஒருவர் பதிவிட்டு இருப்பதை கண்ட பிறகாவது ரெயில்வே நிர்வாகம் விழித்துக்கொண்டு உடனடியாக அவற்றை சரிசெய்வதோடு, அனைத்து நடைமேடைகளிலும் ஏறுகின்ற மற்றும் இறங்குகின்ற வழிகளில் நகரும் படிக்கட்டுகளை அமைத்து நவீன இந்தியாவை உருவாக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இதுகுறித்து பலமுறை மண்டல கூட்டத்திலும், பலமுறை கடிதம் வாயிலாகவும் ரெயில்வே அமைச்சகத்துக்கு தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன் என கூறியுள்ளார்.

    • தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.
    • தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்டவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர்.

    சென்னை:

    திருச்செந்தூரில் இருந்து கடந்த 17-ந்தேதி இரவு புறப்பட்டு சென்னை நோக்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் பலத்த மழை-வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    பாதுகாப்பு கருதி ரெயில் நிறுத்தப்பட்டதால் அதில் வந்த 800 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பயணிகள் ரெயில் பெட்டியிலும் அங்குள்ள பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர்.

    ஆனால் மழையும் வெள்ளமும் கோர தாண்டவம் ஆடியதால் அவர்களால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. பாதுகாப்பாக ரெயில் பெட்டியிலேயே இருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.

    பள்ளியில் தங்கியிருந்த  300 பேர் நேற்று மீட்கப்பட்டனர். அதே போல ரெயிலில் இருந்த 508 பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    நேற்று காலையில் இருந்து ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். நைலான் கயிறு உதவி மூலம் வெள்ள நீரை பயணிகள் கடந்து வந்தனர். அதே போல பெரியவர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ரெயிலில் இருந்து 508 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்கள் மூலம் மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் சென்னைக்கு பயணமானார்கள். இரவு 11.15 மணிக்கு மணியாச்சியில் இருந்து 508 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது.

    கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் வழியாக செந்தூர் எக்ஸ்பிரஸ் வரக்கூடிய அதே வழித்தடத்தில் புறப்பட்டு வந்தது. பயணிகளுக்கு இரவு உணவு, காலை உணவு, மதிய உணவு வரை ரெயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டன.

    காலை 10.30 மணிக்கு எழும்பூர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ரெயில் தாமதமாக வந்தது. மதியம் எழும்பூர் வந்து சேர்ந்தது. விழுப்புரத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அங்கு சிறிது நேரம் நின்ற ரெயில் பயணிகளுக்கு இட்லி, பொங்கல், வடை மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து சிறப்பு ரெயில் திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் நின்றது. பயணிகள் 3 நாட்களுக்கு பிறகு தங்கள் சொந்த ஊரை அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். உறவினர்கள் அவர்களை கட்டித் தழுவி கண்ணீர் மல்க வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.


    தாம்பரம், எழும்பூர், ரெயில் நிலையங்களில் பயணிகளை அழைத்து செல்ல ஏராளமான உறவினர்கள் காலை 9 மணி முதல் காத்து இருந்தனர்.

    ஒவ்வொரு பயணிகளும் குடும்பம் குடும்பமாக சிறப்பு ரெயிலை விட்டு இறங்கி சென்றனர். 3 நாட்களுக்கு பிறகு உறவினர்களை பார்த்ததில் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

    தினமும் செல்போன் வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்ட அவர்கள் இன்று நேரில் பார்த்ததும் ஆரத்தழுவி கொண்டனர். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் மற்றவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    • ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய 1 மற்றும் 2 நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
    • ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேத்துப்பட்டு ரெயில் பணிமனையில் இருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தடம்புரண்டது.


    இதையடுத்து ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×