என் மலர்
நீங்கள் தேடியது "மாணிக்கம் தாகூர்"
மதிமுக தலைவர் வைகோவும், விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்த நிலையில், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் தங்களுக்கு கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தாகூரின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ,
'லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் எங்கள் எல்லையை தாண்டவில்லை. கூட்டணி தர்மம் தழைப்பதற்கும், தலைமையை மதித்து செயல்படுவதற்கும் இலக்கணமாக திகழும் கட்சி மதிமுக. கூட்டணியில் இருக்கும் கட்சிகளை விமர்சிக்கும், புண்படுத்தும் வகையில் நாங்கள் எந்த கருத்தையும் கூறமாட்டோம்.' என தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு பதிலளித்த துரை வைகை,
"மதிமுகவிற்கும், காங்கிரஸிற்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் கூறியது குறிப்பிட்ட அந்த நபரை மட்டும்தான்(பிரவீன் சக்ரவர்த்தி). அதற்கான விளக்கத்தையும் மாணிக்கம் தாகூரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரவீன் சக்ரவர்த்தி உத்தரப்பிரதேசத்தின் கடனைவிட, தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் அதிகம் என தெரிவித்திருந்தார். இது தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியின் தலைமை கட்சியான திமுகவை நேரடியாக தாக்குவதாக அமைந்தநிலையில், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதற்கு மாணிக்கம் தாகூர் தங்கள் உட்கட்சி பிரச்சனையில் மற்ற கட்சிகள் தலையிட வேண்டாம் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளனர்.
- சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும்
- கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல
கடந்த சில நாட்களாகவே காங்கிரஸில் உட்கட்சி மோதல் நிலவிவருகிறது. அதில் பெட்ரோல் ஊற்றும்விதமாக அமைந்தது பிரவீன் சக்ரவர்த்தியின் தமிழ்நாடு நிலுவைக்கடன் தொடர்பான கருத்து. இவரின் இந்த கருத்து தொடர்பாக விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதனிடையே பிரவீன் சக்ரவர்த்தி தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தை தெரிவித்திருந்திருந்தார்.
தொடர்ந்து இன்றும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. அவர்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் தங்கள் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என எச்சரிக்கை அளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்தியிடம் "நடவடிக்கை எடுக்க" கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி கூறியதை ஒரு செய்தியில் படித்தேன். ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை விசிகவின் ரவிக்குமார், மதிமுகவின் துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் "உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்" என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.
ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், துரைவைகோ, திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர்.
- அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வின் அமைப்பு வலிமையை திக் விஜய் சிங் பாராட்டியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர் எம்.பி., பாஜக வெறுப்பால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அது வெறுப்பை பரப்புகிறது எனக் கூறியதுடன் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாக ஷேசாத் பூனாவாலா, மாணிக்கம் தாகூர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஷேசாத் பூனாவாலா கூறியிருப்பதாவது:-
அவர்கள் தேசியவாதிகளில் பயங்கரவாதிகளையும், அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர். காங்கிரஸ் தேசியவாதிகளை இழிவுப்படுத்துகிறது. நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர். அவர்கள் இதை மட்டுமே செய்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக நாட்டை கட்டமைப்பதற்கான தனிநபர் குணநலன்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் அவதூறு மற்றும் மறைமுக குற்றச்சாட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு என்பதால், நேரு மற்றும் அவரது அரசு ஆர்எஸ்எஸ்-ஐ குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததா? என்பதை மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றது ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்திற்கு சென்றதா என்பதையும் காங்கிரஸ் கூற வேண்டும். மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.-ஐ புகழ்ந்தபோது ஒரு பயங்கரவாத அமைப்பைப் பாராட்டினார்களா என்பது கூற வேண்டும்.
இவ்வாறு ஷேசாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.
- பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலிமைகளை பாராட்டி திக் விஜய் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் தலைவர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், மோடியின் படத்தை காண்பித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமையை பாராட்டி பேசினார்.
தலைவர்கள் காலடியில் இருந்த ஒரு சாதாரண தொண்டன் முதல்வர் மற்றும் பிரதமராகியுள்ளார் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த அமைப்பு வலிமையாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு மற்ற தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து தற்போதுள்ள விசயங்கள் குறித்து பேசுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
பின்னர், எக்ஸ் பக்கத்தில் திக் விஜய் சிங் விளக்கம் அளித்திருந்தார். அதில் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை பாராட்ட வில்லை. அமைப்பின் வலிமையை சுட்டிக்காட்டினேன் எனத் தெரிவித்தார். இது பேசும்பொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக திக் விஜய் சிங்கை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். என்பது வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. அது வெறுப்பைப் பரப்புகிறது. வெறுப்பிலிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. அல்-கொய்தாவிடமிருந்து நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்-கொய்தா ஒரு வெறுப்பு அமைப்பு. அது மற்றவர்களை வெறுக்கிறது. அந்த அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?
நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், நல்லவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 140 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. காங்கிரஸ் மக்களை ஒன்றிணைத்தது. மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த அமைப்பு வெறுப்பு அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
- காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது.
பீகார் மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி இமாலய வெற்றியை ருசித்து உள்ளது.
அதே நேரம் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியது தவறு என்ற குரல் அங்கும் ஒலிக்கிறது.
அடுத்ததாக தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மேற்கொள்ளப் போகும் கூட்டணி வியூகம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நேரங்களில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும். கடைசியில் சமாதானமாகி விடுவார்கள்.
கடந்த காலங்களில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால்தான் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டும் உண்டு. இதனால் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கணிசமாக குறைக்கப்பட்டன. கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
ஆனால் வருகிற தேர்தலில் 25 தொகுதிகளை ஏற்கமாட்டோம். கூடுதல் தொகுதிகளை கேட்போம். ஆட்சியிலும் பங்கு கேட்போம் என்று காங்கிரசார் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் தி.மு.க.வினரிடம் உள்ளது. இதை வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்.
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், தமிழகத்தில் காங்கிரஸ் எந்த மாதிரி முடிவுகளை மேற்கொள்ளும் என்பது பற்றி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-
பீகாரில் எஸ்.ஐ.ஆரால் பா.ஜ.க வெற்றி பெற்று உள்ளது. கடந்த தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் ஆர்.ஜே.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனவோ அங்கெல்லாம் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை தந்திரமாக நீக்கி இருக்கிறார்கள்.
இதை தேர்தல் ஆணையம் சிஸ்டமேடிக்காக செய்து இருக்கிறது. இந்தநிலையில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரை அ.தி.மு.க. ஆதரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பல மாநிலங்களில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் நெருக்கடிகளை கொடுத்து கட்சிகளை உடைத்தது பா.ஜ.க. அதுபோல் நடந்துவிட கூடாது என்பதற்காக 2021-ல் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய அவசியம் இருந்தது. அதற்காக அப்போது காங்கிரஸ் தியாகம் செய்தது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
காங்கிரஸ் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.
கூட்டணி முடிவு, கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு போன்ற முடிவுகளை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது.
- இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?
மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 8-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது. ஆனால் ஏன் எல்லா விதிகளையும் மீற வேண்டும்? தாமரை குளம் பகுதியைத் தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதி என பாகுபாடுகள் ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- கவர்னர் ஒப்புதல் வழங்காதது மக்கள் நலனுக்கு எதிரானது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.43 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். கல்விக்கடன் விருதுநகரில் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி யளித்த அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழுவினால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி, துணைத் தலைவர் தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் ரூ. 143 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ. 9 கோடியே 5 லட்சம் மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மத்திய அரசு கல்வி கடனில் கவனம் செலுத்தாததை காட்டுகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மாவட்டத்தில் ரூ. 120 கோடி வரை கல்விக்கடன் வழங்கப்பட்டது. ரூ.143 கோடி கல்விக்கடன் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தினை மத்திய அரசு நிறுத்திவிட்ட நிலையில் தமிழக அரசு திட்டத்தினை செயல்படுத்த குழு அமைத்து அதற்கு தேவையான நிதியினை நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்கும் நிலையில் விவசாய காலம் தவிர பிற நாட்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு எதிரான ஆன்லைன் ரம்மிதடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செயல்பாடு தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விருதுநகர் பாத்திமா நகரில் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டியை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்.
- மகாத்தா காந்தி கடந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.
- பிரதமர் மோடி இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசும்போது மகாத்மா காந்தி- பிரதமர் மோடி ஆகியோரை ஒப்பிட்டு கூறினார்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசும்போது "மகாத்மா காந்தி கடந்த நூற்றாண்டின் மாமனிதர். பிரதமர் மோடி இந்த நூற்றாண்டில் சிறந்த மனிதர்.
உண்மை மற்றும் வன்முறையைற்ற வழியில் ஆங்கிலேயர் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தார். பிரதமர் மோடி நாம் பார்க்க விரும்பிய வளர்ச்சியில் நாட்டை கொண்டு வந்துள்ளார்." என்றார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கம் பதிவில் "மகாத்மா காந்தியுடன் நீங்கள் ஒப்பீடு செய்தது வெட்கக்கேடானது சார். ஒருவரை உயர்த்தி பேசுவதற்கு ஒரு எல்லை உண்டு என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தற்போது அந்த எல்லையை நீங்கள் மீறிவிட்டீர்கள். உங்களது பதவி மற்றும் நிலைக்கு இப்படி துதி பாடுவது மதிப்பை சேர்க்காது" எனத் தெரிவித்துள்ளார்.

ஜக்தீப் தன்கர் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். அப்போது அதிகாரம் யாருக்கு என்பதில் மம்தா பானர்ஜிக்கும்- இவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
- பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அவருக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நான் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தின் தீவிர ஆதரவாளர். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

வருகிற 24-ந் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
அவர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூரிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.
நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளேன்.
இந்த சந்திப்பு வருகிற 31-ந் தேதி வரை தொடரும் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.
இதில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்.
- பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது.
விருதுநகர்:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை யூனியனில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பட்டாசு தொழில் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பட்டாசு தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு ஆதரவு தேவை.
ராகுல் காந்தி பிரதமரானால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். இந்தியாவில் 10 கோடி பெண்களுக்க வருடந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களிடம் பணம் இருந்தால் குடும்பம். ஊர், மாவட்டம், மாநிலம், நாடு நன்றாக இருக்கும்.
எனவே தான் ராகுல் காந்தி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு 112 பணக்காரர்களுக்கு மட்டும் செயல்படுகிறது. அவர்களுக்கு ரூ.17 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதானி, அம்பானி போன்றவர்களுக்காக பாஜக செயல்படுகிறது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏழை தாய்மார்களின் அரசாக இருக்கும். எனவே என்னை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார்.
- மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது.
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் இன்று அருப்புக் கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட சூலக்கரை, சின்னவள்ளி குளம், மாசி நாயக்கன்பட்டி குல்லூர் சந்தை, ராமசாமிபுரம் பால வநத்தம், கோவிலாங்குளம், பாளையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தேர்தல் முடிந்ததும் மனு செய்தால், உடனடியாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி அந்த திட்டத்தை நிறுத்த நினைக்கிறார் . இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நூறு நாள் வேலை 150 நாட்களாகவும், சம்பளத்தை 400 ஆக உயர்ததவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், மகளிருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்வு வளம் பெறும். மோடி அரசானது பணக்காரர்களுக்கான அதானி, அம்பானி அரசாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனப் பேசினார். பிராசரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு.
- கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.
விருதுநகர்:
இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குளம், செக்கானூரணி, கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தீவிர வாக்கு சேரித்தார். செக்காலூ ரணியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையணிவித்து அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு. இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும். யார் வரக்கூடாது தீரமானிக்கும் தோதல். 100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்றும் பிரதமர் வேண்டுமா? அல்லது 100 நாள் வேலையை முடித்து வைக்கிற பிரதமர் வேண்டுமா? என்பதை பொதுமக்கள் யோசித்து பார்க்க வேண்டும். சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தும் பிரதமர் வேண்டுமா? இல்லை ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயாக குறைக்கும் பிரமர் வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். பிரதமர் மோடி 100 நாள் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொன்று வருகிறார். தேர்தல் மூலம் மோடிக்கு நீங்கள் வழியனுப்பு விழா நடத்த வேண்டும். அதற்காக வரும் 19ந் தேதி நீங்கள் கை சின்னத்துக்கு ஓட்டு போடணும். ராகுல் காந்தி பிரதமர் ஆனால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்துவார். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்ச ரூபாய் ஆண்டுக்கு கிடைக்கும். 10 கோடி பெண்களுக்கு இந்த திட்டம் கொடுக்க போகிறார். இந்த திட்டத்தில் பெண்கள் திரளாக சேர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கப்பலூர் அருகே உச்சப்பட்டியில் மாணிக்கம் தாகூர் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில், கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.
டோல்கேட்டால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கப்பலூர் டோல்கேட் மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






