என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selvaperunthagai"

    • பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
    • கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    தமிழக அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசும் நிர்வாகிகள் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளித்து உள்ளோம்.

    இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் கூட்டணியை உடைக்க முடியாது. கூட்டணி சமுத்திரம் போன்றது. அதில் சில அலைகள் வரலாம். போகலாம். கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது.

    கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கதவை திறந்து வைத்துக்கொண்டு இருந்தாலும் யாரும் செல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.
    • நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது. காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் குறித்து விமர்சித்து இருப்பது அவரது சொந்த கருத்து.

    கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அவரது பகல் கனவு பலிக்காது. உத்தரபிரதேச புல்டோசர் ஆட்சியின் யோகி ஆதித்யநாத் குரலாக பிரவீன் சக்கரவர்த்தி பேசுகிறார்.

    தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய வளர்ச்சி மற்றும் விளம்பரத்திற்காக பேசுகிறார். அவர் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்க உளவு வேலை பார்ப்பவர்களை அனுமதிக்க முடியாது.

    ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், 'தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகள் கவர்னர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பா.ஜ.க.விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது நமது வேலையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து.
    • கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பதை விட இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் ஆகும். இதன் தாக்கம் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்பட வெளிநாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

    வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்கும் பிரதமர் மோடிதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த கட்சியும் எங்களை நசுக்க எல்லாம் முடியாது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் காங்கிரசுக்கு சிக்கல்கள் உருவானது.

    அதனால்தான் முன்கூட்டியே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரசை பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.

    எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து. அதேபோல்தான் திருச்சி வேலுசாமி கூறி இருப்பதும் அவரது கருத்துதான். காங்கிரசின் கருத்து அல்ல.

    கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது. மீதி வாக்குறுதிகளையும் எஞ்சிய காலத்தில் நிறைவேற்றி விடும். ஆசிரியர்கள், நர்சுகள் போராட்டத்திலும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றார்.

    பேட்டியின் போது முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், சுமதி அன்பரசு, தாம்பரம் நாராயணன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ராம்மோகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர் முத்தழகன், டி. என்.அசோகன், புத்தநேசன், ஜி.தமிழ் செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.

    • குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக ரயில்வே இருக்கிறது
    • கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

    ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், 

    "நடுத்தர, ஏழை மற்றும் உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் வகையில், ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும் பொதுப் போக்குவரத்து சேவையாக இருக்கும் ரயில்வே, மக்கள் நலனின் அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, லாப நோக்கில் கட்டண உயர்வுகளுக்கான போக்குவரத்தாக மாறக் கூடாது.

    ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, வரி சுமை ஆகியவற்றால் திணறும் நிலையில் உள்ள நடுத்தர குடும்பங்களுக்கும், ஏழை மக்களுக்கும் இந்த ரயில் கட்டண உயர்வு மேலும் சுமையையே ஏற்படுத்தும். மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு–தனியார் ஊழியர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட கோடிக்கணக்கான பயணிகளின் நலனுக்கு எதிரான இந்த முடிவை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

    எனவே, ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி, இந்த மக்கள் விரோத முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
    • பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் கிரிஸ்சோடங்கர், சூரஜ் ஹெக்டே, ஆலுவா ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போது 40 தொகுதிகள் கேட்டு வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் முன் தயாரிப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதே எங்கள் இலக்கு.

    டெல்லியில் நாளை (செவ்வாய்)யும் தொடர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றார்.

    பேட்டியின்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை.
    • பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

    4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

    மாவட்ட பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றது 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

    கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்லில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.

    இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை. பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வாங்கிய வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் தருகிற வகையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது.
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது.

    சென்னை:

    பி.ஆர். அம்பேத்கர் 69-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவரிடம், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ், த.வெ.க இடையே கூட்டணி வரலாம் என்று பேசப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டணி மாற்றம் தொடர் பாகவும் காங்கிரஸ் யோசிக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து பற்றி எனக்கு தெரியாது. இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது. இந்த குழு தான் திமுகவிடம் பேசியது. அடுத்தகட்டமாக திமுக குழு அமைக்கப்பட்ட பிறகு பேச்சுவார்த்தை தொடரும். இந்த குழு தான் அதிகாரபூர்வமான காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு.

    கூட்டணி தொடர்பாக புற வாசல் வழியாக காங்கிரஸ் ஒருபோதும் பேசாது. காங்கிரஸ் நேர் வழியில் தான் செல்லும். பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக, நீங்கள் தான் கூறுகிறீர்கள்.

    எனக்கோ, தமிழக காங்கிரஸ் கட்சிக்கோ, எதுவும் தெரியாது. அவர் சந்தித்தது உண்மை என்று தெரியவந்தால் அல்லது அவரே தான் விஜயை சந்தித்ததாக சொன்னாலோ, மேலிடத்துக்கு தகவல் தெரிவிப்போம். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும்.

    ஒரு வேளை அவர் வேறு விஷயமாக கூட விஜயை பார்க்க சென்று இருக்கலாம். அரசியலாக ஏன் பார்க்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது.

    இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை,

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். திமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டதும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு ஒரு உதாரணம். இந்தியா கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி." என தெரிவித்தார்.

    காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

     

    • விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.
    • விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா-2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    விவசாயிகளின் விதைக்கு விலை வைக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் தரக்கட்டுபாட்டு விதிமுறைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து விதை விற்பனையை தனியார்மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக விதைகள் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவவோ அல்லது தன்னளவில் பொருளாதார பலன்களை அடையவோ இந்த புதிய விதை மசோதா தடை செய்கிறது. கார்ப்பரேட்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து புதிய விதை வாங்கி, பயிர் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

    விதைகள் மசோதாவை பொறுத்தவரை ஒவ்வொரு விற்பனையாளரும் விதைகள் குறித்து பதிவு சான்றிதழை ஒன்றிய-மாநில அரசுகளிடம் பெற்ற பிறகு தான் விதைகளை விற்கவோ, ஏற்றுமதி, இறக்குமதி செய்யவோ, தனிப்பட்ட நபருக்கு வழங்கவோ முடியும் என்ற வகையில் இந்த மசோதா பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. விற்பனை செய்யப்படும் விதைகள் கியூ ஆர் கோடில் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இதன்மூலம் புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கிற விதை மசோதா மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் இறக்குமதி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

    இந்த புதிய விதை மசோதாவை பொறுத்தவரை போலி மற்றும் தரமற்ற விதைகளை விநியோகம் செய்தால் சிறு குற்றங்களுக்கு முதலில் ரூபாய் 1 லட்சம், தவறுகள் தொடர்ந்தால் ரூபாய் 2 லட்சம், பெரிய குற்றங்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    அப்படி அபராதம் கட்டத் தவறினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. விதைகளில் எது போலியானது, எது தரமற்றது என்பது எப்படி முடிவு செய்யப்படும் என்று தெரியவில்லை.

    விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது விவசாயிகளின் சாகுபடி செலவை அதிகரிக்கும். ஏற்கனவே, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி, அந்த சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற்றது. அதேபோல, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு விரோதமான பாரம்பரிய விதை இறையாண்மையை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் ஒன்றிய அரசின் விதை மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.

    • ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.
    • சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்.

    * காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம் என்று பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் வேண்டும்.

    * கடந்த 1996-ம் ஆண்டில் அ.தி.மு.க. எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது.

    * எங்களது சொந்த தந்தையை தான் டாடி என அழைப்போம். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரையோ டாடி என்கின்றனர்.

    * ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.

    * சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?

    * ராகுல் காந்தி பற்றி ராஜேந்திர பாலாஜிக்கு என்ன தெரியும்.

    * தனிநபர் செய்த தவறுகளுக்கு ஒரு சமூகத்தை குறை கூறுவது கொடுமையானது.

    * காங்கிரஸ் குறித்த தனது கருத்தை ராஜேந்திர பாலாஜி திரும்ப பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்.
    • தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

    ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை பழித்துக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜனநாயகக் கொள்கைக்கும் எதிரானது.

    தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள். அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகையில் உள்ளது.

    தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறு கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெற்று, தமிழர்களிடம் தனது பேச்சுக் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரிவினை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.

    மாநிலங்களின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பிரதமர் செயல்பட வேண்டும்.

    தமிழர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்தவித செயலும், எந்தவித கருத்தும் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 88 பேர் கலந்து கொள்கிறார்கள்.
    • மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கரும் கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரசில் கடந்த சில மாதங்களாக கூட்டணியில் கூடுதல் சீட்டு கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற கோஷம் எழுந்து வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே சென்னைக்கு மேலிட பார்வையாளர் வந்திருந்த போது சில எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகள் சிலரும் கோரிக்கை வைத்தனர். நிர்வாகிகளின் கருத்தை கேட்ட மேலிட பார்வையாளர் கூட்டணி விவகாரங்கள் பற்றி பொது வெளியில் கருத்து சொல்ல வேண்டாம் அது பற்றி டெல்லி மேலிடம் முடிவு செய்யும் என்று கூறினார்.

    இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 88 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கரும் கலந்து கொள்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும், தற்போதைய கூட்டணி மாறும் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தச் சூழலில், நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் கூடுதல் சீட்டு கேட்க வேண்டும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்ற வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    இது பற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் வருகிற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்படும். மேலும் 77 கட்சி மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவர்களை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நியமிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய விரைவில் குழுவும் வர இருக்கிறது. இது பற்றியும் விவாதிக்கப்படும்.

    மேலும் வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள வரவுள்ளார். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த 4 மண்டலங்களிலும் ராகுல் காந்தி பிர சாரம்செய்ய வருவார்.

    ஏற்கனவே பீகாரில் காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தது. தமிழ்நாட்டிலும் தேர்தல் நெருங்கி வரும்போது பேச்சுவார்த்தையில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக இப்போதே அது தொடர்பாக தெளிவான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×