என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Democratic Alliance"

    • பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு
    • தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமி நியமனம்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைக்க குழு அமைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    "வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026-ஐ சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.

    இக்குழுவிற்கு தலைவராக முன்னாள் எம்பியும், மாநில துணைத் தலைவருமான துரைசாமியும், துணைத்தலைவராக முன்னாள் டிஜிபி பாலச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

    • இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ்.
    • அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது

    தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அரசியல் கட்சிகள் ஒருங்கிணைத்து வருகின்றன. திமுக தனது நாடாளுமன்ற தேர்தலின்போது இணைந்த கூட்டணி கட்சிகளுடனேயே தேர்தலை சந்திக்கிறது. ஆனால் நடுநடுவே திமுக-காங்கிரஸ் மோதல் புகைந்துகொண்டே இருக்கிறது. இருப்பினும் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட்டணியில் உறுதியாக இருக்கிறார்கள். 

    இதனிடையே ராமதாஸ் தரப்பு திமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று திமுகவை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார் ராமதாஸ். மேலும் பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என திருமாவளவன் உறுதியாக உள்ளார். இதனால் ராமதாஸ் தரப்பு பாமக, திமுக கூட்டணியில் இடம்பெறாது என கூறப்படுகிறது. 

    மறுபுறம் பிரிந்த அதிமுக ஒண்றிணைந்து வருகிறது. ஓபிஎஸ் மட்டும் இன்னும் இணையவில்லை. இதனிடையே ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு மூன்றுமுறை அதிமுக முதலமைச்சராக இருந்தவர் எப்படி திமுகவிற்கு செல்வார், அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழவைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஓபிஎஸ் தே.ஜ.கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது ஓபிஎஸ் கூட்டணியில் இருந்தால் எவ்வளவு பலமாக இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 

    "இப்போது இருக்கும் கூட்டணியே பலமான கூட்டணிதான். மற்ற பலனும் நல்லப் பலன்தான். கூட்டணிகள் பலமாக வந்துசேர்கின்றன. நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். "  என தெரிவித்துள்ளார். 

    இதனிடையே இந்த யூகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள ஓபிஎஸ், 

    "எனது ஒற்றை கோரிக்கை, வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணையவேண்டும். இதன்மூலம் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதுதான். மீண்டும் ஒன்றிணையவது பற்றி ஆண்டவன் கையிலேயே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. கூட்டணிக்கு என்னை யாரும் இதுவரையில் அழைக்கவுமில்லை" என தெரிவித்துள்ளார். 

    ஆனால் இவை அனைத்திற்கும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார் இபிஎஸ். திமுகவை வீழ்த்த, டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்தது போல ஓபிஎஸ் உடனும் கைக்கோர்ப்பாரா? பாஜக ஓபிஎஸை இணைக்கக் கோரினால் இணைப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

    • எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம்.
    • எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.

    இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,

    "தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர அமமுக தே.ஜ.கூட்டணியில் இடம்பெற வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வந்துள்ளோம். நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் வழிவந்தவர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டனர். எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அ.ம.மு.க.வின் நலனுக்காகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று, மனதில் இருந்த எல்லா கோப, தாபங்களையும் விட்டுவிட்டு மீண்டும் அம்மா ஆட்சியை மலரசெய்ய இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    ஒரு விஷயத்தை எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி, ஆதரிப்பது என்றால் அதிலும் உறுதியாக இருக்கக்கூடிய தன்மையை ஜெயலலிதா எனக்கு கொடுத்திருக்கிறார். ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்; பங்காளிகளாக இருந்தவர்கள். எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை. ஆனால் மக்களாட்சியை தமிழ்நாட்டில் நிறுவவேண்டும் என்பதற்காக நாங்கள் முழுமனதோடு இந்தக் கூட்டணியில் இணைந்திருக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாடே இன்று கொலை, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதைப்பொருள் புழக்கம். தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வருத்தத்தில் இருக்கும்போது மகனை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தக் குடும்ப ஆட்சியை முழுமையாக முறியடிப்போம்" என தெரிவித்தார். 

    • இபிஎஸ் பெயரை சொல்லவே டிடிவி தினகரன் தயங்குகிறார்.
    • தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று புத்தக கண்காட்சியை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கண்காட்சி பலருக்கும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் அ.ம.மு.க. தே.ஜ.கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,.  

    "இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருநாளும் மக்கள் அந்தக் கூட்டணியை ஏற்கமாட்டார்கள். நேற்றுவரை இபிஎஸ்-க்கு துரோகி பட்டத்தை கொடுத்துவந்தார் டிடிவி தினகரன். இனி எப்படி அவருடன் வாக்கு கேட்பார், களம் காண்பார்? இன்று அவரது பெயரை சொல்லவே தயங்குகிறார். தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை. ரூ.3400 கோடி வரை நிலுவையில் உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் இந்த நிதி விடுவிக்கப்படும் என கூறுகிறார்கள். அவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்பார்கள்? இந்த கூட்டணியின் படையெடுப்பை தமிழ்நாடு மக்கள் முறியடிப்பார்கள்." என தெரிவித்தார். 

    • சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது.
    • மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வலுவான கூட்டணி. இந்த கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சி செய்கின்றனர்.

    எங்களது கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என சமீப காலமாக தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது.

    மக்கள் விரோத தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் எனில், தமிழகத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.வின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் முதலமைச்சர் என்று அனைவருக்கும் தெரியும். விவசாய பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் என்பது தவறான தகவல். இதை திட்டமிட்டு சிலர் பரப்பி வருகின்றனர்.

    சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் தி.மு.க. தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் கலப்பு இல்லாமல் அரசு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரவிக்குமார் எம்.பி. கடும் தாக்கு
    • வரும் ஜனவரி மாதத்தில் தெலுங்கானா, மிசோரம், மத்தியபிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பத்தில் வெல்லும் ஜனநாயக மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கோட்டகுப்பம் நகர செயலாளர் திருவழகன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார்.

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யிலிருந்து ஒவ்வொ ருவராக வெளியேறி வருகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது.

    பா.ஜனதாவிற்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் யாரும் கூட்டணியில் இல்லை. கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியை இழந்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று தற்போது ஆட்சி புரிந்து வருகிறது.

    தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் பா.ஜனதாவை கட்சிகள் புறக்கணித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டை விழுந்த படகு போல சவாரி செய்து கொண்டிருக்கிறது. விரைவில் அந்த கூட்டணி மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில்

    பா.ஜனதா 20 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என சர்வே வெளியாகி உள்ளது. பா.ஜனதா வலிமையாக இருப்பதாக கூறப்படும் பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சியிடம் தோல்வி யடைந்துள்ளது. இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகும். வரும் ஜனவரி மாதத்தில் தெலுங்கானா, மிசோரம், மத்தியபிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

    இதில் பா.ஜ.க. தோல்வியடையும். இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் வி.சி.க. தேர்தல் பணி குழு துணை செயலாளர் வள்ளுவன் ஆகியோர் பேசினர். இதில், மண்டல செயலாளர் செல்வம், ஆற்றலரசு அய்யாகரிகாலன், இரணியன், பால்வண்ணன், அன்பரசு, தமிழ் ஒளி, தமிழ்பாவலன், கவுன்சிலர் பேராசிரியர் கல்பனா, பிரபாகரன், கமல்தாஸ், முபாரக் ஆறுமுகம், காளிதாஸ், சிறுத்தை செரீப், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செய லாளர் சபீர் அகமது நன்றி கூறினார்.

    • என்.டி.ஏ. அரசு 2004ல் பழைய பென்சன் திட்டத்தை நிறுத்தி விட்டது
    • தொடக்கம் முதலே அரசு ஊழியர்கள் புது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

    அரசு ஊழியர்களின் பணிக்காலம் நிறைவடைந்ததும் அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படை தொகையை கணக்கிட்டு மாதாமாதம் நிலையாகவும் நிரந்தரமாகவும் ஒரு தொகையை அரசாங்கம் வழங்கி வந்தது. இது மாதாமாதம் முதல் வாரத்தில் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதால், நிலையான நிரந்தரமான வருமானமாக அவர்களுக்கு இருந்தது. இத்திட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) எனப்படும்.

    2004ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதில் மாற்றம் கொண்டு வந்தது. இதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தாங்களாக முன்வந்து ஒரு தொகையை மாதாமாதம் செலுத்த வேண்டும். இத்துடன் பணியாளர்களின் அடிப்படை தொகையின் 14 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தன் பங்காக அரசாங்கம் ஒரு தொகையை செலுத்தும். இதுவே ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) எனப்படும்.

    2009 வருடத்திலிருந்து 18 வயதிலிருந்து 60 வயது வரை எந்த துறையில் பணியாற்றுபவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேரலாம் என இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.

    அரசின் செலவினங்களை குறைக்கும் முயற்சியாகவும், பல துறைகளை சேர்ந்தவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் அமைந்ததாலும், இத்திட்டத்தை பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பின்பற்றி வந்தன.

    ஆனால், நிரந்தரமாக மாதாமாதம் ஊழியர்களுக்கு கிடைத்து வந்த நிலையான வருமானம் நின்று போனதால், அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தை எதிர்த்து வந்தனர்.

    சமீபத்திய சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வென்றுள்ள பா.ஜ.க. அங்கு முன்னர் இருந்த அரசுகள் அமல்படுத்தி வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர போவதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் வென்றுள்ள தெலுங்கானாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) "மாநில நிதிநிலைமை: 2023-24க்கான பட்ஜெட் குறித்த ஆய்வு" எனும் அறிக்கையை வெளியிட்டது. அதில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    "சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளதும், சில மாநில அரசுகள் திரும்ப உத்தேசித்திருப்பதும் தவறான முடிவு. இது மாநில அரசுகளின் நிதி ஆதாரத்திற்கு பெரும் சுமையாக மாறி விடும். மாநிலத்தில் ஒரு அரசு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான பெரும் திட்டங்களுக்கான செலவினங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும். இது ஒரு பிற்போக்கான முடிவு. இதன் மூலம் சுமார் 4.5 மடங்கு வரை நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எதிர்கட்சிகள் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்துவோம் என பிரசாரம் செய்வதும், அதற்கு ஒரு சில அரசு ஊழிய தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு அளிப்பதும் அதிகரித்து வரும் நிலையில், ஆர்.பி.ஐ.-யின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

    • கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.
    • திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான முன் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. கூட்டணி அமைப்பது, மக்களிடம் பிரசாரம் செய்வது போன்றவற்றில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.

    கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதனால் கேரளாவில் அப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்ட ணியின் கேரள பாதயாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் பீகாரில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

    இதனால், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவரும், மாநில பாரதிய ஜனதா தலைவ ருமான சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாநில அரசை விமர்சித்தும், மத்திய அரசின் சாதனைகளை வலியுறுத்தியும் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சூரில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியே இந்த பாத யாத்திரை என்றார்.

    தளிபடவு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடிக்கு உத்தரவாதம் புதிய கேரளா என்று முழக்கமிட்டார்.

    20 பாராளுமன்ற தொகுதிகள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை பிப்ரவரி 27-ந் தேதி பாலக்காட்டில் முடிவடைகிறது. வருகிற 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடை பெறும் பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காசர்கோட்டில் தொடங்கிய பாதயாத்திரை மேல்பரம்பில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில கன்வீனர் துஷார் வெள்ளப்பள்ளி, துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ், தேசிய வாத கேரள காங்கிரஸ் மாநில தலைவர் குருவில்லா மேத்யூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
    • சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பாக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணில் அங்கம் வகித்துள்ள த.மா.கா.வானது கூட்டணில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சந்திரபாபு நாயுடு மகாலட்சுமி கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.
    • தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிரா மாநிலம் கோலாம்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலில் அவருடைய குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    நாட்டையும் நாட்டு மக்களையும் ஆசீர்வதிக்கும் சக்தி வாய்ந்த தெய்வமான மகாலட்சுமி ஆசிர்வாதத்தை பெற நீண்ட காலமாக முடிவு செய்திருந்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. தேர்தலில் வாக்களிக்கும் மக்களுடைய மனநிலை நாடு முழுவதும் நல்ல நிலையில் உள்ளது.

    இதனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான அலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    • பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய அரங்கில் தொடங்கிய கூட்டத்தில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்

    நடந்து முடித்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240 தொகுதிகளை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது. அதேநேரம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது.

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.

    இதற்கிடையே புதிய மந்திரி சபையில் யார் யாருக்கு இடமளிப்பது குறித்து கட்சி தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய அரங்கில் தொடங்கிய கூட்டத்தில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மோடி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க பழைய பாராளுமன்றத்துக்கு வந்த மோடி அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு நேராக இந்திய அரசியலமைப்பு புத்தகம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று, அதை கையில் எடுத்து நெற்றியில் ஒத்திக்கொண்டார். பின் அதை தலைவணங்கி  தொட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு அதன்பின்னரே தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.

    இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக கருதப்படும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய 2 கட்சிகளும் முறையே 16 மற்றும் 12 எம்.பி.க்களை வைத்திருக்கின்றன. எனவே கூட்டணி ஆட்சியை சுமுகமாக தொடர்வதற்கு இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பா.ஜ.க.வுக்கு முக்கியமானதாகும்.

    • சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார்.
    • புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    திருப்பதி:

    தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.

    ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.

    சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால் ஆந்திரா மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.

    ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான நடிகர் என்.டி.ராமராவின் மகள். என்டி ராமராவ் மகளும், புரந்தேஸ்வரியின் சகோதரிமான புவனேஸ்வரியை சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.

    என.டி.ராமராவின் மறைவுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி தலைவரானார். ஆந்திர அரசியலில் கால் பதிக்க நினைத்த புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மந்திரி, எம்.பி பதவிகளை வகித்தார். 2004-ம் ஆண்டு பாபட்லா எம்.பி.யாகவும், 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினம் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் பா.ஜ.க. கால் பதிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தபோது கட்சி மேலிடம் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக அறிவித்தது.

    புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்தது.

    நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.

    ×