என் மலர்
இந்தியா
- அதிபர் டிரம்புடன் அதானி விவகாரம் குறித்து பேசவில்லை என்றார் பிரதமர் மோடி.
- அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விவகாரமாகி விடும். அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
- உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- கும்பமேளாவிற்கு 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
- அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசித்தார்.
இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு தலைநகர் டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து வென்றது.
- ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.
அகமதாபாத்:
டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தில் தொடங்கியது.
வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் அரை சதமடித்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
ஆர்சிபி தரப்பில் ரேணுகா தாகூர் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. எல்லீஸ் பெரி 34 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்.
5-வது விக்கெட்டுக்கு இணைந்த ரிச்சா கோஷ், கனிகா அவுஜா ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிச்சா கோஷ் 27 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 64 ரன்கள் குவித்தார். கனிகா 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது ரிச்சா கோஷுக்கு அளிக்கப்பட்டது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
- பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விபரம் பின்வருமாறு:-
சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி உட்பட 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
As part of ongoing engineering works, Line Block/Signal Block is permitted in #Chennai Central – #Gudur section between #Ponneri & #Kavaraipettai Railway Stations on 16th, 19th & 21st February 2025.Passengers, kindly take note.#RailwayAlert pic.twitter.com/KophnbfYlj
— DRM Chennai (@DrmChennai) February 14, 2025
- தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்-க்கு சிஆர்பிஎஃப் Y பிரிவு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தற்போது பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடைபெற்று வருகிறது.
- அதிலும் பொதுமக்கள் பணத்தை சுரண்டுவதற்கான துறையை பெறுவதற்கான சண்டை நடைபெற்று வருகிறது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.
பொதுமக்களின் நிதியை சுருண்டுவதற்கு வசதியான இலாகாக்களை பெறுவதில் பாஜக தலைவர்களிடையே சண்டை நடைபெற்று வருகிறது. அதனால் ஆட்சி அமைக்க காலதாமதமாகிறது என டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளர்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
தற்போது பாஜக தலைவர்களிடையே அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக சண்டை நடைபெற்று வருகிறது. அதிலும் பொதுமக்கள் பணத்தை சுரண்டுவதற்கான துறையை பெறுவதற்கான சண்டை நடைபெற்று வருகிறது.
டெல்லி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கான பழியை ஆம் ஆத்மி கட்சியின் மீது சுமத்துவதே அவர்களின் உத்தி.
அவர்கள் தங்கள் சொந்த தோல்விகளை மறைக்கவும், தங்கள் வாக்குறுதிகளை மீறுவதை நியாயப்படுத்தவும் இந்த சாக்குப்போக்கைப் பயன்படுத்துவார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக மோடி உத்தரவாதம் என்ற பெயரில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தது. அதில் டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ரூ.2,500 என்று உறுதியளித்தது. இது முதல் அமைச்சரவை கூட்டத்தில் செயல்படுத்தப்படும் என்றும், முதல் தவணை மார்ச் 8-ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
இருப்பினும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று பாஜக வட்டாரங்கள் இப்போது தெரிவிக்கின்றன.
இவ்வாறு அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
- குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
- பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அதே பள்ளியில் 12ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி செல்ல மாட்டேன் என சிறுமி அழுது அடம் பிடித்த நிலையில் பெற்றோர் பொறுமையாக விசாரித்த போது உண்மை அம்பலமாகியுள்ளது.
பிறகு, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆசிரியர்களை காண்பித்தபோது சரியாக அடையாளம் காட்டியுள்ளார்.
இதைதொடர்ந்து, ஆசிரியர் மணிகண்டனுக்கு தர்ம அடி கொடுத்த சிறுமியின் பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர். குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதியவில்லை என்றும் அரசியல் தலையீட்டால் காவல்துறை மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.
பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர். இதற்கிடையே, புதுச்சேரி- கடலூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- விளையாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும்.
- 2036 ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டி இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விளையாட்டில் இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை இன்று என்னால் சொல்ல முடியும். 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பம் செய்துள்ளோம். ஒலிம்பிக் போட்டியை நடத்த நாம் தயாராக உள்ளோம். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும்போது, நமது வீரர்கள் பதக்கங்களை வென்று, இந்திய கொடியை உயரத்தில் பறக்கச் செய்வார்கள்" என்றார்.
மேலும், மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கும்போது, நம்முடைய விளையாட்டு பட்ஜெட் 800 கோடியாக இருந்தது. தற்போது அது 3,800 கோடியாக உயர உள்ளது. இது மோடி அரசு விளையாட்டு துறை வளர்ச்சிக்காக உறுதிப்பூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
2014-ல் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 15 பதக்கங்கள் வென்றனர். தற்போது அது 26 ஆக உயர்ந்துள்ளது, 2014 ஆசியப் போட்டியில் 57 பதக்கங்கள் வென்ற நிலையில், 2023-ல் 107 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது ஆரம்கால கட்டத்திலேயே உள்ளது. அடுத்த வருடம் வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இது தொடர்பாக முடிவு எடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமி நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
- பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக கட்சியை ஒரு நல்ல நோக்கத்தோடு கொண்டுப் போக வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள அனைவருமே கட்சியில் இருக்கக்கூடாது என்று ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டார்.
அதேபோல், கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ, யார் சரி, தவறு என்பவதில் சரி என்கிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதேபோன்ற செயல்பாட்டினால் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். ஒரு சிலர் மாற்று கட்சிக்கு மாரிவிட்டனர். ஒரு சிலர் மாற்றுக் கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல் கட்சியில் ஒதுங்கி எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்றனர்.
எடப்பாடியின் இதுபோன்ற செயல்களால் அதிமுக பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 1998-களில் அம்மாவின் நம்பிக்கைக்கூறிய நாயகனாக செயல்பட்டு, தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மா அவர்கள் ஒரு கடுஞ்சொல் கூட அப்பாவை பேசினது கிடையாது.
எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அப்பாவிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவுகளை எடுப்பார்கள். அவ்வாறு நம்பிக்கைக்குறியவர் அப்பா.
ஆனால், பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார். நிர்வாகிகளிடம் தவறான கருத்துகளை புகுத்திக் கொண்டிருக்கிறார். முழுநேரமும் சொந்த கட்சிக்காரர்களையும், கட்சி தலைவர்களையும் எப்படி காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
இதனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
நம் சகோதரர்களுக்குள் பிரிவினைவாதத்தை கொண்டு வந்து தற்போது வரை அவர்கள் எந்த மாற்றமும் இன்றி செயல்புரியாத காரணத்தினால், அதிமுக மிகப்பெரிய பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிப்ரவரி மாதத்தில் 8 நாட்கள் பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது.
- சென்செக்ஸ் 2,644.60 புள்ளிகளும், நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி சரிவை சந்தித்து வருகின்றன.
குறிப்பாக இந்த மாதம் (பிப்ரவரி) இதுவரை, பங்குச் சந்தைகள் செயல்பட்ட 11 நாட்களில் 8 நாட்கள் சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறுவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் 3-வது காலாண்டு வருமான அறிக்கை முக்கிய காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 199.76 புள்ளிகள் சரிந்து 75,939.21 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.26 சதவீதம் சரிவு ஆகும். இன்று காலை வர்த்தகத்தின்போது 699.33 புள்ளிகள் குறைந்து 75,439.64 புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து 199.76 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102.15 புள்ளிகள் 22,929.25 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் 8 நாட்களில் 2,644.6 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மொத்த புள்ளிகளில் 3.36 சதவீதம் ஆகும். நிஃப்டி 810 புள்ளிகள் சரிந்துள்ளன. இது 3.41 சதவீதம் ஆகும்.
30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ் பங்கு 4 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்தது. அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், சன் பார்மா, இந்துஸ்இண்ட் பேங்க், என்டிபிசி, டாடா ஸ்டீல் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
நெஸ்லே, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெ.சி.எல்.டெக் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
இன்றைய ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோ பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்தது. சியோல், ஷாங்காய், ஹாங் காங் பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
அந்நிய முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் 2789.91 கோடி ரூபாய் மமதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
- உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்.
- அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்.
காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் காதல் வரலாம். ஒருவர் மீது ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே காதல். அன்பினை வெளிப்படுத்தும் நாளே இந்த காதலர் தினம்.
காதலர் தினத்துக்கு திரையுலகினரில் இருந்து அரசியல்வாதிகள் வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் காதலர் தினம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட காதலர் தின வாழ்த்து மடல்:-
உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால்
உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்!
தன்னைப்போல் பிறரையும் நேசி
என்றார் இறைமகன் ஏசு!
அண்டை அயலானுக்கும் அன்புசெய் என்றார்
இறை தூதர் நபிகள் நாயகம்!
அன்பே சிவம் என்றார் திருமூலர்!
எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றது!
எல்லா மனிதர்களையும் அன்புதான் பாதிக்கின்றது!
கடவுளை மறுக்கும் மனிதர்கள் கூட காதலை மறுப்பதில்லை!
என்னால் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது;
அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்!
காதலில் ஒன்றுமில்லை;
ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை;
காதலுக்காக யாரும் சாகக் கூடாது;
ஆனால் காதலிக்காமலும் யாரும்
சாகக் கூடாது!
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்.
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்
அதனாலே மரணம் பொய்யாம்.
- பெரும்பாவலர் பாரதி
நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்
பலமிழந்து போனால்
இனமழிந்து போகும்
ஆதலால், மானுடனே
தாய்நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்
என சீமான் வாழ்த்து மடலில் தெரிவித்துள்ளார்.