என் மலர்
இந்தியா
- இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்று தந்துள்ளது.
- கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது
கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என எந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தாலும், அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஜாமின் பெற்றுத்தரும் மோசடி கும்பலை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவும் வகையில், தொழில்முறை ஜாமின் தாரர்களாக இந்தக்குழு செயல்பட்டு வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுதந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்காக ஒரு வழக்கிற்கு சுமார் 20,000 ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த வழக்கில், கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய எஸ்பி சுபோத் கவுதம், பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கொலைக் குற்றவாளி. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமினில் வெளியே உள்ளார். இதில் நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பங்களை எழுதித் தரும் வேலை பார்த்து வந்த பிங்கு என்கிற பிரேம் சங்கர் தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமின் தரக்கூடிய நபர்களை ஏற்பாடு செய்வதிலும் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
ராம் கிஷோர் என்பவர் 13 வழக்குகளில் போலி நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்ததாகவும், அவரது கூட்டாளியான விஸ்வநாத் பாண்டே மற்றும் பிரவீன் தீட்சித் ஆகியோர் தலா இரண்டு வழக்குகளில் ஜாமின் கையெழுத்து போட்டதாகவும், மற்ற கூட்டாளிகளான தர்மேந்திரா இரண்டு வழக்குகளிலும், பிங்கு ஒரு வழக்கிலும், அமித் மூன்று வழக்குகளிலும் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
- இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில், புத்தாண்டையொட்டி வடபழனி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர்.
- 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ரூ. 50,000 வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் (CPI-Maoist) அமைப்பின் வட-பீகார் மத்திய மண்டலக் குழுவின் செயலாளர் தயானந்த் மலக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
"14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மலக்கர் என்ற சோட்டு என்ற நக்சலைட், பெகுசராய் மாவட்டத்தின் தேக்ரா பகுதியில் புதன்கிழமை மாலை சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவுடன் நடந்த மோதலில் (Encounter) உயிரிழந்தார்.
பாதுகாப்பு படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மலக்கர் தனது கூட்டாளிகளுடன் ஒளிந்திருந்த இடத்திற்கு சென்றனர். காவல்துறையினரைக் கண்டதும், மலக்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் அந்த நக்சலைட் காயமடைந்தார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மலக்கர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என பீகார் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர். முன்னதாக வட பீகாரில் பல்வேறு நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மலக்கரை பற்றி தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
- காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
- எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்.
நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கணக்கை தொடங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள்.
தாமிரபரணியை காக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணயத்தை அமைக்க வேண்டும். பொருநை அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். அவருக்கு நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம். அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்.
பா.ஜ.கவால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
- நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ்குமார் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு வெறும் ரூ.1.65 கோடிதான் என்று தெரிய வந்துள்ளது.
நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறை அனைத்து அமைச்சர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி நாளில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நிதிஷ்குமாரின் சொத்து விவரம் ரூ.1.65 கோடி என்று தெரியவந்து உள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.68,455 அதிகமாகும்.
நிதிஷ்குமாரிடம் ரூ.20,552 ரொக்கமாகவும், பல்வேறு வங்கி கணக்குகளில் சுமார் ரூ.57,800-ம் உள்ளன. அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.17.66 லட்சமாகும். அதே சமயம் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.48 கோடியாகும். மேலும் அவருக்கு டெல்லியில் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் ஒரு பிளாட்டும் இருக்கிறது.
துணை முதலமைச்சர் சவுத்ரியிடம் ரொக்கமாக ரூ.1.35 லட்சம் உள்ளது. அவரது மனைவி குமாரி மம்தாவிடம் ரூ.35 ஆயிரம் இருக்கிறது. சவுத்ரியிடம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஒரு துப்பாக்கியும், விவசாயம் அல்லாத நிலம் உள்பட ரூ.4.91 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.
மற்றொரு துணை முதலமைச்சரான விஜய்குமார் சின்காவிடம் ரூ.48.46 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், ரூ.77,181 மதிப்புள்ள ஒரு கைத் துப்பாக்கியும் உள்ளது.
- பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
- டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
- அதிமுக சார்பில் போட்டியிட நேற்று வரை விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
- எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட 7,187 பேர் விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதில், தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு வழங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
அதன்பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகள் 'தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி', தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும், ஆக மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 5ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடுகள், கட்சி அமைப்பை வலுப்படுத்த புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தல், தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் நிலைப்பாட்டை மாவட்ட அளவில் தொண்டர்களிடம் கொண்டு செல்வது என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகு, கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலத்தில் காலை 11.30 மணி அளவில் திரண்ட ஆசிரியர் ஆசிரியைகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.
அதனை மையப்படுத்தி தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரே வேலையை செய்து வரும் உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியமும் எங்களுக்கு குறைவான ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், தினமும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னை மாநகர போலீசார் தினமும் எங்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லட்சத்தீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
3-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
7-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
நாளை முதல் 5-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து பெரியமேடு, வேப்பேரி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பெண்கள் 12 ஆண்கள் உட்பட 45 தூய்மை பணியாளர்களை கைது செய்து கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அனைவரையும் நேற்று இரவு கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது சரஸ்வதி, நிர்மலா, மகேஸ்வரி, தனலட்சுமி ஆகிய 4 தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சக தூய்மை பணியாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸார் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நிறுத்தாமல் நேராக கோயம்பேடு நோக்கி சென்றதால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் பஸ்சிலேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற தூய்மை பணியாளர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு.
சென்னை:
சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் நாளை மறுநாள் (03.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எம்எம்டிஏ காலனி: ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை.
அரும்பாக்கம்: மேத்தா நகர், என்எம் சாலை, எம்எச் காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ரேட் காலனி, அய்யாவூ காலனி காயத்ரி தேவி, ரசாக் கார்டன், ஜேடி துராஜ் ராஜ் நகர், ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ அதிகாரி.
அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு, பெரியார் பாதை, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.
சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நம்சிவாயபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகந்தன் தெரு, கான் தெரு.
கோடம்பாக்கம்: பஜனை கோவில் 3வது, 4வது தெரு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.






