என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
- கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு தெரிவித்தோம்.
- வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் ஏன் இங்கு வரவில்லை?
பெங்களூரு:
கர்நாடாக மாநிலத்தின் பெங்களூரு நகரில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, தேர்தல் கட்டுப்பாடுகளால் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் என்றதும் பிரதமர் மோடி ஓடோடி வருகிறார். வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அறிவித்தோம்.
மாநில அரசு சார்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரி கடிதம் எழுதினோ.
இதுவரை கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பிரதமர் மோடி ஒரு பைசா கூட வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
- விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
- 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், கரூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி நேற்று முதல் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். விருப்ப மனு படிவத்தை ஆர்வமுடன் வாங்கி சென்று பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார்கள்.
விருப்ப மனு கொடுப்பவர்கள் கட்டணத்துடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றையும் இணைத்து கொடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 100 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இன்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் களம் இறங்கும் 9 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
விருப்ப மனு கொடுப்பதற்கு நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணிவரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு விருப்ப மனு கொடுத்தவர்களில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்புவார்கள்.
மேலிட தலைவர்கள் அவற்றை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரூர் தொகுதியில் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
மயிலாடுதுறை தொகுதியில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் மயிலாடுதுறை தொகுதியை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசினா சையது, பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஆகியோரும் கேட்கிறார்கள்.
திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், காங்கிரஸ் ஐ.டி. பிரிவு தலைவருமான சசிகாந்த் செந்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் அந்த தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ரஞ்சன்குமார், இமயா கக்கன், விக்டரி ஜெயக்குமார் ஆகியோரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நிறுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லகுமார் போட்டியிட அதிக வாய்ப்பு இருக்கிறது.
நெல்லை தொகுதியில் விஜய்வசந்த் போட்டியிடுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 9 தொகுதிகளில் களம் இறங்கும் காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
கன்னியாகுமரி: விஜய் வசந்த் அல்லது ரூபி மனோ கரன், ராபர்ட் புரூஸ்
நெல்லை: திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, சிந்தியா.
மயிலாடுதுறை: அசன் மவுலானா, பிரவீண் சக்கரவர்த்தி, ரமணி.
கடலூர்: கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், டாக்டர் விஷ்ணுபிரசாத்
திருவள்ளூர் : ஜெயக்குமார், சசிகாந்த்செந்தில், பி. விசுவநாதன், ரஞ்சன் குமார்
சிவகங்கை: கார்த்தி சிதம்பரம்.
உத்தேச பட்டியலில் உள்ள இந்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் 9 தொகுதிகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று கடும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு எம்.பி.யாக இருப்பவர்கள் மற்றும் வாரிசுகளை கடந்து புதுமுகங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
- இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.
- தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.
மதுரை:
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.
ஐ.பி.எல். கோப்பையை இதுவரை சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் தலா 5 முறை வென்றுள்ளன. கடந்தாண்டு நடந்த இறுதிப் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டோனி தலைமையில் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.
இதையொட்டி நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். ரசிகர் பூங்கா என்ற பெயரில் பெரிய திரைகளை அமைத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.
அதன்படி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.
நவீன ஒலி, ஒளி அமைப்பில் ராட்சத திரையின் மூலம் போட்டிகளை ரசிகர்கள் காணலாம். இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டிகளை அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 22-ந் தேதி மாலை தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் போட்டி நேரடியாக இந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.
இந்த ஆண்டு 27 நகரங்களில் இது போன்ற பெரிய திரை அமைத்து பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். போட்டி நடைபெறும் அன்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம்.
இரவு 10 மணிக்கு மேல் கிரிக்கெட் போட்டியின் சத்தம் நிறுத்தப்பட்டு ஒளிபரப்பப்படும். மேலும் ரசிகர்களின் வசதிக்காக அருகிலேயே உணவு மற்றும் பானங்கள் ஸ்டால்கள் அமைக்கப் படும். இந்தாண்டு மார்ச் 22-ந் தேதி முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளையும் ரேஸே் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார்.
- கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்
கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன் கைலாஷ் யாத்திரை சென்றேன். அப்போது சேலத்தை சேர்ந்த ரத்தின வேல் என்பவர் என்னுடன் வந்தார்.
அவர் சேலத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது முதல் சேலத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர் இப்போது நம்மிடம் இல்லை என்று பேசியுள்ளார்.
இதனையடுத்து, மோடிக்கு உண்மையாகவே சேலத்தில் ஒரு நண்பர் இருந்தாரா? இல்லை சேலத்தில் பேசுவதற்காக இப்படி ஒரு பொய்யை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
- கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார்.
- ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரமதர் மோடி முதல்முறையாக தமிழக வந்தார்.
நேற்று மாலை கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார். பிறகு, இன்று சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி மேடையில் மறைந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் 'ஆடிட்டர்' வி.ரமேஷ் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர், கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்னைக்கு நான் சேலத்தில் இருக்கிறேன். ஆடிட்டர் ரமேஷ் இன்று நம்முடன் இல்லை. ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
அவர் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் மிகவும் கடின உழைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளையும் அவர் தொடங்கினார்.
தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகரம் மரவனேரி பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி ரமேஷ் (54), வீட்டின் வளாகத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் 23-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
24 மற்றும் 25-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது.
- விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார்.
அதேபோல் ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு ஒரு கோட்டையாக அண்ணா காலத்தில் இருந்தே திகழ்ந்து வந்த திருச்சியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கி தந்துள்ளார்.
பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார். மோடியின் கனவு பலிக்காது.
இந்த தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கொடி நாட்டியது இந்தியா கூட்டணி என்ற செய்தியை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது. அது எல்லா கட்சி களுக்கும் பொதுவானது. இதை யாரும் மீறக்கூடாது.
ஆனால் நாட்டின் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுகிற வகையில் தொடர்ந்து அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ என்கிற பெயரில் பெரிய ஆர்ப்பாட்டத்தோடு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி வரவேற்பு கொடுத்ததை போல் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான விதி மீறல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்.
தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
- போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.
கடந்த 9-ந் தேதி அன்று ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முதலில் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் 3 நாட்கள் மீண்டும் காவலில் எடுத்தனர். இந்த காவல் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கோடி கோடியாக கொட்டிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இது தவிர பரபரப்பான மேலும் பல புதிய தகவல்களும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலையில் விமானத்தில் அழைத்து வந்தனர்.
பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்திய பணத்தை வைத்து 3 தமிழ்ப்படங்களை தயாரித்து வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இது தவிர ஓட்டல் மற்றும் கட்டுமான தொழிலிலும் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு ஜாபர் சாதிக் வாரி வழங்கி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டெல்லியில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருவதாக தனது சினிமா மற்றும் அரசியல் நண்பர்களிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பியே சினிமா பிரபலங்கள் பலர் அவருடன் நெருக்கம் காட்டி இருக்கிறார்கள். இருப்பினும் போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை ஜாபர் சாதிக் யார்-யாரிடமெல்லாம் பங்கு போட்டுள்ளார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையின்போது போதைப்பொருள் கடத்தலில் அவர் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதற்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 4-வதாக ஜாபர் சாதிக் பிடிபட்டார். அதை தொடர்ந்து அவரது நெருங்கிய கூட்டாளியான சதா சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருட்களை சென்னையில் இருந்து பார்சல் செய்து அனுப்புவதில் சதா முக்கிய பங்காற்றி உள்ளார். இதன் மூலம் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் தம்பிகள் 2 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
- மத்திய மந்திரி அமித்ஷாவை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சந்தித்தார்.
- இதனால் மக்களவை தேர்தலில் பாஜக-மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.
இந்தச் சந்திப்பின் மூலம் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டணி உறுதியானால் மகராஷ்டிர தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு மும்பை தொகுதியில் குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்த பிறகு நவநிர்மாண் சேனாவால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
- கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படையினர் மாவட்ட முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கணுவாய்-ஆனைகட்டி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
காருக்குள் மூட்டைகள் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில், குட்கா இருந்ததை கண்டுபிடித்தனர்.
மொத்தம் 28 கிலோ குட்கா இருந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் காரில் இருந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது40) என்பதும், டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு குட்காவை எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 28 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் சாலையில் குபேரபுரி என்ற இடத்தில் மாநில வரி அலுவலர் மார்ஷல் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 270 வைத்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது, காய்கறி வியாபாரம் பார்த்து வருவதாகவும், அதில் கிடைத்த பணத்தை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் ரூ.2.17 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை பேரூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் மதுக்கரை, தொண்டாமுத்தூர், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு 5.52 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
- கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
- பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரி வினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர், மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவிலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அட்வகேட் ஜெனரல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நீதி மன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.
அதேபோல, தலைமை குற்றவியல் வக்கீலும் கோவில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினர் பணியமர்த்தப்படுவர். எவரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரி ஒருவரை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது எந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கலாம்எ. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அப்போது கோவிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து விசாரணையை ஜூன் 10-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்