search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Metro Rail"

    • பிரத்யேக உதவி எண் பெண்களால் இயக்கப்படுகிறது.
    • ஆதரவு வழங்குவதற்காக புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரத்யேக மகளிர் உதவி எண் 155370-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    மகளிர் உதவி எண் 155370 முழுக்க முழுக்க பெண்களால் 24/7 முறையில் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது, இதில் அவசரகால பதில், தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் BSNL நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    முன்னதாக பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகள் மற்றும் சுய பாதுகாப்பு நுட்பங்களில் பயிற்சி பெற்ற பின்க் ஸ்குவாட் என்ற பெண் பாதுகாப்பு பணியாளர்கள் குழு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும், நடைமேடையில் மிகவும் வெளிச்சத்துடன் கூடிய மகளிருக்கென தனியான காத்திருப்பு பகுதி, மகளிருக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மெட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • பிப்ரவரி 9ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்திருந்தனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

    அந்த வகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

    01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84.63.384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை 86,15.008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 09.02.2024 அன்று 3,26,786 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2024, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,05,644 பயணதிகள் (Online QR 2,12,344: Static QR 2,32.315: Paper QR 21.29,890; Paytm 3,82,549; Whatsapp 3,70,008; PhonePe 1,76,751; ONDC 1.787), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 38,94,639 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 28,640 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,959 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 11,80,126 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள்

    (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து மாற்றங்கள் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் நாளை (21-ந்தேதி) முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.கே.என். ரோடு மற்றும் ரெயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கி செல்ல அனுமதி இல்லை.

    ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலதுபுறமாகவோ அல்லது இடப்புறமாகவோ செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம்.
    • சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி இது ஆகும்.

    இந்த போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் மற்றும் தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி போட்டியை காண வரும் ரசிகர்கள் போட்டி முடிந்து திரும்பும் போது சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் மேற்கொள்ள முடியும்.

    ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் அரசினர் தோட்டம் ரெயில் நிலையம் வருவதற்கான டிக்கெட்களை ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 

    • போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    • புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து விட்டது. சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ. 100 எனும் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றுலா அட்டையின் விலை ரூ. 150 ஆகும். இதில் ரூ. 50 பயண அட்டையில் வைப்பு தொகையாக திருப்பி ஒப்படைக்கப்பட்டு விடும். வார இறுதி நாட்களில் புதிய ஒருநாள் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த சுற்றுலா அட்டையின் கால அவகாசம் ஒருநாள் மட்டும்தான். அந்த வகையில் பயனர்கள் ஒருநாள் முடிவில் சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் போது ரூ. 50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

    • குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றுவிட்டன. இன்று சென்னையில் நடைபெற இருக்கும் முதல் குவாலிபையர் சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    முன்னதாக நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மெட்ரோ ரெயில் உடன் கூட்டணி அமைத்து- சேப்பாக்கத்தில் போட்டியை காண மெட்ரோ ரெயில் மூலம் வரும் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கி வந்தது. அந்த வகையில், இன்று நடைபெற இருக்கும் குவாலிபையர் போட்டிக்கும் சென்னை மெட்ரோவில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்றைய குவாலிபையர் போட்டியை காண சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரெயில் பயணம் வழங்கப்படாது என்று தெரியவந்துள்ளது. இன்றைய போட்டியை பிசிசிஐ நடத்துவதால், சேப்பாக்கத்தில் வழங்கப்படும் டிக்கெட்களை கொண்டு ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது.

    லீக் சுற்று ஆட்டங்களை போன்றே, குவாலிபையர் போட்டிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது.

     

     

    இன்று (மே23) மற்றும் நாளை (மே 24) நடைபெற இருக்கும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய, வாட்ஸ்அப் சாட்பாட்-இல் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்ய வாட்ஸ்அப்-இல் இருந்த படி 8300086000 என்ற எண்ணிற்கு Hi என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பின் வரும் வழிமுறைகளை பின்பற்றி டிக்கெட்களை வாட்ஸ்அப் செயலியிலேயே எடுக்கலாம். இது தவிர, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது சிஎம்ஆர்எல் மொபைல் செயலி மூலமாகவும் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், சென்னை மெட்ரோ ரெயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரவு 11 மணிக்கு பிறகு டிக்கெட் கவுண்டர்கள் இயங்காது என்பதால், பயனர்கள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளில் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்களை எடுத்துக் கொள்ளலாம். 

    • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி முன்னிலையில் ஒப்பந்தம்
    • கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை 27 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4-ல் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டு வரும் பணிமனைக்கு ரூ.31 கோடியே 80 இலட்சம் மதிப்பில் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்திற்கு ரூ.31.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி) மற்றும் ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்தின் திட்ட தலைவர் ஷோபித் சக்சேனா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    'வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், நிறுவுதல், சோதனை செய்தல், பூந்தமல்லி பணிமனையில் இயந்திரங்கள் மற்றும் ஆலைகளை இயக்குதல் மற்றும் ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்".

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 13 இயந்திரங்கள் மற்றும் இதர தளவாடங்கள் ஜூலை 2024 இல் பூந்தமல்லி பணிமனையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு தளத்தில் சோதனை செய்யப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம்-4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை 26.1 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட மற்றும் சுரங்கப்பதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் என மொத்தம் 27 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பூந்தமல்லியில் ஒரு பணிமனை என இந்த வழித்தடத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

    இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு, துணை பொது மேலாளர் ஜெகதீஸ் பிரசாத், ஸ்வஸ்திக்-எக்விப்லவாக்கி நிறுவனத்தின் துணை குழு தலைவர் பிரசாந்த் நர்டேகர், பொது ஆலோசகரின் ரோலிங் ஸ்டாக் தலைவர் நந்தகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். #ChennaiMetroRail
    பூந்தமல்லி:

    விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பணியாளர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் இதனை கண்டித்து நேற்று மதியம் முதல் மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர்.

    இவர்களுக்கு ஆதரவாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் கைக்குழந்தைகளுடன் மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலக நுழைவு வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.

    பணி நேரம் முடிவடைந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் வெளியேற்றினர். பின்னர் அவர்கள், கையில் பதாகைகளுடன் நுழைவு வாயிலில் நின்று மெட்ரோ நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளால் 2 ஊழியர்கள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் சக ஊழியர்கள் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “முதலில் 8 மணி நேரமாக இருந்த பணியை தற்போது 14 மணி நேரமாக மாற்றி விட்டனர். விடுமுறையும் கொடுப்பதில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். தற்போது சங்கம் அமைத்ததால் 8 பேரை பணி நீக்கம் செய்துள்ளனர். நிரந்தர பணியாளர்களை நிறுத்திவிட்டு ஒப்பந்த முறையில் அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவே இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர்” என்றனர்.

    இந்த செய்தி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் படிப்படியாக பரவியதால், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்தனர். இதனால் நேற்று இரவு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ஒழுங்கீனம், பணிநியமன விதிகளின் படி பணியாற்றாதது, விதிகளை மீறி செயல்பட்டது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டது, ஒழுங்கினமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டது போன்ற காரணங்களால் 8 பணியாளர்களிடம் இருந்து கடந்த டிசம்பர் மாதம் விளக்கம் கேட்கப்பட்டது.

    இதில் 3 பேர் தொழில்நுட்ப துறையிலும், 2 பேர் நிலைய கட்டுப்பாட்டாளர்களாகவும், 2 பேர் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களாகவும், ஒருவர் இளநிலை பொறியாளர் (மின்சார துறை) ஆகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் அளித்த விளக்கம் திருப்தி இல்லாததால், மறுபடியும் 2 விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு அவரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த விளக்கமும் திருப்தி அளிக்கவில்லை என்று விசாரணை அலுவலர் கூறி உள்ளார்.

    கடந்த 26-ந்தேதி 8 பணியாளர்களையும் அவர்கள் பணியாற்றும் துறை இயக்குனர் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பணியாளர்களும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் முறையிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை யாரும் முறையிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும், சி.ஐ.டி.யூ. தமிழ் மாநிலக்குழு தலைவருமான அ.சவுந்தரராஜன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளம், அலவன்ஸ், மகப்பேறு விடுமுறையை குறைத்தார்கள். அரை சம்பள விடுமுறை ரத்து செய்யப்பட்டது. ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது பற்றி தொழிலாளர் துறையில் முறையிட்டும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரியான பதில் சொல்லாததால் தொழிற்சங்கம் அமைத்தார்கள். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் புகார் கொடுத்து சங்க நிர்வாகிகள் 8 பேரை பணி நீக்கம் செய்தார்கள்.

    பணியாளர்கள் சந்திக்க முயன்றும் அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் மறுத்துவிட்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தொழிலாளர் நலத்துறை நாளை (இன்று) காலை 10 மணிக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெறும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, நியாயம் கிடைத்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லை என்றால் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    சிறந்த சேவைக்காக ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ தங்கப்பதக்கம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
    சென்னை:

    டெல்லியில் உள்ள ‘ஸ்கோச் குரூப்’ என்கிற அமைப்பு, மாநில மற்றும் தேசிய அளவில் சுகாதாரம், கல்வி, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, நிதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் சிறந்த சேவையை அளிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ என்கிற பெயரில் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ தங்கப்பதக்கம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. முதலாவது கட்டப்பணிகள் மூலம் பயணிகளுக்கு தரமான சேவை அளிப்பதுடன், ரெயில் நிலையங்களையும் தரமான முறையில் அமைத்து செயல்படுத்தி வருவதை கவுரவிக்கும் வகையில் இந்த தங்கப்பதக்கத்தை வழங்குவதாக ஸ்கோச் குரூப் அமைப்பு தெரிவித்தது.

    அந்த அமைப்பின் தலைவர் சமீர் கோச்சார், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் தங்கப்பதக்கத்தை வழங்கினார்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘மிகச் சிறந்த மற்றும் செயல்திறன் மிக்க செயல்திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கி வருவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு இந்த உயரிய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது’ என்றனர். 
    ×