search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school bus"

    • போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 3,414 வாகனங்களை சோதனை நடத்தினர்.

    அப்போது பள்ளி வளாகத்திற்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற 16 பள்ளி பேருந்து டிரைவர்கள் குடிபோதையில் இருப்பது கண்டிறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.


    அப்போது தனது நண்பரின் பெயர் சூட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு இரவு வெகுநேரம் வரை இருந்து மது சாப்பிட்டேன் என்று ஒருவர் தெரிவித்தார். மேலும் மற்றொரு டிரைவர் கூறும்போது பள்ளி முடிந்ததும் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி சோர்வடைந்தேன். இதனால் தூக்கத்திற்காக மது குடித்துவிட்டு தூங்கினேன் என்று கூறினார்.

    பெங்களூர் நகரில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி வளாகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் மற்றும் சந்திப்புகளில் பள்ளி வாகனங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் டிரைவர்களை குழந்தைகளுக்கு தெரியாமல் தனியாக அழைத்து வந்து குடிபோதையில் இருக்கிறார்களா என்று அல்கோ மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில் 16 பள்ளி டிரைவர்கள் போதையில் இருப்பது கண்டறியப்பட்டது.


    பிடிப்பட்டவர்களில் சிலர் கூறும்போது இரவில் மது சாப்பிட்டதாக கூறியுள்ளனர். பொதுவாக அல்கோ மீட்டரில் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு முன்பு மது அருந்தியிருந்தால் மட்டுமே தெரியும் எனவே பிடிப்பட்ட 16 பேரும் காலையில் தான் மது குடித்துள்ளனர். ஆனால் அவர்கள் இரவில் மது குடித்ததாக கூறுகிறார்கள். இரவில் மது குடித்தால் காலையில் அல்கோ மீட்டர் மூலம் அதை உறுதி செய்ய முடியாது, எனவே பள்ளி பேருந்து டிரைவர்கள் கூறுவது தவறனாது.

    குடித்துவிட்டு பள்ளி குழந்தைகளை பேருந்தில் ஏற்றிச் செல்வது ஆபத்தானதாகும் எனவே குடிபோதையில் பிடிபட்ட 16 டிரைவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279 (கவனக்குறைவாக வண்டி ஓட்டுதல்) மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவு 185 (போதைப் பொருள் அல்லது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்டு செய்ய வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சஞ்சனா ஒரு தனியார் பள்ளி படித்து வந்தார்.
    • பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி டேம் காணங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மனைவி மலர். இவர்களுக்கு சத்தியா (வயது 10) சஞ்சனா( வயது 4 )என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இருவரும் கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி படித்து வந்தனர்.இதில் சஞ்சனா எல்.கே.ஜி.படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது பள்ளியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன சஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • எக்ஸ்பிரஸ் சாலையில் பள்ளி வாகனம ஒன்வே-யில் தவறாக வந்ததால் விபத்து
    • உயிரிழந்த அனைவரும் சொகுசு காரில் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் இன்று பள்ளி பேருந்து ஒன்று சொகுசு காரின் மீது மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    இன்று அதிகாலை டெல்லி- மீரட் விரைவுச்சாலையில் சென்ற அந்த சொகுசு காரின் மீது தவறான திசையில் வந்த பேருந்து நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    அந்த கார் குர்கானை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் பலியான 6 பேரும் அந்த காரில் பயணித்தவர்கள். பள்ளி பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலீசார் விசாரணையில் பள்ளி வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 9 கி.மீ. தூரம் தவறான பாதையிலேயே பயணித்தது தெரியவந்தது. காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்க காரின் கதவுகளை வெட்டி எடுக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு பள்ளி வாகனம் சொகுசு கார் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

    • ரோட்டின் நடுவே தோண்டப்பட்ட குழிகளை முறைகாக மூடாமல் அறைகுறையாக மண்ணைக்கொட்டப்பட்டுள்ளது
    • ரோட்டை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் தட்டுத்தடுமாறி விபத்தில் சிக்கித்தவித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது .இதன் ஒருபகுதியாக திருப்பூர் சந்தைப்பேட்டை அருகேஉள்ள காட்டுவலவு பகுதியில் பாதாள சாக்கடை கட்டும் பணி நடைபெற்றுவருகிறது .இதற்காக ரோட்டின் நடுவே தோண்டப்பட்ட குழிகளை முறைகாக மூடாமல் அறைகுறையாக மண்ணைக்கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.

    நாள்தோறும் அந்த ரோட்டை பயன்படுத்தும் வாகனஓட்டிகள் தட்டுத்தடுமாறி விபத்தில் சிக்கித்தவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிச்செல்வதற்காக திருப்பூர் காட்டுவலவு பகுதிக்கு வந்தது .அப்போது ரோட்டின் நடுவே சேறும் சகதியுமாக இருந்த ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பள்ளிவாகனத்தின் சக்கரம் ரோட்டில் புதையுண்டது. அதிர்ஷ்டவசமாக எவ்வித விபத்தும் ஏற்படாமல் மாணவர்கள் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழியில் சிக்கிய பள்ளி வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காட்டுவலவு மெயின் ரோட்டில் ஸ்மார்ட்சிட்டி பணிக்காக தோண்டிவிட்டு அதை முறையாக மூடாமல் தொழிலாளர்கள் மெத்தனமாக விட்டுச்சென்றுள்ளனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் காயமடைந்து வீடு திரும்பும் நிலை இருந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நிலையில் உள்ள ரோட்டை சீரமைத்து கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது.
    • விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆண்டின் இருமுறை பள்ளி பஸ்களின் நிலை குறித்து ஆராய்ந்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் தொடங்கிய நிலையில் தனியார் பள்ளிகளில் பஸ்கள் இயக்கம் பல பகுதிகளுக்கு துவங்கியுள்ளது.இந்நிலையில் பள்ளி பஸ்கள் எந்த நிலையில் உள்ளது. முன்பக்க, பின்பக்க, அவசர கதவுகள் நிலை, இருக்கை முதலுதவி வசதி, படிக்கட்டுகளின் உயரம், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் வரும் 25-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது. இவற்றில் வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., எல்லைக்கு உட்பட்ட பஸ்கள் மட்டும் 25 -ந்தேதி ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் தாலுகா அளவில் பள்ளி பஸ் ஆய்வு நடக்கவுள்ளது. ஆய்வு விபரங்கள் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையாக சமர்பிக்கப்பட உள்ளது.

    பள்ளி பஸ் ஆய்வுக்கு முன்னதாக பள்ளிகல்வித்துறை, வட்டார போக்குவரத்து துறை, போலீசார், பள்ளி நிர்வாகங்கள் இணைந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இதில், பள்ளி பஸ்கள் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்தாலியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி பேருந்தை டிரைவரே கடத்தி தீ வைத்ததில் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். #SchoolBusHijacked #RefugeeDeaths #Italy
    ரோம்:

    இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் பள்ளிப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மாகாண சாலையில் சென்றபோது, பேருந்தின் டிரைவர் திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ளார். ‘எல்லாவற்றுக்கும் இன்று முடிவு கட்ட விரும்புகிறேன். மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் அகதிகள் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறிய அவர், பேருந்தினுள் சிறிது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.

    இதனால் மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். ஒரு மாணவன் தனது தந்தையிடம், பேருந்து கடத்தப்பட்ட விவரத்தை கூற, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பேருந்தை துரத்திச் சென்று மடக்கினர். பின்னர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த மாணவர்களை மீட்டனர். மாணவர்களை மீட்ட சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. ஒரு காரும் தீயில் கருகியது.



    மீட்கப்பட்ட மாணவர்களில் 12 மாணவர்கள் மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பேருந்தை கடத்தி மாணவர்களை கொல்ல முயன்ற 47 வயது நிரம்பிய டிரைவரையும் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செனகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட இத்தாலியர் என்பது தெரியவந்தது. மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் மரணம் அடைவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இத்தாலிய உள்துறை மந்திரி மற்றும் துணை பிரதமரின் கடுமையான அகதிகள் விரோத கொள்கைகளை கண்டிக்கும் வகையிலும் பேருந்தை கடத்தி தீ வைத்ததாக அவர் கூறியுள்ளார். அவர் மீது கடத்தல், கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட நபர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பாலியல் தொந்தரவு போன்ற குற்றச்செயல்களில் தண்டிக்கப்பட்டு விடுதலையானவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் எப்படி பள்ளி பேருந்தை ஒப்படைத்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    உள்நாட்டுப் போர், வறுமை, வன்முறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக, சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களின் உதவியுடன் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான வகையில் படகில் பயணம் மேற்கொள்ளும்போது படகு மூழ்கி ஏராளமான அகதிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #SchoolBusHijacked #RefugeeDeaths #Italy
    ஆற்காடு அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கலவை:

    ஆற்காடு அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், கூலி தொழிலாளி. அவரது மனைவி அமலா, தம்பதிக்கு லோகேஸ்வரன் (3), சுதர்சன் (2) என 2 மகன்கள் இருந்தனர். லோகேஸ்வரன் கலவை அருகேயுள்ள பெரும்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

    தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற லோகேஸ்வரன் மாலை பள்ளி பஸ்சில் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு அருகே பள்ளி பஸ் நின்றது.

    லோகேஸ்வரனை அழைத்து செல்ல அவரது தாய் அமலா குழந்தை சுதர்சனையும் அழைத்து வந்தார்.

    லோகேஸ்வரன் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார். அப்போது சுதர்சன் பஸ்சின் முன்னால் ஓடியதை கவனிக்காததால் பஸ் சுதர்சன் மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதனை கண்ட தாய் அமலா கதறி துடித்தார். விபத்துக்கு காரணமான டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி வாழப்பந்தல் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கு காரணமான மேச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் சந்திரனை போலீசார் கைது செய்தனர். தாய் கண் முன்னே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    போளூரில் பள்ளி பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் குழந்தைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

    போளூர்:

    ஆரணி அடுத்த கஸ்தம் பாடியில் உள்ள தனியார் பள்ளி பஸ், இன்று காலை போளூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

    அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ், பள்ளி பஸ்சின் பின்னால் மோதியது.

    இந்த விபத்தில் பின்பக்க கண்ணாடி உடைந்து பள்ளி பஸ் சேதமடைந்தது. அதேப் போல், தனியார் பஸ் முகப்பு கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 5 பேர் மற்றும் பயணிகள் 15 பேர் என மொத்தம் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பள்ளிக் குழந்தைகள் உயிர் தப்பினர்.

    போளூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாங்காடு அருகே பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    மாங்காடு:

    மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், பல்லாவரம் மெயின்ரோட்டில் ஒமேகா இண்டர்நே‌ஷனல் பள்ளி உள்ளது. இங்கு மாங்காடு, போரூர், குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளி பஸ்சில் வந்து செல்கின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி பஸ் வந்தது. அதில் உதவியாளராக பாஸ்கர் என்பவர் இருந்தார்.

    அப்போது கொளப்பாக்கத்தை சேர்ந்த எல்.கே.ஜி. மாணவி ஒருவர் பள்ளி பஸ்சில் செல்ல மறுத்தார். பெற்றோர் விசாரித்தபோது பஸ்சில் உள்ள உதவியாளர் பாஸ்கர், சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பஸ்சில் இருந்த உதவியாளர் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான மாணவ- மாணவிகளின் பெற்றோர் அங்கு திரண்டனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பஸ்சில் ஏறி, இறங்கும் பல சிறுமிகளிடம் உதவி செய்வதுபோல் நடித்து பாஸ்கர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மற்றொரு உதவியாளர் மீதும் மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    பள்ளி பஸ்சில் உதவியாளர்களே மாணவிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. #tamilnews
    சேதுபாவாசத்திரம் அருகே தனியார் பள்ளியின் பஸ் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    சேதுபாவாசத்திரம்:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சம்பைபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அபுபக்கர். இவருடைய மகன் அகமது இப்ராகீம் (வயது31). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அகமது இப்ராகீம், நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நோன்பு திறந்து, தொழுகை முடித்து விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சேதுபாவாசத்திரத்துக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா என்ற இடத்தில் சென்றபோது தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அகமது இப்ராகீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அகமது இப்ராகீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அகமது இப்ராகீமுக்கு, ரூபியாபேகம் என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு வெளிநாடு செல்ல இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×