என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல்.
- அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினரும், ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதி ஒருவன் ஊடுருவ முயற்சித்துள்ளான்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகள் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
- ஜம்முவில் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
- இதில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
ஜம்மு:
தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த பி.எஸ்.சவுகானின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜம்முவில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, துணை முதல் மந்திரி சுரீந்தர் சவுத்ரி கலந்து கொண்டனர்.
அவர்கள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே நடந்து வந்தபோது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் பரூக் அப்துல்லாவை சுட்டார்.
இதைக்கண்ட பாதுகாப்பு படை வீரர் அந்த நபரை கீழே தள்ளி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதில் அப்துல்லா மயிரிழையில் உயிர் தப்பினார்.
அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஜம்முவை சேர்ந்த கமல் சிங் ஜாம்வால் என்பதும், கடந்த 20 ஆண்டாக பரூக் அப்துல்லாவை கொல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.
பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு பற்றி பரூக் அப்துல்லா கூறுகையில், நான் நலமுடன் இருக்கிறேன். கடவுள் என்னைக் காப்பாற்றி விட்டார் என உருக்கமாகத் தெரிவித்தார்.
- அப்துல்லாவை நேரடியாகச் சுட முயன்றார்.
- அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பினார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, ஜம்முவில் ஒரு "கொலை முயற்சியில்" இருந்து உயிர் தப்பினார். அதே விழாவுக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அப்துல்லாவை நேரடியாகச் சுட முயன்றார்.
தாக்குதல் நடத்தியவர் ஜம்மு காஷ்மீர் தலைவருக்கு சில அடிகள் மட்டுமே பின்னால் இருந்தார், அவரது கை தோள்பட்டைக்கு இணையாக இருந்தது. சட்டென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த அந்த நபர் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார், ஆனால் தேசிய பாதுகாப்பு படை (NDG) கமாண்டோக்கள் அவரை கீழே தள்ளினர். இதனால் தோட்டா அதன் இலக்கைத் தவறியது, அப்துல்லா நூலிழையில் உயிர் தப்பினார்.
இந்த பரபரப்பு சம்பவங்கள் வீடியோவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர் கமல் சிங் ஜம்வால் என அடையாளம் காணப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், அவரை மடக்கிப்பிடித்த தேசிய பாதுகாப்பு படையினர் உடனடியாக கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெளியான காணொளிகளில் அவர் பிடிபட்ட உடனேயே மக்கள் அவரைத் தாக்குவதைக் காட்டியது.
கைது செய்யப்பட்ட பிறகு, தாக்குதல் நடத்தியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்து, ஜம்முவில் உள்ள புராணாஸ் மண்டியில் வசிப்பதாக போலீசாரிடம் கூறினார். 65 வயதான தாக்குதல் நடத்தியவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், கடந்த 20 ஆண்டுகளாக இந்த தருணத்திற்காக தான் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கு நிலையில் இது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை கைது செய்தனர்.
- துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. இவர் துணை முதல் மந்திரி சுரேந்தர் சவுத்ரியுடன் ஹோட்டலில் நடந்த திருமண விழா ஒன்றில் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தில் பரூக் அப்துல்லா பத்திரமாக தப்பினார். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை கைது செய்தனர். அவர் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரூக் அப்துல்லாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் இந்தச் சம்பவம் நடந்திருப்பது கவலை அளிக்கிறது எனப்பதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராக கருதுகின்றனர்.
- கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷியா முஸ்லிம் சமூகத்தினர் காமேனியைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகக் கருதுவதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று, ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வந்தனர்.
இதற்கிடையே இன்று ஸ்ரீநகரின் பட்டமாலு பகுதியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அங்கு காமேனியின் உருவப்படங்கள் மற்றும் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
தடைகளை மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தை கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, பல பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன மற்றும் கூடுதல் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
- ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
- காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் இந்த படுகொலை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கமேனியின் படத்துடன் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஸ்ரீநகர் லால் சவுக்கில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு கமேனி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ஈரானை ஆதரித்தும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமடையாமல் இருக்க போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
வதந்திகள் பரவாமல் தடுக்கவும், போராட்டங்கள் மேலும் விரிவடையாமல் இருக்கவும், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமேனி உயிரிழந்த செய்தி அறிந்ததும் பல இடங்களில் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி துக்கம் அனுசரித்தனர்.
மேலும் லடாக், லே பகுதி உள்ளிட்ட காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மையையும் எரித்தனர். இஸ்ரேல், அமெரிக்க கொடியுடன் கூடிய உருவபொம்மையை எரித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதே போல உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
- பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டது.
- பாகிஸ்தான் நோட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் இணைக்கப்பட்ட இரண்டு பலூன்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் நோட்டுகள் உண்மையானவையா இல்லையா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள விமானப்படை பகுதியில் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (PIL) பெயரைக் கொண்ட பலூன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
- கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் துல்லியமான இடத்தை கண்டறிய, ராணுவத்தின் பாரா பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாயான 'டைசன்' அழைத்துச் செல்லப்பட்டது.
கரடுமுரடான அந்தப் பகுதிக்குள் டைசன் நுழைந்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைசனின் காலில் தோட்டா பாய்ந்து பலத்த காயமேற்பட்டது.
காயமடைந்த போதிலும், டைசன் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினருக்குக் காட்டிக்கொடுத்தது.
டைசன் காட்டிய இடத்தை வைத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தப்பியோடிக் கொண்டிருந்த ஜெய்ஷ் கமாண்டர் சைபுல்லாவும் ஒருவர்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காயமடைந்த டைசன் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதன் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம்பட்டபோதும் டைசனின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
- காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.
- காஷ்மீர் முதலமைச்சரும், துணை வேந்தருமான உமர் அப்துல்லா பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா அடுத்த வாரம் 26-ந்தேதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 26-ந்தேதி காஷ்மீர் செல்ல உள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரும், கென்யா பல்கலைக்கழக வேந்தருமான மனோஜ் சின்ஹா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குகிறார். காஷ்மீர் முதலமைச்சரும், துணை வேந்தருமான உமர் அப்துல்லா பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 59,558 பட்டங்கள் - 44,910 இளங்கலை, 13,545 முதுகலை, 461 எம்.டி/எம்.எஸ், 4 எம்.சி.எச், 18 எம்.ஃபில் மற்றும் 620 பி.எச்.டி பட்டங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் அதிகாரி வி.கே.பிர்டி ஆய்வு செய்தார்.
பள்ளத்தாக்கின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்
- இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.
பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபுர்கண்டி அணைத் திட்டம் இறுதி நிலையை எட்டியுள்ளது.
இதன் மூலம், ரவி நதியிலிருந்து பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த உபரி நீர், இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு முழுமையாக நிறுத்தப்படும்.
ஷாபுர்கண்டி அணைத் கட்டுமானம் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஜம்மு காஷ்மீர் நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா அறிவித்துள்ளார்.
"இதுவரை பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்ற நீரை, இனி நமது நாட்டு விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்துவோம்" என்று அமைச்சர் ராணா தெரிவித்துள்ளார்.
இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சாம்பா மாவட்டங்களில் உள்ள 32,173 ஹெக்டேர் வறண்ட நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்படும்.
மேலும், பஞ்சாபில் உள்ள 5,000 ஹெக்டேர் நிலங்களும் பலன் பெறும். இந்தத் திட்டத்தின் மூலம் 206 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, ரவி நதியின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.
இந்தத் திட்டத்திற்கு 1982-லேயே இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களால் தடைபட்டிருந்த இந்தப் பணி, 2018ல் மத்திய அரசின் தலையீட்டிற்கு பிறகு வேகம் எடுத்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும் செனாப் நதியின் குறுகியும் நீர் மின் நிலையத்தை கட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
- எல்லையோர கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
- பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுமார் ரூ. 40 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று, இரவு எல்லையோர கிராம மக்கள் சிலர், டிரோன் ஒன்று பறப்பதையும், அது ஒரு பொட்டலத்தைக் கீழே போடுவதையும் கவனித்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய தீவிர சோதனையில், விவசாய நிலங்களில் இருந்து அந்த ஹெராயின் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதேநேரம், மற்றொரு சம்பவத்தில், கதுவா மாவட்ட எல்லைப் பகுதியில் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்திய புகாரில் ஜதின் மற்றும் டேனிஷ் டோக்ரா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
- ஜம்மு காஷ்மீரின் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதி நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றது.
- இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானுடனான 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
1960 ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரின் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதி நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றது. ஆனால், தற்போது இந்த நதிகளின் நீரை இந்தியா தனது தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. செனாப் போன்ற மேற்கு நதிகளில் இந்தியாவுக்குக் குறைந்த அளவிலான பயன்பாட்டு உரிமையே இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா அந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் நிலையம் கட்டும் திட்ட பணிகளை இந்தியா துரிதப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NHPC, இந்தத் திட்டத்திற்காக ₹5,129 கோடி மதிப்பிலான டெண்டரை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் பணிகளை முடிக்க சுமார் 9 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏல விண்ணப்பங்கள் மார்ச் 12 முதல் மார்ச் 20 வரை பெறப்படும்.






