search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dam"

    • உபரி நீர் வெளியேற்றும் 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
    • கிருஷ்ணா நதியின் கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை.

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் போது 19 ஆவது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அணையில் இருந்து கிட்டத்தட்ட விநாடிக்கு 48 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஆந்திராவில் பாயும் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    105 டிஎம்சி கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால் தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது.
    • சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்து வந்தது.

    மழை பெய்ததால் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் அதிகளவு வந்து கொண்டிருந்தது.

    பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கும் மழை காரணமாக தண்ணீர் அதிகளவு வந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே ஆழியார், பரம்பிக்குளம் அணைகள் அடுத்தடுத்து நிரம்பின.

    அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது. இருந்தாலும் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

    120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 119.40 அடியாக உள்ளது. அப்பர் ஆழியார் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வினாடிக்கு 1000 கன அடி நீர் வருகிறது.

    இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 1000 முதல் 1200 கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.

    அதேபோல டாப்சிலிப்பை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. 78 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 68 அடியாக உள்ளது.

    வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 900 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு திறக்கப்படுகறது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.60 அடியாக இருந்தது.

    அணை நிரம்ப இன்னும் 8 அடியே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 44,617 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 2,566 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு தொடர்ந்து சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும், இன்னும் 3 நாட்களுக்குள் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி படுகையில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் திறப்பு அளவு சற்று குறைக்கப்பட்டு வினாடிக்கு 61,316 கன அடி வீதம் நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாக உள்ளது.

    இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் நஞ்சன்கூடு அருகே திருமாகூடலுவில் காவிரியுடன் சங்கமித்து தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 21,520 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 35,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 40,018 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் மாலை 47.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 51.38 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தை விட அணையில் இருந்து நீர் திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருப்பதும், நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயிருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நீர் இருப்பு 21.18 டி.எம்.சி.யாக உள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டு முதல் மேட்டூர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் கரையோர தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    • அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    இருந்தபோதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 51.71 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 706 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 2223 மி.கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து இரு போக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களான சங்கீதா, ஷஜீவனா, பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாகவும், நீர் இருப்பு 2005 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.60 அடியாக உள்ளது. வரத்து 1200 கன அடி. திறப்பு 862 கன அடி. இருப்பு 3341 மி.கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. வரத்து 403 கன அடி. திறப்பு 112 கன அடி. இருப்பு 1702 மி.கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.
    • பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பருவமழை தொடங்கியும் போதிய அளவில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.60 அடியாக உள்ளது. அணைக்கு 1898 கன அடி நீர் வருகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 50.20 அடியாக உள்ளது. 928 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது.
    • தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் மற்றும் அருவிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றும் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது. நேற்று 97.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 2.5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 99.90 அடியாக இருந்தது. தொடர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டியது. கடந்த 3 நாட்களில் 14 அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2,576 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 7 அடி உயர்ந்து 112 அடியாகவும், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 114.76 அடியாகவும் உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 42 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 33 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதிகளில் 24 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 9 மில்லி மீட்டரும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி நீர்மட்டம் நேற்று 4 அடி உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 59 அடியாக உள்ளது.

    84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 37.40 அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 80 அடியாக இருந்த நிலையில் நேற்று 5 அடி உயர்ந்து 85 அடியாகவும், இன்று மேலும் 5 அடி உயர்ந்து 90 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நேற்று 50.50 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடியே உள்ளது.

    அம்பை வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.

    • கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
    • அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

    ஆனால் அதனைத் தொடர்ந்து சாரல் மழை மட்டுமே பெய்து வந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

    பருவமழை தீவிரம் அடைந்ததால் 2001 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3579 கன அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று முன்தினம் 117.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 118.55 அடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்ததால் 119.90 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து நீர் திறப்பு 878 கன அடியில் இருந்து 967 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 87 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.87 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 556 கன அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.32 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 74.8, தேக்கடி 53.4, கூடலூர் 7.8, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 5.8, போடி 1.2, வைகை அணை 0.2, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1, வீரபாண்டி 17, அரண்மனைப்புதூர் 3.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.
    • வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 905 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 635 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து விநாடிக்கு ஆற்றிலும், ஊற்றுக்கால்வாய்களிலும் 111 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பாரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மில்லி மீட்டரில், தேன்கனிக்கோட்டை 41, கிருஷ்ணகிரி 22.30, அஞ்செட்டி 15, சூளகிரி 12, சின்னாறு அணை 10, தளி 5, கிருஷ்ணகிரி அணை 1 பதிவாகி இருந்தது.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும்.

    இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரளாவின் சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில்,

    1957ம் ஆண்டு காமராஜரால், 4 டி.எம்.சி கொள்ளளவோடு கட்டப்பட்ட அமராவதி அணையானது, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்வதோடு பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. ஏற்கனவே பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனது. பருவமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே தடுப்பணை கட்டும் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.
    • தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டிவருகின்ற செய்தியறிந்து தமிழக வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்க கேரள அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். 1957ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கட்டப்பட்டது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அணையின் கொள்ளளவு 3 டி.எம்.சியாகக் குறைந்து விட்டது.

    கடந்தகால திமுக ஆட்சியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அடுத்தடுத்து அணைகளைக் கட்டி காவிரிப்படுகையை வறண்ட நிலமாக்கியதுடன் தற்போது மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வடமாவட்டங்களையும் வறண்ட பூமிமாக்கியது.

    பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 215 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும், உலகின் மிகச்சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு – சித்தூர் சாலையில் கேரள அரசு ஏற்கனவே தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளதுடன், மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை கட்ட முயல்வது தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயலாகும்.

    திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமை ஒவ்வொன்றாகப் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது. அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு செயலற்று இருப்பது தமிழ்நாட்டின் உரிமை மீதான அதன் அக்கறையின்மையையே காட்டுகிறது.

    இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

    கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய நட்பு பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலை இதுவரை கண்டிக்காதது ஏன்? கேரள அரசு மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? காவிரி நதிநீரைத் தரமறுக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் அத்துமீறலுக்குத் துணைநின்று தமிழ்நாடு பாஜக துரோகம் செய்கிறது. அதற்கு, சற்றும் குறைவில்லாதது, சிறுவாணி மற்றும் சிலந்தி நதிநீரைத் தடுக்கும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அத்துமீறலுக்குத் துணைபோகும் திமுக அரசின் பச்சைத்துரோகமாகும்.

    ஆகவே, சிலந்தி மற்றும் சிறுவாணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது.
    • திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதிக்கு தண்ணீர் வழங்கும் சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்திற்கான தண்ணீரை கேரளம் தடுப்பது இது முதல்முறை யல்ல. இதற்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இரு தடுப்பணைகளை கட்டியுள்ள கேரள அரசு, கடந்த 2018-ம் ஆண்டில் மூன்றாவது தடுப்பணையைக் கட்ட திட்டமிட்டது. அதைக் கண்டித்து அணைக்கட்டி என்ற இடத்தில் 2021-ம் ஆண்டு எனது தலைமையில் பா.ம.க. மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தியது. அதன் பிறகு தான் பவானி தடுப்பணை கட்டும் திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.

    கர்நாடகத்தில் பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொண்டது. கூட்டணி கட்சியான காங்கிரசின் நலனைக் கருதி, மேகதாது அணை குறித்த அக்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்த திமுக அரசு, இப்போது இன்னொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் லாபம் கருதி சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்திலும் வாயைத் திறக்க மறுக்கிறது. திமுக அரசின் இந்த துரோகங்களை மக்கள் கவனித்து வருகின்றனர்; சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

    கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாடு, எந்த ஆற்றின் உரிமையையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. கேரள அரசை தொடர்பு கொண்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அமராவதி ஆற்று நீர் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டப்படியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெரம்பலூரின் பூலாம்பாடி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    • கல்லாற்றில் தடுப்பணை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பூலாம்பாடி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரெயில்வே திட்டம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும். 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளித்தார்.

    கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அரும்பாவூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரெயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். பொதுமக்கள் நல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணாபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிடுங்கள். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.

    ×