என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்.
    • எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்வர்.

    நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கரூர் விவகாரத்தில் முதலமைச்சரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள்.

    * பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் விஜயை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்.

    * கரூர் நெரிசலில் 41 பேர் இறந்தபோது துண்டை காணோம், துணியை காணோம் என ஓடினர்.

    * எந்த தலைவரும் தன் தொண்டன் இறக்க வேண்டும் என எண்ண மாட்டார் என பேசியவர் முதல்வர்.

    * முதலமைச்சரின் பெருந்தன்மையை சாதாரண மக்கள் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில்,

    நெல்லை:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தில் கல்லிடைக்குறிச்சி விநியோக பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ஒ.துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஓ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பளையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல, வீரவநல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்டபட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேச வநல்லூர், வெள்ளாங் குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மேலும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மணிமுத்தாறு துணை மின் நிலையத்திற்குட்பட்ட மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பான்குளம் மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கடையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்பபுரம் ரவணச்சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெய்காலிபட்டி, மேட்டூர் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எந்த கடிதமும் அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற பேரவைக்கு கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கடிதம் அளிக்கும் பட்சத்தில் மனு மீது பரிசீலனை நடத்தப்படும். அ.தி.மு.க. அளிக்கும் ஆவணத்தின் அடிப்படையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் உயர் பதவியில் இருந்து கொண்டு தமிழகம் குறித்து இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டாம். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் செய்யும் துன்பத்தால் தான் அங்கிருந்து புலம்பெயர்ந்து அங்கு உள்ளவர்கள் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் துன்பமாக இல்லை. இன்பமாக இருக்கின்றனர்.

    வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வசிப்பவர்களும் இலவச பஸ் பயணம், படிப்பில் உதவித்தொகை உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.

    பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சில சிக்கல்கள் இருக்கிறது. எனினும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அந்த சிக்கல்களை தீர்த்து அணைகளை இணைக்க நடவடிக்கை எடுத்து விடுவார்.

    நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணி இடங்களை நேர்மையாக வெளிப்படை தன்மையோடு அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் அமைச்சர் நேரு நியமனம் செய்துள்ளார். பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

    அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.க்கு பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசாரணை நடத்த கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். உறுதிப்படுத்தப்படாத ஆவணங்கள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை அல்லது விசாரணை ஆகியவையை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    மணல் ஊழல், டாஸ்மாக் ஊழல் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வைத்து தேர்தல் நேரத்தில் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் இது போன்று அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பாதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மீதி மசோதா அவரிடமே கிடப்பில் உள்ளது என்றார். 

    • தி.மு.க. ஆட்சி பழிவாங்கும் ஆட்சியாக இருக்கிறது.
    • தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கூட கொடுப்பார்கள்.

    இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா மற்றும் திரளான பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மரியாதை செலுத்தியது குறித்து நான் கருத்துக்கள் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

    தமிழக முதலமைச்சர் பீகாரை பற்றி பேசியதை தான் பிரதமர் மோடியும் பேசி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் தான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார். அவர் வட மாநிலம், தென் மாநிலம் என்னும் பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவருக்கு தோல்வி பயம் வந்துள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்திலும் பொய்யையே பேசி வருகிறார். இந்த ஆட்சியே பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது.

    இந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பல உயர்வு கொண்டு வரப்பட்டு மக்கள் மீது சுமையை ஏற்றி உள்ளனர். தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கூட கொடுப்பார்கள்.

    தி.மு.க. ஆட்சி பழி வாங்கும் ஆட்சியாக இருக்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற நிலை இருக்கிறது.

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்கள் நியமனத்தில் கோடிக்க ணக்கில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும், நிரந்தர பகைவர்களும் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

    • அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம்.
    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்.

    நெல்லை:

    நாட்டின் அணுசக்தித் துறையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணி கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், புதிதாக 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த அணு உலைகளில் பராமரிப்பு பணி, எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்டவற்றின்போது மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பராமரிப்பு மற்றும் அணு எரிபொருளை மறுநிரப்பும் பணிகளுக்காக அணு உலை 2-ன் முழு உற்பத்தித் திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய தொகுப்பில் பகிரப்பட்டாலும், மின் பகிர்வு ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு அதிகபட்சமாக 562 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட காலத்திற்கு பிறகு அலகு 2-ல் மேற்கொள்ளப்படும் இந்த முழுமையான பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் 2 மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
    • வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.

    நெல்லை:

    செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.

    தாம்பரத்தில் இருந்து வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல், செங்கோட்டையில் இருந்து 2-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.

    வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.

    இதே போல் நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -நாகர்கோவில் (வண்டி எண் 22657, 22658) ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

    தாம்பரத்தில் இருந்து வருகிற நவம்பர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், நாகர்கோவிலில் இருந்து 3-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இவை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.

    • கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும், ஆதவ் அர்ஜூனா மீதும் சி.பி.ஐ. வழக்குபதியும்.
    • இயக்குனர் மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களது இயலாமையை காட்டுகிறது.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் முதலில் சேலம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நாமக்கல், கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது ஏன்? கரூர் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் காரணம் விஜய்தான்.

    த.வெ.க. தலைவர் விஜய் வருவதால்தான் அங்கு கூட்டம் கூடியது. விபத்து நடைபெற்றது. எனவே முதன்மை காரணமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு இல்லை என்றால் த.வெ.க.வினர் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்.

    கரூர் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதும் புஸ்சி ஆனந்த் கோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுகிறார். இது எதன் வெளிப்பாடு. சி.பி.ஐ. தங்களை காப்பாற்றும் என்பதால் தானே. பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. அழைப்பதால் தான் சி.பி.ஐ. விஜய் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் உள்ளது.

    விஜய் கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும், ஆதவ் அர்ஜூனா மீதும் சி.பி.ஐ. வழக்குபதியும்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களது இயலாமையை காட்டுகிறது. ஒரு நாடு தனது கடல் பரப்பில் 12 நாட்டிக்கல் மைல் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் இலங்கை நமது தமிழகத்தின் கச்சத்தீவு வரை ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல்கள் வருகிறதே என கேட்டனர். அதற்கு முன்கூட்டியே வந்தால் என்ன திருப்பம் வந்துவிட போகிறது என்றார்.

    தொடர்ந்து தி.மு.க. 200 இடங்களில் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறும் என கூறுவது பற்றி கேட்ட போது, இன்னும் 6 மாதம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். 

    • குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
    • தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளுக்கு முன்பிருந்தே அந்த பகுதிகளில் தொடர் கனமழை பெய்கிறது.

    இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 26 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சி, மாஞ்சோலையி லும் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் 14-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தபோதிலும் வினாடிக்கு 1,084 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 143 அடி கொண்ட அந்த அணை நீர் இருப்பு இன்று மேலும் 1 அடி உயர்ந்து 108 அடியை கடந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 121.32 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியை தொட்டது.

    மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் குளிர்ந்த ஈரப்பதமான மெல்லிய சாரல் காற்று வீசியபடி இருந்தது. இதனால் சீதோஷண நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் கடந்த 23-ந்தேதி வரை 198.95 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமான அளவான 166 மில்லிமீட்டரை விட 19.85 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 498 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நகர பகுதிகளான தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் மெல்லிய சாரல் அடித்தது. ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த மேற்கு திசை சாரல் காற்று வீசியது.

    ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தின்போது வீசும் காற்றை போல வீசியதால் சீதோஷண நிலை மாறியது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இந்த அணை மூலமாக செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக இந்த அணை நிரம்பி வழியும் நிலையில் விவசாய பணிகள் தீவிரம் எடுத்துள்ளது.

    கடனா அணை நீர்மட்டம் 58½ அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69½ அடியாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று காலை 129.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அந்த அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றும் காலை முதலே பரவலாக மழை பெய்வதால் இன்று இரவுக்குள் அணை நீர்மட்டம் முழு கொள்ள ளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. வைப்பாறு, காடல்குடி பகுதியில் லேசான சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். கோவில்பட்டி சுற்ற வட்டாரத்தில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    • நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
    • பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் வழியாக இன்று காலை நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.

    டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததனால் சாலையோரம் சறுக்கி இறங்கிய அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சில பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினர்.

    தகவல் அறிந்த உடனே கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99 அடியை நெருங்கி உள்ளது.
    • மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கடந்த 1 வாரமாக கனமழை பொழிந்து வருகிறது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. நகர், புறநகர் பகுதிகளில் மட்டுமல்லாது, மலைப்பகுதிகளிலும் தொடரும் மழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்த வண்ணம் இருப்பதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு 21 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1,847 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியை கடந்து நீர்வரத்து இருக்கிறது. இதனால் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து பாபநாசம் அணை 101.80 அடியாக உயர்ந்துள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டமும் 4 அடி உயர்ந்து 115.48 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்த நிலையில், தொடர்மழையால் இன்று 2 மடங்கு உயர்ந்து 1598 கனடியாக உயர்ந்துள்ளது. இன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99 அடியை நெருங்கி உள்ளது.

    களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 32 மில்லிமீட்டரும், களக்காட்டில் 11 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 9 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    கனமழை பெய்து வருவதால் திருக்குறுங்குடி நம்பி கோவில், களக்காடு தலையணை செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. மேலும் மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கடந்த 1 வாரமாக கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து எஸ்டேட்டில் 14 ½சென்டிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 13 ½ சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 10.8 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 8.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    • சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று தீபாவளி அன்று பகலில் மழை இல்லை. இரவில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்த நிலையில், இன்றும் காலை முதல் அனைத்து இடங்களிலும் சாரல்மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை புறகர் பகுதிகளான ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 36 மில்லிமீட்டரும், நாங்குநேரி, சேரன்மகாதேவியில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் அருவியை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அணைகளை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 93.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.38 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 96 அடியாகவும் உள்ளது.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் நிலையில் அந்த அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று பெரிய அளவில் மழை இல்லை. அதேநேரம் மாலை நேரத்தில் மழை பெய்தது. ஏற்கனவே தொடர்மழையால் மாநகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகளும் , வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் தீபாவளி பட்டாசு வெடிக்க முடியாமல் இளைஞர்களும், சிறுவர்களும் வீடுகளில் முடங்கினர்.

    இதேபோல் நகரின் மற்ற பகுதிகளான சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிபட்சமாக தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனா நதி அணை பகுதியில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 56½ அடியை எட்டியுள்ளது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 ½ அடி உயர்ந்து 66 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 120 ½ அடியாக உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர், கழுகு மலை ஆகிய பகுதிகளில் தலா 9 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 8½மில்லி மீட்டரும், சூரன்குடியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    • களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் சாலைகள், வயல்வெளிகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அம்பை, சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் சுற்று வட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நான்குவழிச்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அங்குள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் பகுதியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதுவே மாவட்டத்தின் அதிகபட்ச மழை அளவாகும்.

    நெல்லையில் மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களிலும் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அணை பகுதிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையிலும், காட்டாற்று வெள்ளம் வந்து ஆற்றில் சேருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் 37 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் அதிகபட்சமாக 47 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அணைகளுக்கு வினாடிக்கு 1614 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 88 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 94 அடியை எட்டியுள்ளது.

    அதேநேரம் கொடுமுடியாறு அணை நீர் இருப்பு நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்திருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 35½ அடியை எட்டியுள்ளது. அணைகள் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் டவுன் ரதவீதிகளில் சாலையோர வியாபாரிகள் அதிக அளவு கடை அமைத்திருந்தனர். ஆனால் மழை பெய்வதும், ஓய்வதுமாக இருந்ததால் கடும் அவதி அடைந்தனர். மாநகரில் பாளையில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து, மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

    ×