என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "valentines day"

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்

    பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் ஜோடிகள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து காதலர்கள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்து இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை, கோக்கர்ஸ் வாக், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும் ஏரியில் அமர்ந்து படகு சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரும்பாலான சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் தனித்தனியாக அமர்ந்து காதல் ரசம் சொட்டச்சொட்ட பேசி மகிழ்ந்தனர்.

    காதலர் தினம் என்றாலே அன்பை பரிமாறிக்கொள்ள பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். அதில் ரோஜாவுக்கு முதலிடம் உண்டு. கொடைக்கானல் மலை கிராமங்களான குண்டுபட்டி, கவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. 10 பூக்கள் கொண்ட ஒரு பூங்கொத்து ரூ.100க்கு விற்பனையான நிலையில் இன்று காலையில் ரூ.200க்கு விற்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த பூக்களும் விற்று தீர்ந்ததால் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் தாமதமாக வந்த காதலர்கள் தங்களுக்கு ரோஜா கிடைக்க வில்லையே என ஏமாற்றம் அடைந்தனர்.

    இதைத்தவிர வேறு சில பரிசு பொருட்களையும் காதல் ஜோடிகள் வாங்கி பரிசளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் காதல் ஜோடிகள் குவிந்து தங்கள் பொழுதை கழித்தனர்.

    ஆண்டிபட்டி வைகை அணை பூங்காவில் வழக்கமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பலர் வரத்தொடங்கினர். காதல் ஜோடிகள் பொது இடங்களில் சுற்றினாலோ, பூங்காவில் அமர்ந்து பொழுதை கழித்தாலோ அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காதலர் தினத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு வேறு தரப்பினர் பூங்காவிற்குள் வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • டிசி படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.
    • டிசி படத்தில் சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

    இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ், வமிகா கேபி, சஞ்சனா உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்ததுள்ளது.

    • காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை வழங்குகிறேன்.
    • காதல் என்பது வெறும் டீன் ஏஜ் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு டீ 1 ரூபாய் மட்டுமே என்று கூறி கடை முன்பு விளம்பர பலகையும் வைத்துள்ளார்.

    இந்த அறிவிப்பு விளம்பர பலகையாக வைக்கப்பட்டதில் இருந்தே அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், எங்கள் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பஸ் பயணிகள் மற்றும் சினிமா தியேட்டருக்கு வருபவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

     

    காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை வழங்குகிறேன். சுத்தமான பசும்பால் மற்றும் இஞ்சி சேர்த்து சுவையாக தயாரிக்கப்படும் இந்த டீ, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எனது ஆசை.

    காதல் என்பது வெறும் டீன் ஏஜ் வயதினருக்கோ அல்லது இளைஞர்களுக்கோ மட்டுமே உரித்தானது அல்ல. அது 20 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைத்து தரப்பினருக்குமானது. காதல் என்பது புனிதமானது. அது வெறும் வயது சம்பந்தப்பட்டது அல்ல. காதலை யாரும் கொச்சையாக பார்க்க வேண்டாம். காதல் என்ற உணர்வை அன்போடு அணுக வேண்டும். மக்களிடையே அன்பும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியை எடுத்தோம்.

    நேற்று மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இன்று 300 பேரை தாண்டி மக்கள் வந்து டீ அருந்தி செல்கின்றனர். இது வெறும் லாபத்திற்காக செய்வது அல்ல, இந்த காதலர் தினத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பமே காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    காதலர் தினத்தை ஒரு வணிக நோக்கமாக பார்க்காமல், சமூகத்தில் அன்பை பகிரும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் இவரின் செயலை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    காதல் எனும் உயிர்ப்பண்பு

    ஆண் பெண்

    மாமிசத்தோடு மட்டும்

    சம்பந்தப்பட்டதில்லை

    எல்லா நிலைகளிலும்

    எல்லா வயதினிலும்

    அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

    'பெருந்தேன் இழைக்கும்

    நாடனொடு நட்பே' என்று

    சங்கத் தலைவி பாடுமிடத்து

    உடற்புணர்ச்சி காதலாகிறது

    'காதலாகிக் கசிந்து

    கண்ணீர் மல்கி'

    என்று பாடும்பொழுது

    கடவுள் பக்தி காதலாகிறது

    'காதல் திருமகன்' என்று

    தசரதன் தளும்புகிறபோது

    பாசம் காதலாகிறது

    உதடுகளை மாற்றி மாற்றி

    முத்தங்கள் பயணப்படுவதுபோல்

    இதயங்களை மாற்றி மாற்றிக்

    காதல் பயணப்படுகிறது

    மனிதர் உள்ளவரை மட்டுமல்ல

    இடம் பெயரும்

    உயிர்கள் உள்ளவரை

    காதல் இருக்கும்

    உடலோடு தொடங்கி

    உடல் தாண்டி

    உயிரில் ஐக்கியமாகிறபொழுது

    காதல் தன் புனிதயாத்திரையில்

    பூரணம் பெறுகிறது

    எல்லாக் காதலுக்கும்

    இது நேர்வதில்லை

    இன்று விற்பனையாகும்

    250 மில்லியன் ரோஜாக்களும்

    குழல் சேர்வதில்லை.

    ஆனாலும் ரோஜாக்கள்

    பூக்கவே பூக்கும்;

    ஆனாலும் காதல்

    மலரவே மலரும்

    காதலைத் தடுக்க

    நாம் யார்?

    தானாய்த் தோன்றித்

    தானாய் மறையும்

    சந்திர சூரியர்

    போன்றது காதல்

    வாழ்க காதலே;

    பூமியை வாழவை..!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம்.
    • காதலர் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட காதலர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    சென்னை:

    உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது 'ஸ்பெஷல்' தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் அதிகளவில் கூடுவார்கள்.

    காதல் புனிதமானது என்பது காதலர்களின் வேத வாக்காக இருந்தாலும், இது தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரத்துக்கு எதிரானது என்பது இந்து அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது. மேலும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது அவர்களது வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

    எனவே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம். இதனால் காதலர் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட காதலர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காதலர்களை மிரட்டும், அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோன்று பொதுஇடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாள்களை கூகுள் நிறுவனம் கொண்டாடி வருகிறது.
    • பண்டிகை காலங்களில் கூகுள் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும்.

    வாஷிங்டன்:

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமாக விளங்குவது கூகுள் நிறுவனம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூகுள் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும்.

    சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாள்களை டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் கொண்டாடியும், அனுசரித்தும் வருகிறது. தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

    கிளாசிக் காதல் படமான 'காதலர் தினம்' படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.

    நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு காதல் படங்கள் ரிலீஸ் மற்றும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன.

    அந்த வரிசையில் நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த "உயிருள்ளவரை உஷா" திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகி உள்ளது.

    கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார்.

    அதுபோல கவுதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, அமீர் இயக்கிய சூர்யாவின் மௌனம் பேசியதே படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி உள்ளன.

    நாளை (பிப்ரவரி 14) தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படமான காதலர் தினம் படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.

    அதேபோல அஜித்தின் வீரம், சிம்புவின் சிலம்பாட்டம் படங்களும் ரீ ரிலீஸில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

    புதிய வெளியீடாக வித் லவ் படம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. மேலும் மயிலாஞ்சி, விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் பூக்கி ஆகிய காதல் படங்களும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளன. 

    • காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
    • பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    போரூர்:

    காதலர் தினம் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட வித விதமான பரிசு பொருட்களை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

    காதலுக்கும் ரோஜாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் காதலின் அடையாளமாகவே ரோஜாப்பூ மாறிவிட்டதால் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடைகளில் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சிகப்பு, இளம் சிகப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக ரோஜா பூங்கொத்துகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    இதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் பூக்கடைகளில் பூங்கொத்து விற்பனை களை கட்டியுள்ளதோடு கோயம்பேடு மார்க்கெட்டை காட்டிலும் விலையும் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்து விற்பனை ஆகி வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கொத்து ஒரு பஞ்ச் (20 எண்ணிக்கை) விலை விபரம் வருமாறு:-

    சிகப்பு ரோஜா-ரூ.600, மஞ்சள் ரோஜா-ரூ.600, வெள்ளை ரோஜா-ரூ.400, ஆரஞ்சு ரோஜா-ரூ.500, பேபி பிங்க்-ரூ.400, ஜூமா லியா-ரூ.350.

    இதுகுறித்து பூங்கொத்து வியாபாரி தேவராஜ் கூறும்போது, வரத்து குறைவால் கடந்த ஆண்டை காட்டிலும் பூங்கொத்து விலை அதிகரித்து உள்ளது. இதனால் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.

    மேலும் பஸ் நிலையம் இடமாற்றம் காரணமாக புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது என்றார்.

    • நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார்
    • டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக ஹிந்தியின் முன்னணி நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ பிப்.14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  


    • சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி.
    • ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் தகவல்.

    ஓசூர்:

    உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பெரும்பாலும் பரிசுப் பொருட்களை அளிப்பதுடன், பூக்களை (ரோஜா பூ) கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம்.

    பூக்கள் என்றாலே பெண்களுக்குப் பிடிக்கும். அதுவும் ரோஜா பூக்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு ஏற்றார் போல காதலர் தினத்தில் காதலர்கள் முதலில் தன் காதலிக்குக் கொடுப்பது ரோஜா மலர்களேயாகும்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி ரோஜா மலர் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு ரோஜா உற்பத்திக்கு ஏற்ற வகையில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது. ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக பேரிகை பகுதியில் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதம் ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. ரோஜா சாகுபடியாளர்கள் பல லட்சம் செலவில், பசுமைக்குடில்கள் அமைத்தும், தோட்டங்களிலும் மலர்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் விவசாயிகள், ஆண், பெண் தொழிலாளர்கள், ரோஜா மலர் கொள்முதல் செய்வோர், மலர் வியாபாரிகள் என சுமார் 2 லட்சம் பேர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பேர்னியர், கார்வெட், டிராபிக்கல் அமேசான் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், கடந்த ஆண்டுகளில் பலத்த வரவேற்பை பெற்ற தாஜ்மகால் வகை சிகப்பு ரோஜா மலருக்கு இந்தாண்டும் கடும் கிராக்கி ஏற்பட்டு, அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனபோதிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு, பருவ நிலை மாற்றம் காரணமாக ரோஜா மலர் உற்பத்தி குறைந்து சுமார் 80 லட்சம் மலர்களே உற்பத்தி ஆனது. அதில் கடந்த 10-ந்தேதி வரை சுமார் 20 லட்சம் மலர்கள் ஏற்றுமதி ஆனது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மலர் சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்தாண்டு கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் பருவ நிலை மாற்றம், கடும் பனி மற்றும் குளிர்கால நோய்கள் ரோஜா செடிகளை தாக்கியதால், ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்து போனது. குறைந்த அளவிலான மலர்களே ஏற்றுமதி ஆன போதிலும் நல்ல விலை கிடைத்திருப்பதால், ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே, காதலர் தினத்திற்கு மட்டுமின்றி, சுப நிகழ்ச்சிகள், மகாசிவராத்திரி உள்ளிட்ட மற்ற கொண்டாட்டங்களுக்கும் அதிகளவில் ரோஜா பூக்கள் தேவைப்படுவதால் உள்ளூர் சந்தையில், நல்ல வரவேற்பு கூடுதல் விலை மற்றும் உடனடியாக பணம் கிடைத்து வருவதால் உள்ளூர் விற்பனைக்கு, மலர் சாகுபடியாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் பூ மார்க்கெட்டில் மொத்தமாகவும், சில்லறையாகவும் ஏராளமான ரோஜா பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

    குறிப்பாக, தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, டபுள் ஷேடு ரோஜாக்கள் என பல வண்ணங்கள் ரோஜாப் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளன.

    நேற்றைய நிலவரப்படி 20 மலர்கள் அடங்கிய கொத்து ரூ.650 முதல் ரூ.700 வரை விற்கப்பட்டது. ரோஜா மலர் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருப்பதால், ஒரு மலரின் விலை ரூ.25 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம், உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தரமான ஒரு மலரின் விலை ரூ.50 முதல் ரூ.55 என சாகுபடியாளர்கள் கூறினர்.

    • நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது.
    • தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    உலகெங்கும் வருகிற 14-ந் தேதி காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் அதிகரித்த பின்பு இந்தியாவிலும் காதலர் தினத்தை இளசுகள் வெகு விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.

    காதலர்கள் பலரும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மலைம மாவட்டமான நீலகிரியில் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள விடுதிகளில் தற்போது முன்பதிவுகளும் தொடங்கி விட்டது.

    அவ்வாறு வரும் காதலர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலிகளுக்கு தங்களது காதலிகளுக்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.

    அத்துடன் பல்வேறு விதமான ரோஜா மலர்கள், கொய்மலர்களையும் தங்களது காதலிகளுக்கு பரிசாக வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேசமயம் கொய்மலர்கள் நீலகிரியிலேயே தாராளமாக கிடைக்கிறது. இதனால் அதனை வாங்கி பலரும் பரிசாக கொடுக்க தொடங்கி விட்டனர். வருகிற 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே மலர்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.

    சாதாரணமாக ஒரு ரோஜா மலர் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரூ.20 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனையாக வாய்ப்புள்ளது. அதேபோன்று கொய்மலர்களான லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம் உள்பட பல்வேறு கொய்மலர்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர் விவசாயிகளுக்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளதால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பரிசு பொருட்களுடன் காத்திருக்கும் ஏராளமான காதல் ஜோடிகளை காண முடியும்.

    ×