வாழ்க காதலே.. பூமியை வாழவை..!- காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து ட்வீட்

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
வாழ்க காதலே.. பூமியை வாழவை..!- காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து ட்வீட்
Published on

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

காதல் எனும் உயிர்ப்பண்பு

ஆண் பெண்

மாமிசத்தோடு மட்டும்

சம்பந்தப்பட்டதில்லை

எல்லா நிலைகளிலும்

எல்லா வயதினிலும்

அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

'பெருந்தேன் இழைக்கும்

நாடனொடு நட்பே' என்று

சங்கத் தலைவி பாடுமிடத்து

உடற்புணர்ச்சி காதலாகிறது

'காதலாகிக் கசிந்து

கண்ணீர் மல்கி'

என்று பாடும்பொழுது

கடவுள் பக்தி காதலாகிறது

'காதல் திருமகன்' என்று

தசரதன் தளும்புகிறபோது

பாசம் காதலாகிறது

உதடுகளை மாற்றி மாற்றி

முத்தங்கள் பயணப்படுவதுபோல்

இதயங்களை மாற்றி மாற்றிக்

காதல் பயணப்படுகிறது

மனிதர் உள்ளவரை மட்டுமல்ல

இடம் பெயரும்

உயிர்கள் உள்ளவரை

காதல் இருக்கும்

உடலோடு தொடங்கி

உடல் தாண்டி

உயிரில் ஐக்கியமாகிறபொழுது

காதல் தன் புனிதயாத்திரையில்

பூரணம் பெறுகிறது

எல்லாக் காதலுக்கும்

இது நேர்வதில்லை

இன்று விற்பனையாகும்

250 மில்லியன் ரோஜாக்களும்

குழல் சேர்வதில்லை.

ஆனாலும் ரோஜாக்கள்

பூக்கவே பூக்கும்;

ஆனாலும் காதல்

மலரவே மலரும்

காதலைத் தடுக்க

நாம் யார்?

தானாய்த் தோன்றித்

தானாய் மறையும்

சந்திர சூரியர்

போன்றது காதல்

வாழ்க காதலே;

பூமியை வாழவை..!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com