என் மலர்
நீங்கள் தேடியது "Poet Vairamuthu"
- உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
- கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
காதல் எனும் உயிர்ப்பண்பு
ஆண் பெண்
மாமிசத்தோடு மட்டும்
சம்பந்தப்பட்டதில்லை
எல்லா நிலைகளிலும்
எல்லா வயதினிலும்
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
'பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே' என்று
சங்கத் தலைவி பாடுமிடத்து
உடற்புணர்ச்சி காதலாகிறது
'காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி'
என்று பாடும்பொழுது
கடவுள் பக்தி காதலாகிறது
'காதல் திருமகன்' என்று
தசரதன் தளும்புகிறபோது
பாசம் காதலாகிறது
உதடுகளை மாற்றி மாற்றி
முத்தங்கள் பயணப்படுவதுபோல்
இதயங்களை மாற்றி மாற்றிக்
காதல் பயணப்படுகிறது
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல
இடம் பெயரும்
உயிர்கள் உள்ளவரை
காதல் இருக்கும்
உடலோடு தொடங்கி
உடல் தாண்டி
உயிரில் ஐக்கியமாகிறபொழுது
காதல் தன் புனிதயாத்திரையில்
பூரணம் பெறுகிறது
எல்லாக் காதலுக்கும்
இது நேர்வதில்லை
இன்று விற்பனையாகும்
250 மில்லியன் ரோஜாக்களும்
குழல் சேர்வதில்லை.
ஆனாலும் ரோஜாக்கள்
பூக்கவே பூக்கும்;
ஆனாலும் காதல்
மலரவே மலரும்
காதலைத் தடுக்க
நாம் யார்?
தானாய்த் தோன்றித்
தானாய் மறையும்
சந்திர சூரியர்
போன்றது காதல்
வாழ்க காதலே;
பூமியை வாழவை..!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்பு.
- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.
இந்நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார்.
மேலும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நான் கவிஞனும் அல்ல.. கவிதை விமர்சகனும் அல்ல.. கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால் 'மகா கவிதை' தீட்டிய 'கவிப்பேரரசு' வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு
- உங்களை வாழ்த்துகிறேன். நானும் மகிழ்கிறேன்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
உங்கள்
அன்னையைப் போலவே
நானும் மகிழ்கிறேன்
இந்த உயர்வு
பிறப்பால் வந்தது என்பதில்
கொஞ்சம் உண்மையும்
உங்கள் உழைப்பால்
வந்தது என்பதில்
நிறைய உண்மையும் இருக்கிறது
பதவி உறுதிமொழி ஏற்கும்
இந்தப் பொன்வேளையில்
காலம் உங்களுக்கு
மூன்று பெரும் பேறுகளை
வழங்கியிருக்கிறது
முதலாவது
உங்கள் இளமை
இரண்டாவது
உங்கள் ஒவ்வோர் அசைவையும்
நெறிப்படுத்தும் தலைமை
மூன்றாவது
உச்சத்தில் இருக்கும்
உங்கள் ஆட்சியின் பெருமை
இந்த மூன்று நேர்மறைகளும்
எதிர்மறை ஆகிவிடாமல்
காத்துக்கொள்ளும் வல்லமை
உங்களுக்கு வாய்த்திருக்கிறது
உங்கள் ஒவ்வோர் நகர்வும்
மக்களை முன்னிறுத்தியே
என்பதை
மக்கள் உணரச் செய்வதே
உங்கள் எதிர்காலம்
என் பாடலைப் பாடிய
ஒரு கலைஞன்
துணை முதல்வராவதை எண்ணி
என் தமிழ் காரணத்தோடு
கர்வம் கொள்கிறது
கலைஞர் வழிகாட்டுவார்
துணை முதல்வராகும் நீங்கள்
இணை முதல்வராய்
வளர வாழ்த்துகிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






