என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரமுத்து"

    • சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது
    • இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    இந்த விழாவின் இறுதி நாளில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினியை கவிஞர் வைரமுத்து வாழ்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினி அவர்களை வாழ்த்துகிறோம். அவரது தாழாத கீர்த்திக்கும் வீழாத வெற்றிக்கும் சில காரணங்கள் உண்டு. அவரது வாழ்வின் முன்னுரிமை உழைப்புக்கு; பிறகுதான் மற்றவற்றுக்கு கலை உலகம் தந்த புகழை வேறு சந்தைகளுக்கு அவர் மடைமாற்றம் செய்வதில்லை

    ரசிகனுக்கும் தனக்குமுள்ள நெருக்கம் தூரம் இரண்டுக்கும் எல்லை கட்டத் தெரியும். உணவு உடற்பயிற்சி இரண்டினாலும் தொப்பையற்ற தோற்றத்தைத் தொடர்ந்து காப்பாற்றுகிறார். தான் பின்தங்கிவிடாமல் மாறும் தலைமுறையோடு மாறாமல் பயணிக்கிறார்.

    சமூகம் அவரைச் சர்ச்சைக்கு இழுத்தாலும் சர்ச்சைகளை அவர் திட்டமிட்டு உண்டாக்குவதில்லை. கர்வம் என்பது தனியறையில் இருந்தாலும் பணிவு என்பதைப் பொதுவெளியில் காட்டுகிறார். 'இமயமலை ஆகாமல் எனதுஉயிர் போகாது எல்லையைத் தொடும்வரை எனது கட்டை வேகாது' என்ற வரிகளை வாழ்ந்துகாட்டத் துடிக்கிறார். தான் நன்றாக இருக்கவேண்டும்; அதுபோல் எல்லாரும் என்று நினைக்கிறார். வாழ்க பல்லாண்டு!" என்று பதிவிட்டுள்ளார். 

    சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.

    இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் சபேஷின் உயிர் பிரிந்தது.

    சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் இசையமைத்துள்ளார். பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார்.

    இசையமைப்பாளர் சபேஷின் மறைவு திரையுலகினரின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சபேஷின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தேனிசைத் தென்றல்

    தேவாவின் இளவல்

    இசையமைப்பாளர்

    சபேஷ் மறைவு

    மனவலியைத் தருகிறது

    கலையன்றி

    வேறொன்றும் அறியாத

    இசையே வாழ்வென்று வாழ்ந்த

    ஒரு சகோதரர் சபேஷ்

    அமைதியானவர்;

    அவர் பேசியதைவிட

    வாசித்ததே அதிகம்

    அவரது மறைவு

    தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல

    வாசிக்கப்படும்

    இசைக்கருவிகளுக்கெல்லாம்

    இழப்பாகும்

    ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன்

    அடங்கிவிட்டான்

    அவரது ஆருயிர்

    அமைதி பெறட்டும்

    ஆழ்ந்த இரங்கல்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
    • நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ''இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது'' என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உச்சநீதிமன்றத்

    தலைமை நீதியரசர்

    @JusticeBRGavai மீது

    அநாகரிகத்தை

    வீசமுயன்றது கண்டு

    அதிர்ந்துபோனேன்

    இது

    முறைசெய்யும் நீதித்துறையைக்

    கறைசெய்யும் களங்கமாகும்

    வரம்புமீறிய வழக்கறிஞரை

    வன்மையாகக் கண்டிக்கிறேன்

    பிற்போக்குத்தனம்தான்

    இந்த அவமானச் செயலுக்கு

    அடிப்படை என்று அறிகிறேன்

    தென்னிந்தியாவில்

    பிற்போக்குச் சக்திகளைப்

    பிடரிபிடித்துத் தடுத்து

    நிறுத்தியதைப்போல

    வடஇந்தியாவில்

    செய்யத் தவறிவிட்டார்கள்

    அந்தச் சாத்திரத்தின்

    ஆத்திரம்தான் இது

    காலில் அணியவேண்டியதைக்

    கையில் அணிந்தபோதே

    அவர் அறிவழிந்துபோனார் என்று

    அறிய முடிகிறது

    அதை

    மென்மையாகக் கையாண்ட

    நீதியரசரின் சான்றாண்மையைப்

    பெரிதும் போற்றிப்

    பெருமிதம் கொள்கிறோம்

    நீதியரசரின் மாண்பு

    அவரை மன்னித்துவிட்டது

    வீச முயன்ற பொருளும்

    அவரிடமே

    ஒப்படைக்கப்பட்டு விட்டது

    வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்

    அவர் பேசியபொருளை

    மறந்துவிட முடியாது

    அது

    நாட்டின் பெரும்பான்மை மக்களைக்

    காலங்காலமாய்க்

    கழுத்தில் மிதித்து

    அழுத்திக் கொண்டிருக்கும்

    பழைய பொருளாகும்

    பழையன கழிய வேண்டாமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது
    • போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும்

    கடந்த 2023-ம் ஆண்டு அக். 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதில் அளித்துள்ளது.

    இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    67 ஆயிரம் உயிர்களைக்

    காவுகொண்ட பின்

    இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்

    முடிவுக்கு வருவதாய்த்

    தோன்றுகிறது

    பாலஸ்தீனத்திற்கே

    கூடுதல் இழப்புகள் என்பதால்

    இஸ்ரேலின்

    விட்டுக்கொடுத்தல்களை

    உலகம் வேண்டுகிறது

    காசாவின் பிணைக் கைதிகளும்

    இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்

    காதலர்கள் பூக்களைப்

    பரிமாறிக்கொள்வதைப் போல

    மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்

    முதலில் பாலஸ்தீனத்திற்கு

    உணவுப் பாதையைத்

    திறந்துவிடுங்கள்

    எலும்புக் கூடுகளுக்குள்

    உயிர் ஊறட்டும்

    கூடாரங்கள் மெல்ல மெல்லக்

    குடில்களாகட்டும்

    போர் விமானங்கள்

    பறந்த வானில்

    புறாக்கள் பறக்கட்டும்

    சமாதானத்தை முன்னெடுத்த

    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    ஏற்றுக்கொண்ட

    இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு

    இருவருக்கும்

    இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்

    உலக நாடுகள் பல

    ஒப்புக்கொண்ட வண்ணம்

    பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்

    "வெள்ளைப் பூக்கள்

    உலகம் எங்கும் மலர்கவே

    விடியும் பூமி

    அமைதிக்காக விடிகவே"

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
    • வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும்

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து "இறந்தவர்களுக்கு நியாயம் செய்வதும் இருப்பவர்களுக்கு நீதி செய்வதுமே அறமாகும்" என்று அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கரூர்ச் சம்பவம் குறித்து

    அரசு அமைத்திருக்கும்

    தனிநபர் ஆணையத்தின் தலைவர்

    நீதிபதி அருணா ஜெகதீசன்

    அவர்களுக்கு

    ஒரு வேண்டுகோள்

    உயிரிழப்புக்கு ஆளான

    41 குடும்பங்களிலும்

    நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள்

    அந்தக் குடும்பங்களில்

    வேலை வாய்ப்புக்கு

    வயதுடையவர்களையும்

    கல்வி கற்கும்

    வாய்ப்புடையவர்களையும்

    அரசுக்கு நீங்கள்

    அறிக்கையில் குறித்து

    அறிவிக்க வேண்டும்

    பலியானோர் பலரும்

    அடித்தட்டு மற்றும்

    நடுத்தட்டு வர்க்கத்து

    நலிந்தவர்கள்தாம்

    வேலைவாய்ப்பும் கல்வியுமே

    அவர்களின்

    மாபெரும் துயரத்துக்கு

    மருந்தாக முடியும்

    இறந்தவர்களுக்கு

    நியாயம் செய்வதும்

    இருப்பவர்களுக்கு

    நீதிசெய்வதுமே அறமாகும்

    இந்தப் பணியை

    நீங்கள் இப்போதே முடித்திருந்தால்

    அது சமூக தர்மமாகும்

    உங்கள் அறிக்கை

    பட்டழிந்தோர் கண்ணீரைத்

    தொட்டுத் துடைக்கும்

    சுட்டு விரலாகட்டும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை...
    • பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.

    கரூர் சம்பவம் குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தாங்க முடியவில்லை;

    இரவு என்னால்

    தூங்க முடியவில்லை

    மரணத்தின் படையெடுப்பால்

    கரூர் கருப்பூர் ஆகிவிட்டது

    அந்த மரணங்களுக்கு

    முன்னும் பின்னுமான

    மனிதத் துயரங்கள்

    கற்பனையில் வந்து வந்து

    கலங்க வைக்கின்றன

    பாமரத் தமிழர்களுக்கு

    இப்படி ஒரு பயங்கரமா?

    இந்த வகையில்

    இதுவே கடைசித் துயரமாக

    இருக்கட்டும்

    ஒவ்வோர் உயிருக்கும்

    என் அஞ்சலி

    ஒவ்வொரு குடும்பத்துக்கும்

    ஆழ்ந்த இரங்கல்

    இனி இப்படி நிகழாமல்

    பார்த்துக் கொள்வதே

    இந்த நீண்ட துயரத்துக்கு

    நிரந்தர நிவாரணம்

    ஆடும் உடம்பு

    அடங்குவதற்கு நாளாகும்

    இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார். 

    • தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம்.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    உன் தாடி முளைத்தபோது

    சமூகத்துக்கு மீசை முளைத்தது

    இருட்டுச் சுவர்

    இடியத் தொடங்கியது

    கி.மு - கி.பி பழைய கணக்கு

    பெ.மு - பெ.பி புதிய கணக்கு

    நூற்றாண்டுகளாய்

    எங்கள் புலிகள்

    ஆடுகளுக்குப்

    புல்பறித்துக் கொண்டும்

    பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன

    நகத்தில் கூர்மையும்

    முகத்தில் மீசையும்

    உண்டென்பதை

    புலிகளுக்கு நீதான்

    புலப்படுத்தினாய்

    நீறுகளை ஊதி

    நெருப்பை அடையாளம்காட்டிய

    சுற்றுப்பயணச் சூறாவளி நீ

    வர்க்கப் போரின்

    இன்னோர் வடிவம்

    உன் தர்க்கப்போர்

    நீ சொன்ன பிறகுதான்

    செருப்புத் தைத்தவன்

    கையில் இருந்ததைக்

    காலில் அணிந்தான்

    நிர்வாணமாய்

    நெசவு செய்தவன்

    ஆடை சூடினான்

    கலப்பையில் எழுதியவன்

    காகிதத்தில் எழுதினான்

    சூரியன் வந்ததும்

    உடுக்கள் என்னும்

    வடுக்கள் மறைவதுபோல்

    உன் வருகையால்

    வெள்ளை அழுக்கு

    வெள்ளாவிவைத்து

    வெளுக்கப்பட்டது

    பழைமைவாதப் பாம்படித்ததும்

    ஓலைக் குடிசைகளின்

    ஒட்டடை அடித்ததும்

    புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்

    சிலம்பம் சுற்றியதும்

    உனது ஒற்றைக் கைத்தடிதான்

    மூலக்கூறு பிரித்தால்

    கடைசிவரை

    தங்கம் தங்கம்தான்

    உன் மரணத்தின்

    முன் நிமிடம்வரை

    நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்

    கருப்பு நிலக்கரி வைரமாகக்

    காலம் ஆகும்

    கருப்பு வண்ணம் புரிதல்பெற

    இன்னும் ஒரு யுகமாகும்

    புகழ் வணக்கம்.

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

    • ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை
    • ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம்.

    வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

    வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ''கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெற வேண்டும். அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.

    இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும், போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது. இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள்.

    ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள். படம் என்பது பிம்பம். வாழ்க்கை என்பது நிஜம்.

    ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம். அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை, தொட்ட வாழ்க்கை, துன்புற்ற வாழ்க்கை, துன்பப்படுத்திய வாழ்க்கை, சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத் தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போயின என நான் நினைக்கிறேன்.

    எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.

    அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?

    மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. ராமாயணத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்கு தெரிந்ததுதான்.

    படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

    ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.

    மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார். 

    • வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.
    • ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.

    மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
    • முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி சென்றனர்.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது

    இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், " ஓர் உண்மையான சமூக மனிதன் தொழிலாளிகள் பக்கமே நிற்பான்; நானும் தூய்மைப் பணியாளர்கள் பக்கமே நிற்கிறேன்

    சராசரி மனிதர்களால் சாத்தியப்படாத தூய்மைப் பணியை நுரையீரலைப் பணயம்வைத்து ஈடேற்றுகிற ஈடற்ற தியாகிகள் அவர்கள். அவர்கள் எதிர்பார்ப்பது கருணையை அல்ல; உரிமையை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை ஆறு அம்சத் திட்டத்தால் அவர்களின் வாழ்வுக்கு வளம்சேர்க்கவே கருதுகிறது.

    தூய்மைப் பணியாளர்கள் விரைவில் வேலைக்குத்திரும்ப வேண்டும்;கோரிக்கைகள் காலப்போக்கில் கனிந்தே தீரும்

    இது தொழிலாளிகள் உலகம் அவர்கள் நலம் சமுதாய நலம். அனைவர்க்கும் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார் என்று வைரமுத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி என்று எச். ராஜா விமர்சனம்

    மயிலாப்பூரில் கடந்த 8-ந்தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று பேசினார். அப்போது அவர், கடவுள் ராமரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது.

    வைரமுத்து பேசியதாவது:- சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் குற்றம், குற்றம் கிடையாது என்று IPC கூறுகிறது. IPC-யில் கூறப்பட்டதை அன்றே கூறினார் கம்பர். ராமர் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி அல்ல என்று கம்பர் கூறுகிறார் என்றார்.

    வைரமுத்துவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவருக்கு எதிராக புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மூத்த பாஜக தலைவர் எச். ராஜா, "அரசியலமைப்பின் முதல் பக்கத்தில் ராமரின் படம் தான் உள்ளது. ஆனால் வைரமுத்து ராமரை மனநோயாளி என்று பேசியுள்ளார். வைரமுத்து யார் ஒரு மீடூ குற்றவாளி. சின்மயி அவர் மீது புகார் கூறியுள்ளார். மேலும் பல பேர் அவர் மீது புகார் கூறியுள்ளார். இந்து விரோதி வைரமுத்துவுக்கு பெண்களை கண்டால் மனநோய். காமவெறி கொண்ட வைரமுத்துவை ஏன் இன்னும் திமுக அரசு கைது செய்யவில்லை. 2026 இல் வைரமுத்து செய்யப்படுவார்" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    • புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த கூலி
    • தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ்

    திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    50 ஆண்டுகள்

    ஒரே துறையில்

    உச்சத்தில் இருப்பது

    அபூர்வம்

    ரஜினி

    நீங்கள் ஓர் அபூர்வ ராகம்

    புகழும் பொருளும்

    உங்கள்

    உழைப்புக்குக் கிடைத்த

    கூலி

    தொடரட்டும்

    உங்கள் தொழில்

    நிலைக்கட்டும்

    உங்கள் புகழ்

    "இளமை இனிமேல் போகாது

    முதுமை எனக்கு வாராது" என்று

    முத்து படத்தில் எழுதிய

    முத்திரை வரியால்

    வாழ்த்துகிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×