என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director Gauthaman"

    • ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை
    • ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம்.

    வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

    வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ''கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெற வேண்டும். அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.

    இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும், போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது. இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள்.

    ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள். படம் என்பது பிம்பம். வாழ்க்கை என்பது நிஜம்.

    ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம். அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை, தொட்ட வாழ்க்கை, துன்புற்ற வாழ்க்கை, துன்பப்படுத்திய வாழ்க்கை, சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத் தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போயின என நான் நினைக்கிறேன்.

    எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.

    அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?

    மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. ராமாயணத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்கு தெரிந்ததுதான்.

    படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

    ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.

    மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார். 

    • தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்?
    • இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள்

    வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.

    வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் தங்கர் பச்சான் பேசுகையில், ''வ. கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்கு முறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.

    இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.

    மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.

    ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.

    இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், '' ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ் குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ் சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை . தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

    இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் 'படையாண்ட மாவீரா'.

    இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.

    என்னுடைய தந்தையும், அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.

    தமிழரசனின் வாழ்க்கை வரலாறை படைப்பாக உருவாக்க வேண்டும். மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றை படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும்.

    அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார். 

    • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர்.
    • ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை.

    வடலூர்:

    தமிழ்பேரரசு கட்சியின் நிறுவனத்தலைவர் திரைப் பட டைரக்டர் கவுதமன் வடலூரில் சத்தியஞான சபை, சத்திய தருமச்சாலை ஆகிய இடங்களில் வழி பாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    பசியை தீ என்றும், பிணி என்றும் கூறிய மகான் வள்ளலார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர். அந்த அணையா அடுப்பு இதுநாள் வரையில் 3 வேளையும், வடலூர் வருபவர்களுக்கு பசியாற்றி வருகிறது. வள்ளலாரின் கோட்பாடுகளை உள்வாங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர்கள்.

    அதில் தற்பொழுது 60 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இதில்46 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை. எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் அக்கோவிலில் இருந்து 100 அடி தூரம் தள்ளிதான் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால் வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் ஞான சபையின் அருகே 20 அடி அருகில் அரசு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது. வள்ளலார் தெய்வ நிலையத்தை பார்த்திராத, தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கோட்டையில் இருந்தவாறு அடிக்கல் நாட்டுவது அறமா? நேர்மையா?.

    தமிழக அரசு முதலில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து அங்கு சர்வதேச மையம் அமைக்கலாம். வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் வருவது பிரச்சனை இல்லை. "இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்.

    ஆனால் வள்ளலார் பெருவெளியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இதையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.

    இவ்வாறு டைரக்டர் கவுதமன் கூறினார்.

    ×