என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம் - வைரமுத்து
    X

    நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம் - வைரமுத்து

    • வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
    • நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ''இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது'' என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உச்சநீதிமன்றத்

    தலைமை நீதியரசர்

    @JusticeBRGavai மீது

    அநாகரிகத்தை

    வீசமுயன்றது கண்டு

    அதிர்ந்துபோனேன்

    இது

    முறைசெய்யும் நீதித்துறையைக்

    கறைசெய்யும் களங்கமாகும்

    வரம்புமீறிய வழக்கறிஞரை

    வன்மையாகக் கண்டிக்கிறேன்

    பிற்போக்குத்தனம்தான்

    இந்த அவமானச் செயலுக்கு

    அடிப்படை என்று அறிகிறேன்

    தென்னிந்தியாவில்

    பிற்போக்குச் சக்திகளைப்

    பிடரிபிடித்துத் தடுத்து

    நிறுத்தியதைப்போல

    வடஇந்தியாவில்

    செய்யத் தவறிவிட்டார்கள்

    அந்தச் சாத்திரத்தின்

    ஆத்திரம்தான் இது

    காலில் அணியவேண்டியதைக்

    கையில் அணிந்தபோதே

    அவர் அறிவழிந்துபோனார் என்று

    அறிய முடிகிறது

    அதை

    மென்மையாகக் கையாண்ட

    நீதியரசரின் சான்றாண்மையைப்

    பெரிதும் போற்றிப்

    பெருமிதம் கொள்கிறோம்

    நீதியரசரின் மாண்பு

    அவரை மன்னித்துவிட்டது

    வீச முயன்ற பொருளும்

    அவரிடமே

    ஒப்படைக்கப்பட்டு விட்டது

    வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்

    அவர் பேசியபொருளை

    மறந்துவிட முடியாது

    அது

    நாட்டின் பெரும்பான்மை மக்களைக்

    காலங்காலமாய்க்

    கழுத்தில் மிதித்து

    அழுத்திக் கொண்டிருக்கும்

    பழைய பொருளாகும்

    பழையன கழிய வேண்டாமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×