என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம் - வைரமுத்து
- வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
- நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ''இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது'' என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உச்சநீதிமன்றத்
தலைமை நீதியரசர்
@JusticeBRGavai மீது
அநாகரிகத்தை
வீசமுயன்றது கண்டு
அதிர்ந்துபோனேன்
இது
முறைசெய்யும் நீதித்துறையைக்
கறைசெய்யும் களங்கமாகும்
வரம்புமீறிய வழக்கறிஞரை
வன்மையாகக் கண்டிக்கிறேன்
பிற்போக்குத்தனம்தான்
இந்த அவமானச் செயலுக்கு
அடிப்படை என்று அறிகிறேன்
தென்னிந்தியாவில்
பிற்போக்குச் சக்திகளைப்
பிடரிபிடித்துத் தடுத்து
நிறுத்தியதைப்போல
வடஇந்தியாவில்
செய்யத் தவறிவிட்டார்கள்
அந்தச் சாத்திரத்தின்
ஆத்திரம்தான் இது
காலில் அணியவேண்டியதைக்
கையில் அணிந்தபோதே
அவர் அறிவழிந்துபோனார் என்று
அறிய முடிகிறது
அதை
மென்மையாகக் கையாண்ட
நீதியரசரின் சான்றாண்மையைப்
பெரிதும் போற்றிப்
பெருமிதம் கொள்கிறோம்
நீதியரசரின் மாண்பு
அவரை மன்னித்துவிட்டது
வீச முயன்ற பொருளும்
அவரிடமே
ஒப்படைக்கப்பட்டு விட்டது
வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்
அவர் பேசியபொருளை
மறந்துவிட முடியாது
அது
நாட்டின் பெரும்பான்மை மக்களைக்
காலங்காலமாய்க்
கழுத்தில் மிதித்து
அழுத்திக் கொண்டிருக்கும்
பழைய பொருளாகும்
பழையன கழிய வேண்டாமா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






