search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanthai Periyar"

    • ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.
    • பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நமது கவியரசர் கண்ணதாசன் 1927-ம் ஆண்டிலேயே சிறுகூடல் பட்டியிலே பிறந்திட்டார். சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டின் போது கண்ணதாசனுக்கு வயது இருபது. எனவே சுதந்திரப்போராட்ட வரலாறுகளை எல்லாம் நன்கறிந்தவர். சிறுகூடல் பட்டியிலே இருந்த `பாரதமாதா' வாசகசாலைதான் கண்ணதாசனுக்கு அறிவை வளர்த்தது. சிந்தனையை ஊட்டியது என்பதே உண்மையாகும்.

    அண்ணல் காந்தியடிகளை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை விரும்பி தேர்ந்தெடுத்து படிப்பார். ஏடுகளில் காந்தியடிகளை பற்றி வருகிற செய்திகளை எல்லாம் படித்து உள்வாங்கிக் கொள்வார். எவ்வித ஆயுதமோ, அணுகுண்டோ இல்லாமல், அகிம்சை என்னும் அறவழியை பின்பற்றி இந்திய சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கே உரியது என்றெல்லாம் பெருமை கொள்வார் கண்ணதாசன்.

    அப்படிப்பட்ட காந்தியடிகளை பற்றி பல மேடைகளில் கண்ணதாசன் உதாரணம் காட்டி அவரது அருமை பெருமைகளை பேசுவதுண்டு. கட்டுரைகளை எழுதியதும் உண்டு. ஆனால் ஒரே ஒரு கவிதை மட்டுமே கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 6-ம் தொகுதியிலே காந்தியடிகளைப்பற்றி `தீபம் போதும்' என்ற தலைப்பிலே வெளியாகி உள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    காட்டினுள் தேடித் தேடிக்

    கற்பகத் தருவைக் காண்போம்...!

    வீட்டினிள் தேடித் தேடி

    விளக்கையோர் இடத்திற் கண்டோம்...!

    ஏட்டினுள் தேடித் தேடி

    இணையிலாக் கவிதை கண்டோம்

    நாட்டினுள் தேடுகின்றோம்

    நாயக! நின்னைக்காணோம்...!

    நாற்பது கோடிக் கென்று

    நடுங்கிய தடியை ஊன்றி

    ஏற்பதை ஏற்று வாழ

    இருப்பினும் தொடர்ந்து சென்று

    நூற்பது முதலாய் நன்மை

    நுவல்வது வரையிற் சொல்லி

    வேற்படை திரட்டி வென்றாய்

    வீரனே நின்னைக் காணோம்...

    காந்தியின் பெயரைக் கண்டோம்

    காலடிச் சுவடைக் கண்டோம்

    காந்தமென் றொன்றைக் கண்டோம்

    தனியறம் தழைக்க கண்டோம்

    மாந்தருள் நின்னைப் போல

    மற்றொரு வைரம் காணோம்...

    ஏந்திய தீபம் நின்சொல்

    இன்னொளி போதும் தேவா...

    என்று காந்தியை பற்றிய கவிதையை நிறைவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

    சாந்தமாய் திகழ்ந்து சரித்திரம் படைத்திட்ட ஒரு மகத்தான மாமனிதரை எங்கெல்லாமோ தேடிப்பார்க்கிறோம். அப்படி ஒரு மனிதர் எங்கள் கண்களுக்கு இதுவரை தென்படவில்லை என்று காந்திக்கு புகழாரம் சூட்டுவதோடு, கொள்கையிலும், மனதைரியத்திலும் ஒரு வைரம் போலே ஒளிவீசி வாழ்ந்து மறைந்தார் என்று வர்ணித்து எழுதுகிறார் கண்ணதாசன்.

    `ராஜாஜி பற்றி கண்ணதாசன்'

    முதறிஞர் ராஜாஜி மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். கட்சி ரீதியாக அவரோடு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், அவருடைய வயதின் மூப்புக்கருதியும், அவருடைய இலக்கிய ஞானம் கருதியும் ராஜாஜி மீது தனி மரியாதை வைத்திருந்தார் கண்ணதாசன்.

    `சக்கரவர்த்தி திருமகன்' என்ற ராமாயணம் பற்றிய நூலில் ராஜாஜி ரத்தின சுருக்கமாக எழுதி வெளியிட்டதை எப்போதும் பெருமையுடன் கண்ணதாசன் கூறி மகிழ்ந்திடுவார். அதேபோல மகாபாரதத்திலும் ராஜாஜிக்கு நல்ல புலமை உண்டு. ராஜாஜியின் சில புத்தகங்கள், திரைப்படங்களாக வடிவம் பெற்றுள்ளதையும் கண்ணதாசன் அடிக்கடி குறிப்பிடுவார்.

    'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நாவல் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றதையும் கண்ணதாசன் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனால் ராஜாஜி முதல்வராக இருந்த போது கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் கண்ணதாசனும் ஒருவர். ராஜாஜி எப்பொழுதுமே மேல்தட்டு மக்களின் பக்கமே இருப்பார் என்பதிலும் கண்ணதாசனுக்கு ராஜாஜியின் மீது கடும் கோபம் இருந்தது.

    ஆனால் ஒரு கவிஞன் என்று வரும் போது, பொது மனிதனாக இருந்து எல்லோரையும் சமமாக பாவிப்பதே கவிஞருடைய கொள்கை என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட சமநோக்கில் தான் ராஜாஜியின் குணநலன் குறித்தும், அவருடைய ஒழுக்கமான பொது வாழ்க்கை குறித்தும், மதி நுட்பம் குறித்தும் கவிதையில் மிக சிறப்பான பாராட்டுக்களை வழங்கியுள்ளார் கண்ணதாசன்...

    தலை சிறந்த தமிழர்களான பேராசிரியர் கல்கியும், கல்கி சதாசிவமும், தமிழ் அறிஞர் டி.கே.சி.யும் ராஜாஜியின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கல்கியின் எழுத்துகளில் மனதை பறிகொடுத்தவர் கண்ணதாசன். எனவே அந்த வகையிலும் ராஜாஜியின் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் கண்ணதாசன். 'தேசத்தை ஈர்த்த தமிழன்' என்ற தலைப்பிலே கண்ணதாசன் எழுதிய கவிதையை பார்ப்போம்.

    ஊராண்டு நாடாண்டு

    உயர்வான மேதைகளின்

    உள்ளத்தை ஆண்ட மனிதன்...

    உடலாண்டு மனம் ஆண்டு

    ஒரு தொன்னூற் றைந்தாண்டு

    உலகத்தில் வாழ்ந்த அறிஞன்

    சீராண்டு வேதாந்த

    சித்தாந்த மெஞ்ஞானம்

    சேர்த்தாண்ட ஞான முனிவன்

    தெளிவோடு பலவாண்டு

    தென்னாட்டு மாந்தர்க்கு

    தெய்வத்தை சொன்ன கலைஞன்

    என்று முதல் கவிதையிலேயே முத்திரைபதிக்கிறார் கண்ணதாசன். ராஜாஜியின் தேசத் தொண்டினை மட்டுமல்ல தெய்வீகத் தொண்டினையும் பாராட்டி மகிழ்ந்தார் கண்ணதாசன்.

    ஊராட்சி என்றாலும்

    நகராட்சி என்றாலும்

    ஒழுக்கத்தை வேண்டும் ஒருவன்

    ஒரு போதும் தன் கட்சி

    நிருவாக தலையீட்டை

    ஒப்புக் கொள்ளாத தலைவன்

    சீரான அரசாட்சி

    சிலகாலம் செய்தாலும்

    திறமாக செய்த புனிதன்

    தென்னாட்டு மாந்தர்தம்

    திறமைக்குச் சான்றாகி

    தேசத்தை ஈர்த்த தமிழன்

    தேராத நூலில்லை

    தெளியாத பொருளில்லை

    சென்றோடி விட்டதெனவோ...

    என்று அடுத்த கவிதையில்... ராஜாஜியின் குண நலன்களை பாராட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்

    வாழ்வாங்கு வாழ்வாரைத்

    தெய்வத்துள் வைக்குமொரு

    வையத்துள் வாழும் மனிதா- இந்த

    வையத்துள் ராஜாஜி

    வாழ்வுக்குச் சான்றாக

    வாழ்வொன்று எங்கும் உளதா...?

    மாபார தத்தினிலும்

    ராமாயணத்திலும்

    மனதார மூழ்கி நீந்தி

    மனநீதி பொய்யாது

    மறைநீதி அகலாது

    வாழ்வார்க்கு ஆத்ம சாந்தி

    பூபாரம் ஏற்றானை

    புகழ்பாரம் கொண்டானை

    பொழுதென்றும் வாழ்த்து மனமே

    என்று பாடி ராஜாஜியை போல பொய்யாத மானிடர்கள் வருக தினமே என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன்...

    பெரியார் பற்றி கண்ணதாசன்

    பகுத்தறிவு பகலவனாக திகழ்ந்திட்ட தந்தை பெரியாரிடம் தனி மதிப்புக் கொண்டிருந்தார் கண்ணதாசன். ஆரம்ப காலங்களில் நாத்திகராகவும், பகுத்தறிவு வாதியாகவும் இருந்தவர் தான் கண்ணதாசன்... அப்போதெல்லாம் பெரியாரின் கொள்கை பற்றி பேசாத நாளில்லை. தி.மு.க.வில் இணைந்து, பின்னர் அங்கிருந்து வெளியேறிய பின்னும் பெரியாரை பற்றி எந்த விமர்சனமும் செய்ததில்லை. பெரியார் மட்டும் இல்லையெனில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் இப்படி ஓர் விழிப்புணர்வு வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதே கண்ணதாசனின் கருத்தாகும். "ஈரோட்டு விடிவெள்ளி" என தலைப்பிட்டு

    தங்க வண்ண மேனியும், புன்னகை

    தாங்கும் இன்ப வதனமும், கண்களில்

    பொங்கும் வீரப்புலிப் பார்வையும்

    புவனம் யாவையும் தன் வயமாக்கிடும்

    எங்கள் தந்தை ஈரோட்டு அண்ணல்

    என்று புகழாரம் சூட்டி மகிழ்கிறார் கண்ணதாசன்.

    'மேடை ஏறி நின்றிடில் ஓர்எழில்

    மெய் சிலிர்க்க பேசிடில் ஓர் எழில்

    தாடை தாங்கும் தாடி அசைந்திடில்

    தனிப்பெரும் எழில்! கருநிறத் தமிழ்

    ஆசை காற்றில் அசைந்திடில் ஓர்எழில்

    ஈடிலாத நம் ஈவெரா' என்று

    பெரியாரின் தோற்றப் பொலிவை வர்ணித்து மகிழ்கிறார் கண்ணதாசன்.

    'தூங்கினோர் தமை தட்டி எழுப்பியும்

    சோம்பல் நெஞ்சினை சுறுசுறுப்பாக்கியும்

    பாங்கு காட்டியும், பண்பை ஊட்டியும்

    பாதை மாறிய வேதனை கூறியும்

    தீங்கு நீங்கிட தினவு கொண்டெழு

    தீரனே என வீரம் ஊட்டிய வேந்தர்'

    என்றும்...

    எனது தாயகம்! எனது தோழர்கள்

    எனது தாய்மொழி! எனது சோதரர்

    என்பதே நினைவான உள்ளமாம்

    இழையும் மூச்சிலும் இந்த வெள்ளமாம்

    என்றும் பெரியாருக்கு புகழ்மாலை சூட்டுகிறார் கண்ணதாசன்.

    ஊன்றி வரும் தடிசற்று நடுங்கக் கூடும்

    உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை

    தோன்றி வரும் வடிவினிலே நடுக்கள் தோன்றும்

    துவலாத கொள்கையிலே நடுக்கமில்லை

    வான் தவழும் வெண்மேகத் தாடி ஆடும்

    வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை.

    ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்

    ஐயாவுக்கிணை அவரே! மாற்றோர் இல்லை.

    சாதியெனும் நாகத்தை தாக்கி தாக்கி

    சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு

    நாதியிலார் நாதி பெற நாப்படைத்தார்

    நாற்பத்து ஐங்கோடி மக்களுக்கும்

    பேதமிலா வாழ்வு தரப் பிறந்து வந்தார்.

    பிறப்பினிலே பெரியாராய்தான் பிறந்தார்.

    ஆக்காத நூலில்லை; ஆய்ந்து தோய்ந்து

    அளிக்காத கருத்தில்லை; அழுத்தமாக

    தாக்காத பழமையில்லை, தந்தை நெஞ்சில்

    தழைக்காத உவமையில்லை, தமிழ் நிலத்தில்

    நீக்காத களையில்லை, நினைத்துச் சொல்லி

    நிலைக்காத பொருளில்லை, நீதி கூடக்

    காக்காத உலகத்தை பெரியார் காத்தார்'

    என்று பெரியாரின் 85-வது ஆண்டு பிறந்த நாளின் கொண்டாட்டத்தின் போது எழுதியிருக்கிறார் கண்ணதாசன். இப்படிப்பட்ட பெருமைகளுக்குரிய பெரியார் மறைந்த போது...

    சரித்திரம் இறந்த செய்தி

    தலைவனின் மரணச் செய்தி

    விரித்ததோர் புத்தகத்தின்

    வீழ்ச்சியைக் கூறும் செய்தி

    மரித்தது பெரியாரல்ல..

    மாபெரும் தமிழர் வாழ்வு...

    இறக்கவே மாட்டார் என்று

    இயற்கையே நம்பும் வண்ணம்

    சிறக்கவே வாழ்ந்த வீரன்

    சென்றதை நம்புவேனா

    மறக்கவா முடியும் அந்த

    மன்னனை, அவன் எண்ணத்தை'... என்று

    பெரியாரின் பெருமையை வரிசைப்படுத்தி அஞ்சலி செலுத்துகிறார் கண்ணதாசன்...

    அடுத்த வாரம் சந்திப்போம்...

    ×