search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel Palestine war"

    • பாலஸ்தீனத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் போரினால் உயிரிழந்துள்ளனர்
    • எங்கள் போர் மிக நியாயமானதுதான் என நேதன்யாகு அறிவித்துள்ளார்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீன காசா முனை பகுதி மீது இஸ்ரேல் தொடங்கிய போர் தற்போது 60 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுவரை 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 48,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐ.நா. சபையில் போர் இடைநிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா, தனது "வீடோ" எனும் சிறப்பு அதிகாரத்தை (Veto) பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

    இப்பின்னணியில் தங்களின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "அமெரிக்கா எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன். ஹமாஸ் அமைப்பை ஒழிக்க நாங்கள் நடத்தி வரும் போர் மிக நியாயமானதுதான். அது மேலும் தொடரும்" என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் (Eli Cohen), "மனித இனத்திற்கு எதிரான குற்றங்களையும், போர் குற்றங்களையும் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர், போர் இடைநிறுத்தம் ஏற்பட்டால் மீண்டும் காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்" என கூறினார்.

    இஸ்ரேலின் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி (Herzi Halevi) தங்கள் தாக்குதலில் இன்னமும் அழுத்தம் காட்டப்படும் என எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், காசாவில் 36 சதவீத வீடுகளில் உணவு பற்றாக்குறை நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் காசா முனை பகுதியில் பாதுகாப்பான இடம் என ஏதுமில்லை என்றும் காசா பகுதியின் சுகாதார துறை அறிவித்துள்ளது.

    • பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது
    • மீண்டும் ஒரு இடைநிறுத்தத்திற்கு அமெரிக்கா முயன்று வருகிறது என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இடைநிறுத்தம் ஏற்பட அரபு நாடான கத்தார் அரசு முயன்று வருகிறது. இதை தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைக்காக இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாட் (Mossad) அதிகாரிகள் கத்தார் சென்றிருந்தனர்.

    இதையடுத்து ஒரு வார போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தது. இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பயங்கரவாதிகளையும், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளையும் பரஸ்பரம் இரு தரப்பினரும் விடுவித்தனர்.

    ஆனால், இஸ்ரேலிலிருந்து அக்டோபர் 7 அன்று கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக கொண்டு சென்ற இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் கோரிக்கையில் இஸ்ரேல் பின்வாங்க மறுத்தது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் விடுவிக்க முதலில் ஒப்பு கொண்டு பிறகு பின்வாங்கி விட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இதனால் இந்த போர் இடைநிறுத்தத்தை கடந்த வெள்ளியன்று இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வந்தது.

    இதை தொடர்ந்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. மீண்டும் தொடங்கிய போரில் 24 மணி நேரத்தில் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரையும் இஸ்லாமிய ஜிஹாத் எனும் அமைப்பினரையும் குறி வைத்து 400க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவ படை அறிவித்தது.

    ஆண்களை விடுவிக்க வேறுவிதமான நிபந்தனைகளை ஹமாஸ் முன்வைத்ததாகவும், ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்காத வரை எந்தவித பேச்சு வார்த்தைக்கும் ஒப்பு கொள்ள முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கத்தார் முன்னெடுத்த போர் இடைநிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், அங்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருந்த இஸ்ரேல் நாட்டின் மொஸாட் உளவு (Mossad Intelligence) அமைப்பினரை இஸ்ரேல் திரும்ப அழைத்து கொண்டு விட்டது.

    இந்நிலையில் போர் மீண்டும் தீவிரமடைவதை தடுக்க கத்தாருடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருகிறது.

    "ஏதேனும் உறுதியான வழிகளில் மீண்டும் போர் இடைநிறுத்தம் நடைபெற நாங்கள் முயன்று வருகிறோம். காசா பகுதியில் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்கவும், ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படவும், அதே சமயம் அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழப்பதை தடுக்கவும் ஒரு வழிமுறையை ஆலோசித்து வருகிறோம்." என அமெரிக்காவின் நிலை குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    போர் மீண்டும் தொடங்கியுள்ளதால், இனி நீண்ட நாட்களுக்கு தொடரலாம் என்றும் உயிரிழப்புகள் இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • அமெரிக்க வெள்ளை மாளிகை மஸ்க் பொய் சொல்வதாக கூறியது
    • அனைவரின் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை என்றார் சுனக்

    அக்டோபர் 7 அன்று துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 50 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக பலரும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபல சமூக கருத்து பரிமாற்றல் இணைய வலைதளமான "எக்ஸ்" செயலியில், ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பை தூண்டி விடுகிறார்கள்" என கருத்து பதிவிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில், "நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்", என பதிலளித்து பதிவிட்டிருந்தார்.

    இது உலகெங்கும் உள்ள யூதர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க வெள்ளை மாளிகை எலான் மஸ்க் கூறுவதை "வடிகட்டிய பொய்" எனவும் விமர்சித்திருந்தது.

    எலான் மஸ்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வந்த தங்கள் விளம்பரங்களை குறைத்து கொள்ள தொடங்கின. இதனால் எக்ஸ் நிறுவன விளம்பர வருவாயும் குறைய தொடங்கியது. இவ்வருட இறுதிக்குள் அது பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கானோரும் பங்கேற்ற யூத எதிர்ப்பிற்கு எதிரான பேரணி ஒன்று நடைபெற்றது.

    இங்கிலாந்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாட்டில் எலான் மஸ்க் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இப்பின்னணியில், தனது நிலைப்பாட்டை குறித்து ரிஷி சுனக் கருத்து தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவருக்கு ஊடகங்களில் அழுத்தம் தரப்பட்டு வந்தது.

    இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    என்னுடன் பழகும் ஒவ்வொரு மனிதரும் கூறும் கருத்துக்களையும் ஆராயும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால், யூதர்களுக்கு எதிரான வெறியையும், வன்முறை சம்பவங்களையும், அவர்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் நான் எதிர்க்கிறேன். நீங்கள் சாலையில் செல்லும் யாரோ ஒருவரா அல்லது எலான் மஸ்கா என்பது குறித்தெல்லாம் எனக்கு கவலையில்லை. தகாத வார்த்தைகளால் பொய்யாக விமர்சிப்பது அனைத்து வகையிலுமே ஏற்க முடியாதது. எல்லா வகையிலுமே யூத எதிர்ப்பு என்பது முழுவதும் தவறு.

    இவ்வாறு சுனக் தெரிவித்தார்.

    • போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதிக்க வேண்டும் என பல உலக நாடுகள் கூறி வருகின்றன
    • போர் நிறுத்தம் பயங்கரவாதம் தொடர வழி செய்து விடும் என்றார் பைடன்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.

    இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழியாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஏமன், லெபனான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

    போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் 11 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்புகள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

    இதன் காரணமாக போரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு பல உலக நாடுகளும், ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இஸ்ரேல் அக்கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல "தி வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல்-ஹமாஸ் இடைநிறுத்தம் குறித்து கருத்து பதிவிட்டிருக்கிறார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    போர் நிறுத்தம் வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத சித்தாந்தத்தை கடைபிடித்து வருவதை நிறுத்தாத வரையில் போர் இடைநிறுத்தம் என்பது அமைதிக்கான வழியாக இருக்காது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஒவ்வொரு போர் இடைநிறுத்த காலமும் தங்கள் ராணுவ தளவாடங்களையும், பயங்கரவாத திட்டங்களுக்கான ஆயுதங்களையும் சேகரித்து வைத்து கொள்ளும் காலமாக உள்ளது. தங்கள் அமைப்பின் பயங்கரவாதிகளை பலம் பெற செய்து மீண்டும் அப்பாவிகளை கொல்ல தொடங்குவார்கள். தற்காலிகமாக போரை நிறுத்துவது நமது நோக்கமாக இருக்க கூடாது; நிரந்தரமாக பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே நோக்கமாக இருக்க வேண்டும்; தொடர்ந்து நடைபெறும் வன்முறைக்கு ஒரு முடிவு வர வேண்டும். அத்துடன் வரலாற்று தவறுகள் மீண்டும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

    இஸ்ரேலும் மனிதாபிமான சட்டங்களை மதித்து, பொதுமக்களின் உயிரிழப்பை குறைத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் மனதில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பதிலடி கொடுக்க வேண்டிய கோபத்தையும் நிதானமாக வெளிப்படுத்தி தவறுகள் நடக்காமல் இஸ்ரேல் பார்த்து கொள்ள வேண்டும். போர் நிறைவடைந்ததும், பாலஸ்தீனம் இரு நாடுகளாக பிரிக்கப்படுவதுதான் இந்த சிக்கலுக்கு தீர்வு.

    இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார்.

    • ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
    • அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

    போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

    சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

    "ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • காசாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
    • இரு தரப்பினரும் போரை கைவிட வேண்டும் என்றார் டெட்ரோஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீன காசாவின் பெரும் பகுதி இஸ்ரேல் வசம் வந்து விட்டது. பாலஸ்தீன பொதுமக்களுக்கு மருந்து, உணவு, எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலர் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

    இந்நிலையில், காசாவில் நிலவும் சூழ்நிலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் ஒன்றை உறுதியாக கூற விரும்புகிறேன். ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலையும், அதில் 1200 பேர் இறந்ததையும், 200 பேருக்கு மேற்பட்டவர்களை பணய கைதிகளாக கொண்டு சென்றதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

    ஆனால், இஸ்ரேலின் பதில் தாக்குதலினால் பல லட்சம் பொதுமக்கள் காசாவில் இருந்து குடிபெயர்ந்துள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல மருத்துவமனைகள் செயல்பட முடியாத நிலைக்கு வந்து விட்டன. சுத்தமான குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட தேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. குடும்பங்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளுக்கு கீழேயே புதைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் இந்த செயலையும் நியாயப்படுத்த முடியாது.

    இனி வெறும் பேச்சு வார்த்தைகளோ, தீர்மானங்கள் போடுவதோ போதாது. காசா மக்களுக்கு எந்த தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்; இஸ்ரேலும் பொதுமக்களுக்கு உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் இரு தரப்புமே தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் செயல்பட முடியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    ஐ.நா. அமைப்பு உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • மருத்துவமனை முழுவதுமாக ராணுவம் வசம் வந்து விட்டது
    • பணயக்கைதிகளையும், பயங்கரவாதிகளையும் தேடி வருகிறது ராணுவம்

    காசாவில் மறைந்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க, இஸ்ரேல் தொடர்ந்திருக்கும் போர், 35 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    இந்நிலையில், காசா பகுதியில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளை இஸ்ரேலிய ராணுவ படை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டது.

    அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் குண்டு வீச்சிற்கு பயந்து அங்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு எரிபொருள், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததால் உயிரிழப்புகளை தடுக்க இஸ்ரேலுக்கு போர்நிறுத்த கோரிக்கைகள் பல நாடுகளிலிருந்து வந்த வண்ணம் உள்ளது.

    ஆனால், இதனை புறக்கணித்த இஸ்ரேல், அந்த மிக பெரிய மருத்துவமனை முழுவதும் கண்காணிப்பை அதிகப்படுத்தி வருகிறது. அல் ஷிபா மருத்துவமனை, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக உள்ளதாகவும், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணயக்கைதிகள் அங்கு மறைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் கூறி வருகிறது.

    தொலைத்தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில் அங்குள்ளவர்களின் உண்மை நிலை குறித்து விவரங்கள் ஏதும் இல்லை.

    இந்நிலையில் தற்போது அங்குள்ள நிலைமை குறித்து, "அல் ஷிபா மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், ஒரு குறிப்பிட்ட இலக்குடன், துல்லிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் போர், ஹமாஸ் அமைப்பினருடன் தான்; பொதுமக்களுடன் அல்ல" என இஸ்ரேல் ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்தது
    • இஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்று, பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக இஸ்ரேல் உறுதி எடுத்து, அவர்கள் ஒளிந்திருக்கும் காசா பகுதி மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்திற்காக சில உலக நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது. "போர் நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் என்கிற பேச்சிற்கே இடமில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக அறிவித்தார்.

    நாளுக்கு நாள் இஸ்ரேல் கை ஓங்கி வரும் இப்போரில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, பணயக்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி ஹமாஸ் தரப்பினருடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார், பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தங்கள் தரப்பு நிலைப்பாட்டையும், கோரிக்கைகளையும் ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் ப்ரிகேட்ஸ் (Alqassam Brigades) பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா (Abu Ubaida), டெலிகிராம் (Telegram) கருத்து பரிமாற்ற செயலியின் ஹமாஸ் அமைப்பின் அதிகாரபூர்வ கணக்கில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்..

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    காசாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்பு கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பணய கைதிகளை விடுவிக்க நாங்களும் ஒப்பு கொள்கிறோம். ஆனால் அந்த போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும். காசா முனை பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். நாங்கள் வாய்ப்பு அளித்து விட்டோம்; ஆனால் இஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து கோரிக்கைகளை புறக்கணித்து, முடிவு எடுப்பதை தள்ளி போடுகிறது.

    இவ்வாறு உபைதா செய்தி வெளியிட்டுள்ளார்.

    • இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டது
    • சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படுவதாக இருந்தது

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய பாலஸ்தீன காசாவின் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேல் தாக்குதல், தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பின்னணியில் அரபு நாடுகள் பங்கேற்ற இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (Organization of Islamic Cooperation) சந்திப்பு, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.

    இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

    மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் வழியாக இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பது, அமெரிக்காவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தி வைப்பது, இஸ்ரேலுடன் அனைத்துவிதமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்து கொள்வது, வளைகுடா நாடுகளின் வான்வெளி மீது இஸ்ரேல் விமானங்கள் பறப்பதை தடை செய்வது, போர்நிறுத்தத்திற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஒரு குழுவை அனுப்புவது உள்ளிட்ட 5 நடவடிக்கைகளை எடுக்க ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

    ஆனால், இந்த தீர்மானத்தை சவுதி அரேபியா ஆதரவு அளிக்கவில்லை. சவுதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், சூடான், மொரோக்கோ, எகிப்து, ஜோர்டான், மவுரிடானியா மற்றும் ஜிபவுடி ஆகிய நாடுகளும் இத்தீர்மானத்தை எதிர்த்தன.

    அக்டோபர் 7-க்கு முன்பாக இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் உடன்படிக்கைகள் ஏற்பட இருந்தன. ஆனால், அக்டோபர் 7 துவங்கிய போரின் காரணமாக அந்த முயற்சிகள் நிறுத்தப்பட்டன.

    தற்போது இஸ்ரேலுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையில் சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இது மட்டுமின்றி, இஸ்ரேலிய ராணுவ படையை பயங்கரவாதிகள் அமைப்பாக பிரகடனப்படுத்துமாறு ஈரான் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    • காசா பகுதியில் இஸ்ரேல் குடியமர்வு நிகழ்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது
    • அமெரிக்கா, கனடா உட்பட 7 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்துள்ளன

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி கூறியுள்ள இஸ்ரேல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா பகுதியில் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

    காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஆக்ரமித்து குடியமர்வை செயல்படுத்த முயல்வதாக சில உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதை தொடர்ந்து ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியாவின் கோலன் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, இந்த தீர்மானம் கண்டனம் செய்தது.

    தீர்மானத்தை ஆதரித்த 145 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

    அமெரிக்கா, கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா மற்றும் நவ்ரு உட்பட 7 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். 18 உறுப்பினர் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன்பாக ஐ.நா. சபையில் ஜோர்டான் கொண்டு வந்திருந்த ஒரு தீர்மானத்தை இந்தியா ஏற்று கொள்ளாததால் கலந்து கொள்ளவில்லை. ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரவாத செயல்களை அத்தீர்மானம் கண்டிக்கவில்லை என இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    • 30 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்ந்து வருகிறது
    • 82 இஸ்ரேல் ஆதரவாளர்களை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது

    அக்டோபர் 7 தொடங்கி பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போர், 1 மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை தொடர்கின்றன. மேலும், அங்கெல்லாம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவாக பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    1918ல் முதலாம் உலக போரை (World War I) நிறுத்தவும், அமைதி பேச்சுவார்த்தையை துவங்கவும் நவம்பர் 11 அன்று ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் இந்த நாள், "ஆர்மிஸ்டைஸ் தினம்" (Armistice Day) என கொண்டாடப்பட்டு, 11-ஆம் மாதம் (நவம்பர்), 11-ஆம் தேதி, காலை 11:00 மணியளவில் இரண்டு நிமிட அமைதி கடைபிடிக்கப்படும்.

    நேற்று, ஆர்மிஸ்டிஸ் தினத்தின் போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் பங்கு பெற்ற ஒரு போராட்டம் லண்டனில் உள்ள ஹைட் பார்க் கார்னர் (Hyde Park Corner) பகுதியில் நடைபெற்றது.

    மிக பெரிய அளவில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் ஹமாஸ் அமைப்பினருக்கும், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். "பாலஸ்தீனத்தை விடுதலை செய்", "உடனடி போர்நிறுத்தம் தேவை", "நதியிலிருந்து கடல் வரை பாலஸ்தீனம் சுதந்திரம் பெற வேண்டும்" போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டன.

    அதில் பங்கு பெற்ற ஆதரவாளர்கள், "உக்ரைன் சுதந்திரத்திற்கு குரல் எழுப்பும் நாடுகள், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?" என கேள்வி எழுப்பினர்.

    இவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி இஸ்ரேல் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களை லண்டன் நகர் காவல்துறை தடுத்து விட்டது. அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் லண்டன் பெருநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் அத்துமீறலை காவல்துறை கண்டிக்கவில்லை என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் லண்டன் பெருநகர காவல்துறை, பாலஸ்தீன ஆதரவாளர்களின் வன்முறை செயலை கண்டுகொள்ளாமல் விடுவதாக குற்றம் சாட்டினார். இவர் கருத்திற்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது.

    • இரு தரப்புக்கும் ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன
    • வெறுப்பு பேச்சு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் டென்னிஸ்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    உலக அளவில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாகவும் மக்களில் பலர் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் இதனால் வன்முறை வெடித்துள்ளது.

    இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 78-வது அமர்வில், அச்சபையின் அதிபர் டென்னிஸ் ஃப்ரான்ஸிஸ் (Dennis Francis) உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அக்டோபர் 7 தொடங்கி உலகம் முழுவதும் அதிகரித்துள்ள வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் கவலையளிக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாதது. உலக மக்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். நாம் வாழும் உலகில் வெறுப்புணர்ச்சிக்கு இடமே இல்லை. மனிதர்களுக்கு இடையே பாகுபாடுகள் எந்த வழியில் நடந்தாலும் அதனை நாம் புறக்கணிக்க வேண்டும். வலி தரும் காயங்களை வெறுப்பு பேச்சுக்கள் ஆழமாக்கும். அவநம்பிக்கையயும், வன்முறையையும் இது ஊக்குவிக்குமே தவிர எந்த சிக்கலையும் தீர்க்காது. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளும் கண்ணியமான கருத்து பரிமாற்றங்களும் மட்டுமே பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும். உலக சமுதாயம் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது உரையில், மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் முதல் வரியான "அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் உரிமைகள் உண்டு" என்பதை நினைவுகூர்ந்தார் பிரான்ஸிஸ்.

    ×