பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் தெரிவித்ததுஇஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது
பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை
Published on

அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்று, பலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக இஸ்ரேல் உறுதி எடுத்து, அவர்கள் ஒளிந்திருக்கும் காசா பகுதி மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்திற்காக சில உலக நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்தது. "போர் நிறுத்தம் அல்லது இடைநிறுத்தம் என்கிற பேச்சிற்கே இடமில்லை" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக அறிவித்தார்.

நாளுக்கு நாள் இஸ்ரேல் கை ஓங்கி வரும் இப்போரில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, பணயக்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி ஹமாஸ் தரப்பினருடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தார், பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தங்கள் தரப்பு நிலைப்பாட்டையும், கோரிக்கைகளையும் ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்படையான அல்கசாம் ப்ரிகேட்ஸ் (Alqassam Brigades) பிரிவின் செய்தித்தொடர்பாளர் அபு உபைதா (Abu Ubaida), டெலிகிராம் (Telegram) கருத்து பரிமாற்ற செயலியின் ஹமாஸ் அமைப்பின் அதிகாரபூர்வ கணக்கில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்..

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

காசாவில் 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்பு கொண்டால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பணய கைதிகளை விடுவிக்க நாங்களும் ஒப்பு கொள்கிறோம். ஆனால் அந்த போர் நிறுத்தம் முழுமையானதாக இருக்க வேண்டும். காசா முனை பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். நாங்கள் வாய்ப்பு அளித்து விட்டோம்; ஆனால் இஸ்ரேல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து கோரிக்கைகளை புறக்கணித்து, முடிவு எடுப்பதை தள்ளி போடுகிறது.

இவ்வாறு உபைதா செய்தி வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com