என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    • கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

    கேரட்... இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் இருக்கும்.

    இது அனைவரும் அறிந்ததே...!

    ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது.

    அதுபற்றி தெரியுமா...?

    ஆம்...அந்த கருப்பு கேரட் சாகுபடியில் களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை.

    டெல்லியில் இருந்து விதைகள்

    இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலை சாகுபடிக்கு அடுத்ததாக பிரதான சாகுபடியாக கேரட் உள்ளது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

    இதற்கான விதைகள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நர்சரியில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன.

    அத்துடன் தோட்டக்கலைத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட மண்ணுயிர் உரம் இடப்பட்டது. இந்த பணியில் பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். இவை வடமாநிலங்களில் பல்வேறு உணவு வகைகள், கேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிற கேரட் விளைவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கருப்பு கேரட் விதைத்து, அதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. வளர்ந்த பிறகு, அதில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த வகை கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளது. சோப்பு தயாரிப்பில் இயற்கை வர்ணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றனர்.

    • கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.
    • குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே பனியும் குளிரும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கடும் குளிர் அதிகரித்து உள்ளது.

    அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக இயக்கப்படுகின்றன. இதேபோல மாலையிலும் பனி மூட்டம் வலுப்பெறுவதால் ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் வரை பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது வானம் முழுவதும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மேலும் பகலில் வெயில் குறைந்து சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தொடர்ச்சியான சாரல்மழை காரணமாக ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான ரோஸ் கார்டன், பூங்கா மற்றும் ஏரி பகுதிகளில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

    உள்ளூர் மக்கள் கடும் குளிரால் காலை-மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டுகின்றனர். இதேபோல விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் கடுங்குளிரில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக வெம்மை தரும் ஆடைகள் மற்றும் கையுறைகள் போன்றவற்றுடன் வலம் வருகின்றனர்.

    குன்னூரில் கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்து நீர் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குன்னூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடைபயணம் மேற்கொள்வோர் வெளியே வர இயலாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

    மேலும் குன்னூரில் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் விரைவில் உறைபனியின் தாக்கமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
    • வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    ஊட்டி:

    நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.

    சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.

    மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.

    ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.

    வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.
    • மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மலைரெயில் பாதையில், கல்லார் ரெயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை உள்ள ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.

    இதனால் கடந்த 5 நாட்களாக மலை ரெயில் ரத்து செய்யப்பட்டு, பாறைகள், மண்சரிவுகளை அகற்றி, தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.

    5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது.
    • பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.

    கடந்த 30-ந் தேதி இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் (48) என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.

    வீட்டிற்கு அருகே வந்தபோது, ரோட்டில் யானை நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி, மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி வசந்தகுமார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மனிதர்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏ ஜெயசீலன், ஆர்.டி.ஓ குணசேகரன், டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் நேரில் வந்து பேச்சு நடத்தினர். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
    • உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    * கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.

    * மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    * அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்

    * குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.

    • மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி பெறாமலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

    இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாடல் ஹவுஸ் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிட பணி நடைபெறுவது தெரியவந்தது.

    தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

    இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் வாடகை நிலுவைத்தொகை செலுத்தாத வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டன.ஆனாலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நிலுவை வாடகைத்தொகை செலுத்த முன்வரவில்லை.

    தொடர்ந்து குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள 15 கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.

    மேலும் சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது. பண்டிகை காலம் என்பதால் சாலையோர வியாபாரிகளுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
    • விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் சாத்தூரில் நேற்று பேசுகிறார், நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்கிறார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடல் திமுக, குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக.

    2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். இதுதான் ரோல் மாடல். அதேபோல் போட்டோ ஷூட், ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பதிலே ரோல் மாடல் திமுக.

    கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் இணைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொன்னார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொன்னார், சாற்றைக் குடித்துவிட்டு சக்கையை வழங்குவதாகச் சொன்னார், அதில் ரோல் மாடல் திமுக.

    திமுகவில் தொடர்ந்து நிலையான கூட்டணி இருக்கிறது, அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாகச் சொல்கிறார்கள். அதிமுக-வைப் பொறுத்தவை கூட்டணியை நம்பியில்லை மக்களை நம்பியிருக்கிறது. திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது.

    மேலும் சில கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறது என்று உதயநிதி சொல்கிறார். ஆக கூட்டணியைத்தான் நம்புகிறார். அதிமுக மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெல்லும், அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக அலுவலகம் அமித் ஷாவிடம் உள்ளதாம். அப்படியா இருக்குது? முன்பு திமுகவு-க்குள் குழப்பம் ஏற்பட்டது, இரண்டாகப் பிரிந்தது, உடைந்தது, அம்மா இருக்கும்போது வைகோ வெளியில் போனார், அப்போது வைகோ அறிவாலயத்தை கைப்பற்றும் நிலை உருவானபோது, அதை காப்பாற்றிக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு.

    அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக பாஜக-வோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா..? இது எந்த விதத்தில் நியாயம்?

    அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்து சொல்லுங்கள், பதில் சொல்லத்தயார். எங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி. திட்டமிட்டு கூட்டணி அமைத்தபிறகு விமர்சித்தால் தோல்விதான் உங்களுக்குப் பரிசாக கிடைக்கும்.

    கூடலூரில் பல கூட்டங்கள் நடந்திருக்கிறது, ஆனால் இந்த எழுச்சிப் பயணக் கூட்டத்தில்தான் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோன்ற இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி.

    இன்று 158-வது தொகுதியில் உங்களை சந்திக்கிறேன். 158 தொகுதியிலும் மக்களைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன், எழுச்சி உரையாற்றினேன், உணர்வுகளைப் பார்த்தேன், அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர்.
    • காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார்.

    ஊட்டி:

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அ.தி.மு.க அரசு தான். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் புரட்சி செய்தது அ.தி.மு.க.

    தி.மு.க. 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா? மத்திய அரசு கொடுக்கவில்லை என்பார்கள். ஆனால் அது தவறு. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

    நேற்று உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதல் ரோல் மாடல் தான் ஸ்டாலினின் அரசு. கமிஷன், ஊழலில் ரோல்மாடல் தி.மு.க., குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டி திறப்பதில் ரோல் மாடல் தி.மு.க தான்.

    எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் 525 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அத்தனையும் பொய். அதிலும் நீங்கள் ரோல் மாடல் தான். போட்டோ சூட் நடத்துவதிலும் நீங்கள் தான் ரோல் மாடல்.

    கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தி.முக.வோடு அங்கம் வகிப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார். சாறை முழுவதுமாக குடித்து விட்டு சக்கையை வழங்குகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.

    உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினையும், ஸ்டாலின் உதயநிதியையும் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் போதாது என்று இப்போது துர்கா ஸ்டாலினும் வந்து விட்டார். அவரும் ஸ்டாலினை புகழ்கிறார். இவர்களை நாட்டு மக்கள் புகழ்ந்து பேசவில்லை. குடும்ப மக்கள் தான் அவர்களை புகழ்ந்து பேசிக் கொள்கின்றனர்.

    தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். தி.மு.க. குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பம் இருக்கும் வரை தி.மு.க.வில் யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைப்பை சுரண்டும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.

    நாட்டில் உள்ள எந்த கட்சியாலாவது இப்படி குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வரமுடியும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? ஒரு குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி பிழைப்பதற்கு நாம் அனுமதிக்கலாமா? இதற்கு ஒரு முடிவு கட்டுவிங்களா? என மக்களை பார்த்து கேட்டார்.

    செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். இவர் பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்து விட்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு பேசி வருகின்றனர். ஆனால் இவர் சொல்கிறார் ராகுல்காந்தி ஆட்சியில் பங்கு கேட்க சொல்லவில்லை என சொல்கிறார். உண்மையில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால் அந்த எண்ணம் இவருக்கு வந்திருக்குமா?. அவர் தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.

    செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார்.

    தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தி.மு.க கூட்டணி நிலையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை. ஆனால் தி.மு.க எப்போதும். கூட்டணியை நம்பி தான் இருக்கிறது. மக்கள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள். 2026 தேர்தலில் அ.தி.மு.க வெல்லும். ஆட்சிக்கு வரும். அதனை ஸ்டாலின் பார்க்க தான் போகிறார்.

    மக்களின் எழுச்சியே எங்களது ஆட்சி வருவதற்கான அடையாளம். தேர்தலில் அ.தி.முக. தான் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்துக்கு தான் தற்போது மற்ற கட்சிகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

    அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமை என ஸ்டாலின் பேசுகிறார். தலைவன் மட்டும் அல்ல தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சொந்த காலில் நிற்கிறோம்.

    உங்களை போன்று கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்கே கூட்டணி அமைக்கிறோம். உங்களை போன்று பல கட்சிகளை கூட்டணியில் வைத்து அவர்களை அடிமையாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தி.மு.க. தான் நியமிக்கிறது. தி.மு.க. யாரை பரிந்துரை செய்கிறதோ அவரை தான் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலு சாமி, மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
    • சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது.

    குன்னூர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்றும், நாளையும் அவர் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

    குன்னூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் என எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசு, ஏழை, எளிய மக்களை பற்றியோ, விலைவாசி உயர்வை பற்றியோ கவலைப்படவில்லை. ஏழை மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நிர்வாக திறமையற்ற முதலமைச்சராக இருக்கிறார்.

    வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தை நாடி, வியாபாரிகளின் நிலைமையை எடுத்து சொல்லி, வாகன நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுப்போம்.

    சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது. ஆனால் தி.மு.க அதை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. 2026-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் தமிழகம் போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.

    நகராட்சி பகுதிகளில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. கொள்ளையடிக்கும அரசாக இந்த தி.மு.க அரசு உள்ளது. தி.மு.க ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஆனால் செலவுகள் அதிகரித்து விட்டது.

    தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளிலும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 1½ கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூல் செய்கின்றனர்.

    அப்படி கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி டாஸ்மாக் கடை மூலமாக வருமானம் வருகிறது. ஒரு மாதத்துக்கு 450 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடந்துள்ளது.

    10 ரூபாய் வாங்குவது உண்மை தான் என அந்த துறையின் அமைச்சரே சொல்லிவிட்டார். இந்த பணம் எங்கு போகிறது. எந்த கணக்கில் இருக்கிறது. எத்தனை பாட்டில் திரும்ப பெற்றீர்கள். எவ்வளவு வசூல் வந்தது. இது எதற்கும் அவர்களிடம் கணக்கு இல்லை.

    அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை பெற்று தருவோம். அ.தி.மு.க அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் தி.மு.க நிறுத்தி விட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

    அ.தி.மு.க அலுவலகம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் வீட்டில் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறுகிறார். அவர் கனவு கண்டாரோ என்னவோ தெரியவில்லை. அ.தி.மு.க அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. வேண்டும் என்றால் வந்து பார்த்து கொள்ளுங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்து பார்த்தீர்கள். ஆள் வைத்து அ.தி.மு.க கட்டிடத்தை நொறுக்கி பார்த்தீர்கள். ஆனால் நொறுக்க முடியவில்லை. அ.தி.மு.க. அலுவலகத்தை உடைக்க தி.மு.க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.

    நீங்கள் அ.தி.மு.க.வை உடைக்க, அ.தி.மு.க.வை பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தீர்கள். எத்தனையோ பேரை கொம்பு சீவி பார்த்தீர்கள். ஆனால் அது அத்தனையையும் எங்களது தொண்டர்கள் முறியடித்தனர்.

    அ.தி.மு.க உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்களால் உருவான கட்சி. முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதி.மு.கவை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. அத்தனை தொண்டர்களும் அ.தி.மு.கவை தாங்கி பிடித்து கொண்டுள்ளனர்.

    அ.தி.மு.கவுக்கு எவ்வளவோ சோதனையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அவை அத்தனையும் தொண்டர்களால் தூள்தூளாக்கப்படும்.

    இதே நேரத்தில் தி.மு.க.வுக்கு சோதனை வந்தபோது, தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்கள் கட்சி அலுவலகத்தை கைப்பற்ற நினைத்த போது அதனை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா. தி.மு.க 2 ஆக போனது. கருணாநிதி தடுமாறி கொண்டிருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் தி.மு.க அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். அதனை காப்பாற்றி கொடுத்தது அ.தி.மு.க தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    அ.தி.மு.கவுக்கு எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்து தான் பழக்கம். தி.மு.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் மக்களுக்கு உதவி செய்த வரலாறு எப்போதும் கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும்.
    • மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் என்பது கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.

    சுற்றுச்சூழலில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியாகவும் கூடலூர் வனக்கோட்டம் விளங்கி வருகிறது. இந்த மலைத்தொடரில் கோடையிலும் வற்றாத ஆறுகள் மற்றும் நீரைகள் உள்ளன.

    இந்த நிலையில் கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் உள்ள மலைத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    லேசான வெளிர் ஊதா நிறத்தில் பூக்கும் இந்த பூக்களை சிறு குறிஞ்சி எனவும் அழைக்கின்றனர். வருடத்தில் செப்டம்பர் மாத தட்பவெப்பநிலை குறிஞ்சி பூக்கள் பூப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

    இதனால் பெரும்பாலும் செப்டம்பர் மாதங்களில் குறிஞ்சி பூக்கள் பார்ப்பதை காணமுடிகிறது. தற்போது பூத்துள்ள இந்த நீலக்குறிஞ்சி மலர்களை அடுத்த ஓரிரு வாரங்கள் வரை பார்த்து ரசிக்க முடியும்.

    அதன்பின்னர் குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும். ஓவேலி மற்றும் நாடுகாணி பகுதிகளில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை உள்ளூர் மக்களும், அந்த வழியாக செல்லக்கூடிய வெளியூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தபடியே செல்கின்றனர்.

    இந்த மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இருப்பதாலும், அடிக்கடி யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் வனத்துறை யாரையும் அனுமதிப்பது இல்லை. இருப்பினும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியான ஓவேலி மலைத்தொடரை குறிஞ்சி மலர்கள் பூத்து அலங்கரித்து இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்புக்காடுகளில் தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கி விட்டன என பூக்களின் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

    ×