என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை அருகே மாமியாரை வெட்டிக்கொலை செய்தது ஏன்?- கைதான மருமகள் வாக்குமூலம்
    X

    நெல்லை அருகே மாமியாரை வெட்டிக்கொலை செய்தது ஏன்?- கைதான மருமகள் வாக்குமூலம்

    • நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).

    இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அருணாச்சலமும், பழனியும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், வெள்ளையம்மாள், தனது மருமகள் வசந்தா (60) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் வசந்தாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது வாக்குமூலமாக கூறுகையில், எனது மாமியார் வயது முதிர்வால் நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னை சம்பந்தமே இல்லாமல் திட்டிக்கொண்டே இருப்பார்.

    வயல் வேலைக்கு அல்லது வேறு எங்காவது வேலை நிமித்தமாக சென்று வரவோ அல்லது சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு வீட்டுக்கு வர கொஞ்சம் நேரமாகிவிட்டால், சந்தேகப்பட்டு பேசுவார். இதனால் எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

    இந்நிலையில் நேற்றும் சம்பந்தமில்லாமல் என்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என்றார்.

    இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×