என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகோ"

    • இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது.
    • கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம்.

    சென்னை:

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்த பிறகு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது முடிவில்லாதது. அதனால் தொடரும். மேல்சபை எம்.பி. சீட் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

    தொகுதிகள் பட்டியலை இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை. போட்டியிட்ட தொகுதிகளை குறைக்குமாறு எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். 

    • அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
    • டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.

    பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.

    எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.

    திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.

    வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.

    நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.

    வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.

    அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார். 

    • தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல.
    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.

    மதுரை:

    மதுரையில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

    ம.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் ராணுவ உறுதி கொண்டவர்கள். கொண்ட லட்சியத்தில் உறுதியாக நடப்பவர்கள். எனவே ஒவ்வொரு கிராமங்களிலும் 10 பேர் ம.தி.மு.க.வினர் இருந்தாலும் அவர்கள் லட்சியம் மிக்க வீரர்களாக திகழ்வார்கள்.

    தி.மு.க. என்ற திராவிட இயக்கம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். தென்னாட்டில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரால் பாராட்டப்பட்ட இயக்கம் தி.மு.க. இந்த இயக்கம் வளர பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பெரும் உதவியாக இருந்தார். அதுபோல தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வை வளர்க்க எனது கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

    அந்த அளவுக்கு தி.மு.க.வின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடரும் வகையில் ம.தி.மு.க. கேடயமாக இருக்கும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல. தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். அதனை கொண்டு வர கேடயமாக ம.தி.மு.க. இருக்கும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எனவே பொதுமக்கள் திடீரென முளைக்கும் நடிகர்கள் கலை துறையில் முகத்தை காட்டி உங்களை வசியம் செய்ய நினைப்பார்கள். அவர்களுக்கு பண்பாடு இல்லை, லட்சியம் இல்லை வேலு நாச்சியார் போன்ற வரலாற்று தலைவர்களை தங்களது லட்சிய தலைவர்களாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த தலைவர்களின் வரலாறு தெரியாது. எனவே அவர்களை நம்பி மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது.
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    கோவில்பட்டி:

    ம.தி.மு.க. முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி. கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

    தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது. சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறோம்.

    தற்போது தே.மு.தி.க., வரவால் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது.

    தமிழகத்தில் 4 முனைப்போட்டி இருந்தாலும் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் தான் பிரதான அணிகள். இந்த 2 அணிகளுக்கு இடையேதான் போட்டி.

    தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு எங்கள் இயக்கத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந் தேதிக்கு மேல் பேச்சுவார்த்தை தொடங்கும் என நினைக்கிறேன். அதன் பின்னர் தான் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம், யார் வேட்பாளர் என்பதை எல்லாம் சொல்ல முடியும்.

    ம.தி.மு.க.வுக்கு கூடுதல் எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தால் மிகவும் சந்தோஷம். ஆனால் இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் கூட்டணி தலைமைக்கு நெருக்கடியை உருவாக்க கூடாது.

    எல்லா இயக்கத்திற்கும் தொகுதிகள் வேண்டும் என்பது முக்கியம் தான். இந்த நேரத்தை பொறுத்தவரை, நாம் வெற்றி அடைய வேண்டும். வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் போட்டியிட வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் விருப்பம். எங்கள் கட்சித் தலைமையும், கூட்டணி தலைமையும் பேசி, சுமூகமான முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அவரது அரசியல் வருகையால் தேர்தல் களத்தில் ஒரு தாக்கம் இருக்கும். 15 சதவீத ஓட்டு பெறுவார். ஆனால் அது வெற்றியாக மாறுமா என்பது சந்தேகம் தான்.

    விஜய்யை பொறுத்தளவு, மத்திய பாரதீய ஜனதா அரசை எதிர்த்து அவரது குரல் ஒலிக்கவில்லை. எஸ்.ஐ.ஆர். பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசாமல் இருக்கிறார். தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை எதிர்ப்பதாக கூறும் விஜய், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகள், திட்டங்கள், நிதி பிரச்சினைகள் குறித்து அவர் குரல் எழுப்ப வேண்டும். அதில் மவுனமாக இருக்கிறார்.

    விஜயின் அரசியல் வரவு என்பது இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வருகிறோம். குறிப்பாக, சமீபத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு, கடந்த 4½ ஆண்டுகளில் அடித்தட்டு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டல் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
    • பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 'காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்' என கிண்டல் செய்து இருந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைகோவுக்கு பதிலடி அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன்.

    பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது.
    • ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.

    மதுரையில் ம.தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

    தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. வரும் தேர்தல் கடுமையாக இருக்கும் என சில ஏடுகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நாங்கள் தி.மு.க.வோடு பேசும் போதுதான், எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என தெரியவரும்.

    அதுபற்றி முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதால் 234 தொகுதிகளில் நிற்பேன் என கூறினேன். மைக்கேல்பட்டி மாணவி இறப்பை மத மாற்றம் என பா.ஜ.க. அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தது.

    தற்போது சி.பி.ஐ. விசாரித்தது. மத மாற்றம் காரணம் இல்லை என கூறி உள்ளது. பா.ஜ.க. பழி சொன்னதற்காக அப்போது யாரெல்லாம் பழித்து பேசினார்களோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது.

    ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். அ.தி.மு.க. குறித்து நான் பேசியதை முழுமையாக வெளியிடவில்லை. முழுமையாக பேசியதை பார்த்தால் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்.

    ம.தி.மு.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தொண்டர்களுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கலாம், அது இயற்கை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்.

    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற தொடர் போராட்டம் நடத்தினேன். அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த சூழலில் பசுமை தாமிரம் என்ற பெயரில் தொழிற்சாலை ஆரம்பிக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொள்கிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எந்திரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

    இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார மக்களை கொண்டு மனுகொடுக்க செய்து எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறார். பொதுமக்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

    காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. காங்கிரக் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றே நம்புகிறேன்.

    தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் போக்கு உள்ளது. இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காதுகுத்து வேலை என எடப்பாடி விமர்சித்துள்ளர். இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை.

    தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார். மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.

    • வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
    • வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார்.

    ம.தி.மு.க.வில் இருந்து விலகிய மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டம் வாரியாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.

    இந்த நிலையில் கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் மல்லை சத்யா தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும் கூட அதில் சேர்ந்து களப்பணி ஆற்றவே அவர் விரும்புவதாக தெரிகிறது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார். எழும்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திராவிட வெற்றிக்கழகம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான முடிவை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    • மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை.

    கோவை:

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்து உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்தபோதிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை.

    11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறைக்கு சார்ந்தது அல்ல. அதுவும்தவிர இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல.

    கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவித சிறப்பு திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.

    அதேபோல மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் சுங்கவரியை குறைத்து உள்ளது மட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

    ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது ம.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பது குறித்த பேச்சுகளை முன்கூட்டியே பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், உ யர்மட்டக்குழு உறுப்பினர்மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது
    • கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை

    மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026 - 27ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒன்பதாவது முறையாக வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியே!

    இந்தியாவை 2047இல் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். இதுவரை பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.

    புவிசார் பதற்றங்கள், வர்த்தக நெருக்கடிகள், அமெரிக்க வரி கொள்கைகள் போன்றவை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்த காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அவற்றை எதிர்கொள்கின்ற வகையில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

    அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்தால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு தீர்வாக ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டு 2027 ஏப்ரல் மாதம் தான் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமெரிக்க வரி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதற்கான விடை இல்லை.

    வளர்ச்சியை ஊக்குவிக்க முன்மொழியப்படும் 6 துறைகள் என கூறப்பட்டிருப்பது புதிது அல்ல. முந்தைய நிதிநிலை அறிக்கைகளிலும் இடம்பெற்றவையே. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 11.7 இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலையில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு எப்படி நடை போடும்?

    பாஜக அரசின் 12 ஆண்டு காலத்தில் பணவீக்க விகிதம் நிலையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

    மாநிலங்களுக்கு 16 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி பகிர்வு 41 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் மூலம் நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்ச அணுகுமுறை தொடர்கிறது.

    உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி தொழில்துறை சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. வாகன உற்பத்தி தொழில் துறைக்கான வரி உயர்வு என்பது வாகன உற்பத்தி கேந்திரமான தமிழ்நாட்டிற்கு இழப்பாகும்.

    நாட்டின் ஜவுளித் துறையில் அதிக பங்களிப்பை அளிக்கும் தமிழ்நாட்டின் திருப்பூர் ,கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவுளித் தொழில் துறையினருக்கு நிதிநிலை அறிக்கை ஊக்கமளிக்கவில்லை. வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வும் இல்லை.

    வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. மேலும் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு வெறும் 10 ஆயிரம் கோடி என்பது சொற்ப தொகையே.

    சென்னை - பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது வருந்தத்தக்கது. கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை.

    கல்வி, சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது, வாகன விபத்து இழப்பீட்டிற்கான வரி விலக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு, ஏழு அரிய வகை நோய்களுக்கு மருந்து இறக்குமதி வரி குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க கூறுகள் இருந்தாலும், ஒன்றிய வரவு செலவுத் திட்ட அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை; ஏமாற்றத்தையே தருகிறது" என்று தெரிவித்துள்ளார். 

    • ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது.
    • ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார்.

    பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாடவில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார். ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை; ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

    மேலும், ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது. மாநில அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துக்களை சேர்ப்பதும் ஆளுநரின் வரம்பை மீறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

    அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்காக, நாடு முழுவதும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. செயலாற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×