என் மலர்
நீங்கள் தேடியது "TN Governor"
- சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்.
- தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.
சென்னை:
சுதந்திர தினம், குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் சுதந்திர தினமான இன்று மாலை 5 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேனீர் விருந்து அளிக்கிறார்.
இந்த தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தில் பங்கேற்கின்றனர்.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் கடந்த தமிழ் புத்தாண்டு அன்றும் தேனீர் விருந்து அளித்திருந்தார். அப்போது தமிழக அரசு தேனீர் விருந்தை புறக்கணித்து இருந்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்கவில்லை.
தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் தேனீர் விருந்தை புறக்கணித்து இருந்தனர்.
நீட் மசோதாவை நீண்ட நாட்களாக கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததை சுட்டிக்காட்டி இதன் காரணமாகவே தேனீர் விருந்தை புறக்கணித்துள்ளோம் என்று அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில்தான் கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
- நமது மனித வளர்ச்சி குறியீடு இந்தியாவிலேயே மிகச்சிறந்ததாக உள்ளது.
- தமிழகத்தின் எழுச்சி என்பது இந்தியாவின் எழுச்சி.
சென்னை :
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில் கூறியிருப்பதாவது:-
75-ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவை இந்தியா சிறப்பான முறையில் கொண்டாடி வரும் இந்த வேளையில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா தொற்று உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்த போதும் அதில் இருந்து மீண்ட இந்தியா சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்களால் உலகில் மிக வேகமாக வளர்ந்து பொருளாதாரத்தை கொண்ட முதல் 3 நாடுகளில் இந்தியா இடம்பெற்றது. இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தொழில் மயமாக்கல் போன்றவற்றில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.
நமது மனித வளர்ச்சி குறியீடு இந்தியாவிலேயே மிகச்சிறந்ததாக உள்ளது. இந்த சாதனை மிக திருப்திகரமான ஒன்றாகும். தமிழகத்தின் எழுச்சி என்பது இந்தியாவின் எழுச்சி. நமது பலம், பலவீனத்தை அடையாளம் கண்டு நம்மை செம்மைப்படுத்த வேண்டும்.
நமது மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சமநிலை, சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கடக்க வேண்டும்
நமது மாநிலத்தின் சில பகுதிகளில் தீண்டாமை என்ற கறை இருந்து வருகிறது. இது நாகரீக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தீண்டாமை எனப்படும் மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயலை ஒழிக்க வேண்டும்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முதலீடுகள் தேவைப்படுகிறது.
தமிழகத்தை ஒட்டி உள்ள சில மாநிலங்கள் நமது மாநிலத்தை விட பல மடங்கு முதலீடுகளை ஈர்க்கிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து நமது மாநிலமும் முதலீடுகளை ஈர்க்க தேவையானவற்றை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
2047-ம் ஆண்டு சுதந்திர தின நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் இடத்தை அடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.
சென்னை:
இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி (சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா), பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்" (தமிழ்), "My favourite Freedom Fighter" (ஆங்கிலம்). கல்லூரி/பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு "2047-ல் இந்தியா" (தமிழ்) "India by 2047" (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு இந்தப் போட்டிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாகவும், வரப்பெற்ற கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும், உயர்தரமாகவும் இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர். வல்லுநர் குழு பரிந்துரையின்படி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,00,000 (ரூபாய் ஒரு இலட்சம்), ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்) மற்றும் ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்), ரூ. 50, 000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மற்றும் ரூ. 25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும்.
15 ஆகஸ்ட் 2022 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.
- ரஜினிகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
- கவர்னரை சந்தித்து விட்டு வந்த ரஜினிகாந்தை பத்திரிகையாளர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் சந்திக்க விருப்பம் இல்லாமல் காரில் ஏறி சென்றார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றார். அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். கிண்டி ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடந்தது. காலை 11.30 மணிக்கு ரஜினி ராஜ்பவனுக்கு காரில் வந்தார்.
அவரை அங்குள்ள ஊழியர்கள் உள்ளே அழைத்து சென்றனர். கவர்னர் ரவி- ரஜினிகாந்த் சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்தது. 12.12 மணிக்கு ரஜினிகாந்த் வெளியே வந்தார்.
கவர்னரை சந்தித்து விட்டு வந்த ரஜினிகாந்தை அங்கு குவிந்து இருந்த பத்திரிகையாளர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் சந்திக்க விருப்பம் இல்லாமல் காரில் ஏறி சென்றார். அதன் பின்னர் அவர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
அப்போது நிருபர்கள் ரஜினிகாந்தை பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
நான் மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தேன். நமது ஆன்மீக உணர்வு அவரை ஈர்த்து உள்ளது. தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். முதலில் தமிழ், தமிழ் மக்களின் நேர்மை, கடின உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என்று கவர்னர் என்னிடம் கூறினார்.
கேள்வி:- பால், தயிர் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தி இருக்கிறார்களே?
பதில்:- கருத்து சொல்ல விரும்பவில்லை.
கேள்வி:- அரசியல் தொடர்பாக பேசினீர்களா?
பதில்:- அரசியல் தொடர்பாக விவாதித்தோம் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது.
கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா?
பதில்:- இல்லை
கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசினீர்களா?
பதில்:- அது தொடர்பாக உங்களிடம் பேச முடியாது.
கேள்வி:- ஜெயிலர் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
பதில்:- 15 அல்லது 22-ந்தேதி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி புதிய ஜனாதிபதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இன்று காலை அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் புதிய ஜனாதிபதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இன்று பிற்பகல் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் இன்று இரவு அவர் சென்னை திரும்புகிறார்.
- இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
- இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டை சேர்ந்த என் அன்பான சகோதர, சகோதரிகள். கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதே பாதுகாப்பு ஆகும்.
இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது.
தொடரும் கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, நமது பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏராளமான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது.
என் அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் சரிவர செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டி வந்தார்.
- போலீசார் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்க முடியும் என்று அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார்.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமரணத்துக்கு நீதி கேட்டு அங்குள்ளவர்கள் போராட்டம் நடத்திய போது பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதில் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் சரிவர செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டி வந்தார். போலீசார் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை நேரில் சந்தித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பரபரப்பான புகார்களை கூறி உள்ளார்.
அவருடன் வி.பி. துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முருகானந்தம், கார்த்தியாயினி, டாக்டர் சரவணன், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உடன் சென்றனர்.
மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.
- பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
- சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
வேலூர்:
வேலூர் சிப்பாய் புரட்சி 216-வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை வேலூர் கோட்டை அருகே அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ இசை முழக்கத்துடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வேலூர் கோட்டை வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என். ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழ் மிகவும் பழமையான மொழி, சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்களை போன்று பேச வேண்டும் என்பது எனது ஆசை, நிச்சயம் ஒருநாள் பேசுவேன்.
சிப்பாய் கழகம் என குறிப்பிடுகிறார்கள் ஆனால் நான் இதை வெள்ளையர்களை விரட்ட ஏற்பட்ட புரட்சியாக கருதுகிறேன். சாதி மதத்தை கடந்து போராடியுள்ளனர்.
இந்த மண்ணில் தான் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்றவர்கள் சிறந்த போராட்ட வீரர்களாக இருந்துள்ளனர்.
இவர்கள் போராடவில்லை எனில் நாம் இப்போது இருப்பது போல இருக்க முடியாது.
சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை இன்றைய இளைஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும்.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம்.
வில்லியம் பெனிடிக் 1800-களில் இந்திய கல்வியை ஆராய குழு அமைத்தார். அதில் இந்தியா கணக்கு, வரலாறு, கலை, வானியல் போன்ற படிப்புகளில் மேலோங்கி இருந்ததை அறிந்தார்கள்.
சிப்பாய் புரட்சி சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து போராடியதாக கூறுகிறார்கள் அதை நான் ஏற்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் உயர் அதிகாரிகளை நாடி இருப்பார்கள். ஆனால் இது சுதந்திரத்துக்காக நடைபெற்றது. இது தான் நாடு முழுவதும் போராட்டமாக பரவியது.
வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு தேசம் தழுவிய போராட்டம். புரட்சி தொடங்கிய அன்றே சுதந்திர போராட்டமாக தொடங்கியது.
1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம்.
நேதாஜிபடைக்கு சிப்பாய் வேண்டிய போது முதலில் ஆட்களை அனுப்பியது வேலூர்.
75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் இந்நேரத்தில் அனைத்து சுதந்திர போராட்டக்காரர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரை மட்டுமே நினைத்து பார்க்கிறோம்.
பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் நாடாக மற்ற நாடுகள் இந்தியாவை பார்க்கிறது. இதற்கு உதாரணம் தான் கொரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம்.
பிரதமருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் மீதான பார்வையிலேயே இந்தியா நிலை குறித்து தெரியும்.
நமது 100-வது சுதந்திர தினத்தில் உலகை ஆளும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு.
வேலூர் ஒரு வீரபூமி, இந்திய ராணுவத்தில் உள்ள அதிகமானோர் வேலூரை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல ராஜாக்கள் ஆண்டிருந்தாலும் நாம் ஒரே குடும்பமாக இருந்தோம் ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாண்டார்கள்.
விந்திய மலையை அடிப்படையாக வைத்து வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்கள் திராவிடர் என்றும் இருந்தது. முன்பு மகாராஷ்டிரா உட்பட தென்பக்கம் திராவிட நாடாக இருந்தது. இது ஒரு புவியியல்.
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது 600 நாடுகளாக பிரிய இருந்தது. அதை ஒன்று சேர்த்தவர் இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேல்.
அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க போகிறது என்பதை நோக்கி நகர்கிறோம். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர வேண்டும்.
100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது நாம் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் இதை கடைபிடிக்க வேண்டும். மற்ற விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.
ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல இடம் சார்ந்தது மட்டும் தான். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்.
- வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
- நாளை காலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டுச் சென்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
சென்னை:
ஆங்கிலேயர்களுக்கு எதிரான வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் ஜூலை 10-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்றைய தினம் வேலூரில் நினைவு கூறும் வகையில் வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக நாளை காலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டுச் சென்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கவர்னருடன் தமிழக அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
வேலூரில் அன்றைய தினம் முன்னாள் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு பொருட்களை வழங்குகிறார்.
- கவுரவ விருந்தினர்களாக துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் துணைத்தலைவர் டாக்டர் நல்லி குப்புசுவாமி செட்டி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் சர் பி.எஸ். சிவசாமி சாலையில் உள்ள ராம கிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் முகப்பு கட்டிடமான 'ஏழைகளின் அரண்மனை' மற்றும் உறைவிட உயர்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாக்கள் இல்லத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4 அமர்வுகளில் விமரிசையாக நடைபெற உள்ளன.
நாளை காலை 9.30 மணிக்கு ஸ்தூபம் திறப்பு விழா நடக்கிறது. ஏழைகளின் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டி அக்கட்டிடத்தை திறந்து வைத்த பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தஜி மகராஜ் நினைவாக 'ஏழைகளின் அரண்மனை' அருகே நிறுவப்பட்டுள்ள ஸ்தூபத்தை பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் திறந்து வைக்கிறார்.
காலை 10 மணிக்கு நடைபெறும் முதல் அமர்வுக்கு சென்னை ஸ்ரீராம கிருஷ்ண மடம் தலைவரும், ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் துறைத்தலைவருமான பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தலைமை தாங்கி ஆசியுரை வழங்குகிறார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு பொருட்களை வழங்குகிறார். மேலும் விழாவின் முதல் நாள் தபால் உறையை வெளியிடுகிறார்.
கவுரவ விருந்தினர்களாக தமிழ்நாடு சர்க்கிள் தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் பி.செல்வகுமாரி, துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் துணைத்தலைவர் டாக்டர் நல்லி குப்புசுவாமி செட்டி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மதியம் 12 மணிக்கு நடைபெறும் 2-வது அமர்வுக்கு தி.நகர் ராமகிருஷ்ண மிஷன் ஆஷ்ரமம் செயலர் தவத்திரு சுவாமி பத்மஸ்தானந்தஜி மகராஜ் தலைமை தாங்குகிறார். கவுரவ விருந்தினர்களாக தமிழக அரசின் பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.பாலகுருசாமி பங்கேற்கிறார்கள்.
பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது அமர்வுக்கு சென்னை ராம கிருஷ்ணமிஷன் வித்யாபீடம் மற்றும் விவேகானந்தா கல்லூரி செயலர் தவத்திரு சுவாமி சுகதேவானந்தஜி மகராஜ் தலைமை தாங்குகிறார். இதில் கவுரவ விருந்தினர்களாக சென்னை சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் இயக்குனர் டி.டி.ஸ்ரீனிவாச ராகவன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மாலை 5.30 மணிக்கு நடைபெறும் 4-வது அமர்வுக்கு மைசூரு ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஷ்ரமம் தலைரும், ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் அறங்காவலருமான தவத்திரு சுவாமி முக்திதானந்தஜி மகராஜ் தலைமை தாங்குகிறார். கவுரவ விருந்தினர்களாக சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்கு னர் பேராசிரியர் வி.காமகோடி, இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் மற்றும் மேனேஜ்மெண்ட் அக்க வுண்டர்ட்ஸ் ஆப் இந்தியா தலைவர் பி.ராஜுஅய்யர், கத்தார் தோஹா வங்கி குழும முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.சீத்தாராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்குமாறு இதன் செயலர் சுவாமி சத்ய ஞானானந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
- ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு சென்று கவர்னர் என்.ஆர்.ரவி தரிசனம் செய்தார்.
- மேலும் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார்.
ராமேசுவரம்:
தமிழக கவர்னர் என்.ஆர்.ரவி குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அவரை கோவில் துணை ஆணையர் அருணாசலம் வரவேற்றார். பின்னர் கவர்னர் என்.ஆர்.ரவி ராமேசுவரம் சென்றார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் கவர்னர் என்.ஆர்.ரவி குடும்பத்துடன் தங்கினார்.
இன்று அதிகாலை விடுதியில் இருந்து புறப்பட்ட கவர்னர் என்.ஆர்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீர் எடுத்து தெளித்துக் கொண்டு ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் குருக்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அவர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். மேலும் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார். அவர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சாமி தரிசனம் செய்தார். அங்கு தரிசனம் முடித்து விட்டு காரில் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.
இன்று மாலை 2 மணிக்கு கவர்னர் என்.ஆர்.ரவி மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.