என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்என் ரவி"
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
- ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அப்போது மாணவர் புஷ்பராஜ் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து முழு சோதனைக்குப் பிறகே மற்ற மாணவர்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பேசிய அந்த மாணவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் ஒருவர் பட்டம் வழங்குவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை. முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெற்று தான் இந்த பட்டப்படிப்பை நான் முடித்தேன். அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் படத்தை இணைத்து ஆளுநரின் கையில் பட்டம் வாங்கினேன்" என்று தெரிவித்தார்.
கடந்தாண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் திருநாளில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், நமது பண்ணைகளை நிலைப்படுத்தவும், நம் குடும்பங்களை வளர்த்தெடுக்கவும், நமது எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்கும் பூமித் தாய் மற்றும் சூரிய கடவுளுக்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திறமையும், பக்தியும், விடாமுயற்சியும் நிலத்தை வளமாக்கி, வாழ்வை நிலைநிறுத்தும் நமது விவசாய சமூகத்தை இந்நாளில் வணங்குகிறோம்.
இத்துடன், மாட்டுப் பொங்கலில் பங்கெடுத்து, பண்டிகை உணர்வில் கலந்து, விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.
பழங்கால பாரம்பரியங்களில் வேரூன்றி, தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படும் பொங்கல் பண்டிகை, நமது பாரதிய ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியத்தின் பெருமைமிக்க கொண்டாட்டமாகும். இது எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது.
காணும் பொங்கல் நன்னாளில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி பண்டிகை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஒரே ஒருமைப்பாட்டின் பல்வேறு விதத்தை பிரதிபலிக்கிறோம் - அதுவே ஒரே பாரதம் உன்னத பாரதம்!
இந்த பொங்கல் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ஆம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி வழிநடத்தட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன்.
- தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும்.
சென்னை:
சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாக அரங்கில் "தமிழ் கற்கலாம்" என்ற தலைப்பில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 300 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி பட்டறை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் டிப்ளமோ பயிற்சி தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகும் நிலையில் பலரும் அதை பயன்படுத்திக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
பூ, மரம் என இருப்பது போல் ஒன்றுக்கொன்று தொடர்புடையது போல நாம் அனைவரும் ஒன்று தான். யாரும் தனிப்பட்டவர்கள் கிடையாது.
நீர், மரம், பூமி என அனைத்தையும் வணங்க வேண்டும் என ரிஷிகள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் நம் ஒற்றுமையை பறித்து விட்டார்கள். உடலில் கை, கால் என அனைத்தும் ஒன்றாக இருப்பது போல் நாம் அனைவரும் ஒன்றானவர்கள்.
வடமாநிலத்தவர்கள் தென் மாநிலத்தவர்கள் பற்றி குறைவாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தெரிந்து கொள்வதற்கு நிகழ்ச்சிகளை ஆளுநர் மாளிகையில் நடத்தினோம். அது போல் இதுவும் ஒரு புது முன்னெடுப்பு தான்.
தமிழ் மொழி கற்பதற்கு கடினம் தான். நான் தமிழ் கற்க தொடங்கியபோது முதலில் எழுத்துகளை கற்றேன். தொடர்ந்து தமிழில் பேசுவதை கேட்டேன், செய்தித்தாள்கள் படித்தேன், இப்போது முடிந்தவரை தமிழில் பேச முயல்கிறேன். நீங்களும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதன் மூலம் கற்றுக்கொள்வது சுலபமாகி விட்டது.
மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும்.
தமிழ்நாட்டு உணவு வகைகளை ரசித்து உண்ணுங்கள். கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்கும். கலாச்சாரங்களை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பயிற்சிக்கு பின் நீங்கள் தொடர்ந்து தமிழ் படிக்க வேண்டும் என்று நினைத்தால் சொல்லுங்கள் எந்த கல்லூரியில் வேண்டுமோ படிக்க வைக்க உதவுகிறேன். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன அவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்லக்கை சுமந்து சென்று பாரதியாரின் நினைவு இல்லத்தில் வைத்து மரியாதை செலுத்தினர்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பல்லக்கை சுமந்து சென்று பாரதியாரின் நினைவு இல்லத்தில் வைத்து மரியாதை செலுத்தினர்.
- சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து வந்த நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
2022 மற்றும் கடந்த அக்டோபரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
மசோதாவில் திருத்தங்கள் வேண்டும் எனச் சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து வந்த நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
- சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
- நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை.
புத்தாண்டில், தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் தன் உரையை வாசிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 6-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின்போது ஆளுநர் ஆர்.என். ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, தன் உரையை முழுமையாக வாசிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்,
நாட்டின் தேசிய கீதத்தை மதிப்பது என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமை. அனைத்து மாநில சட்டசபைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் நாட்டின் அரசியலமைப்பு, தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. சட்டசபைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
தேசிய கீதத்தை பாட சபாநாயகர், முதல்வருக்கு ஆளுநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
ஆளுநர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதனை மறுப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை ஆளுநர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டை போல, இந்த முறையும் ஆளுநர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானது.
- ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல்.
- சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், "மக்கள் மாளிகை" எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக 13 சதவீதம் மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை கிடப்பில் போட்டு, ஆளுநர் தாமதம் செய்வதாக தமிழக அரசு சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக 13 சதவீதம் மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 3 மாதங்களுக்குள் 95 சதவீதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாக அரசு வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற குற்ற்சாட்டுகளுக்கும் ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
- நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
- மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
இந்தியை ஏற்றால்தான் கல்வி நிதி கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராக தமிழ்நாடு போராடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அக்டோபர் 5ந்தேதி எமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள்.
- இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால சிக்கல்களுக்கு இணைத்து விளக்க வேண்டும்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாளையொட்டி, சமரச சுத்த சன்மார்க்க இளைஞர்கள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சுமார் 300 இளைஞர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நாளை மிக, மிக முக்கியமான நாள். அக்டோபர் 5ந்தேதி எமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். ஏனெனில் அந்த நாளில் தான் தெய்வீகம் இந்த மண்ணில் அவதரித்தது. நாம் அவரை சுவாமி வள்ளலார் என்று அறிந்திருக்கிறோம்.
நாளை அவர் அவதரித்ததற்கான 202வது ஆண்டு விழா. நாம் இங்கு கூடியிருப்பதன் நோக்கம் – அவரின் போதனைகள், அவரின் வாழ்க்கை, அவரின் பணிகள் குறித்து பேசவும், பகிரவும், கொண்டாடவும் ஆகும். இங்கு மாணவர்கள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
நான் உங்களை வலியுறுத்த விரும்புவது– வள்ளலாரின் போதனைகளை மட்டும் அல்லாமல், அவர் ஏன், எப்போது, எந்த சூழலில் அவதரித்தார் என்பதைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் ஆராயுங்கள். அந்தப் பின்னணி, அந்தக் கால சூழலை நன்றாக அறிந்தால், அவர் சொன்னது எதற்காக, எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
உலகம் இன்று சந்திக்கும் 3 முக்கிய பிரச்சினைகள்– வறுமை, சூழல் , போர் இவைகளுக்கான பதில் வள்ளலாரின் போதனையில் உள்ளது. ஆனால் அதை இன்றைய காலத்திற்கு ஏற்ற மொழியிலும் வடிவிலும் நாம் முன்வைக்க வேண்டும். அவரின் போதனைகள் சில தொகுப்புகளில் இருந்தாலும், அவை விதைகள் போன்றவை. ஒவ்வொரு விதையும் பெரும் மரமாக வளரக்கூடியது. அதை இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால சிக்கல்களுக்கு இணைத்து விளக்க வேண்டும்.
வள்ளலார் எல்லா உயிர்களையும் நேசிக்க கற்று தந்தார். அவரது சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். அப்போது தான் சமூக பாகுபாடு இல்லாமல், வறுமை இல்லாமல், இயற்கையோடு சண்டை இல்லாமல், ஒற்றுமையோடு வாழ முடியும். அதுவே வள்ளலாருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியும், நம் வாழ்க்கையின் பணி ஆகும். நண்பர்களே, நீங்கள் இன்று இங்கு வந்திருப்பது உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதை முன் னோக்கி கொண்டு செல்வீர்கள் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என மறுப்பு.
- அவர் நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஆவார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் திமுக பிரமுகரின் மனைவி எனக் கூறப்படும் நிலையில், அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி, ஜீன் ஜோசப் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?.
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
- கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
- துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி அனுப்பியதாக தகவல்.
கலைஞர் பல்கலைக் கழக மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பியுள்ளார்.
துணை வேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணமாக காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக,
சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில் சட்டப்பேரவையில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பார். மேலும், பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரின் முன் அனுமதியின்றி, கவுரவப் பட்டங்கள் வழங்க இயலாது. பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார்.
துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர்.
குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் உள்ளிட்ட ஷரத்துக்கள் மசோதாவில் இருந்தன.
இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட மசோதாவை ஜனாதிபதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.






