என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coutralam"

    • செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.
    • அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவிக்கு மேலே செண்பகாதேவி அருவியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருபுறமும் மலை முகட்டுக்கிடையில் இடமானது பறந்து விரிந்து காணப்படுகிறது.

    அந்த பகுதியில் புதிதாக அணை கட்டி ஆண்டு முழுவதும் குற்றால அருவியில் தண்ணீர் விழுகிற வகையிலும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கால் உயிர் சேதம் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடு செய்யலாம். இதற்கு பொதுப்பணித்துறை மூலம் அணை கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.

    அணை கட்ட திட்டம் நிறைவேறுகிற போது வனத்துறை அனுமதி அவசியம் என்பதனால் அணை கட்டும் பட்சத்தில் அனுமதி வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் அவர் தனது கோரிக்கை மனுவினை வழங்கினார்.




    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்
    • கார்த்திகை மாதம் முழுவதும் திங்கட்கிழமை தோறும் சோமவாரம் கடைபிடிக்கப்படுகிறது

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகை மாதம் முழுவதும் திங்கட்கிழமை தோறும் சோமவாரம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று 4-வது சோமவாரம் என்பதால் குற்றாலம் மெயின் அருவியில் இரவு 12 மணி முதல் பெண்கள் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதிகாலை முதலே குற்றாலம் பகுதியில் கட்டுக்கடங்காத பெண்கள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் குற்றாலநாதர் கோவில் முன்பு இருந்த பூக்கடைகளில் பூக்கள், தேங்காய், பழங்கள், சூடம் வாங்கி சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில் சங்கு வடிவ அமைப்பில் உள்ளது.
    • இறைவனின் பெயர் திருக்குற்றாலநாதர், அம்பாள் குழல்வாய் மொழி.

    பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவ தலங்களில் மிகவும் தொன்மையானது, திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில். தென்காசியை அடுத்துள்ள குற்றாலத்தில் இருக்கும் இத்தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவை இணைந்த சிறப்புமிக்கது.

    'கு' என்பதற்கு 'பிறவிப்பிணி' என்றும், 'தாலம்' என்பதற்கு 'தீர்ப்பது' என்றும் பொருள். பிறவிப்பிணியைத் தீர்க்கும் திருத்தலம் என்பதால் இந்த ஊர், 'குத்தாலம்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி 'குற்றாலம்' என்றானதாக சொல்கிறார்கள்.


    இந்த குற்றாலம், மூலிகை நிறைந்த மலைப் பகுதியாகும். இந்த மலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.

    இவ்வாலய இறைவனின் பெயர் திருக்குற்றாலநாதர், அம்பாளின் திருநாமம், குழல்வாய் மொழி என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் 'சிவமது கங்கை', 'வட அருவி', 'சித்ரா நதி' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    உற்சவ மூர்த்தியின் திருநாமம் சோமாஸ்கந்தர். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை, இந்த குற்றாலநாதர் கோவிலில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் சங்கு வடிவ அமைப்பில் உள்ளது.

    சித்திர சபையை காசி பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் தலவிருட்சம் குறும்பலா மரம். இது, குழல்வாய் மொழி அம்பாள் சன்னிதி முன்பாக உள்ளது.

    பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மும்மூர்த்திகளின் பெயர் தாங்கிய 3 சிகரங்கள் உள்ளதால், குற்றால மலையை 'திரிகூடமலை' என்றும், இறைவனை 'திரிகூடநாதர்' என்றும் அழைப்பார்கள்.

    குழல்வாய்மொழி அம்பாள் உயரமான கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ளார். குழல்வாய்மொழி என்றால் 'வேய்ங்குழலின் ஒலி போன்று இனிமை பொருந்திய சொல்லுடையவள்' என்று பொருள்.


    இந்த கோவில் ஆரம்ப காலத்தில் திருமால் கோவிலாக இருந்தது. அந்த சமயத்தில் 'திருமுற்றம்' என்று அழைக்கப்பட்டது. சிவன், சக்தி திருமணத்தின் போது வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது.

    இதை சமன் செய்ய தெற்கு நோக்கி ஈஸ்வரனால் அனுப்பப்பட்ட அகத்தியப் பெருமான் இந்த கோவிலில் உள்ள திருமாலை அழுத்தி சிவனாக மாற்றினார். இதனால் அவருடைய ஐந்து கை விரல் தழும்பு சிவலிங்கத்தின் உச்சியில் தற்போதும் பதிந்திருப்பதைக் காண முடியும்.

    தலையில் உள்ள தழும்பால் சிவனுக்குத் தலைவலி வந்து விடக்கூடாது என்பதற்காக, இத்தலத்து இறைவனுக்கு மூலிகை அபிஷேகம் நடக்கிறது.

    குற்றாலத்திற்கு பெருமை சேர்க்க பல அருவிகள் உள்ளன. அதில் செண்பகாதேவி அருவி, தேனருவி, சிற்றருவி, ஐந்தருவி, பேரருவி, புலிஅருவி என்ற பாசுபதசாஸ்தா அருவி, பழைய குற்றால அருவி ஆகியவை முக்கியமானவை. இந்த அருவிகளில் குளித்து நமது புற அழுக்கை கழுவி, மன அழுக்கு நீங்க குற்றாலநாதரை வணங்குவது சிறப்பானது.

    முற்காலத்தில் குற்றால நங்கை என்ற தேவி, சித்திர சபையின் வடக்கு வாசலில் அமர்ந்து அருள்பாலித்துள்ளார். இந்த ஆலயம் தற்போது, குற்றாலநாதர் ஆலயத்துக்கு நன்னகரம் அருகில் உள்ள பாட்டக்கரையில் உள்ளது.

    வயல் வேலை செய்யும் பெண் ஒருத்திக்கு, குழல்வாய் மொழியம்மையின் அருளால் நீண்ட காலத்திற்குப் பிறகு, குழந்தைப் பேறு உண்டானது. நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்தபோது, அவள் அருகில் யாரும் இல்லை.


    'அம்மா..' என்று அலறியபடி மயங்கிச் சரிந்த அந்தப் பெண்ணின் குரல் கேட்டு, குற்றாலநாதர் ஆலயத்தில் இருந்து அம்மன், பச்சைக்கிளியாக மாறி இவ்விடம் பறந்து வந்தாள். பின்னர் தாயாக மாறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தாள்.

    இந்த நிலையில் தன்னிடம் சொல்லாமல் சென்றதால், 'இனி நீ ஆலயத்திற்குள் வர வேண்டாம்' என்று சிவபெருமான் நங்கையம்மனிடம் கூறினார். உடனே அன்னை, 'உங்களிடம் சொல்லாமல் சென்றாலும், நான் நல்ல நோக்கத்திற்காகவே சென்றேன். என் குற்றத்தை பொறுத்தருள வேண்டும்' என்று வேண்டினாள்.

    இதையடுத்து அந்த அம்மனை குற்றாலநாதர் ஆலயத்தில் இருந்து வடக்கு பகுதியில் தங்கி இருக்கும்படியும், வருடத்திற்கு ஒரு முறை தன்னை தேடி வரவும் சிவபெருமான் அருள்பாலித்தார். அப்படி அந்த அம்மன் அருள்பாலிக்கும் ஊர் 'காசிமேஜர்புரம்' என்று அழைக்கப்படுகிறது.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் காசிமேஜர்புரம் உள்ளது. தை மாதம் நான்கு செவ்வாய்க்கிழமையும் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறும். முதல் செவ்வாய் அன்று வரியேடு என்னும் வைபவம் நடைபெறும்.

    இவ்வேளையில் அம்மனிடம் உத்தரவு வாங்கி மக்கள் வரி பிரித்து கோவில் கொடை விழாவிற்கு ஆயத்தமாவார்கள். இரண்டாம் செவ்வாய்க்கிழமை கால் நாட்டு வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.

    மூன்றாம் செவ்வாய் அன்று கோவில் பூசாரி சூலாயுதம் எடுத்து அம்மனின் மூல ஆலயத்துக்கு சென்று, உத்தரவு வாங்கி வந்த பின்பு கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய நாளில் செண்பகாதேவி அம்மன் கோவிலில் இருந்து காவு சாமி எனும் அகத்தியர் அழைப்பு நடந்தேறும்.

    இந்த அம்மனுக்கு புட்டு அமுது படைப்பார்கள். அப்பம், வடை சுண்டல், தேன் திராட்சை உள்பட பல்வேறு பதார்த்தங்களை படைத்து வணங்குவார்கள். இந்த அன்னையை வேண்டினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.


    இந்த ஆலயத்தில் செண்பகாதேவி அம்மன் கிழக்கு நோக்கி உள்ளார். ஆதி அம்மனும் இந்த ஆலய வளாகத்துக்குள் வடக்கு நோக்கி உள்ளார். கோவில் வளாகத்தில் கருப்பசாமி, பன்றி மாடசாமி, சங்கலி பூதத்தார், கொம்பு மாடசாமி ஆகியோர் உள்ளனர். வெளியே சின்னத்தம்பி காவல்தெய்வமாக உள்ளார்.

    பொதிகை விநாயகர், ஆதி அம்மன், செண்பகாதேவி ஆகியோரும் இந்த கோவில் வளாகத்தில் உள்ளனர். பாலமுருகன், பால விநாயகர் ஆகியோரும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    • நெல்லை மாநகர் பகுதிகளில் திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
    • தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    பரவலாக மழை

    தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் நெல்லையில் திடீரென மழை பெய்தால் பட்டாசு பிரியர்கள் சற்று வருத்தம் அடைந்தனர். நெல்லை மாநகர் பகுதிகளில் காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் மதியத்தில் திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    நெல்லை மாநகர் பகுதிகளான சந்திப்பு, டவுன், உடையார்பட்டி, வண்ணார்பேட்டை, பாளை, கேடிசி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் நெல்லை புறநகர் பகுதிகளான அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர்விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்டதால் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து காட்டியது.

    மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணையில் 8.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
    • மழை காரணமான அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கருப்பாநதி பகுதியில் 15.5 மில்லிமீட்டரும், அடவிநயினார், ஆய்க்குடி பகுதியில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

    இதேபோல் சேர்வலாறு, பாபநாசம், தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமான குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக வறண்டு காணப்பட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதலே மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டனர்.

    இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • சுமதி கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார்.

    நெல்லை:

    தொடர்விடுமுறை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் அதிக அளவு பெண்கள் நின்று குளித்து கொண்டிருந்தனர். புளியங்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் அங்கு குளித்துள்ளார்.

    நகை பறிப்பு

    அப்போது அவரது கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார். சுதாரித்து கொண்ட சுமதி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அவருடன் குளித்து கொண்டிருந்த மற்ற பெண்கள், நகை பறித்த பெண்ணை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த பெண்ணை குற்றாலம் போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்த லெட்சுமி(வயது 39) என்பதும், அவர் மீது ஏற்கனவே சேலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.
    • குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இன்று மாலை 4 மணி அளவில் சாரல் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்பு அரசு சார்பில் குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

    சீசன் களை கட்டியது

    கடந்த 25 நாட்களுக்கு மேலாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சீசன் களை கட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதுபோன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாததால் குற்றால சாரல் திருவிழா நடத்துவதற்கு சுற்றுலாப்பயணிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

    மாவட்டத்தில் முதல்முறை

    அதனை ஏற்று மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசுக்கு சாரல் திருவிழா நடத்த அனுமதி வேண்டி அதற்கான கோப்புகளை அனுப்பி இருந்தது. அரசும் உடனடியாக அதற்கு செவிசாய்த்து ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சாரல் திருவிழா நடத்த அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் புதியதாக உதயம் ஆகிய பின்பு சாரல் திருவிழா முதன்முதலில் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றாலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அமைச்சர்கள் பங்கேற்பு

    குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இன்று மாலை 4 மணி அளவில் கோலாகலமாக சாரல் திருவிழா தொடங்குகிறது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்குகிறார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் வரவேற்று பேசுகிறார்.


    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் நன்றி கூறுகிறார்.

    நடிகர், நடிகைகளின் நிகழ்ச்சிகள்

    அதனைத்தொடர்ந்து திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி, நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம் நிகழ்ச்சி, மும்பை நரேஷ் பிள்ளைவழங்கும் நாட்டிய நிகழ்ச்சி, விக்கிரமசிங்கபுரம் கல்ப வர்ஷா குழுவினரின் பரத நாட்டியமும் நடைபெறுகிறது.

    புத்தகத்திருவிழா

    மேலும் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி வளாகத்தில் புத்தக திருவிழாவையும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். இரவில் பேராசிரியர் ராமச்சந்திரன் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றமும் முதல் நாள் நிகழ்ச்சியாக நடத்தப்பட இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    தென்காசி தனி மாவட்டமாக உதயம் ஆகிய பின்பு நடத்தப்படும் முதல் குற்றால சாரல் திருவிழா என்பதால் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி சாரல் திருவிழா சிறப்பாக நடத்திட துணை புரிந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குற்றாலத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், இஸ்மாயில், பூசைத்துரை, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமாட்சி ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வேளாண்மை துணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட மத்திய மாநில திட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதன்படி தென்காசி மாவட்ட சங்கத்தின் புதிய தலைவராக சக்கராஜா, செயலாளராக ராஜகுரு, பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    விழாவில் பல்வேறு விவசாய இடுபொருள் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக தமிழ்நாடு விவசாய இடுபொருட்கள் வியாபாரிகள் சங்க நிறுவனர் மறைந்த ரெங்கசாமி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. துணைத் தலைவர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வாலிபர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட தொழிலாளியும் தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கருப்பசாமி(வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் அவருக்கு குணமாகவில்லை.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கருப்பசாமி நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள பொன் நகரத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). கூலி தொழிலாளி. இவர் வயல்காடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பயிர்களுக்கு மருந்து அடித்து கொடுத்து வந்தார்.

    இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளது. இதற்கு சிகிச்சை பார்த்தும் அவருக்கு குணமாகாததால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புக் குழு தலைவர் துரைசிங் தலைமை தாங்கினார்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க 4-வது மாநில மாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலம் காசிமேஜர்புரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புக் குழு தலைவர் துரைசிங் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் செயலாளர் அறிக்கையையும், மாநில பொருளாளர் பாலமுருகன் பொருளாளர் அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொருளாளர் முருகான ந்தம் வாழ்த்திப் பேசினார்.

    தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் அமைப்பு விதிகள் திருத்தத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு நிறைவுரை ஆற்றினார்.

    மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் அல்லாபிச்சை நன்றி கூறினார்.

    மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக பேரூராட்சி களுக்கு இணையான மக்கள்தொகை மற்றும் வருவாய் கொண்டுள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகள் ஆக தரம் உயர்நிலைக்குழு அமைத்திட வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பேரூராட்சி ஊழியர்களும் கோசங்களை எழுப்பி எழுந்து நின்று முன்மொழிந்தனர். மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×