என் மலர்
நீங்கள் தேடியது "Tourists"
- குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது
- தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.
- குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.
ஊட்டி:
உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக உற்சாகம், கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மேலும் குளுகுளு காலநிலை, பசுமை சூழ்ந்த மலைகள், மிதமான பனி ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தன.
ஊட்டியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு டி.ஜே. இசை நிகழ்ச்சிகள், வண்ணமயமான வானவேடிக்கைகள், சிறப்பு விருந்துகள், பாரம்பரிய நவீன கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் களைகட்டின. சுற்றுலாப் பயணிகள் இசை, ஆடல், பாடலுடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
தொடர் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தனியார் ஓட்டல்கள் மற்றும் அரசின் 'ஓட்டல் தமிழ்நாடு' அரங்கிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கியும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அதிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக்கு முன்பாகவே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு, அறைகள் நிரம்பி வழிந்தன.
ஊட்டியில் தங்குமிடம் கிடைக்காத சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் லாட்ஜ்களில் தங்கி, அங்கிருந்து சுற்றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், ஊட்டிக்கு சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து புத்தாண்டை கொண்டாடி தீர்த்தனர்.
நீலகிரிக்கு வரும் சிறப்பு மலை ரெயில்களிலும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர். இதன்காரணமாக குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், அங்குள்ள வியாபார கடைகள், உணவகங்கள் மற்றும் நினைவுப்பரிசு கடைகளில் விற்பனை சூடுபிடித்தது. இதனால் அங்கு சுற்றுலாவை சார்ந்து செயல்படும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மொத்தத்தில் குளுகுளு காலநிலை, இயற்கை அழகு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாகமான கொண்டாட்டங்களுடன் ஊட்டியில் அரங்கேறிய புத்தாண்டு விழா மறக்க முடியாத அனுபவமாக மாறி உள்ளது.
குன்னூரில் சிம்ஸ் பூங்கா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக்,காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் புத்தாண்டையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதன்காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் நகர-கிராமப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் உள்ளூர் மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள இயலாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் குன்னூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
- தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையை உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 64.68 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இது இந்திய அளவில் 21.9 சதவீதம் ஆகும். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 10.4 சதவீதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
ஆனால், 2019-ம் ஆண்டு வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 2021 டிசம்பர் 13-ந் தேதி காசி விசுவநாதர் கோவில் காரிடார் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை (தேசிய அளவில் 10.3 சதவீதம்) கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது. 4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 9.8 சதவீதம்) ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 7.8 சதவீதம்) ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37.1 லட்சம் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 2-வது மாநிலமாக 31.2 லட்சம் பயணிகளுடன் மேற்கு வங்கமும், 3-வது மாநிலமாக 22.7 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் உத்தரபிரதேசமும் இடம் பெற்றுள்ளன.
அதே போன்று 22.7 லட்சம் பயணிகளுடன் குஜராத் மாநிலம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. 11.6 லட்சம் பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இருந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.
- ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பகல் நேரங்களில் மிதமான வெயில் மற்றும் பனி மூட்டம் நிலவி வந்தது . மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.
இதனால் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏரிச்சாலை மற்றும் ஒரு சில பகுதிகளில் பணியாட்கள் நெருப்பு மூட்டி குளிர் காயும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் கடும் பனி உருவாகும் என்பதால் கடும் உறைபனியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது 10 டிகிரிக்கும் குறைவான தட்பவெட்ப நிலை உருவாகியுள்ள நிலையில் மேலும் குளிர் அதிகரிக்க கூடும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உறைபனி அதிக நாட்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை நேரங்களில் பனிச்சாரலுடன் கூடிய பனிமூட்டத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகரித்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை, அதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது.
- கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை ஆகும். ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு வருவது வழக்கம்.
தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து அங்கிருக்கும் பூங்கா பகுதியில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். மேலும் அணையின் வெளிப்பகுதியில் விற்கப்படும் பொரித்த மீன் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில் பலத்த மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு கரைகளிலும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனினும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்கும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பிடித்து நிற்க வசதியாக பதிக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்திருந்தது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சேதமடைந்த தடுப்புகளை ஊழியர்கள் சீர் செய்தனர். சீரமைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 நாட்கள் தடைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீண்டும் 20-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிக்கரைகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், சேதமடைந்தன.
பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவுற்றதால் இன்று காலை முதல் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் சாலைகளில் ஏற்பட்ட மண் அரிப்புகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முற்றிலுமாக சீரமைத்த பிறகே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல் இதமான சூழ்நிலை குற்றாலம் பகுதியில் நீடிக்கிறது.
விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
- உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
* மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
* அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்
* குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டி:
தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளது. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.
அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம், பைக்காரா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்த மலர்களை கண்டு ரசித்து அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். தாவரவியல் பூங்கா புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை கழித்தனர். நேற்று மதியம் ஊட்டியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.
கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனையில் நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அங்கு வந்தவர்கள், கொடநாடு காட்சி முனையில் இருந்தவாறு, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், வண்ணமயமான பள்ளத்தாக்குகள், மாயார் நதி, பவானி அணை, மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ-பாஸ் மையத்தில் நேற்று காலை முதல் சோதனைக்காக வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். இ-பாஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
கூடலூர், நடுவட்டம், பைக்கார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சமவெளிப்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்தனர். சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் ஊட்டி கூடலூர், ஊட்டி கோத்தகிரி, ஊட்டி குன்னூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதிகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது.
- அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது. ஜூலை மாதம் 6% குறைந்தது
இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 15% குறைந்துள்ளது.
இதனால், அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதனால் சுற்றுலா வருவோரை மேலும் கவர்வதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரி யில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
அதோடு மகான் அரவிந்தர் பிறந்தநாளையொட்டி வட மாநில சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரி வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நகர குதியில் உள்ள ஆசிரம விடுதிகளில் தங்கி உள்ளனர்.
நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் நகரம் மற்றும் கடற்கரை ரிசார்டுகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனால் பலர் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தங்கும் அறை எடுத்து தங்கி புதுச்சேரி வந்தனர். ஓட்டல்களில் உணவு அருந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி நகர பகுதியில் பல மாநிலங்களை சேர்ந்த கார்கள் உலா வருகிறது. இதனால் ராஜீவ்காந்தி சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை, வழுதாவூர் சாலை, திண்டிவனம், விழுப்புரம் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்ல அரைமணி நேரத்துக்கும் மேல் ஆனது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலை, பாரதிபூங்கா, ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா, ஈடன் கடற்கரை உள்பட சுற்றுலா தலங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்தது.
நேற்றைய தினம் தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்த ஏராளமானோர் புதுச்சேரியில் குவிந்தனர். அனைத்து மதுக்கடைகளிலும் மது வாங்க கூட்டம் அலைமோதியது.
- கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.
- பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பழைய குற்றால அருவி. இந்த அருவிக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபடுவார்கள்.
பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் இரவு 8 மணிக்கு பிறகு கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர். அதாவது காலை 6 மணி முதல் மாலை 6.30 வரை மட்டுமே பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
- திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கபட்டுள்ளது.
திருப்பத்தூர் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது . இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.






