என் மலர்
நீங்கள் தேடியது "Forest Department"
- சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
- 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது.
டிசம்பர் 21, 2011 அன்று, கேரள மாநிலம் கொச்சியின் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது. தந்தங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது.
கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தை அணுகினார். மறுபுறம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொரு நபர் யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டபூர்வமானது அல்ல என கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில் நடைமுறை பிழைகள் இருகின்றன. எனவே அது செல்லாது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மோகன்லால் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
- வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவதும் அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் இடத்தை வரட்டுப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி வரட்டுப்பள்ளம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருக்கும் யானை கூட்டங்கள் குட்டிகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வரட்டு பள்ளம் அணைப்பகுதிக்கு வந்து குதூகலமாக நீரை குளித்து சென்று வருகிறது.
தற்போது தொடர் விடுமுறை காரணமாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணையை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை கூட்டங்களும் வரட்டுப்பள்ளம் அணையை நோக்கி படையெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன.
திருச்சி:
வன விலங்குகளில் உருவத்தில் பெரிய அளவில் இருந்தாலும் யானைகள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரினமாக உள்ளது. அதனால்தான் அவை கோவில்களில் கடவுளுக்கு அடுத்தபடியாக ஆன்மிக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது பழமொழி.
ஆனால் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் என்றாலும் சரி, தனியார்களால் பராமரிக்கப்படும் யானைகள் ஆனாலும் சரி அவற்றின் முதுமை காலம் என்பது அவற்றுக்கு மிகவும் சோதனையான காலமாகவே அமைந்துவிடுகிறது. வயது முதிர்வின் காரணமாக யானைகள் வியாதிகளால் உடல் நலிவுறும்போது அவற்றை பராமரிக்க முடியாமல் யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் நிலை தடுமாறி விடுகிறார்கள். காரணம் உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவற்றுக்கு அதிக அளவில் உணவு தேவைப்படுவது போல், மருத்துவ சிகிச்சைக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிரச்சனையின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் வயதான யானைகளை பராமரிப்பதற்காக யானைகள் மறுவாழ்வு மையம் வனத்துறையால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட 9 யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இங்குள்ள யானைகளில் 71 வயது கோமதி, 60 வயது சுமதி, 64 வயது சுந்தரி, 66 வயது இந்திரா ஆகியவை தசைபிடிப்பு காரணமாக கால்வலியால் அவதிப்பட்டு வருகின்றன. இந்த யானைகளின் கால்வலியை போக்குவதற்காக வனத்துறை சார்பில் மறுவாழ்வு மைய வளாகத்தில் 'ஹைட்ரோதெரபி' எனப்படும் நீர் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறப்பு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு 4 யானைகளும், தினமும் அவற்றின் பாகன்கள் மற்றும் அவற்றின் உதவியாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் நீராட வைக்கப்படுகின்றன. மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன. அவை குளத்தில் நீராடி மகிழ்கின்றன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'யானைகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. குளத்து நீரால் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் கால்வலியால் அவதிப்பட்ட யானைகளின் நடவடிக்கையில் சிறிது மாற்றத்தை காண முடிகிறது' என்றனர்.
- கனமழையால் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம்.
- அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில், இருவேறு இடங்களில் பெண்கள், முதலைகளுடன் சண்டையிட்டு தங்கள் குழந்தை மற்றும் கணவரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் வீரப்பெண்மணிகள் தங்கள் அன்புக்குரியவர்களை காப்பாற்ற முதலைகளுடன் போராடிய சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு சம்பவம் இங்குள்ள கைரிகாட் பகுதியில் உள்ள தாகியா கிராமத்தில் நடந்தது.
இங்குள்ள காக்ரா ஆற்றின் கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, அவன் திடீரென அலறும் சத்தம் கேட்டது.
உடனே அருகில் நின்ற அவனது தாய் மாயா, ஓடிச் சென்று பார்த்தபோது ஒரு ராட்சத முதலை சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே எதையும் யோசிக்காமல் சட்டென்று ஆற்றில் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள் அந்த வீரத்தாய். குழந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட தாய், சிறுவனை கவ்விக் கொண்டிருந்த முதலையின் தாடையை குறிவைத்து தன்னிடம் இருந்த சிறு கம்பியால் மீண்டும் மீண்டும் தாக்கினார்.
இதை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை பிடியைத் தளர்த்தி சிறுவனை விடுவித்தது. பின்னர் ஆழமான தண்ணீருக்குள் முதலை ஓடி மறைந்தது.
முதலை தாக்கியதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.சுமார் 7 அடி நீளமுள்ள அந்த முதலையைப் பிடிக்க அந்த கால்வாயில், 3 இடங்களில் வலை விரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல மோதிபூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு பெண்மணி தனது கணவரை முதலையிடம் இருந்து காப்பாற்றி உள்ளார்.
மாதவபூர் கிராமத்தில் சைபு (வயது 45) என்பவர், தனது மனைவி சுர்ஜனா மற்றும் மைத்துனியுடன் ஒரு கால்வாயை கடக்க முயன்றார். அப்போது ஒரு முதலை சைபுவின் காலைக் கடித்து இழுத்தது. இதனால் அவர் கூச்சலிட்டார்.
உடனே சுர்ஜனா தனது புடவையை தண்ணீரில் வீசி, கணவரை பிடித்துக் கொள்ளச் செய்தார். பின்னர் முதலையை தாக்கினார். அப்போது அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து முதலையை தடிகளால் தாக்கினார்கள். இதனால் முதலை சைபுவை விட்டுவிட்டு ஓடியது. காயம் அடைந்த சைபு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம் என்றும், அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
- குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ரோஷ்னி ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி ரோஷ்னி கடந்த 8 வருடங்களாக கிட்டத்தட்ட 800 பாம்புகளை பிடித்துள்ளார். ஆனாலும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்தது ரோஷ்னிக்கு இதுவே முதல்முறையாகும்.
- யானை காரை துரத்தும் காட்சியை வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
- சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
கேரளா மாநிலம் மயிலாடும்பாறை அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 8 அடி ஆழமான குழிக்குள் ஒரு புலி மற்றும் நாய் தவறி விழுந்துள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாய் மற்றும் புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
- அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாள்தோறும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சென்று வருகின்றனர். மாலை 4 மணிக்குள் திரும்பி வரவேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று (25-ந்தேதி) மற்றும் நாளை (26-ந்தேதி) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
- யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.
வடவள்ளி:
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது.
திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை. குட்டி யானை அதன் அருகே பரிதவித்தபடி இருந்தது.
இதனை பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தாய் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் குட்டி யானை, தாய் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் இருந்தது. யானை அருகே சென்ற வனத்துறையினரை குட்டி யானை விரட்டியது.
மேலும் குட்டி யானை, தாய் யானையின் மேல் படுத்துக் கொண்டு தனது முழு பலத்தையும் காட்டி எழுப்ப முயன்றது. அம்மா எழுந்திரும்மா, எழுந்திரும்மா... என்பது போல் அந்த குட்டி யானையின் செயல்கள் இருந்தன. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண் போரை கண் கலங்கச் செய்தது.
வனத்துறையினர் பல மணி நேரம் போராடி பார்த்தனர். ஆனால் குட்டி யானை அங்கிருந்து நகராமல் தனது தாயை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தது. குட்டி யானை வழிவிட்டால் தான் தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலை வந்தது. இதுபற்றி வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களது உத்தரவின்பேரில் முதுமலையில் இருந்து கும்கி யானை ஒரியன் வரவழைக்கப்பட்டது. கும்கி யானையுடன் கால்நடை மருத்துவர் விஜயன் என்பவரும் வந்தார். கும்கி யானை உள்ளே புகுந்து குட்டி யானையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் குட்டி யானை அங்கிருந்து ஓடி வெகுதூரத்தில் போய் நின்றது.
இதையடுத்து தாய் யானையை கிரேன் உதவியுடன் நிறுத்தினர். யானைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்து, மாத்திரைகள் உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனை உட்கொண்ட யானை உடல் நலம் தேறி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
குட்டி யானை தொடர்ந்து தாய் யானையை கண்காணித்தபடியே சுற்றித்திரிகிறது. இந்த உருக்கமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
- 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கரடி பிடிபட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர்பேட்டராயன் பகுதியில் ஊருக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய கரடி 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது.
ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் வனத்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட கூண்டில் கரடி பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆந்திர வனப்பகுதியில் கரடியை திறந்துவிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
- பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன.
- தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி , பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு, தண்ணீரை தேடி சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் அந்த யானை கூட்டங்கள் அந்தப் பகுதியில் சுற்றி வந்தன. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டங்கள் சென்றன. இதன் பிறகே வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானை கூட்டங்கள் இடம்பெயர்ந்து வருகிறது. அதன்படி கர்நாடகா மாநிலத்திலிருந்து இருந்து தமிழக எல்லைப் பகுதியான காரப்பள்ளம், தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் யானைகள் தஞ்சம் அடைந்து வருகின்றன.
தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணக் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனர்.
- தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
- குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி அனுமதி அளித்தது. எனினும் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் செய்தி மக்களை சென்றடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து பக்தர்கள் இன்று மட்டும் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனால் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.






