என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kerala Government"
- ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.
புதுடெல்லி:
மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றன.
இதற்காக மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவை சட்டமாக அமலுக்கு வரும்.
ஆனால் சமீப காலமாக பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர்கள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் அந்த மாநில அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே சில மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அந்தவகையில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய பிறகே சில மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். ஆனாலும் சில மசோதாக்களை தொடர்ந்து அவர்கள் கிடப்பில் வைத்து உள்ளனர். இதில் கேரளாவை பொறுத்தவரை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.மாநில சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார். இதில் சில மசோதாக்களை அவர் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
அவற்றின் மீது ஜனாதிபதி தரப்பில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை தொடர்ந்து கிடப்பிலேயே இருக்கின்றன.
அதாவது கேரள அரசின் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.2) மசோதா 2021, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2022 மற்றும் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.3) மசோதா 2022 ஆகிய 4 மசோதாக்கள் ஜனாதிபதியிடமே நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.
எனவே ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
இதில் மத்திய அரசு, ஜனாதிபதியின் செயலாளர், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அவரது கூடுதல் செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக இணைத்து உள்ளது.
இந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ள கேரள அரசு, அவற்றில் முக்கியமாக கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இந்த 4 மசோதாக்கள் உள்பட 7 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்து உள்ளார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். கவர்னர்கள் நீண்ட காலத்துக்கும், காலவரையறை இன்றியும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது, பின்னர் அரசியலமைப்புடன் தொடர்புடைய எந்த காரணமும் இல்லாமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாக்களை ஒதுக்குவது தன்னிச்சையானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவது ஆகும்.
முற்றிலும் மாநில எல்லைக்குள் இருக்கும் இந்த 4 மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு எந்தவித காரணமும் கூறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனையும் அரசியல் சட்டப்பிரிவு 14-ஐ மீறுகிறது. மேலும் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் பலன்களை மறுப்பது, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கேரள மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல்களாகும்.
இவ்வாறு கேரள அரசு தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும். அதை கேரள அரசு செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.
இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கேரள கலாச்சாரத்தின் பல கொண்டாட்டங்களில் பம்பை நதிக்கு தனிச்சிறப்பு உண்டு
- வீடியோவில் தனியார் ஓட்டலின் கழிவு நீர் நேரடியாக பம்பையில் கலப்பது தெரிகிறது
கேரள மாநிலத்தின் நதிகளில் ஒன்று 176 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பம்பை.
பீருமேடு பீடபூமியின் (Peerumedu plateau) புலச்சிமலை (Pulachimalai) பகுதியில் தோன்றும் பம்பை நதி பல பிரிவுகளாக ஓடுகிறது.
இந்துக்களின் புனிதத்தலமான சபரிமலை இந்த நதிக்கரையில்தான் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள பம்பை நதியில் குளிப்பதை, புனிதமான செயலாக கொள்வது வழக்கம். கங்கை நதிநீருக்கு ஒப்பான புனித நீராக பம்பையை இந்துக்கள் கருதுகின்றனர்.
"கேரளத்தின் நெற்களஞ்சியம்" (rice bowl of Kerala) என அழைக்கப்படும் குட்டநாடு பகுதியில் பம்பை ஆற்று நீரினால் நெல் விவசாயம் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கேரள கலாச்சார கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய அம்சமாகவும் பம்பை நதி விளங்குகிறது.
ஆனால், சமீப சில வருடங்களாக பம்பை நதிநீர் அசுத்தமாக்கப்படுவதாகவும் நதி ஓடி வரும் கரைகளில் சில இடங்களில் இருந்து கழிவு நீரும் அதில் கலப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது மட்டுமின்றி கரையில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் நீரில் கலப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
கடந்த 2018 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் பம்பையின் தூய்மையை காக்கும் வகையிலும், சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒரு தனியார் ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பம்பை ஆற்றில் தொடர்ந்து கலக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
பரிசுத்தமான பம்பையில் கலக்கும் கழிவுநீர்#Sabarimala #ayyappantemple #pambai #kerala #sabarimala_ayyapan #mmnews #maalaimalar pic.twitter.com/qGQl1Xfygr
— Maalai Malar தமிழ் (@maalaimalar) December 20, 2023
குளியலுக்கும், குடிப்பதற்கும் நதிநீரை பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியத்திற்கு இச்செயல் நீண்டகால உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பம்பையில் நீராடும் சபரிமலை பக்தர்களும், இச்செயலை உடனடியாக கேரள அரசு தலையிட்டு நிறுத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
- கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது.
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசு அனுப்பி உள்ள மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க ஆளுநர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இதனை குறிப்பிடும்படியும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
கேரளாவில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகள் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர், நல வாழ்வு மையங்களில் வாழும் 20 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் தேயிலைத்தூள், சிறுபருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயறு மற்றும் உப்பு ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.
ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ரூ.32 கோடி முன்பணமாக சப்ளை கோ நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து ஓணம் பரிசு தொகுப்பு விரைவில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிதி நெருக்கடி காரணமாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டு, 13 பொருட்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.
இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.
இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் 51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக அறிவித்தனர்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா காலங்களில் 51 இளம்பெண்களும் தரிசனம் செய்ததாகவும் தெரிவித்த கேரள அரசு அவர்களின் பெயர் விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.
இந்த பட்டியல் வெளியானதும் அதில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது தெரிய வந்தது.
பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி கேரள அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது.
இதற்காக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய புதுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏற்கனவே வெளியான 51 பேர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில், 34 பேரை விடுவித்தனர். மீதம் 17 பேரே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்தனர். இந்த புதிய பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. #Sabarimala #SC
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.
இதுபோல கேரளாவின் வேறு சில கோவில்கள் கொச்சின் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவில்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் அரசின் வெளிப்படை தன்மை பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக சுப்பிரமணிய சாமியும், மோகன்தாஸ் என்பவரும் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கேரள ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தது. இதில் அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை என கூறியது. இதையடுத்து சுப்பிரமணிய சாமியும், மோகன்தாசும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனு தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கேரள அரசுக்கு வழங்கியது. அதில் தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பைசா கூட அரசின் கஜானாவுக்கு போகக்கூடாது. அவை அனைத்தும் தேவசம்போர்டின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மேலும் தேவசம் போர்டின் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்றும் கூறி உள்ளது. #SC #Devaswomboard
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரள ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தனர்.
கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு மனு செய்தது.
இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு வருகிற 8-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது. அதன் பிறகே ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வில் இடம் பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா விடுமுறையில் இருக்கிறார்.
அவர், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய பின்னரே இன்று நடக்க இருந்த விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். கேரள அரசின் மனு மீதான விசாரணை 8-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தொடர்பான விசாரணை வருகிற 8-ந்தேதிக்கு முன்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களை கட்டுப்படுத்தி சபரிமலைக்கு சென்ற பெண்களை போலீசார் சன்னிதானம் அழைத்துச் சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்த இளம்பெண்கள் குறித்த தகவலை கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில், சபரிமலையில் கோவில் நடைதிறந்த பின்பு 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்படி கேரள அரசு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் கோவிலில் தரிசனம் செய்த 51 பெண்களின் பெயர் பட்டியலையும் தாக்கல் செய்தனர்.
கேரள அரசு தாக்கல் செய்த பட்டியலில் முரண்பாடு இருப்பதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களும் இதுபற்றி ரகசிய ஆய்வு செய்தனர். மேலும் பட்டியலில் இடம் பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் வயது விவரங்களை கேட்டனர்.
அதில், பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த வயதும், அவர்களின் உண்மையான வயதிலும் வித்தியாசம் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஷீலா என்ற பெண் சபரிமலையில் தரிசனம் செய்ததாகவும், அவருக்கு 48 வயது என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி கேரள ஊடகங்கள் சென்னையில் இருந்த ஷீலாவை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்ததாக கூறினார். அப்போது இன்டர்நெட் மையத்தில் விவரங்களை பதிவு செய்தபோது, வயதை 52 என்பதற்கு பதில் 48 என்று குறிப்பிட்டு விட்டனர்.
இதனை நான், உடனே கண்டுபிடித்து இன்டர்நெட் ஊழியர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் கோவிலுக்கு செல்லும்போது ஆதார் அட்டையை காட்டுங்கள் என்று கூறிவிட்டனர். நான், கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த போலீசாரிடம் வயது விவரம் குறித்து தெரிவித்தேன். மேலும் உண்மையான வயதை குறிப்பிட ஆதார் அட்டையையும் காண்பித்தேன். போலீசார் ஆன்லைன் விவரங்களை மட்டுமே பதிவு செய்து கொண்டனர் என்றார்.
ஆனால் பரஞ்ஜோதி பெண் அல்ல, ஆண் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி உள்பட பலரும் தங்களது வயது 50-க்கு மேல் என்று கூறி உள்ளனர்.
கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 10-க்கும் மேற்பட்டோரின் வயது குறித்த விவரங்களில் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேரள அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
சபரிமலைக்கு சென்ற இளம்பெண்கள் யாரும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். பாதுகாப்பு கருதி குடும்ப உறுப்பினர்களும், மறுப்பு தெரிவித்திருக்கலாம். சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அவர்கள் இவ்வாறு கூறி இருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பா.ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கை போலியானது. தரிசனத்திற்கு ஆன்லைனில் பதிவு செய்த கம்யூனிஸ்டு பெண் ஆர்வலர்களின் பெயர்களை பட்டியலில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் சபரிமலை வழக்கின் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணைக்கு பாதிப்பு இருக்காது என்றார். #Sabarimalatemple #SC
சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். கேரள அரசு இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை கோவிலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளது. இது கேரளாவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், சபரிமலை கர்மா சமிதி, பந்தளம் அரண்மனை குடும்பம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. சுப்ரீம் கோர்ட்டில் பொய் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்” என்றார்.
காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறும்போது, “தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம். இதற்கு முதல்-மந்திரியே பொறுப்பேற்க வேண்டும்” என்றார். #Sabarimalatemple #SC
கேரளாவில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கொல்லம் நகரில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு காரணங்களுக்காக பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த போக்கு மாற வேண்டும் என பா.ஜனதா விரும்பியது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வெறும் 56 சதவீத பின்தங்கியப் பகுதிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால் தற்போது அதனை 90 சதவீதமாக அதிகரித்துள்ளோம். இது விரைவில் 100 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்பதை யாராவது அறிவார்களா? தற்போது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அதற்கான தரவரிசையில் 142-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்திய கலாச்சாரத்தை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மதிக்க மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்தளவு மிகவும் மோசமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானதாக இடம்பெறப்போகிறது. இவர்களைப் போன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மோசமானதுதான்.
முத்தலாக் விவகாரத்திலும் காங்கிரசும், இடதுசாரியும் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதன்மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்த திட்டத்தில் பலனடைய முடியும்.
இடதுசாரியும், காங்கிரசும் பெயரளவில் தான் வெவ்வேறு, ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் ஒரே மாதிரியானது தான். மேலும் அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர். கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள் இருவரும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள். பெயரளவில் வேறுபட்டிருந்தாலும் ஊழல், சாதி மற்றும் மதப் பிரிவினைகளில், அரசியல் வன்முறைகளில் ஒன்றுதான்” என்று கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, எம்.சூர்யா என்ற அந்த 4 பேரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
இந்த மனு, தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம்” என்று கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. #SabarimalaTemple #KeralaGovernment
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்