search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Government"

    • பொருட்களின் எடை மற்றும் கி.மீட்டர் தூரம் போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • 200 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், 800 கிலோ மீட்டருக்கு ரூ.120-ம் வசூலிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செயல்படும் அரசு போக்குவரத்து துறை லாபத்தை ஈட்டும் வகையில் கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. மாநிலத்தில் 44 கவுண்டர்கள் மற்றும் தமிழகத்தின் கோவை, நாகர்கோவில் பகுதிகளில் செயல்படும் கவுண்டர்கள் மூலம் இந்த சேவை நடைபெற்று வந்தது. பொருட்களின் எடை மற்றும் கி.மீட்டர் தூரம் போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    25 கிராம் எடை உள்ள கூரியர்களுக்கு 200 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், 800 கிலோ மீட்டருக்கு ரூ.120-ம் வசூலிக்கப்பட்டது. இந்த கூரியர் சேவை மூலம் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1½ கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது.
    • தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    மேலும் தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர் 2022ம் ஆண்டு மேலும் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்த்து ஐவர் குழுவாக மாற்றப்பட்டது.

    தற்போது குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 13, 14-ந் தேதிகளில் மத்திய கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளா சந்தேகம் எழுப்பி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. தற்போதும் பரபரப்பான இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக்குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.
    • கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்:

    தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முல்லை பெரியாறு அணை குறித்து கேரள அரசு பொய்பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதற்கு அனுமதி பெறுவதற்காக அம்மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது.

    கேரள அரசின் இந்த செயலை தமிழக அரசு மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரியாறு பாசன கால்வாய் மூலம் சுமார் 1 அரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று மேலூர் பஸ் நிலையம் அருகில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகன் கேரள அரசை கண்டித்தும், மத்திய அரசு புதிய அணைக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலூர், வெள்ளலூர், திருவாதவூர், சூரக்குண்டு, கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு, சிலந்தி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர் வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா பகுதியில் அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தி ஆற்றை தடுத்து கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படுவதுடன், அணையை ஆதாரமாக கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அமராவதி அருகே தமிழக-கேரள எல்லை அருகே சின்னாறு சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 6 பெண்கள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை முன்பு இன்று விவசாயிகள்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமை தாங்கினார். விவசாயிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் வேலு சிவகுமார் கூறியதாவது:-

    அமராவதி அணைக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை கேரள அரசு தடுத்து அணை கட்டி வருவது உண்மைதான். எனது தலைமையில் விவசாயிகள் அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்து அதனை உறுதி செய்துள்ளோம். குடிநீர் தேவைக்கு என்ற காரணத்தை கூறி அங்கு அணை கட்டப்படுகிறது. ஆனால் உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. இது போன்ற கேரளாவின் செயல்பாடுகளால் அமராவதி அணை விரைவில் பாலைவன மாவதையும் தமிழக அரசால் தடுக்க முடியாது. கேரளத்தின் இந்த செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும்.

    இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரளாவின் சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில்,

    1957ம் ஆண்டு காமராஜரால், 4 டி.எம்.சி கொள்ளளவோடு கட்டப்பட்ட அமராவதி அணையானது, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்திசெய்வதோடு பல நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தடுப்பணை கட்டும் பணிகள் முறையான அனுமதி இல்லாமல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. ஏற்கனவே பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனது. பருவமழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றின் துணை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அமராவதி ஆறு முற்றிலும் வறண்டு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகும் சூழல் உள்ளது. பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கேரள அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. எனவே தடுப்பணை கட்டும் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம்.
    • கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை பலம் இழந்து வருவதாகவும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கேரள அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணை பலமாக இருப்பதாகவும், அதனை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டனர். மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.

    அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் நீர்வரத்து, தண்ணீர் திறப்பு, கசிவு உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூவர் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது அணை பகுதியை பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கேரள சட்டசபைக் கூட்ட தொடரில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவுக்கு அறிக்கை அளித்தது.

    இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (28-ந் தேதி) வர உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாத நிலையில் தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசின் கடிதம் விசாரணைக்கு வர உள்ள தகவல் தமிழக விவசாயிகளிடம் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாயிகள் நாளை (27-ந் தேதி) மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஒன்று திரண்டு விவசாயிகள் அங்கிருந்து கேரள எல்லையான குமுளிக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை அமலில் இருப்பதால் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை லோயர் கேம்ப்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டால் அதனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்தவித அமைப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்தக்கூடாது. இது வரை விவசாயிகள் அமைப்போ, வேறு எந்த அமைப்போ போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கவில்லை. அவ்வாறு கடிதம் அளித்தாலும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றனர்.

    இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இது தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம். எங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும். தமிழக அரசு கடிதம் எழுதி விட்டால் அனைத்தும் நடந்து விடும் என்று நினைக்கின்றனர். இது தவறு. கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள். எனவே அவர்களிடம் கடிதம் எழுதினால் நடந்து விடும் என்று தமிழக அரசு நினைப்பது தவறு. விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் அது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றனர்.

    இதனிடையே பேரணிக்கு திட்டமிட்டுள்ள லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
    • போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் தமிழக நீர் வளத்துறை பராமரிப்பில் உள்ளது.

    பூகோள அடிப்படையில் கேரளாவில் இருந்தாலும் அணை பராமரிப்பு முழுவதும் தமிழக அரசே மேற்கொண்டு வருகிறது.

    அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் அணையை உறுதி செய்யும் தன்மையை உச்சநீதிமன்றமே வல்லுனர் குழுவை 11 முறை அனுப்பி உறுதி செய்தது. அணையின் கீழ் பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கிக் கொள்ள உத்தரவிட்டது. அதன்படி 10.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் 7.86 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தற்போது வரை தேக்கப்படுகிறது. அணையில் முழு கொள்ளளவு நீரை சேமிக்க முடியாததால் 5 மாவட்டங்களின் பாசன பரப்பை அதிகரிக்க முடியாமலும், குடிநீர் வழங்கும் பணியை விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

    இது தவிர அணையை பலப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள கேரள வனத்துறை பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த சூழலில்தான் புதிய அணை கட்ட வேண்டும் எனவும், தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை பலமிழந்து விட்டதால் இடிந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுவதும் சேதமாகும் என்றும், வீண் வதந்தி பரப்பி வருகிறது.

    இந்நிலையில் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகி விட்டதால் அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின்பு பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்பும் தமிழகத்துக்கான நீர் பகிர்வு தற்போதைய நிலையிலேயே தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம் அதனை நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு கடந்த 14-ந் தேதி அனுப்பியது.

    மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு வருகிற 28-ந் தேதிக்கு இது தொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது. கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை வைத்து கேரளாவில் எந்த அரசு வந்தாலும் அரசியல் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. அணையை எப்படியாவது இடித்து விட்டு அந்த அணை தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் நிலைப்பாடாக உள்ளது. உச்சநீதிமன்றம் தலைசிறந்த வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக இருப்பதாகவும் பூகம்பம் ஏற்பட்டால் கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி செய்த பின்பே 142 அடி வரை தண்ணீர் தேக்க உத்தரவிட்டது.

    அதனையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருப்பது 152 அடி வரை உயர்த்த முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பணிய வைத்து முல்லைப்பெரியாறு அணையை அழித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் மென்மையான போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை கண்டித்து வருகிற 27-ந் தேதி காலை 10 மணியளவில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்.

    பென்னி குவிக் நினைவிடத்தில் இருந்து திரண்டு பேரணியாக சென்று கேரள மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • மத்திய அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

    முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MOEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளேன்.

    தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

    தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.

    பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.

    இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.

    எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிவிட வேண்டும்.

    எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட வேண்டும்.
    • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணையின் தரம் காலாவதியாகி விட்டது என்றும் இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கேரள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

    மேலும் உடனடியாக முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் அணை குறித்து ஏற்கனவே வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித் திருந்த உத்தரவில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கும் தனித்தனியாக புதிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

    இதில் இரு மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் செயல்பட வேண்டும். மத்திய அரசு அமைக்கும் குழுவில் இரு மாநிலத்தை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும்.

    இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக முன் எச்சரிக்கை நடவடிக்கை களை இந்த சிறப்பு குழு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதில் அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று தெளிவாக தெரிவித்து இருந்தது.

    மத்திய அரசு, கேரளா அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2019 ஜனவரி 4-ந்தேதி தொடர்ந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இது போன்ற சூழலில் முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளா அரசு தரப்பில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


    இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 28-ந்தேதி நடக்க இருக்கும் மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் முடிவே இறுதியானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதே போன்று தமிழ்நாடு அரசு சம்மதம் இருந்தால் மட்டுமே முல்லைப் பெரியாறின் கீழே புதிய அணை கட்ட முடியும் என்றும், இல்லையேல் சாத்தியமே கிடையாது எனவும் மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

    இவை அனைத்தையும் மீறும் விதமாக முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வரும் 28-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகள் அனைத்தையும் மீறும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆரம்பத்திலேயே கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரளாவின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவில் கேரள அரசின் பரிந்துரையை ஏற்க கூடாது என்று வலியுறுத்தி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்திடம் தமிழக அரசு முறையிடுகிறது.

    இதற்காக தமிழக அரசு சார்பில் விரிவான ஆட்சேபனை கடிதம் தயார் செய்யப்பட்டு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.


    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர் வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் உயர் அதிகாரிகள் இன்று மாலை 5 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பும் கடிதத்தில் வேறு என்னென்ன விவசயங்களை குறிப்பிடுவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து நீர் வளத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

    மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.

    இதே போன்ற முயற்சியை கேரள அரசு இதற்கு முன்பு மேற்கொண்ட போது சுப்ரீம் கோர்ட்டு 2014-ல் அளித்த உத்தரவில் புதிய அணை கட்டுவது குறித்து இரு மாநிலங்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி உள்ளது.

    தமிழக அரசு சம்மதம் இன்றி முல்லைப் பெரியாறில் எந்த அணையும் கட்ட முடியாது. ஆனால் அதையும் மீறி 2015-ம் ஆண்டில் இதே போன்ற ஒரு முயற்சியை கேரள அரசு மேற் கொண்டது.

    அப்போது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தியது. அது மட்டுமின்றி இதே போல் 2-வது முறையும் முயற்சி மேற்கொண்டனர். அப்போது 2019-ம் ஆண்டில் இதே போல் பிரச்சனை வந்த போது தமிழக அரசு கேரள அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தது. அதன் பிறகே கேரள அரசு பணிந்தது.

    இப்போது மீண்டும் கேரள அரசு இந்த முயற்சியை தேவையில்லாமல் தொடங்குகிறது. இதையும் தடுத்து நிறுத்துவோம். அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது.
    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது.

    அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

    எனவே தமிழக அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை முக்கிய கவனத்தில் கொண்டு கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.
    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றன.

    இதற்காக மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவை சட்டமாக அமலுக்கு வரும்.

    ஆனால் சமீப காலமாக பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர்கள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் அந்த மாநில அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே சில மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    அந்தவகையில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய பிறகே சில மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். ஆனாலும் சில மசோதாக்களை தொடர்ந்து அவர்கள் கிடப்பில் வைத்து உள்ளனர். இதில் கேரளாவை பொறுத்தவரை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.மாநில சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார். இதில் சில மசோதாக்களை அவர் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

    அவற்றின் மீது ஜனாதிபதி தரப்பில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை தொடர்ந்து கிடப்பிலேயே இருக்கின்றன.

    அதாவது கேரள அரசின் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.2) மசோதா 2021, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2022 மற்றும் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.3) மசோதா 2022 ஆகிய 4 மசோதாக்கள் ஜனாதிபதியிடமே நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

    இதில் மத்திய அரசு, ஜனாதிபதியின் செயலாளர், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அவரது கூடுதல் செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக இணைத்து உள்ளது.

    இந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ள கேரள அரசு, அவற்றில் முக்கியமாக கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இந்த 4 மசோதாக்கள் உள்பட 7 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்து உள்ளார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். கவர்னர்கள் நீண்ட காலத்துக்கும், காலவரையறை இன்றியும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது, பின்னர் அரசியலமைப்புடன் தொடர்புடைய எந்த காரணமும் இல்லாமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாக்களை ஒதுக்குவது தன்னிச்சையானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவது ஆகும்.

    முற்றிலும் மாநில எல்லைக்குள் இருக்கும் இந்த 4 மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு எந்தவித காரணமும் கூறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனையும் அரசியல் சட்டப்பிரிவு 14-ஐ மீறுகிறது. மேலும் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் பலன்களை மறுப்பது, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கேரள மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல்களாகும்.

    இவ்வாறு கேரள அரசு தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும். அதை கேரள அரசு செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×