search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamba River"

    • கேரள கலாச்சாரத்தின் பல கொண்டாட்டங்களில் பம்பை நதிக்கு தனிச்சிறப்பு உண்டு
    • வீடியோவில் தனியார் ஓட்டலின் கழிவு நீர் நேரடியாக பம்பையில் கலப்பது தெரிகிறது

    கேரள மாநிலத்தின் நதிகளில் ஒன்று 176 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பம்பை.

    பீருமேடு பீடபூமியின் (Peerumedu plateau) புலச்சிமலை (Pulachimalai) பகுதியில் தோன்றும் பம்பை நதி பல பிரிவுகளாக ஓடுகிறது.

    இந்துக்களின் புனிதத்தலமான சபரிமலை இந்த நதிக்கரையில்தான் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள பம்பை நதியில் குளிப்பதை, புனிதமான செயலாக கொள்வது வழக்கம். கங்கை நதிநீருக்கு ஒப்பான புனித நீராக பம்பையை இந்துக்கள் கருதுகின்றனர்.

    "கேரளத்தின் நெற்களஞ்சியம்" (rice bowl of Kerala) என அழைக்கப்படும் குட்டநாடு பகுதியில் பம்பை ஆற்று நீரினால் நெல் விவசாயம் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    கேரள கலாச்சார கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய அம்சமாகவும் பம்பை நதி விளங்குகிறது.

    ஆனால், சமீப சில வருடங்களாக பம்பை நதிநீர் அசுத்தமாக்கப்படுவதாகவும் நதி ஓடி வரும் கரைகளில் சில இடங்களில் இருந்து கழிவு நீரும் அதில் கலப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது மட்டுமின்றி கரையில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் நீரில் கலப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    கடந்த 2018 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் பம்பையின் தூய்மையை காக்கும் வகையிலும், சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஒரு தனியார் ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பம்பை ஆற்றில் தொடர்ந்து கலக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

    குளியலுக்கும், குடிப்பதற்கும் நதிநீரை பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியத்திற்கு இச்செயல் நீண்டகால உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பம்பையில் நீராடும் சபரிமலை பக்தர்களும், இச்செயலை உடனடியாக கேரள அரசு தலையிட்டு நிறுத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

    • இந்த கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகிற 17-ந் தேதி வருகிறது.

    இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிதும், பெரிதுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் நடத்தும் சபரிமலை பம்பை ஆறு, திருவல்லம் பரசுராமர் கோவில், சங்குமுகம் கடற்கரை, வர்க்கலை கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புடன் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஆடி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி அமாவாசையான 17-ந் தேதி அதிகமான பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால் பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கூடுதல் பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிகாலை 2.30 மணி முதல் பலி தர்ப்பணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்ட ஜோதிட பஞ்சாங்கத்தை தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் தேவஸ்தான கமிஷனர் பி.எஸ். பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல பம்பை பாலத்தின் அருகே தற்போது புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த பெருமழையால் சபரிமலை பம்பை ஆறு திசை மாறி ஓடியது.

    பம்பை திரிவேணி பகுதியில் கழிவறைகள் பகுதியைச் தாண்டி புதிய பாதையில் பம்பை ஆறு ஓடியது. மழை குறைந்து வெள்ளம் வடிந்த பின்பு பம்பை ஆற்றின் கரைகளை சீரமைக்கும் பணி நடந்தது.

    இதில் மணலில் மூழ்கிய பாலம் கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. தற்போது அந்த பாலம் பக்தர்கள் நடந்து செல்லும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    சபரிமலையில் கடந்த மாதம் நிறை புத்தரிசி பூஜை நடந்தபோது மழை வெள்ளம் காரணமாக பக்தர்கள் யாரும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இப்போது அங்கு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் சபரிமலை செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புரட்டாசி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி வரை நடை திறந்திருக்கும். மாலை 5 மணிக்கு நடை திறந்து புதிய மேல்சாந்தியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல பம்பை பாலத்தின் அருகே தற்போது புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சன்னிதானத்தின் முன்பகுதி வழியாக செல்லும் பாதை இப்போது பின் பகுதி வழியாக சென்று சன்னிதானத்தை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்முறை கனரக வாகனங்கள் எதுவும் பம்பை செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவை நிலக்கல்லுடன் நிறுத்தப்படும்.

    கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது, பம்பையில் இருந்த கடைகள் அனைத்தும் சேதமாகி விட்டது. எனவே இப்போது சபரிமலை செல்லும் பக்தர்கள் குடிநீர், உணவு போன்றவற்றை உடன் எடுத்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  #Sabarimala

    ×