என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala"

    • எத்தனை கோவில்கள் இருந்தாலும், சபரிமலை ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான இடம்.
    • சில விஷயங்களைப் பற்றி விசாரிக்க என்னை அழைத்தார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்க முலாம்கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, தங்கம் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் கோவிலின் முன்னாள் தேவசம்போர்டு அதிகாரிகள், பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி, கர்நாடக நகை வியாபாரி கோவர்த்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற துவார பாலகர் சிலைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் ஜெயராம் கலந்து கொண்டதாகவும், அவரது வீட்டிற்கு துவார பாலகர் சிலைகளை கொண்டு சென்று வழிபாடு செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் ஐஸ்வர்யம் பொங்கும் என கூறப்பட்டதால் அந்த வழிபாட்டை செய்ததாகவும், தங்கம் திருட்டுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜெயராம் கூறினார். இதற்கிடையில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கருப்பு பணம் புழக்கம் இருந்ததா? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. அவர்கள் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு, பிப்ரவரி 17-ந் தேதி (இன்று) கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

    இதனை தொடர்ந்து இன்று நடிகர் ஜெயராம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    "எத்தனை கோவில்கள் இருந்தாலும், சபரிமலை ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான இடம். இங்கு ஏதேனும் கொள்ளை நடந்திருந்தால், அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஒவ்வொரு மலையாளியின் பொறுப்பாகும். கடந்த 38 ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நான் முதலில் அழைக்கப்பட்டிருக்கிறேன். நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்படித்தான் இங்கும் சென்றேன்."

    நான் 50 வருடங்களாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன், உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும். சில விஷயங்களைப் பற்றி விசாரிக்க என்னை அழைத்தார்கள். அதன்படி நான் ஆஜராகி உள்ளேன். எல்லாம் அழகாக முடிவடையட்டும். சிக்கிக் கொள்ள வேண்டியவர்கள் சிக்கிக் கொள்ளட்டும். ஐயப்பன் அவர்களை சும்மா விடுவாரா. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.

    • கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    • கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் ஆலயத் தடை பாலின பாகுபாட்டிற்குச் சமம் என்றும் கூறியது.

    இதனை கேரளாவில் ஆளும் இடது சாரி அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்த போது, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பக்தர்களும், அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நாளை (16-ந்தேதி) பரிசீலிக்க உள்ளது. இதே போல் கோவிலின் மத பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டும் மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கிறது. அப்போது கேரள அரசும் இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.

    இந்த விவகாரம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இடது சாரி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தனிடம் கேட்டபோது, கட்சியின் தலைமையால் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. அதே நேரத்தில், பக்தர்களின் நலன்களைப் பாதுகாக்கும். ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் நிலைப்பாட்டை அரசாங்கம் எடுக்கும் என்று நம்புவதாக கூறினார். மேலும் "இது ஒரு சிக்கலான வழக்கு. தேவைப்படும்போது இந்த விஷயத்தில் சி.பி.எம். தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மொத்தம் 51 பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததாக 2020 ஆம் ஆண்டில் இடதுசாரி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அரசாங்கம் 51 பெண்களின் பெயர்களையும், ஆதார் அட்டை மற்றும் முகவரிகள் உள்ளிட்ட பிற விவரங்களையும் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். பெயர்களில் எதுவும் கேரளாவைச் சேர்ந்தவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.
    • சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக கடந்த 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது முதல் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் பெற்று வருகின்றனர்.

    13-ந்தேதி பொதுவேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.

    நேற்று சபரிமலையில் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டார் மகேஷ் மோகன் தலைமையில் படி பூஜையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். சபரிமலை வந்த பக்தர்களை பாதுகாப்பு போலீசார் ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்ய அனுப்பினர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். வருகிற 17-ந் தேதி வரை நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    • கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
    • நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் விற்பனையில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, நெய் விற்பனையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 100 கிராம் அளவுள்ள 13 ஆயிரத்து 679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்தான கருவூலத்திற்கு வர வேண்டிய ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 900 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக நெய் விற்பனை பொறுப்பில் இருந்த அதிகாரி சுனில்குமார் போற்றியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்திருந்தது.

    இந்த நிலையில் கேரள ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுனில்குமார் போற்றியை கைது செய்தனர்.

    • நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவு அனைத்து நாட்களுக்கும் முடிந்துவிட்டதால், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாலையணிந்து விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசாரும், கேரள தேவசம்போர்டும் இருப்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலையும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

    அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி, மலைப்பாதையான அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 978 பக்தர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் ஸ்பாட் புக்கிங் மூலமாக 2,122 பக்தர்கள் வந்துள்ளனர்.

    நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    அதன்பிறகு மலைப் பாதைகளில் ஏறி சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தபடி இருக்கின்றனர்.

    • கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு வழிபாடு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி கடந்த 27-ந் தேதியோடு முடிவடைந்தது.

    இந்த காலத்தில் சபரிமலை கோவிலுக்கு 36.33 லட்சம் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி பதிவு மூலம் இவர்கள் தரிசனம் பெற்றனர். கடந்த ஆண்டை விட சுமார் 4 லட்சம் பக்தர்கள் இந்த ஆண்டு கூடுதலாக சபரிமலை வந்து சென்றனர்.

    மண்டல பூஜை நிறைவை யொட்டி 27-ந் தேதி கோவில் நடை சாத்தப்பட்டது. நாளை (31-ந் தேதி) முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நடையை திறப்பார். தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14-ந் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகரஜோதியை தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    இதற்கிடையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போதே சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

    • மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
    • சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கோவிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    இதையடுத்து மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும். சீசனையொட்டி 19-ந்தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். 20-ந்தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் செய்வார். அத்துடன் நடை அடைக்கப்பட்டு 2025-2026 மண்டல-மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

    திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசன் முடிவடைந்தபோது 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து இருந்தனர். அதாவது கடந்த சீசனை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 502 பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
    • கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசனில் 30.56 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாகவும், 332.77 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    உண்டியல் காணிக்கை, அப்பம் மற்றும் அரவணை ஆகிய புனித பிரசாதங்கள், ரூம் வாடகை, ஏலம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த வருவாய் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

    உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தை விட இது குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகமாகும். கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை 80.25 கோடியாக இருந்தது.

    இன்று மதியம் வரை 30,56,871 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் 37,521 பேர் வந்துள்ளனர். மண்டல பூஜையான இன்று மதியம் 1 மணி வரை 17,818 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    கடந்த வருடம் மண்டல பூஜை வரை 32,49,756 பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

    நேற்று சுவாமி ஐயப்பனுக்கு புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சபரிமலையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெற்று, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

    • பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.
    • அமலாக்கத்துறைக்கு விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பேசப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.

    இதற்கு அப்போதைய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.

    முதலில் 4 கிலோ தங்கம் வரை அபகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர்தான், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர். அதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளும் உடந்தையாக இருந்த தகவலும் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடியை தந்தது.

    பின்னர் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்குழு கையிலெடுத்தது. முதற்கட்டமாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.

    இந்த 10 பேரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கையை தொடர்ந்தனர். அந்தவகையில் இதுவரை உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, பத்மகுமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் பத்மகுமார் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழுவினர் தயாராக இருந்தனர்.

    அதில், 2017-ம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் செயலாளராக பணியாற்றிய ஜெயஸ்ரீயும் ஒருவர். இதனை தொடர்ந்து முன்ஜாமின் கேட்டு அவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பிறகு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 2017-ம் ஆண்டு திருவிதாங்கூர் தேவஸ்தான செயலாளராக பொறுப்பேற்றதாகவும், இந்த காலக்கட்டத்தில் சபரிமலை தொடர்பான எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை என்றும் கூறியிருந்தார். எனவே தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஜெயஸ்ரீயை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதே சமயத்தில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிறப்பு விசாரணைக்குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

    அப்போது, தங்கம் அபகரிப்பு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவினர் முதல் தகவல் அறிக்கையாக தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை, இந்த வழக்கின் விசாரணையை கையிலெடுக்க முடிவெடுத்தது. அதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அதற்கு சிறப்பு விசாரணைக்குழு எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றி கொல்லம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே ஆளும்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் பங்கஜ் பண்டாரி மற்றும் நகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.

    • ஐயப்ப பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்வது வழக்கம்
    • இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை. வழிபாடுகள் நடந்து வருகிறது.

    சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் சென்று திரும்பும்போது பாம்பன் பாலத்தில் வாகனத்தை நிறுத்தி துணியை கடலில் வீசுவது திடீர் வாடிக்கை ஆகியுள்ளது. இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை

    பாம்பன் பாலத்தில் இருந்தபடி ஐயப்ப பக்தர்கள் துணிகளை கடலில் வீசுவதால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
    • கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.

    இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
    • கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

    ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    ×