search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala"

    • கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும்.
    • சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

    நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும்.

    பாரம்பரிய காட்டு வழி நடைபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நிலக்கல் மற்றும் எருமேலியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்படும். சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் தேவஸ்தான மந்திரி வாசவன், தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், போலீஸ் டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் சாகிப், கூடுதல் டி.ஜி.பி.க்களான மனோஜ் அபிரகாம், ஸ்ரீஜித், தேவஸ்தான சிறப்பு செய்லாளர் அனுமா, பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன், தேவஸ்தான தலைவர் பிரசாந்த் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.
    • ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்கு வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (12-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    கோவில் நடையை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறக்கிறார். நாளை காலை 5.45 மணியிலிருந்து 6.30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக அச்சன்கோவில் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டுவரப்படுகிறது.

    பூஜைக்கு பிறகு பக்தர் களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 10மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    இந்நிலையில் ஆவணி மாத பூஜை வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேி மாலை திறக்கப்பட உள்ளது.

    மாதாந்திர பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
    • இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    நாளை(16-ந்தேதி) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படு கிறது.

    இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பூஜை முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    • குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 124 கிலோ தங்கமும், பல்வேறு நகைகள் பதிக்கப்பட்ட 72 கிலோ தங்கமும், 6,073 கிலோ வெள்ளியும் இருக்கிறது.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோவில். இந்த கோவிலுக்கு கேரள மாநிலம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள். இதனால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை அதிகளவில் வருகிறது.

    குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எவ்வளவு வைப்புத்தொகை மற்றும் நிலம் இருக்கிறது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டிருந்தது. அதில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலமும், ரூ2,053கோடி வைப்புத் தொகையும் இருக்கும் தகவல் வெளிவந்துள்ளது.

    மேலும் குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய 124 கிலோ தங்கமும், பல்வேறு நகைகள் பதிக்கப்பட்ட 72 கிலோ தங்கமும், 6,073 கிலோ வெள்ளியும் இருக்கிறது. கோவிலின் பெயரில் உள்ள நகைகள் மற்றும் 271 ஏக்கர் நிலத்தின் மதிப்பு கணக்கிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் நிலையான வைப்புத்தொகையாக இருக்கும் ரூ.2,053-கோடியில் கேரள வங்கியில் உள்ள ரூ.176 கோடியும் அடங்கும்.

    குருவாயூர் கோவில் வைப்புத்தொகை 2 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான வைப்புத்தொகை லட்சங்களிலேயே இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் நிலையான வைப்புத்தொகையாக ரூ.41.74 லட்சம் இருப்பாகவும், தங்கம் 227.82 கிலோ மற்றும் வெள்ளி 2,994 கிலோ உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர்.
    • குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாக திகழ்வது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    சபரிமலைக்கு வெகு தூரம் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு குட்லு பகுதியை சேர்ந்தவர்கள் சனத்குமார் நாயக், சம்பத்குமார் ஷெட்டி. சனத்குமார் நாயக் புகைப்பட கலைஞராகவும், சம்பத்குமார் குஷன் தொழிலாளியாகவும் வேலை பார்க்கின்றனர்.

    ஐயப்ப பக்தர்களான இவர்கள் ஆண்டுதோறும் காசர்கோட்டில் இருந்து சபரிமலைக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த முறை தங்களின் பாதயாத்திரை தூரத்தை அதிகரிக்க முடிவு செய்தனர். பத்ரிநாத்தில் இருந்து தங்களது பயணத்தை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் கேரளாவில் இருந்து பத்ரிநாத்துக்கு சென்றனர்.

    பின்பு அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமுடி கட்டி பாதயாத்திரையை தொடங்கினார்கள். அங்கிருந்து நடைபயணமாக அயோத்திக்கு சென்றார்கள். அவர்கள் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்றபடி தங்களின் பாத யாத்திரையை தொடருகிறார்கள்.

    ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க திட்டமிட்டு நடந்து வருகின்றனர். இரவில் ஏதாவது ஒரு கோவிலில் தங்கும் வகையில் பயண திட்டத்தை வகுத்து, அதன்படி பாத யாத்திரையை தொடர்கின்றனர். குஜராத்தில் உள்ள துவாரகா, பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு செல்லும் அவர்கள், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கும் வருகிறார்கள்.

    அங்கிருந்து கேரளாவுக்கு பயணம் செய்கிறார்கள். மொத்தம் 7 மாதங்கள் நடைபயணத்தை தொடர உள்ளனர். மொத்தம் 8ஆயிரம் கிலோமீட்டரை கடந்து சபரிமலைக்கு வந்து சேருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக குட்லுவில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து விரதம் இருந்து வந்த நிலையில் சனத்குமார், சம்பத்குமார் ஆகிய இருவரும் தற்போது பாதயாதத்திரையை தொடங்கியிருக்கின்றனர்.

    • ஆவணி மாத தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும்.
    • சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயம் சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்த வர்களே நடத்தி வரு கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.

    தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியாக கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு மகேஷ் மோகனரு ஆகி யோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள். இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளார்.

    அவருக்கு பதிலாக புதிய தந்திரியாக அவரது மகனான கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட உள்ளார். ஆண்டு தோறும் மலையாள மாதமான சிங்க மாதம் (தமிழில் ஆவணி மாதம்) தொடக்கத்தில் தான் தந்திரி பதவி மாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ந்தேதி சிங்க மாதம் தொடங்குகிறது.

    சிங்கமாத பூஜைகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. அன்று சபரிமலை கோவில் தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்கிறார். அன்றைய தினம் மாலை அவரது முன்னிலையிலேயே சபரிமலை அய்யப்பன் கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளார்.

    தந்திரி பொறுப்பில் இருந்து விலகினாலும், சபரிமலை விழாக்களில் கண்டரரு ராஜீவரு பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய தந்திரியாக பொறுப்பேற்க உள்ள கண்டரரு பிரம்மதத்தன் தனது எட்டாவது வயதில் பூஜைகள் பற்றி படிக்க தொடங்கி இருக்கிறார். சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 15-ந்தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிசேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடைபெற உள்ளன.

    19-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    • தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.
    • யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சபரிமலையில் முக்கிய பண்டிகை காலமான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த ஆண்டு இந்த காலங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தற்போதே வெல்லம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெறுவதற்கான பணிகள் நடைபெற்றன. பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான 19 மூலப்பொருட்களுக்கான டெண்டர் கோருவதற்கான நடைமுறைகள் ஏப்ரல் மாதம் தொடங்கி, அவற்றில் 16 பொருட்களின் ஏலம் தற்போது முடிவடைந்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    ஏலக்காய்களில் அதிகபட்ச எச்ச அளவு (எம்.ஆர்.எல்.) அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது கடந்த காலங்களில் கண்டறியப்பட்டதையடுத்து, தேவசம் போர்டு 'அரவணா' விற்பனை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் வாரியத்துக்கு ரூ.6.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது போன்ற நிதி இழப்பு மற்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க, தற்போது வன மேம்பாட்டுக் கழகத்தின் ஆர்கானிக் ஏலக்காய்களைப் பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் யாத்திரை சீசனுக்கு மட்டும் மொத்தம் 40 லட்சம் கிலோ வெல்லம் தேவைப்படுகிறது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த ஏஜென்சி ஒன்று கடந்த ஆண்டை விட குறைந்த விலையில் வழங்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனின் போது அரவணை தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரத்யேகமாக கட்டப்பட்ட தடுப்புகள் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.
    • அப்பம்-அரவணை பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடக்கக்கூடிய மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில் வருகிற யாத்திரை காலங்களில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும், யாத்திரையின் போது ஏற்படும் அவசர தேவைக்காகவும் மெய்நிகர் வரிசை முறையை பயன்படுத்தும் பக்தர்களுக்கு காப்பீடு வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. வருகிற மாதாந்திர பூஜை யாத்திரை காலத்திலேயே இந்த முறை அமல்படுத்தப்படும்.

    தரிசனத்துக்கு பக்தர்கள் மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்யும் போது காப்பீட்டுக்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்களின் பயணத்தின்போது, அவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி கவரேஜை விரிவுபடுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

    மாதாந்திர பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது மெய்நிகர் வரிசை மூலமாக தினமும் 50ஆயிரம் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் மாதம் தொடங்கும் புனித யாத்திரை காலத்தில் ஒரு நாளைக்கு 80ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சுமூகமான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காகவே இந்த வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரத்யேகமாக கட்டப்பட்ட தடுப்புகள் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்பம்-அரவணை பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக கடந்த 14-ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப் பட்டுள்ளதால், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சபரிமலையில் மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்த படியே காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வைகாசி மாத பூஜை நிறைவையொட்டி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.

    • அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.
    • அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அரவணை மற்றும் அப்பம் பிரசாரமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அரவணை பிரசாரத்தில் பூச்சி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது.

    இதையடுத்து பூச்சி மருந்து அதிகளவில் இருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் டின் அரவணையை பக்தர்களுக்கு வழங்கக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அரவணை டின்கள் மாளிகைபுரம் கோவிலுக்கு அருகே உள்ள குடோனில் தனியாக வைக்கப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்தில், அரவணை சாப்பிட உகந்ததாக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அரவணை தயாரித்து 6 மாதத்திற்குள் மட்டுமே சாப்பிட உகந்ததாக இருக்கும். ஆனால் அந்த அரவணை தயாரித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த அரவணை டின்கள் குடோனிலேயே தனியாக வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அந்த அரவணை டின்களை அழிப்பது பற்றியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த அரவணைகளை உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. தேவசம்போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட உள்ளது. டெண்டரில் பங்கேற்க ஏராளமான ஏஜென்சிகள் விரும்பம் தெரிவித்துள்ளன. டெண்டர் பணிகள் ஒரு வாரத்தில் முடியும். அதன்பிறகு அரவணை டின்கள் எடுத்துச் செல்லப்படும் என தெரிகிறது.

    • கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது.
    • உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் அங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வரும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் இந்த முன்பதிவை பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையில் சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவும் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த 2 முறைகளால் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது.

    இதனால் தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது. இதுகுறித்து கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த சீசனில் உடனடி முன்பதிவு மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என வெளியான தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் உடனடி தரிசன முன்பதிவு முறையை ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இனி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் விரை வில் மூடப்படுகிறது.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

    கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறுகையில், சபரிமலையில் இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் அறிக்கை வருகிற 23-ந் தேதி ஐகோர்ட்டில் சமர்பிக்கப்படும். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக அப்பம், அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும்,அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ரோப் கார் பயன்படுத்தப்படும் என்றார்.

    ×