ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கான தடை: ‘மதம் சார்ந்த விஷயங்களை "பகுத்தறிவு" அடிப்படையில் அணுகக்கூடாது’ - மத்திய அரசு

மத நூல்களுக்கு விளக்கம் அளிப்பதற்கோ அல்லது இறையியல் சார்ந்த கேள்விகளுக்குத் தீர்ப்பளிப்பதற்கோ நீதிபதிகளுக்குப் பயிற்சியோ அல்லது நிறுவன ரீதியான தகுதியோ இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கான தடை: ‘மதம் சார்ந்த விஷயங்களை "பகுத்தறிவு" அடிப்படையில் அணுகக்கூடாது’ - மத்திய அரசு
Published on

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை, தற்போது உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது, ஐயப்ப பகவானின் நைஷ்டிக பிரம்மச்சாரி என்ற இயல்பின் காரணமாகவே தவிர, தீட்டு அல்லது தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அல்ல என்று, விசாரணைக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"பெண்களை நுழைய அனுமதிப்பது இங்குள்ள வழிபாட்டு முறையின் தன்மையையே மாற்றிவிடும், மேலும் அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் சமயப் பன்முகத்தன்மையை சிதைப்பதாக அமையும்.

பக்தர்கள், அதாவது ஆண்களும் பெண்களும், பல நூற்றாண்டுகளாக சபரிமலையில் உள்ள ஐயப்பனை அந்த ஆலயத்தின் நிறுவப்பட்ட பாரம்பரியத்தின்படியே வழிபட்டு வருகின்றனர்," என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் முழுக்க முழுக்க மத நம்பிக்கை சார்ந்தது என்பதால், இது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது, என்றும் குறிப்பிட்டுள்ளது.

மதம் சார்ந்த விஷயங்களை "பகுத்தறிவு" அல்லது "நவீனமயமாக்கல்" என்ற அடிப்படையில் மட்டும் அணுகக் கூடாது என்றும், மத சுதந்திரத்திற்கான அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டுத் தனது சொந்தக் கருத்துக்களைச் சொல்வது, அந்த மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளை மாற்றுவது போலாகிவிடும். மத நூல்களுக்கு விளக்கம் அளிப்பதற்கோ அல்லது இறையியல் சார்ந்த கேள்விகளுக்குத் தீர்ப்பளிப்பதற்கோ நீதிபதிகளுக்குப் பயிற்சியோ அல்லது நிறுவன ரீதியான தகுதியோ இல்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com