

திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசு அனுப்பி உள்ள மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க ஆளுநர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இதனை குறிப்பிடும்படியும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.