என் மலர்tooltip icon

    திருப்பூர்

    பயணிகள் இருப்பதை விட மதுபிரியர்கள் தான் அதிக அளவில் உறங்கி வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி பேருந்து நிலையத்தில் மதுபிரியர்களின் தொல்லையால் பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவினாசி பேருந்து நிலைய நடைபாதை மற்றும் இருக்கைகளில் ஒரு சில மதுபிரியர்கள், அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு அரைகுறை ஆடையுடன் உளறிக்கொண்டு தூங்குகிறார்கள்.

    இவர்களின் செயல்பாட்டால் பஸ்சிற்கு காத்திருக்கும் பெண்களை முகம் சுழிக்க செய்கிறது. இதேபோல் அவினாசி காவல் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்த பகுதியில் பயணிகளின் இருக்கை உள்ளது. இங்கு பயணிகள் இருப்பதை விட மதுபிரியர்கள் தான் அதிக அளவில் படுத்து உறங்கி வருகிறார்கள்.

    இதனால் பஸ்சிற்கு காத்திக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுப்பிரியர்களை அங்கிருந்த அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
    • போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும்.

    ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி குண்டு வீசி கொல்லப்பட்ட நிலையில் ஈரான்- இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்), கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் கடல் வழி போக்குவரத்து மற்றும் வான்வழி போக்குவரத்து கடும் சிக்கலை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் சரக்குகள் பெரும்பாலும் துபாய் சென்று அங்கிருந்து மீண்டும் செல்லும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது.

    வான்வழி சரக்கு அனுப்புவது கூடுதல் செலவு என்பதால் அவ்வகை ஏற்றுமதி அரிதாகவே செய்யப்படுகிறது . இத்தகைய சூழலில் கடல்வழிப் பாதையில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஆகிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக செல்வதற்கு பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றிச்செல்லும் நீண்ட பாதையை கப்பல்கள் தேர்ந்தெடுக்கின்றன. இதனால் பயண நேரம் 15 முதல் 20 நாட்கள் வரை அதிகரித்துள்ளது.

    மார்ச் 2, 2026 நிலவரப்படி மெர்ஸ்க் , எம்.எஸ்.சி., ஹபாக் போன்ற முன்னணி கப்பல் நிறுவனங்கள் இந்த வழியாக செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. கப்பல் நிறுவனங்கள் போர்க்கால கூடுதல் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. இதனால் ஒரு கண்டெய்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது. இது 20 முதல் 50 சதவீத போக்குவரத்து செலவை ஏற்படுத்தும் . அதே போல் வான் வழி போக்குவரத்தில் ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ் , கத்தார் ஏர்வேஸ் போன்றவை வளைகுடா நாடுகளுக்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

    ஈரான், இஸ்ரேல், லெபனான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் பயண நேரம் அதிகரித்துள்ளது. மேலும் துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகத்தில் செயல்பாடுகள் குறைந்திருப்பதால் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகளும் தேக்கமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன் கூறுகையில், "போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளதால் சரக்கு ஏற்றுமதி கடும் சிக்கலை சந்தித்து உள்ளது . வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் சாதகமான நிலையில் இருந்தாலும் போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும். எனவே போர் இல்லாத உலகம் மட்டுமே வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் துபாய் இந்திய நாட்டு ஏற்றுமதியின் மையமாக செயல்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகள் அங்கே வைத்து பிரித்து பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பக்கூடிய சூழலில் அங்கு ஏற்பட்டுள்ள போர்பதட்டம் காரணமாக ஏராளமான சரக்குகள் தேங்கி இருக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் எவ்வளவு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது என தெரியவரும். போரின் பாதிப்பு குறித்த தாக்கம் அடுத்த ஓரிரு வாரங்களில் முழுமையாக தெரியும் என்றார்.

    இந்த சூழலில் இழப்புகளை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்திய அரசு இது தொடர்பாக அவசர கூட்டங்களை நடத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்யும் போது எப்.ஓ.பி., (சரக்கு ஏற்றிய பின் பொறுப்பு வாங்குபவருடையது) என்ற அடிப்படையில் ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. போர் காரணமாக பின்னலாடை துறை மட்டுமல்லாது விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர்.
    • வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    மேலசொக்கநாதபுரம்:

    திருப்பூரை சேர்ந்தவர் முகமதுரியாஸ் (வயது27). இவர் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள மறையூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.

    இவர்கள் நட்பு அதிகரித்த நிலையில் தனது குடும்ப சூழ்நிலையை சிறுமி தெரிவித்து ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். அப்போது திருப்பூருக்கு வந்தால் வேலை வாங்கி தருவதாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் சிறுமியை வரவழைத்து கூட்டம் அதிகம் இல்லாத தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் தன்னுடனே அவர் தங்க வைத்துள்ளார். இதனிடையே சிறுமி மாயமானதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தன்னை வேலைக்கு வரச்சொல்லி முகமது ரியாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து கேரள போலீசார் முகமது ரியாசை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    விசாரணை முடிந்த நிலையில் முகமது ரியாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட சேவை வாரியம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

    • பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன்.
    • எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகர பேருந்தில் (எண்.9 ஜே) கண்டக்டராக கடந்த 2 வாரங்களாக கோகிலா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    திருப்பூரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், பெண் ஒருவர் ஆர்வமுடன் பணியாற்றி வருவது பயணிகள் இடையே பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெண் பயணிகள் பலர் கோகிலாவுக்கு, பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பெண் கண்டக்டர் கோகிலா கூறுகையில், நான் எம்.ஏ.,படித்துள்ளேன். எனது தந்தை ராமலிங்கம். நம்பியூர் கிளையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவரது இறப்பால் தற்போது எனக்கு வாரிசு வேலை கிடைத்துள்ளது.

    இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது. ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். இதுவரை பேருந்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகிறேன். எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம் என்றார்.

    • விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.

    அந்த நபர்கள் யாரென்று ஆய்வு செய்த போது திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கி பிடிக்க டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் திருப்பூர் வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் 2 நாட்களாக முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2பேர், பல்லடத்தில் 3பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் 6 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்த மிஜனூர் ரஹ்மான் (33), முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாஹித், முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது. தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூருக்கு வந்த அவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எதற்காக திருப்பூர் வந்தனர், சதி திட்டங்களை தீட்டுவதற்காக வந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று 6 பேரிடமும் டெல்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு டெல்லி அழைத்து செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கு அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தொழிலாளர்கள் போர்வையில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருப்பூருக்கு வந்து பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர் போலீசார் தொடர்ந்து அதிரடி ஆய்வு நடத்தி போலி ஆவணங்களுடன் தங்கியிருக்கும் வங்காளதேசத்தினரை கைது செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் 6பேர் திருப்பூரில் தங்கியிருந்து பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே முறைகேடாக தங்கியிருக்கும் வங்காளதேச தொழிலாளர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.
    • 2 பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து பணிமனையில் இருந்து 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் ஈரோடு, பழனி, தாராபுரம், கோவை, பல்லடம், கரூர், திருச்சி, பெருந்துறை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளும் திருப்பூர், வெள்ளகோவில், முத்தூர் ஊதியூர், குண்டடம், கொடுவாய் ஆகிய பகுதிகளுக்கு நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது.

    நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய விடியல் பேருந்து திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக செல்வதற்கு பயண சீட்டுகள் வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் திருப்பூரில் இருந்து காங்கேயம் வந்த டி.என். 39 என் 0659 என்ற எண் கொண்ட பேருந்தில் காங்கேயம் ஹாஸ்டல் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பெண்கள் சிலர் ஏறி உள்ளனர். பின்னர் கண்டக்டரிடம் மெடிக்கல் ஸ்டாப்பில் இறங்க வேண்டுமென டிக்கெட் கேட்டுள்ளனர்.

    அதற்கு அந்தப்பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 ஸ்டாப் தானே உள்ளது, ஏன் நடந்து செல்ல முடியாதா? என அந்த பெண்களிடம் பேசியதுடன் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது, நேராக பேருந்து நிலையத்திற்கு செல்கின்றோம். அங்கு பயணச்சீட்டு பரிசோதனையாளரிடம் உங்களை விட்டு விடுகிறோம் , நீங்கள் எல்லாம் அபராதம் ரூ.500 கட்டினால் மட்டும்தான் திருந்துவீர்கள் என கூறியதுடன்,நேராக பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

    இதனால் கண்டக்டருக்கும், பெண் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதனிடையே இந்த சம்பவத்தை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தமிழக அரசு, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செல்லலாம் என அறிவித்துள்ள நிலையில், நகரப்பேருந்துகளில் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பெண்களிடம் இழிவாக பேசி அநாகரீகமாக நடந்து கொள்வது பெண்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே காங்கயத்தில் பெண் பயணிகளை இழிவாக பேசிய டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவத்தை அறிந்த திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 2பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். மேலும் 2பேரும் நடந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
    • கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.

    பல்லடம்:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.

    இக்குழு சார்பில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோரிடம் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.

    இதில் 2 மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கனிமொழி எம்.பி., பங்கேற்காததால் அமைச்சர்கள் முத்துசாமி ,கோவி.செழியன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மனுக்களை வாங்கி கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    • பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்?
    • மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் , மலைவாழ் மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் இன்று திடீரென தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடுமலை அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

    மருத்துவமனைக்குட்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, உணவு தயாரிக்கும் இடம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் காயம் அடைந்தவருக்கு செவிலியர் சிகிச்சை அளிக்காமல் மருத்துவ பணியாளர் சிகிச்சை அளித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே செவிலியரை அழைத்து அறிவுரைகள் கூறி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பராமரிப்பு இல்லாமல் இருந்தது குறித்து மாவட்ட மருத்துவ இயக்குனரிடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மருத்துவமனையில் 8 மாத காலமாக எந்திரம் சரி செய்யப்படாமல் இருப்பது ஏன்? அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவசர சிகிச்சை பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே இடத்தில் ஏன் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அரசு மருத்துவமனையை நீங்கள் ஆய்வு செய்தீர்களா? என கேள்வி எழுப்பினார். மாதந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு முன்புறம் ஏன் வீல் சேர் வைக்கவில்லை. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

    உடுமலை அருகே நேற்றிரவு சிறுவனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீரென ஆய்வு செய்த சம்பவம் மருத்துவ பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வாலிபர்கள் 2பேரை மரத்தில் கட்டி வைத்து சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கார்த்திக்குமார், கருப்புசாமி ஆகியோர் மானுப்பட்டி பகுதியில் மோட்டார் வயர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 2 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார்.
    • இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி, பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவரின் புத்தகப்பையில் இருந்து ¼ கிலோ கஞ்சா மற்றும் சிகரெட்டுகள், பணத்தை வகுப்பு ஆசிரியர் பறிமுதல் செய்தார். இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எனக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்து கஞ்சா பொட்டலங்களை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறினேன். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்து விட்டார். இது தொடர்பாக இதுவரை மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி மாணவரிடம் கஞ்சா எப்படி வந்தது? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை கண்டறிய வேண்டும். மாணவ சமுதாயத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனிடம் நடத்திய விசாரணையில் தனது அண்ணனுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதாகவும், அவர் எனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது
    • திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் இ.பி.எஸ் கோரிக்கை வைத்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தொடர் கோரிக்கையால் பிரதமர் மோடி ட்ரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்தார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி தொடர் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால் திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருக்கப்போகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.

    • தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
    • கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது.

    திருப்பூர்:

    சைவம், அசைவம் என எந்த வகை உணவுகள் தயாரித்தாலும் முதன்மை இடத்தை தக்காளிகள் பெறுகின்றன. இதனால் தக்காளியின் தேவை எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

    இதைக்கருத்தில் கொண்டு தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நேரங்களில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. மேலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு சாலையோரங்களில் வீசும் அவலமும் ஏற்பட்டு வந்தது.

    தற்போது திருப்பூரில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து வீதிகளில் வீசப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருப்பூரை பொறுத்தவரை தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனையானது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தரத்துக்கு ஏற்ப 5 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி அழுகி விடுகின்றன.

    விலை வீழ்ச்சியை சந்தித்ததால் அந்த தக்காளிகளை கூடை, கூடையாக மார்க்கெட் அருகே உள்ள ஜம்மனை ஓடையில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இன்னும் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    ×