என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமான குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி பாறைக்குழியில் மாநகராட்சி கொட்டி வந்தது.

    இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் , விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட முதலிபாளையம் பகுதியை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், கழிவு மேலாண்மை தொடர்பான புதிய முன்னெடுப்புகளை செய்யக்கூடாது என வலியுறுத்தி முதலிபாளையம்- நல்லூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நோய்வாய்ப்பட்டு விளைச்சல் பாதித்த பாகற்காய், காய்கறி, மஞ்சள் கிழங்கு, தென்னை மற்றும் மாசடைந்த நீர் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து பங்கேற்றனர். கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

    • புரட்சி தலைவி அம்மாவோடு பயணத்தை மேற்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது.
    • என்னை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:

    * புரட்சி தலைவி அம்மாவோடு பயணத்தை மேற்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது.

    * நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். அந்த அடையாளம் காட்டியவர் தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டி விட்டு சென்று விட்டார். கவலைப்பட தேவையில்லை.

    * நல்ல இடத்துக்கு நீங்கள் போங்கள் என்று அடையாளத்தை காட்டி இருக்கிறார். அதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * அவரோடு இருந்தால் இன்னும் பின்னுக்கு தள்ளி இருக்க முடியும். ஆனால் என்னை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி.
    • தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:

    * வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய்.

    * என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான் என்று கூறி கண்கலங்கினார்.

    * தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னார்.

    * இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை.

    * கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று இந்து மதம் சொல்லும்.

    * கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை திருடுவது அதிகரித்து வந்தது.

    இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் கிரிஷ் யாதவ் உத்தரவின் பேரில் அவிநாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில் அவிநாசி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு செல்போன் திருடர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    நேற்று மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த டிவைன், திருவண்ணாமலை மாவட்டம் எருமூண்டியை சேர்ந்த தனசேகர் ஆகியோரிடம் செல்போன்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே கோவை - சேலம் 6 வழிச்சாலையோரம் உள்ள டிரக் பார்க்கிங்கை போலீசார் கண்காணித்தபோது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்கு கோதவரியை சேர்ந்த நக்கா ஹரிஷ் (வயது 44), குருமில்லி பகுதியை சேர்ந்த ராஜூ (31), பாஷா (25), கும்மிரிகுண்டா பிரகாஷ் (32) மற்றும் ஒடிசா மாநிலம் சோரடாவை சேர்ந்த சிறுவன் என தெரியவந்தது. கார்களை சோதனை செய்த போது, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் 2பேரிடம் திருடப்பட்ட தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களும் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று செல்போன் திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து 5பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் சிறுவனை கோவை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4பேரும் அவிநாசி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செல்போன்களை திருடிய ஆந்திர மாநில கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி., அசோக் கிரிஷ் யாதவ் பாராட்டினார்.

    • போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.

    இந்தநிலையில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தடையை மீறி ஆர்ப்பா ட்டம் செய்தது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம்
    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தததைக் கண்டித்து இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

    இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். 

    • முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
    • சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகிற 29-ந்தேதி 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது.

    இந்நிலையில் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.

    மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் கலந்து கொள்ளும் ஒரு எழுச்சிமிகு மாநாடாக கழகத்தின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார்கள்.

    இந்த மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்பது வரலாற்று சிறப்புமிக்க மகளிரணி மாநாடாக அமைய உள்ளது.

    வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கணக்கை மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவதற்கான ஒரு முன்னேற்பாடாக, முன்னோட்டமாக இந்த மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.

    நிச்சயம் மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை. முதலமைச்சரின் எஃகு கோட்டையாக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அதற்கான வாய்ப்பை தருவதற்கு மக்கள் தயாராக உள்ளார்கள்.

    முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். மாநாட்டில் மகளிர் மட்டும் இடம் பெறுவார்கள்.

    அரசு நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும், முடிந்த திட்டங்களுக்கான திறப்பு விழா, தொடக்க விழா இருக்கும்.

    இது இயக்கத்தின் மாநாடு, மகளிரணி மாநாடு. ஏற்கனவே திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் இளைஞரணி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் எங்கள் தி.மு.க.வின் பக்கம் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து இப்போது மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.

    எந்த பகுதி யாருடைய கோட்டை என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது.
    • தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேலுள்ள பஞ்சலிங்கம் சுவாமி கோவில் மற்றும் அருவி உள்ளது.

    இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

     

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக திருமூர்த்திமலை மலை மேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
    • ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை கடந்த நவம்பர் மாதம் ரூ.11,320 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 11.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    அமெரிக்க வரி விதிப்பு உள்பட பல்வேறு தடைகள் இருந்த போதிலும் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்திய ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் இந்திய ஆடைகள் முக்கிய சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து செல்வாக்கு பெற்று வருவதை குறிப்பிடுகிறது.

    நவம்பர் மாதத்தில் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டு கணக்கில் குறிப்பிடத்தக்க அளவில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

    பாரம்பரிய வர்த்தகர்களை தாண்டி புதிய சந்தைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம், அமெரிக்க சந்தையில் பருவகாலம் மற்றும் சுங்க வரி தொடர்பான சவால்களை சமநிலைப்படுத்த உதவி செய்து, மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

    பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வட்டி சமநிலைப்படுத்தும் திட்டம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாது சந்தை அணுகல் தொடர்பான கடன் வசதிகள் போன்ற பிற வர்த்தக நிதி ஆதரவு நடவடிக்கைகளும் காலதாமதமின்றி அமல்படுத்தினால் ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறையும். அதன்மூலம் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகம் மேலும் அதிகாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
    • உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்ப கவுண்டன்வலசு,

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், ராசாத்தா வலசு, தாசநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி வட்டமலை, ஊதியூர், பொத்திபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், முத்துக்காளிவலசு, வடசின்னாரிபாளையம், வெள்ளகோவில், நடேசன் நகர், கரூர் ரோடு, கோவை ரோடு, குறுக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகர், கே.பி.சி. நகர், சேரன் நகர், காமராஜபுரம், ராசாத்தா வலசு, பாப்பினி, அஞ்சூர், தாசநாயக்கன்பட்டி, நாகம்மா நாயக்கன்பட்டி, புதுப்பை, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்ப கவுண்டன்வலசு,

    வேலம்பாளையம், கம்பிளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம் பூண்டி, கும்பம்பாளையம், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி.புதூர். என்.ஜி. வலசு, வரக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை, காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
    • இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (டிஏ) சரண்டா், உயா்க்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.

    தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் ஊா்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் ஆகியோா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், பாண்டியம்மாள், வேலுமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 534 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.11 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ள அமராவதி அணை தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ×