search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suspended"

    • கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாசில்தார் கோவி ந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

    விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டு கடந்த பேருந்துகளை மாற்றி புதியவற்றை வாங்க வேண்டும்
    • பழைய பேருந்துகளை பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்

    திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுனர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

    புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது
    • அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்

    திருச்சி நகரப் பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

    ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

    எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • கண்டக்டருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது
    • சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை பாஸ்கரன் ஓட்டிச் சென்றார். இதில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் சற்று வேகமாக திரும்பியபோது, கண்டக்டரின் இருக்கை கழன்று முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து கண்டக்டர் முருகேசனும் சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த பஸ்சினை பராமரிக்கும் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர், பொறியாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இன்று போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சாலையை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது. இதில் பஸ்ஸில் சக்கரம் இறங்கும்போது பஸ் சரிகிறது. இந்த சாலையை சீர் செய்வது தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.

    • பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
    • தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா. தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு பணிகளில் நேச பிரபா சுணக்கமாக செயல்பட்டதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அருள் ஒளி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது தெரிய வந்தால் தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதையும் மீறி நேச பிரபா சரிவர தேர்வு பணிகளில் ஈடுபடாததால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.

    • அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன.
    • கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அரசு கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த உத்தரவின் பேரில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் அதன் அளவுக்கேற்ப விலை உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரசு அறிவித்துள்ளதை காட்டிலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு 3 நாட்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான சுரேஷ், பொன்முத்துமாரி, சக்தி மோகன், சுப்ரமணியன் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மதுரை முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
    • அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

    போலியான அரசு அலுவலகத்தை திறந்து பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு நிதியை பறித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இந்த ஊழல் தொடர்பாக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    அமளியை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் ஒருநாள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். காங்கிரசின் பலம் 15 ஆகும். அமளி நிலவியபோது 5 பேர் அவையில் இல்லை.

    • ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.
    • ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஷேக் முஜிப் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியது.

    இதுகுறித்து ஷேக் முஜிபின் உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    ஆஸ்பத்திரியில் எங்கு பார்த்தாலும் எலிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அவர்களின் அலட்சியத்தால் தான் ஷேக் முஜிப்பை எலிகள் கடித்ததாக தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த டாக்டர் காவியா, பொது மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்தகுமார் மற்றும் நர்ஸ் மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    மேலும் எலிகளைப் பிடிக்க ஆஸ்பத்திரியில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்படும். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

    • பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை அனைத்தும் கோவில் அருகிலேயே பாகன்களல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணன் கோவிலில் தினமும் இரவு சீவேலி என்று அழைக்கப்படும் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அப்போது யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு வீதிஉலா நடத்தப்படும். சீவேலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் யானைகள் தனியாக ஒரு இடத்தில் பராமரிக்கப்படுகின்றன.

    அதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானையும் அடங்கும். இந்நிலையில் சீவேலியில் பங்கேற்கும் ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 2 யானைகளை, அதன் பாகங்கள் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறிய போதும், பாகன்கள் பிரம்பால் தொடர்ந்து தாக்குவது போன்று இடம்பெற்றிருந்த அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். யானைகளை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதன் பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
    • பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கணிப்பொறி, உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கேரள ஐகோர்ட்டு உதவிப் பதிவாளர் சுதீஷ், கோர்ட் கீப்பர் பி.எம். சுதீஷ் ஆகியோர் ஒரே தேசம் ஒரு பார்வை ஒரே இந்தியா என்ற பெயரில் நாடகம் நடத்தி உள்ளனர். இந்த நாடகத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு பற்றி இழிவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இந்திய வக்கீல்கள் சங்கம் மற்றும் சட்டப்பிரிவு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை மந்திரி ஆகியோருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு விஜிலென்சு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில் முதல் கட்டமாக உதவி பதிவாளர் டி.ஏ.சுதீஷ் மற்றும் பி.எம்.சுதீஷ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
    • இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.

    அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×