என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Hospital"

    • 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.
    • தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது. அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கினார்.

    ஜார்க்கண்டில் மருத்துவமனையின் அலட்சியத்தால், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நான்கு மாத மகனின் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு பேருந்தில் வீடு திரும்ப வேண்டிய அவலம் நிகழ்ந்துள்ளது.

    ஜார்க்கண்டில் உள்ள சாய்பாசா சதார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக வியாழக்கிழமை குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை சிகிச்சையின் போது குழந்தை இறந்தது.

    தனது மகன் இறந்த பிறகு, அவரது தந்தை டிம்பா, உடலை 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் வாகனம் கேட்டிருந்தார்.

    மணிக்கணக்கில் காத்திருந்தும், அதிகாரிகள் வாகனம் ஏற்பாடு செய்யத் தயாராக இல்லை. இதற்கிடையில், குழந்தையின் தந்தையின் பாக்கெட்டில் ரூ.100 மட்டுமே இருந்தது.

    அதில், ரூ.20 பணத்தை அருகிலுள்ள கடையில் இருந்து பிளாஸ்டிக் கவரை வாங்கி, அதில் தனது மகனின் உடலைச் வைத்தார்.

    மீதமுள்ள பணத்தைதில் சாய்பாசாவிலிருந்து நோமுண்டிக்கு பஸ் டிக்கெட் எடுத்துக்கொண்டு கையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய மகனின் உடலுடன் பயணித்தார்.

    நோமுண்டியில் இறங்கி தனது கிராமத்திற்கு அவர் நடந்தே சென்றார். மருத்துவமனையிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    ஆம்புலன்ஸ் அப்போது வேறு இடத்திற்கு சென்றிருந்தது என்றும் மேலும் 2 மணி நேரம் காத்திருக்க சொல்லியும் அவர் சென்றுவிட்டார் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி கூறினார்.  

    • 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தலசீமியா என்பது ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் மரபணு ரத்தக்கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் சத்னா, ஜபல்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் வழியேதான் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

    இது குறித்து 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை கடந்த டிசம்பர் 16-ம் தேதி 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது

    அக்குழு தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் ஆய்வக டெக்னீஷியன்களான ராம் பாய் திரிபாதி, நந்தலால் பாண்டே ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முறையான பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.  

    • சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை வேறொரு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.
    • இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஆம்புலன்சிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று மாலை பஸ்ஸி பகுதி அருகே மூச்சு விடுவதில் சிரமப்பட்ட குழந்தையை, பரத்பூர் மாவட்டத்தின் பயானா மருத்துவமனையில் இருந்து எஸ்.எம்.எஸ். மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, குழந்தையை அதன் தந்தையும் மாமாவும் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

    பான்ஸ்கோ என்ற இடத்திற்கு அருகில் வந்தபோது, ஆக்ஸிஜன் சிலிண்டரில் உள்ள வாயு தீர்ந்துவிட்டதை குழந்தையின் தந்தை கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர்களை அருகில் உள்ள பஸ்ஸி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    பஸ்ஸி மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

    சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தங்களை பஸ்ஸி அரசு மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றுவிட்டதாக குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆம்புலன்ஸில் எந்த ஒரு செவிலியரும் இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டரை குழந்தையின் தந்தைதான் இயக்கிக்கொண்டிருந்தார். சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்ததாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று பஸ்ஸி காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து இதுவரை யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.   

    • மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
    • இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தனர்.

    ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.

    ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் ரத்தம் மாற்று சிகிச்சைகாக மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது .

    இந்நிலையில் அதில் ஒரு குழந்தையின் பெற்றோர், ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று முன் தினம் குற்றம்சாட்டினர். புகாரைத் தொடர்ந்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் குழு அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    நேற்று அவர்கள் நடத்திய ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியானது.

    தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மோசமான ரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விசாரணையின்போது ரத்த வங்கியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன என்றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    தலசீமியா நோய்க்காக இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அலட்சியத்தால் அவர்களுக்கு எச்ஐவி பாதித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரத்த வங்கியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை.
    • இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு ஹரித்வாரில் உள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.

    பணம் தர முடியாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. 

    சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணியளவில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், "என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?" என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர்.

    சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் நலமாக உள்ளாதாகவும் அவர் தெரிவித்தார். 

    • ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.
    • உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் வார்டுக்குள் எலி கடிதத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் இதுகுறித்து தனதுஎக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

    "மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது முழுமையான கொலை. இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் அர்த்தமற்றது. இதைப் பற்றிக் கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது.

    சுகாதாரத் துறை வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே. ஏழைகளுக்கு, அரசு மருத்துவமனைகள் இனி உயிர் காக்கும் இடங்களாக இல்லை, ஆனால் மரணக் குகைகளாக மாறிவிட்டன.

    பிரதமர் மோடியும் மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். உங்கள் அரசாங்கம் நாட்டின் மில்லியன் கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது.

    இப்போது குழந்தைகள் அவர்களின் தாய்மார்களின் மடியில் இருந்து பறிக்கப்படுகிறார்கள்" என்று ராகுல் கடுமையாக சாடினார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

    • சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளை செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
    • எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.

    திருப்பதி:

    மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய ஒரு நாள் முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும். நிறைய ரத்த தானம் செய்ய வேண்டும். வரிசையில் காத்திருக்க வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு நிறைய நேரம் எடுக்கும் புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை வழங்குகின்றன.

    டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே சாதனத்தைப் பயன்படுத்தி சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய ஒரு சுகாதார எந்திரத்தை உருவாக்கியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் கிங்கோத்தியில் உள்ள மாவட்ட மருத்துவமனை மற்றும் மலக்பேட்டை பகுதி மருத்துவமனை ஆகியவற்றில் ஒரு முன்னோடி திட்டமாக இந்த எந்திரம் மாநில அரசு அமைத்துள்ளது

    எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, லிப்பிட் ஹீமோகுளோபின், நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.

    சில ரத்த பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரி எடுக்க வேண்டும். காது, தொண்டை மற்றும் மூக்கு பாகங்களை பரிசோதிக்கலாம். கண் பரிசோதனைகள் செய்யலாம்.

    இது வெற்றி பெற்றால், மேலும் பல அரசு மருத்துவமனைகளில் இந்த எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

    • மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
    • மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் மாரிமுத்து (வயது 46). இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தற்போது, விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வலது காலில் அதிக வீக்கம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

    கடந்த 30-ந்தேதி சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் வலது காலில் 2 இடங்களில் ஜவ்வு கிழிந்த நிலையில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி நேற்று காலை 8 மணியளவில் மாரிமுத்துவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு டாக்டர்கள் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அவர் பகல் 12.45 மணிக்கு வார்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து மாரிமுத்து கண்விழித்து பார்த்தார். அப்போது அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்து கட்டுப் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடைய வலது காலுக்கு பதிலாக ஏன் இடது காலில் மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர்கள், செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    மாரிமுத்துவின் உறவினர்கள் டாக்டர்களிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருத்தம் தெரிவித்த டாக்டர்கள், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறியதுடன் 10 நாளில் குணமாகி விடும், வருகிற திங்கட்கிழமையன்று வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத மாரிமுத்துவின் குடும்பத்தினர் டாக்டர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்.
    • மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும்.

    சென்னை அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த கார்த்திகா என்ற பெண்ணின் குடும்பத்திடம், அவரைப் பிரசவ வார்டுக்கு மாற்றவும், குழந்தையை சுத்தம் செய்யவும் வார்டு பாய்கள் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

    பயந்த கார்த்திகாவின் குடும்பத்தினர், வேறு வழியின்றி பணம் செலுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை, மொத்தம் ரூ.10,000 வரை செலவழித்ததாகத் தெரிகிறது.

    இதுகுறித்து பேசிய கார்த்திகா, "வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் என்று குறிப்பிட்ட கார்த்திகா,மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும் என்று கூறினார்.

    மருத்துவமனை ஊழியர்களின் லஞ்சப் பட்டியல் :

    வார்டு பாய்கள் - அறுவை சிகிச்சை அறையில் இருந்து குழந்தையை சாதாரண வார்டுக்கு மாற்றுதல், குழந்தையை சுத்தம் செய்தல் மற்றும் நோயாளிக்கு பிற வகையான உதவி ஆகியவற்றுக்கு சராசரியாக ரூ.500 முதல் ரூ.3000 வரை லஞ்சம் கேட்கின்றனர்.  

    பெண் மருத்துவ உதவியாளர்கள் - பிரசவ உதவி, குழந்தைக்கு குளிப்பாட்டுதல், துணிகள் கொண்டு வருதல் மற்றும் பிற சேவைகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 லஞ்சம் கேட்கின்றனர்.

    துப்புரவு பணியாளர்கள் - துப்புரவு சேவை மற்றும் நோயாளிகளின் வார்டுக்கு வழிகாட்டுதலுக்கு குறைந்தது ரூ.20 முதல் ரூ.50 லஞ்சம் கேட்கின்றனர்.

    இதுதவிர வாட்ச்மேன்கள் ரூ.100 லஞ்சமாக பெறுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா, இந்த பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகவும், ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    "பணம் கேட்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் கூறுகிறோம், இருப்பினும் இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊழியர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர்களை அடையாளம் காண முடியவில்லை" என்றும் அவர் டாக்டர் சங்கீதா வருத்தத்துடன் தெரிவித்தார்.

    சிறுசிறு வேலைகள் முதல் நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றுவது அல்லது ஸ்கேன் எடுப்பது போன்ற பெரிய வேலைகளுக்கும் ரூ.50 முதல் ரூ.500 அல்லது அதற்கு மேல் பணம் கோரப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    பணம் கொடுக்க மறுப்பவர்கள் வாய்மொழித் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாகவும், பார்வையாளர்கள் நேரத்திலும் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

    • மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார்.

    கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார்.

    நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார்.
    • மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்தது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரசு மருத்துவமனையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சனிக்கிழமை, மருத்துவமனை கழிப்பறை அருகே ஒரு நாய் குழந்தையின் சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார். மீட்கும்போது குழந்தையின் உடல் பகுதியளவு சிதைந்திருந்தது.

    சிசிடிவி காட்சிகளின்படி, 17 வயது பெண் ஒருவர் கழிப்பறையில் பிரசவித்துவிட்டு, பின்னர் ஒரு நபருடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது.
    • ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

    பொன்னேரி:

    பழவேற்காட்டை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பழவேற்காடு ஏரி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 20-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை தரைதளம் ஆங்காங்கே இடிந்தும் அடிக்கடி விஷ பூச்சிகள் உள்ளே செல்வதால் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

    நாளுக்கு நாள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் முறையான சிகிச்சை பெற முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    எனவே பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரியில் காவலாளிகள் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டிய கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.

    இதனால் இந்த கட்டிடத்தில் இருந்து பாம்புகள் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து விடுகின்றன என்றனர்.

    ×