search icon
என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.

    இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

    • இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • வேட்பாளர்களின் பிரசாரமும் இல்லை, வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவில்லை.

    டேராடூன்:

    உத்தரகாண்டில் 24 கிராமங்களில் மக்கள் வசிக்காத இடங்களாக இருப்பதால் அதனை பேய் கிராமங்களாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    உத்தரகாண்டில் வருகிற 19-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. கிராமங்கள் தோறும் தேர்தல் களைகட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த 24 கிராமங்களில் மட்டும் தேர்தலுக்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் அமைதியான முறையிலேயே இருக்கிறது. தேர்தல் கமிஷனும் இங்கு வாக்குச்சாவடிகள் ஏதும் அமைக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க இந்திய தேர்தல் கமிஷன் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, உத்தரகாண்டில் உள்ள 24 கிராமங்களில், தேர்தல் நாளான ஏப்ரல் 19-ந் தேதி ஒரு வாக்குச்சாவடி கூட இருக்காது.

    அரசு அறிவிப்பின் படி இந்த கிராமங்கள் "பாலைவன கிராமங்கள்" என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் உள்ளூர் மக்களால் "பேய் கிராமங்கள்" என்று அழைக்கப்படுகின்றது.

    மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய தகவலின்படி , சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 16 மக்களவைத் தேர்தல்களில் தீவிரமாகப் பங்கேற்ற இந்த 24 கிராமங்கள், இந்த முறை தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது.

    இந்த கிராமங்களை "மக்கள் வசிக்காத கிராமங்கள்" என்று மாநில இடம்பெயர்வு ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    அல்மோரா, டெஹரி, சம்பாவத், பவுரி கர்வால், பித்தோராகர் மற்றும் சாமோலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள இந்தக் கிராமங்கள் இப்போது மக்கள் வசிக்காதவையாகக் கருதப்படுகின்றது.

    பிப்ரவரி 2023-ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி உத்தரகாண்டில் 2018 மற்றும் 2022-க்கு இடையில் மாநிலத்தில் உள்ள 6,436 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பைத் தேடி தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர். இருப்பினும் அவர்கள் அவ்வப்போது தங்கள் கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.


    அதே நேரத்தில், மாநிலத்தில் உள்ள 2067 கிராமங்களில் இருந்து சென்றவர்கள் நிரந்தர இடம்பெயர்வாக சென்றுள்ளனர். வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றைத் தேடி மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர், அவர்கள் திரும்பி வரவில்லை.

    புலம்பெயர்தல் ஆணையம் நடத்திய ஆய்வின் அறிக்கையில்:- ஏராளமான தனிநபர்கள் தங்கள் மூதாதையர் நிலங்களை விற்றுள்ளனர், பல நிலங்களை தரிசாக விட்டுவிட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், அல்மோரா மாவட்டத்தில் 80 கிராம பஞ்சாயத்துகள் நிரந்தர இடம்பெயர்வு காரணமாக கைவிடப்பட்டது.

    2018 மற்றும் 2022-க்கு இடையில், மாநிலத்தில் உள்ள 24 கிராமங்கள் முழுவதுமாக "மக்கள் வசிக்காதவையாக" மாறிவிட்டன என்று அந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த வெறிச்சோடிய 24 கிராமங்கள் இந்த முறை பொதுத் தேர்தலின் போது எந்தவிதமான அதிர்வையும் காணாமல் அமைதியாகவே இருக்கும்.

    அங்கு வேட்பாளர்களின் பிரசாரமும் இல்லை, வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவில்லை.

    இதுகுறித்து உத்தரகாண்ட் தலைமை தேர்தல் அதிகாரி புருஷோத்தம் கூறுகையில்:-

    இந்த பிரச்சினை இடம்பெயர்வோடு தொடர்புடையதாக இருந்தாலும், 50-க்கும் குறைவான வாக்காளர்கள் வசிக்கும் மாநிலத்தின் மிகவும் தொலைதூர பகுதிகளில் கூட தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளை நிறுவியுள்ளது. அணுக முடியாத பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய வாக்களிப்பை எளிதாக்குவதே ஆணையத்தின் நோக்கமாகும்."

    சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, "2018 மற்றும் 2022-க்கு இடையில், மாநிலத்தில் உள்ள 2,067 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மொத்தம் 28,531 பேர் நிரந்தர இடம்பெயர்வுக்கு உட்பட்டுள்ளனர், மாவட்ட தலைமையகம் அல்லது பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

    35.47 சதவீதம் பேர் அருகிலுள்ள நகரங்களைத் தேர்ந்தெடுத்தும் 23.61 சதவீதத்தினர் பிற மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர். 21.08 சதவீதத்தினர் மாநில எல்லைகளைத் தாண்டி பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர் என்றார்.

    • கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர்.
    • இன்னும் எத்தனை நாட்கள் காங்கிரசை விமர்சனம் செய்வீர்கள் என்றார் பிரியங்கா.

    டேராடூன்:

    உத்தரகான்ட் மாநிலம் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இங்குள்ள ராம் நகருடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.

    காங்கிரசை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விமர்சனம் செய்வீர்கள்? கடந்த 10 ஆண்டாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை.

    10 ஆண்டாக முழு பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ.க. இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறுகிறது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை என்றால் ஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை எப்படி வந்து இருக்கும்? சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கி சாதனை படைத்துள்ளது.

    முதல் பிரதமர் நேரு கட்டமைக்கவில்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகியிருக்கும்?

    இமாசலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தேவ பூமி என வர்ணித்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சில மாதங்களுக்குப் பிறகு ஒரு பேரழிவு ஏற்பட்டபோது, மாநில மக்களுக்கு நிவாரணமாக ஒரு பைசா கூட மோடி அரசு வழங்கவில்லை. அனைத்து நிவாரணங்களும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியது என தெரிவித்தார்.

    • 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.
    • காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது.

    மத்திய பாதுகாப்புத் மந்திரி ராஜ்நாத் சிங் இன்று உத்தரகாண்ட் மாநிலம் கவுசாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தற்போதில் இருந்து இன்னும் சில வருடங்களில் டைனோசர் போன்று அழிந்துவிடும் என அச்சப்படுகிறேன். 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.

    தினசரி காங்கிரஸ் கட்சிக்குள் அடிதடி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது. ஒருவருக்கொருவர் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • நாட்டில் நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம் எதிரிகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
    • மோடி தலைமையின் கீழ் வலுவான அரசாங்கம் அமைந்த பிறகு, நமது படைகள் பயங்கரவாதிகளை அவர்களுடைய இடத்திலேயே வீழ்த்தின.

    பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம் எதிரிகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், மோடி தலைமையின் கீழ் வலுவான அரசாங்கம் அமைந்த பிறகு, நமது படைகள் பயங்கரவாதிகளை அவர்களுடைய இடத்திலேயே வீழ்த்தின.

    70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் நிறைவேற்றல், ஒரே ரேங்க் ஒரே பென்சன், சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சட்டங்களை நிறைவேற்றும் தைரியத்தை வலுவான பா.ஜனதா அரசு பெற்றது.

    பலவீனமான காங்கிரஸ் அரசாங்கத்தால் கடந்த காலங்களில் எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த முடியவில்லை. தற்போது எல்லை அருகே சாலைகள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.

    ஊழல்வாதிகள் நாட்டை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் தனக்கு எதிராக உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சக்தியை நீக்குவதாக சொல்கிறார்கள். இதற்கு உத்தரகாண்ட் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ஐந்து மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்து வருகிறார்.
    • முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.

    டேராடூன்:

    பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    பல்வேறு மாநிலங்களில் ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்தும் வருகிறார்.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள ஹரித்வார், தெஹ்ரி கர்வால் மற்றும் பவுரி கர்வால் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் ரிஷிகேஷில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரிஷிகேஷில் நடைபெற்ற பேரணி நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு அவருக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.

    பரிசைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்த உடுக்கையை அடித்து மகிழ்ந்தார். அதன்பின் பேரணியில் உரையாற்றினார்.

    ஏப்ரல் 2-ம் தேதி உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசினார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு உத்தரகாண்டில் அவர் நடத்தும் இரண்டாவது பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரகாண்டில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • அப்போது பேசிய அவர், ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர் என்றார்.

    ருத்ராபூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் பாஜக ஏற்பாடு செய்திருந்த வாகனப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்.

    ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?

    ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர்

    கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் என தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பின் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்று ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியா அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் காத்திருக்கவும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டது.

    அதனால் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வர புஷ்கர் சிங் தாமி தனது மந்திரிசபை மந்திரிகளுடன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று உத்தரகாண்டில் இருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டனர். அப்போது ஜெய் சிய ராம் என முழங்கினர்.

    • நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டங்களை இடிக்க சென்றபோது அதிகாரிகள் மீது தாக்குதல்.
    • வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 50 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் மதராசா மற்றும் அதையொட்டி கட்டப்பட்ட மசூதி ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றம் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். கட்டடங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் புல்டோசர் மூலம் இடிக்க முயன்றபோது, அங்குள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கியது. இதனால் வன்முறை வெடித்தது.

    இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவுபடி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஹல்த்வானியின் வான்புல்புரா பகுதியில் கட்டடத்தை இடிக்க முயன்றபோது, பதற்றம் நிலவியது. அங்கு கூடியிருந்தவர்கள் போலீசார், அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் மீது கல்வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் 50 போலீசார், பல அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

    இருந்தபோதிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு முறைகேடாக கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் உள்பட அங்கு வசித்து வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அமைத்திருந்த தடுப்பை இடித்து தள்ளியதுடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சூழ்நிலை அத்துமீறி வன்முறையாக வெடித்துள்ளது. வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நேற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. இது தொடர்பாக வருகிற 14-ந்தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

    • இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 37 உறவு முறைகளில் திருமணம் செய்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அத்தை/மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தடைவிதிக்கப்பட்ட உறவின்முறை வருமாறு:-

    1. தாய்

    2. வளர்ப்புத்தாய்

    3. தாயாரின் தாய்

    4. வளர்ப்பு பாட்டி

    5. பூட்டி

    6. வளர்ப்பு பாட்டியின் தாயார்

    7. அம்மாவுடைய அப்பாவின் தாயார்

    8. தந்தையின் தாயார்

    9. அப்பா, அம்மா வழி பாட்டி

    10. அப்பா, அப்பா வழி பாட்டி

    11. மகள்

    12. மகனின் விதவை மனைவி

    13. மகளின் மகள் (பேத்தி)

    14. மகளுடைய மகனின் விதவை மனைவி

    15. மகனின் மகள்

    16. மகனுடைய மகனின் விதவை மனைவி

    17. மகளுடைய மகளின் மகள்

    18. மகளுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    19. மகளுடைய மகனின் மகள்

    20. மகளுடைய மகனின் மகனுடைய விதவை மனைவி

    21. மகளுடைய மகளின் மகள்

    22. மகனுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    23. மகளுடைய மகனின் மகள்

    24. சகோதரி

    25. சகோதரியின் மகள்

    26. சசோதரனின் மகள்

    27. அம்மாவின் சகோதரி

    28. அப்பாவின் சகோதரி

    29. அப்பாவின் சகோதரர் மகள்

    30. தந்தையின் சகோதரியின் மகள்

    31. தாயாரின் சகோதரியின் மகள்

    32. தாயாரின் சகோதரியின் மகள்

    (Widow- விதவை, என்பது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியையும் உள்ளடக்கும்)

    • 2022 தேர்தலில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க.
    • கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகி விடும்

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.

    தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.

    இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.

    இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

    இன்று, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இனி கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகி விடும்.

    மசோதா வெற்றிகரமாக சட்டசபையில் நிறைவேறியதை பா.ஜ.க.வினர் சட்டசபைக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.

    சிவில் விஷயங்களில் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டதுதான் பொது சிவில் சட்டம்.

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் ஆனது.

    இதனால், வரும் ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலிலும் நாடு முழுவதும் பா.ஜ.க. அணியினருக்கும், காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் அணியினருக்கும், இரு அணிகளிலும் சேராத கட்சிகளுக்கும், பொது சிவில் சட்டம் ஒரு விவாத பொருளாக மாறப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • 2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    பண மோசடி வழக்கில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ஹரக் சிங் ராவத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்பெட் புலிகள் சரணாலயத்தின் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடங்களில் சோதனை நடத்தியது. மேற்கு வங்காளத்திலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×