search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flood"

    • தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யபட்டு வருகிறது. பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அணை மூடப்பட்டது. ஆனால் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை ஆகவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்தும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்பொழுது பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் கரை புரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. திற்பரப்பு அருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.இதை யடுத்து அந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 619 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.31 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் அணை நீர்மட்டம் கணிசமான அளவு சரிந்துள்ளதால் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.20 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
    • புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடாக பிரேசில் உள்ளது. இங்குள்ள, ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியது. இதனால் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    இங்குள்ள மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்து தரை மட்டமானது.

    ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பிரேசிலை புரட்டி போட்ட இந்த புயல் மழைக்கு இதுவரை 20 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிந்த வீடுகளில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

    மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து 16 மணி நேரத்துக்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

    ஆனால், அந்த சிறுமியின் தந்தை அவர் அருகிலேயே இறந்து கிடந்தார். மகளை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் தான் பலர் இறந்துள்ளனர்.

    • எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்
    • நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்

    அரசு வழங்கும் நிவாரணத் தொகையை 'பிச்சை' எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும். வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது. நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை என்று பதிவிட்டுள்ளார்.

    • வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிழப்பை ஏற்படுத்தியது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் தடுப்பணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் சடையநேரி குளம் நிரம்பி உடைந்ததால், உடன்குடி அருகே வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், சிதம்பரபுரம், லட்சுமிபுரம், மருதூர்கரை, செட்டியாபத்து உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    தொடர்ந்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டது. பொக்லைன் எந்திரம் மூலம் வாறுகால் அடைப்புகளை அகற்றி தூர்வாரி, தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலமும் தண்ணீரை உறிஞ்சி தேரிக்காட்டு பகுதிக்கு அனுப்பினர். எனினும் சுமார் 2 மாதங்களாகியும் வட்டன்விளை, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் கிராமமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.

    வெள்ளாளன்விளை வேதகோவில் தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால், அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர். வெள்ளம் வடியாத தெருவில் மண்மூட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து அதன் வழியாக சிலர் தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். எனினும் அவசர தேவைக்கு அந்த வழியாக வாகனங்களில் செல்ல முடியவில்லை. பல நாட்களாக வடியாத வெள்ளத்தால் வீடுகளும் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதேபோன்று வட்டன்விளையில் இருந்து பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் தேங்கிய தண்ணீர் வடியாததால், வெள்ளாளன்விளை, சீயோன்நகர் வழியாக மாற்றுப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். மேலும் அங்குள்ள தோட்டங்களில் தேங்கிய தண்ணீரும் வடியாததால் விவசாயிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். விவசாய பணிகளுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது.

    மெஞ்ஞானபுரம் அருகே சிதம்பரபுரம் கிராமத்தைச் சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியாததால் தீவாகவே காட்சியளிக்கிறது. இப்பகுதி மக்களும் அவசர தேவைக்கு அருகில் உள்ள மெஞ்ஞானபுரத்துக்கு செல்வதற்கு பதிலாக, பரமன்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

    இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


    நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

    இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

    தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

    ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

    தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


    இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

    இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

    தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

    அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

    தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

    • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
    • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை நீடித்து வருகிறது. போடி, குரங்கணி, கொட்டக்குடி பகுதியில் பெய்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோத்துப்பாறை, கும்பக்கரை, பெரியகுளத்தில் பெய்த தொடர் மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றின் இரு கரையையும் ஒட்டியவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார வராக நதி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி பகுதியில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் தண்ணீர் அதிக அளவு வருகிறது. இதன் காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 2931 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2481 கன அடி நீர் திறக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்ப ட்டுள்ளனர்.

    கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அங்கு உற்சாகமாக குளித்து சென்றனர்.


    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. 820 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 80 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 290.78 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.4, தேக்கடி 0.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 15, போடி 11.8, வைகை அணை 24.2, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 15, பெரியகுளம் 31, வீரபாண்டி 19.8, அரண்மனைபுதூர் 20.6, ஆண்டிபட்டி 33.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்.
    • சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை.

    தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக் காடானது. வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். இதில், தங்களது முக்கிய ஆவணங்களை மக்கள் பறிகொடுத்தனர்.

    இதனால், நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:-

    வெள்ளத்தால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு புதிய ஆவணங்களை வழங்க திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சிறப்பு முகாம்களில், புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • பாம்பு கடித்ததில் 9 பேர் பாதிப்பு.
    • விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் பாதிப்பு.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மேலும், விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை கடித்தததில் 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

    இவர்களில், பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • மதியம் 12.30 மணிக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
    • தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.

    பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகிறார்.

    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் பதிவில், "மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 26-ந்தேதி (நாளை) மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

    முன்னதாக மதியம் 12.30 மணிக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்" என கூறப்பட்டுள்ளது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் நிர்மலா சீதாராமன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.

    தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

    ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

    நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியிடம் வெள்ள பாதிப்புகளை எடுத்துரைத்து உடனடியாக நிதியை விடுவிக்க கோரியுள்ளேன்.

    தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    அப்போது, பிரதமர் மோடியிடம் வெள்ள பாதிப்புகளை எடுத்துரைத்து உடனடியாக நிதியை விடுவிக்க கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி, மிச்சாங் புயல் தாக்கியதை அடுத்து, தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க என்னைதொலைபேசியில் அழைத்தார்.

    வளக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மாநில அரசு மேற்கொண்ட பாரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவி வழங்கிட கோரினேன்.

    பிரதமர் இந்த இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசின் ஆதரவையும், வெள்ள நிலைமையை மதிப்பீடு செய்ய நிர்மலா சீதாராமன் அவர்களும் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு துறை சார்ந்த குழு வருகை குறித்தும் ஆலோசனை.
    • தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்தது குறித்தும் விவாதம்.

    தமிழக மழை வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.

    பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    கூட்டத்தில் மீட்பு பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    மழை வெள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட, பல்வேறு துறை சார்ந்த குழு வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்தது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.Tamil Nadu Flood Damage - Prime Minister's Office Advisory

    ×